|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 November, 2011

பேயாவது பிசாசாவது ...!தமிழ் குறும் படம்!!


தமிழின் மகத்துவம்!

அக்காலத்திலேயே தமிழில் மட்டுமே இருந்துறுக்கிறது 

இரண்டு சிம் கார்டு செல்போன்களின் விற்பனை அமோகம்!


கடந்த சில வாரங்களாக இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் வசதி கொண்ட செல்போன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், செல்போன் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன், செல்போன் தயாரிப்பு நிறுவனங்களிடையே போட்டியும் ஏற்பட்டிருக்கிறது.  மத்திய தொலைத் தொடர்புத்துறை ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) கொண்டு வந்த எஸ்.எம்.எஸ். கட்டுப்பாடே இரண்டு சிம் கார்டுகள் வசதி கொண்ட செல்போன்களின் அமோக விற்பனைக்குக் காரணம் என பெரும்பாலான விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

ஒரு நாளைக்கு ஒரு சிம் கார்டில் இருந்து 100 எஸ்.எம்.எஸ். மட்டுமே அனுப்ப முடியும் என்கிற விதியை தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் செப்டம்பர் மாததம் கொண்டு வந்தது. இதனால், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்.க்கும் மேல் அனுப்புவர்கள் இரண்டு சிம் கார்டுகள் கொண்ட செல்போன்களை நாடினர்.  இதனால், செல்போன்களின் விற்பனையும் சிம் கார்டுகளின் விற்பனையும் அதிகரித்தது. அக்டோபர் மாதத்தில் இரண்டு சிம்கார்டுகள் கொண்ட செல்போன்களின் விற்பனை 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.  இப்போது ஒரு நாளைக்கு 200 எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பலாம் என்று விதியைச் சற்றே தளர்த்தியுள்ளது தொலைத் தொடர்புத்துறை ஒழுங்காற்று ஆணையம்  ஆனாலும், இரண்டு சிம்கார்டு செல்போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதே போல் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியச் சந்தைக்கு இரண்டு சிம்கார்டுகள் கொண்ட செல்போன்களை முதல் முறையாக சீனா, கொரிய நாடுகளே அறிமுகம் செய்தன. இவை குறைந்த விலையில் விற்பனையானதை அடுத்து பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் சாம்சங், நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இரண்டு சிம்கார்டு வசதி கொண்ட செல்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தியதில் அவற்றுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

 இந்த முன்னணி நிறுவனங்களின் செல்போன்கள் தரமானதாகவும், மலிவான விலையில் கிடைக்கின்றன. இதன் தரத்தினாலும், தொலைத் தொடர்புத்துறை ஒழுங்காற்று ஆணையத்தின் எஸ்.எம்.எஸ். கட்டுப்பாட்டினாலும் இரண்டு சிம் கார்டு செல்போன்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.சையத் ரஷீத், செல்போன் விற்பனையாளர்: "இப்போதெல்லாம் பெரும்பாலான அலுவலகங்கள் தங்களது ஊழியர்களுக்கு சிம் கார்டை கொடுத்துவிடுகின்றன.  இந்த சிம் கார்டை அலுவலக விஷயங்களுக்கு மட்டும் வைத்துக் கொண்டு, தனிப்பட்ட விஷயங்களைப் பேச வேறு ஒரு கார்டை வாங்குகின்றனர். இந்த இரண்டு சிம் கார்டுகளையும் ஒரே செல்போனில் வைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் இந்த இரண்டு சிம்கார்டு செல்போனை வாங்குகிறார்கள். மேலும் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கில் எஸ்.எம்.எஸ். அனுப்புவர்கள் இந்த வகையான செல்போன்களை வாங்குகின்றனர். மேலும் இந்தச் செல்போன்கள் ரூ.1500 விலையில் இருந்து கிடைக்கின்றன.  ஆனால் இந்த வகையான செல்போன்களை மேல்தட்டு மக்கள் பெரிதும் விரும்புவதில்லை. அவர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வைத்திருந்தாலும், ஒவ்வொரு சிம் கார்டுக்கும் தனியாக ஒரு செல்போனையை பயன்படுத்துகின்றனர்.'

நடிகை மனோரமா நலம்...!


தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட நடிகை மனோரமா, சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் இருக்கிறார். கடந்த மாதம் உடல் சோர்வு காரணமாக தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. இந் நிலையில், கடந்த வாரம் அவருக்கு தலை வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தலையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை மனோரமாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது: மனோரமாவுக்கு நடைபெற்ற அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இரண்டு நாள்கள் அவரச சிகிச்சைப் பிரிவில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்று தெரிவித்தனர்.

நிதி முறைகேடு தொண்டுநிறுவனங்கள், மருத்துவமனைகளில் சிபிஐ அதிரடி சோதனை!


தேசிய பார்வையற்றோர் திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் தொடர்பாக உத்தரப் பிரதேசம் முழுவதும் 10 தன்னார்வ தொண்டுநிறுவனங்களின் அலுவலகங்களில் சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தியது.ரூ 50 லட்சம் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளது சிபிஐ இதுவரை நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஊரகப் பகுதிகளில் இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை செய்வதாகக் கூறிக்கொள்ளும் தன்னார்வ தொண்டுநிறுவனங்கள், அவ்வாறு இலவசமாக செய்யாமல் நோயாளிகளிடமிருந்து கட்டணங்களை வசூலித்துள்ளன. மேலும் அரசிடமும் அதற்காக நிதிஉதவி பெற்றுவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தில்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் குழு நேற்று 10 மருத்துவமனைகளில் சோதனை நடத்தியது. தேசிய ஊரக சுகாதார மேம்பாட்டுத் திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டதால் அந்த மருத்துவமனைகளில் சிபிஐ சோதனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரபாகரன் மீது ஆணையாக வாக்களித்த மக்களுக்கு பணியாற்றுவேன்!

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பின் போது கடவுள் மீது ஆணையாக என்றும், தங்களின் குலதெய்வத்தின் மீதோ அல்லது விரும்பிய தெய்வத்தின் பெயரிலோ, அல்லது தாங்கள் சார்துள்ள அரசியல் கட்சியின் தலைவரின் பெயரிலோ சத்தியம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்கள் உளமார என்று உறுதி கூறி பதவி ஏற்ப்பார்கள். ஆனால் நாம் இதுவரையிலும் கேட்காத ஒரு தலைவரின் பெயரில், அதாவது நம் நாட்டிலேயே இல்லாத, அரசியல் கட்சி நடத்தாத ஒரு இராணுவ அமைப்பை நடத்தி வந்த விடுதலை புலிகளின் தலைவரான பிரபாகரனின் பெயரில் பதவி ஏற்றுள்ளார். யார் இவர் என்று பார்ப்போம். பழனி நகராட்சியின் 1வது வார்டு அ.தி.மு.க கிளைக் கழக செயலாளராகவும், பழனி நகர எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவராகவும் இருப்பவர் சோலை கேசவன். இவருக்கு வயது 55. தீவிர அ.தி.மு.க கட்சிக்காரரான இவர், பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தின் அருகில் பத்திரம் எழுதி வருகிறார். கடந்த 2001 உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க சார்பில் பழனி நகராட்சி 1வது வார்டு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2006 தேர்தலில் அதே வார்டில் போட்டியிட்டு தோற்றுப்போனார். இந்த முறை அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதால், சுயேச்சையாக போட்டியிட்டு அ.தி.மு.க வேட்பாளரை காட்டிலும், 120 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


கடந்த 25ம் தேதி நகர மன்ற உறுப்பினராக பதவி பிரமானம் எடுக்கும் போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் வளர்த்து உருவாக்கப்பட்ட, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரான தம்பி பிரபாகரன் அவர்களின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக நான், எனக்கு வாக்களித்த மக்களுக்கும், இந்த நாட்டுக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் கடமை தவறாமல் பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன் என்று பிராமானம் எடுத்துள்ளார். உங்களுக்கு எப்படி பிரபாகரன் மீது இவ்வளவு பற்றுதல் என்று சோலை கேசவனிடம் கேட்டோம்..? 1980-86 ஆண்டுகளில், ஈழ விடுதளைப்போர் துவங்கிய காலகட்டங்களில், தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான் பிரபாகரனை வளர்த்தார். பிரபாகரனின் தாய் எம்.ஜி.ஆர்... தந்தை இந்திராகாந்தி. இவர்களின் வளர்ப்பால் தான் அந்த இயக்கம் நம் தமிழினத்துக்கு விடுதலையும், தனி நாடும் என்னுடைய வாழ்நாளிலேயே வாங்கி கொடுக்கும் என்று நம்பியிருருந்தேன்.

ஆனால், சோனியா என்ற ஒருவரால் என்னைப் போன்ற கோடான கோடி தமிழ் மக்களின் கணவும், விருப்பமும் நாசமாய் போனது. எப்படி போனாலும் பிரபாகரனின் விடுதலை வேட்கை ஒருக்காலும் தோற்காது. அது நம் இனத்துக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும், எம்.ஜி.ஆர் அவர்களின் எந்த திட்டமும் தோற்றது கிடையாது. அவரால் வளர்க்கப்பட்ட, வழிகாட்டப்பட்ட யாரும் தோற்கவும் மாட்டார்கள். இன்றில்லை... நாளை நிச்சயம் தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு... பிரபாகரன் அதை செய்து முடிப்பார். அவரது விடுதலை வேட்கை பலம் மிகுந்தது. அந்த விடுதலை வேட்கையை நானும் நம்புகிறேன், அதனால் தான் நான் பிரபாகரனின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக பதவி ஏற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார். உங்களைப்போலவே உலகத்தமிழர்கள் பலரும் நம்புகிறார்கள்.

35 கோடியில் 14 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா!

தெற்கு ரயில்வேயில் ரூ. 35 கோடியில் 14 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருவதாக சிக்னல் மற்றும் தகவல் தொழில்நுட்ப முதன்மை என்ஜினியர் மனோகர் தெரிவித்தார். நெல்லை ரயில் நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் 26 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா நெல்லையில் நடந்தது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் கோயல், கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிக்னல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் முதன்மை இன்ஜினியர் மனோகர் கட்டுபாட்டு அறையை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் நெல்லையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் முலம் 24 மணி நேரமும் ரயில் நிலைய நிகழ்வுகளை கண்காணிக்கலாம். இதில் பதிவு செய்யப்படும் தகவல்களை 7 நாட்கள் வரை பெறலாம். தென்னக ரயில்வேயில் 35 கோடியில் 14 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் சென்னையில் 7 இடங்களிலும், திண்டுக்கல், மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட 14 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராவுடன் பயணிகளின உடைமைகளை ஸ்கேனிங் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. இந்த வசதி நெல்லையிலும் ஏற்படுத்தப்படும் என்றார்.

3 மாதத்துக்குள் டி.டி, செக்கை மாற்ற வேண்டும் இல்லை அம்பேல்!

 இனிமேல் வங்கி காசோலைகளை மூன்று மாதத்திற்குள் பணமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் இனி சாவகாசமாக காசோலைகளை எடுத்துச்செல்ல முடியாது ஏனெனில் அது செல்லாக்காசாகி விடும். இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து வெளியிட்டு வரும் அதிரடி அறிவிப்புகளில் வங்கிக் காசோலையும் தப்பவில்லை. வங்கிகளில் நடைபெறும் பலவகையான மோசடிகளை தடுக்கும் வகையில் தற்போது பல அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளன.

முன்பெல்லாம் வங்கிக் காசோலைகள் 6 மாதத்திற்கு செல்லுபடியாகும். இப்போது அது மூன்று மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே சாவகாசமாக மாற்றுவதை விடுத்து மூன்று மாதத்திற்குள் பணமாக மாற்றிக்கொள்ள வேண்டும். டிடி, வங்கி காசோலை, பேஆர்டர் போன்ற வங்கி பண பரிவர்த்தனைகள் அனைத்திற்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். நீண்டகால அவகாசத்தைப் பயன்படுத்தி சில வாடிக்கையாளர்கள் தவறான முறையில் ஆதாயம் அடைவதாக ரிசர்வ் வங்கிக்கு வந்த புகாரினை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கோடிட்ட காசோலைகள்; இது தவிர பிற மோசடிகளை தடுக்க 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான கேட்புக் காசோலைகளை கோடிட்ட காசோலைகளாக மட்டுமே வழங்க வேண்டும் என்றும் ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

உலகிலேயே இந்தியாவில்தான் டிபி பாதிப்பு அதிகம்!



இந்தியாவில் 25 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. மனித உயிர்களை குடிக்கும் கொடிய நோய்களில் காச நோயும் ஒன்றாகும். இதற்கு சயரோகம், எலும்புருக்கி நோய் போன்ற வேறு பெயர்களும் உண்டு. இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 2 நபர்களுக்கு சளியில் கிருமியுள்ள காச நோய் ஏற்படுகிறது. ஒரு நோயாளி ஒரு வருடத்தில் சுமார் 10 முதல் 15 நபர்களுக்கு இந்த நோயைப் பரப்ப முடியும். காச நோய் கிருமிகளால் பரவும் ஒரு தொற்று நோய். இது பெரும்பாலும் நுரையீரலை தாக்குகிறது. இது மூளை, நிணநீர் சுரப்பி, எலும்புகள், சிறுநீரகம், வயிறு போன்ற மற்ற உருப்புகளையும் பாதிக்கும். காசநோய் கிருமிகள் காற்றின் மூலம் பரவுகிறது. எனவே காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ட இடங்களில் சளியைத் துப்பக்கூடாது, இருமும் போது வாயை துணியால் மூடிக்கொள்ளவேண்டும். சளியை மூடியுள்ள குப்பியில் துப்பி எரித்துவிட வேண்டும். இதன் மூலம் காசநோயானது பிறருக்கு பரவாமல் தடுக்க முடியும்.


25 லட்சம் பேர் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு சார்பில் உலக அளவில் காச நோயாளிகள் குறித்து கணக் கெடுப்பு நடத்தப்பட்டது. இதனையடுத்து `உலக காசநோய் கட்டுப்பாடு-2011' என்னும் தலைப்பில் சமீபத்தில் உலக சுகதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டில் 88 லட்சம் நோயாளிகளின் பெயர்கள் இந்த அமைப்பில் பதிவு செய்யப்பட்டன. காச நோயாளிகள் எண்ணிக்கையில் 25 லட்சம் பேருடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக 12 லட்சம் நோயாளிகளுடன் சீனா 2-ம் இடம் வகிக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் 59 ஆயிரம் பேரும், இந் தோனேசியாவில் 54 ஆயிரம் பேரும், பாகிஸ்தானில் 48 ஆயிரம் பேரும் காச நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நோ' சொல்ல வேண்டியதற்கு கண்டிப்பாக 'நோ' சொல்லுங்கள்!


உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மனஅழுத்தம் மனிதர்களுக்கு பல இன்னல்களைத் தருகிறது. சிறு சிறு அழுத்தமான சூழல்களைத் தவிர்க்காத போதோ, அல்லது தீர்க்காத போதோ அழுத்தம் அதிகரித்து பெரிய இன்னலுக்கு ஆளாக்கி விடுகிறது. மனஅழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல்பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கை முறை, சிந்தனைகளினால் வருவது. மன அழுத்தம் பல நோய்களைக் கொண்டு வரும். குறிப்பாக மைகிரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி, ஸ்ட்ரோக், எஸீமா உட்பட பல நோய்களை ஏற்படுத்துகிறது.

அழுத்தம் பலவிதம்: மன அழுத்தத்தை மருத்துவம் பல விதமாகப் பிரிக்கிறது. திடீரென நிகழும் ஒரு நிகழ்வினால் ஏற்படும் ஒரு மன அழுத்தத்தை அக்கியூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். இதன் காரணம் நமக்கு தெரிந்ததாகவே இருக்கும். இது விரைவிலேயே காணாமல் போய் விடுகிறது,

தொடர் நிகழ்வுகளினால் ஏற்படும் மன அழுத்தத்தை எபிசாடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ் என்கின்றனர் மருத்துவர்கள். அதிகப்படியான வேலை. ஏராளமான பணிகள், தினமும் தாமதமாய் வருவதால் வரும் பிரச்சனை, அவசரம் போன்ற தொடர் காரணிகளால் வருவது இது. இயல்பிலேயே வறுமை, நீண்டகால வேலையின்மை, குடும்ப சூழல், அவஸ்தையில் மாட்டிக் கொண்டது போன்ற சூழல் இவையெல்லாம் தரும் மன அழுத்தத்தை குரோனிக் ஸ்ட்ரெஸ் என்று அழைக்கிறார்கள். ட்ராமிக் ஸ்டெரெஸ் என்பது இன்னொரு வகை. ஏதோ ஒரு அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வராமல் இருக்கும் நிலையே இப்படி அழைக்கப்படுகிறது. கணினித் துறையில் இந்த மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான அலுவலகங்கள் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

கண்டிப்பாக நோ சொல்லுங்கள்: சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுபவர்களை மன அழுத்தம் எளிதில் பிடித்துக் கொள்கிறது. எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துபவர்கள் மன அழுத்தம் உருவாகும் சூழலை பெரும்பாலும் விலக்கி விடுகிறார்கள். செய்ய முடியாத வேலைகளை ‘முடியாது’ என்று மறுத்து விடும் மனத் தெளிவு உள்ளவர்களை மன அழுத்தம் நெருங்குவதில்லை. எல்லா வேலைகளையும் இழுத்துப் போடுபவர்கள் பிரச்சனையிலிருந்து தப்ப முடியாது.

நேர்மறை எண்ணங்கள்: கவனக் குறைவு, முடிவுகள் எடுப்பதில் சிக்கல், ஞாபக மறதி, குழப்பம், எதிர் மறை சிந்தனைகள், தெளிவற்ற சிந்தனைகள், தவறான முடிவுகள், தப்பித்தல் முயற்சிகள் என மன அழுத்தத்தினால் மனதைப் பாதிக்கும் செயல்களைப் பட்டியலிடலாம். நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் அனைத்தையும் நல்ல விதமாகப் பார்க்கிறார்கள். அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால் அதிக நேரம் இசை கேட்க முடியுமே என்று நினைக்கக் கூடிய அளவுக்கு மனதை இலேச வைத்திருக்க வேண்டும். எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள்தான் ‘இந்த வேலை எனக்குப் பிடிக்கவேயில்லை..’ அல்லது ‘என்னை யாருக்கும் பிடிக்கவில்லை’ போன்ற சிந்தனைகளுக்குள் சிக்கி மன அழுத்தத்துக்குள் மாட்டிக்கொள்கின்றனர்.

அமைதியான சூழல்: ஆவேசம், கோபம் இவை மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும். தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப் படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன. அமைதியான குடும்பச் சூழல் பெரும்பாலான மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அலுவலகத்தின் குழப்பங்களையோ, எரிச்சல்களையோ குவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றை அழிக்கும் இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனை குடும்பத்தினர் புரிந்து கொள்ளவேண்டும். குடும்பத்தில் நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் குடும்பத்தினரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல் மிகவும் முக்கியம்.

குழந்தையை பாதிக்கும்: தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் மிகப்பெரிய எதிரி. அது தாயையும், கருவில் இருக்கும் குழந்தையையும் நேரடியாகப் பாதிக்கிறது என்கிறார் அமெரிக்காவின் மாயோ கிளினிக்ஸ் எனும் மருத்துவர் , எனவே தான் தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல இசை கேட்பது என மனதை இலேசாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். நாம் செல்லும் அனைத்து பாதைகளையும் மெத்தைகளால் அலங்கரிப்பது இயலாது என்பதால்தான் செருப்பு அணிகிறோம். அது போலவே மன அழுத்தத்தை உண்டாக்கும் காரணிகளை ஒழிப்பது என்பது இயலாத காரியம் ஆனால் நம்முடைய மனதை திறமையாகக் கையாள்வதன் மூலமாக மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும் என்பது உளவியலாளர்களின் அறிவுரை.

சருமப் பாதுகாப்பு...!


பருவகாலத்தில்தான் இந்த பூமியானது தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கின்றது. இந்த காலத்தில் பருவமழை பெய்து அனைத்தும் பசுமையாக மாறிவிடும். இந்த காலத்தில் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் நோய்கள் தாக்கத் தொடங்கும். மழை காலத்தில் பின்பற்ற வேண்டிய தோல் பாதுகாப்பு டிப்ஸ் உங்களுக்காக

தண்ணீர் அவசியம் குடிங்க: முகத்தை தினமும் கிளன்சர் கொண்டு கிளீன் செய்ய வேண்டும். மெதுவாக மைல்டாக ஸ்கர்ப் செய்ய வேண்டும். இறந்த செல்கள் உதிர்ந்து புதுப்பிக்க ஏதுவாகும். தினம் ஒருமுறை ஆல்பா ஹைட்ராக்சில் ஆசிட்டை தண்ணீரில் கலந்து முகம் கழுவுவதன் முகம் புத்துணர்ச்சி பெறும். மழைக்காலம் என்பதால் தாகம் எடுக்காது. எனினும் தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் அருந்துவது அவசியம். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். இது தோலின் பிஹெச் பேலன்ஸ் சரியாக வைத்திருக்கும் தண்ணீர் சத்து குறைவினால் வறண்ட சருமம் ஏற்படுபவர்கள் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். வறண்ட சருமத்தினர் தயிர், தேன் கலந்து தோலில் பூசி குளிக்கலாம். இது தோலினை வறட்சியில் இருந்து பாதுகாக்கும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் பப்பாளி பழத்தை கூழ் போல செய்து ஓட்சுடன் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம்.பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவவேண்டும்.

சுகாதரம் அவசியம்: மழைக்காலத்தில்தான் தோல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். தோலில் தேங்கியுள்ள அழுக்கினை உடனடியாக நீக்க வேண்டும். ஏனெனில் வெயில் காலத்தில் வியர்வை வழியாக அழுக்கானது வெளியேறிவிடும். மழைக்காலத்தில் அந்த வாய்ப்பு இல்லை என்பதால் சுத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம்.

வேகமாக கருத்தரிக்க புது டிப்ஸ் !


திருமணமான தம்பதியர் என்னதான் ஜாலியாக சில வருடங்கள் இருக்கலாம் என்று நினைத்தாலும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் விடமாட்டார்கள். குழந்தை குட்டியை பெற்றுக்கொடுத்துவிட்டு நீங்கள் ஜாலியாக ஊர் சுற்றுங்கள் என்று அவசரப்படுத்துவார்கள். புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தான உணவு: புதிதாக திருமணமானவர்கள் சத்தான உணவுகளை உண்ணவேண்டும். ஏனெனில் நிலம் வளமாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். எனவே புதுமண தம்பதியர் அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். நாளொன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெண்கள் ஆரஞ்சு, காரட் உள்ளிட்டவைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் ஏனெனில் இது செக்ஸ் ஹார்மோனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். ஆண்கள் மீன் உணவுகள், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். இது விந்து வளர்ச்சிக்கு உதவும். புதுமணத் தம்பதியர் தினமும் தாம்பத்ய உறவு கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதன் மூலம் ஆணின் விந்தணு உற்சாகமடையும். இது டி.என்.ஏவை சிதைவடையாமல் பாதுகாக்கிறது. 

முறையான மாதவிடாய் காலம்: முறையற்ற மாதவிலக்கு கர்ப்பம் தரித்தலை தாமதப்படுத்தும் எனவே இக்குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெறவேண்டும். கட்டுப்பான எடையை கடைபிடிக்க வேண்டும். 28 முதல் 32 நாட்களுக்குள் சுழற்சியாக பெண்களுக்கு மாதவிடாய் வருவது ஒழுங்கான மாதவிடாய் பருவமாகும். மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து 14-வது நாள் பெண்ணின் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணி நேரத்திற்குள் ஆணின் விந்தணுவை சந்தித்தால் கரு உருவாகும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும். 

மது, புகை கூடாது: மதுபழக்கத்தை தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தலை அறவே ஒதுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். பெண்கள் காபி குடிப்பதை தவிர்ப்பது கர்ப்பம் தரித்தலை 50 சதவிகித வாய்ப்பை அதிகரிக்கிறது. தினமும் 40 நிமிட உடற்பயிற்சி அவசியம். இது தம்பதியரின் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து மன அழுத்ததை நீக்குகிறது. உடலில் நோய் தாக்காமல் தங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாயாக சிறந்த பருவம்; உலக அளவில் புள்ளி விவரக் கணக்கின்படி ஒரு பெண் தன்னுடைய இருபது வயதிலிருந்து முப்பது வயதிற்குள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதே சிறந்த காலகட்டமாகக் கருதப்படுகிறது. 20க்கு குறைந்தோ அல்லது முப்பதுக்கு மேற்பட்டோ குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தாயின் உடல் ரீதியாகவும், குழந்தையின் வளர்ச்சி ரீதியாகவும், பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முப்பது முப்பத்தைந்து வயதுக்கு மேல் கர்ப்பம் தரிக்கும் பெண்கள், இளம் வயது கர்ப்பிணிகளை விட பல இன்னல்களுக்கு ஆளாவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பெண்களுக்கு வயதாவது என்பது நோயல்ல என்றாலும் வயது ஆக ஆக இடுப்பு எலும்பு நெகிழ்ந்து குழந்தை வெளிவருவதற்கு சுலபமாக வழி ஏற்படுத்தி கொடுக்க இயலாமல் போய்விடும். முதிர்ந்த பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ரீதியான பாதிப்புகளும், மூளை பாதிப்புகளும் இருக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மூளை வளர்ச்சி குன்றிய அல்லது உடல் குறைகளுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இதற்கான பரிசோதனைகள் முன் கர்ப்ப காலத்திலேயே செய்யப்பட்டு கண்டறிந்து சொல்வதற்கான மருத்துவ முன்னேற்றங்களும் இப்போது அதிகரித்துள்ளன.

நோயற்று இருங்கள்: கர்ப்பம் தரித்தபின்னர் இயற்கையான எந்த உணவுகளையும் விருப்பப்படி சாப்பிடலாம். செயற்கையான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. பழுத்த அன்னாசி சாப்பிடுவதால் கர்ப்பத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. போலிக் அசிட் எனப்படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்குவது நல்லது. இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வேறு எந்த மாத்திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும். எந்தவொரு மருத்துவப் பரிசோதனைக்கு முன்னும் ஆலோசனை பெறவேண்டும். நீரழிவு, வலிப்பு ,ஆஸ்த்மா, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் இருப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும்.

விவகாரத்து பெற்ற தந்தைகள் குழந்தைகளை சந்திக்க தடை- இங்கிலாந்தில்!


விவாகரத்து செய்த தந்தைகள் தங்களின் குழந்தைகளை சந்திக்க தடை விதித்து இங்கிலாந்தில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட் உள்ளது. டேவிட் நார்குரோவ் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் இது குறித்து அரசுக்கு இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இங்கிலாந்தில் விவகாரத்து பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளை சந்திக்க சட்டம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் தற்போது அந்த சட்டத்தில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தனது மனைவியை விவாகரத்து செய்த தந்தைகள் தங்கள் குழந்தைகளை சந்திக்கும் உரிமையை இழக்கின்றனர். இது குறித்து டேவிட் நார்குரோவ் தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையின் சாராம்சம்: இங்கிலாந்தில் மனைவியை விவாகரத்து செய்த ஆண்கள் 8 சதவீதம் பேர் உள்ளனர். அதாவது 2 லட்சம் பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு 3 லட்சம் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் தாயின் பராமரிப்பில் வளர்கின்றனர். இந்த குழந்தைகளை அவர்களின் தந்தையர் அவ்வப்போது சந்திக்கின்றனர். தாயும், தந்தையும் ஒருங்கிணைந்து அன்பு செலுத்தவேண்டும் அதுதான் குழந்தைகளுக்கு நல்லுறவை ஏற்படுத்தும்.

சட்டம் விரைவில் அமல்: ஆனால் தாயிடம் வாழும் குழந்தைகளை தந்தை தனியாக வந்து பார்ப்பது குழந்தைகளிடம் ஒருவித சோகத்தை ஏற்படுத்துகிறது. தாங்கள் ஒதுக்கப்பட்டதாக அவர்கள் கருதுகின்றனர். இது அந்த குழந்தைகளின் மனதில் வெறித்தனம் மற்றும் கொடூர எண்ணத்தை ஏற்படுத்துகிறது. எனவே விவாகரத்து செய்த தந்தைகள் தங்களது குழந்தைகளை சந்திக்க அனுமதிக்கக் கூடாது. அதற்கான உரிமையை அவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை புதிய சட்டமாக விரைவில் அமலாக உள்ளதாக இங்கிலாந்து பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

5 செய்தி இணைய தளங்களுக்கு இலங்கை தடை


நாட்டு நலனுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக, அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி 5 செய்தி இணையதளங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. ஆனால், இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு ஊடக நிறுவங்கள் விமர்சித்துள்ளன. அமெரிக்க தூதரகம், இதனை ஜனநாயக விரோத நடவடிக்கை என்று கூறியுள்ளது. இலங்கை சட்டப்படி, எந்த செய்தி நிறுவங்களையும் தடை செய்ய வழியில்லை என்றாலும், அவற்றின் மீது அவதூறு வழக்குதொடுக்கலாம். இருந்தபோதும், இலங்கை செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் கனேகல, இந்தத் தடையை அறிவித்துள்ளார். இலங்கைச் செய்திகள் குறித்து எழுதும் எந்த ஒரு இணைய தளமும், இலங்கை அரசிடம் பதிவு செய்து கொள்ளவேண்டும் அல்லது அது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கை அரசு எச்சரித்திருக்கிறது. இந்த நிபந்தனை முட்டாளதனமானது என்று கூறிய மூத்த எதிர்க்கட்சிப் பிரமுகரான, மங்கள சமரவீர, அரசாங்கம் பயப்பீதியில் செயல்படுவதாக தெரிவித்தார்.

ரசிகர்களின் ரசனை உயர்ந்தால் நானும் உயர்வேன் - கமல்!


 ரசிகர்களின் ரசனை உயர வேண்டும். ரசனை உயர்ந்தால் நானும் உயர்வேன், என்று கமல்ஹாஸன் தனது பிறந்த நாள் செய்தியாக கூறியுள்ளார். கமல்ஹாஸன் இன்று தனது 57 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.


இந்த பிறந்த நாளுக்கு அவர் ரசிகர்களுக்கு விடுத்துள்ள செய்தி: பிறந்த நாளுக்காக ரசிகர்களுக்கு விடுக்கும் செய்தி என்னவென்று கேட்கிறார்கள். ரசனையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். அதுதான் முக்கியம் உங்களுக்கு நல்ல ரசனை இருக்க வேண்டும். அப்போதுதான் என் தொழில் நல்ல தொழிலாக இருக்கும். உங்கள் ரசனை உயர உயர நானும் உயர்வேன். என்னுடைய தனிப்பட்ட கூட்டம் ஒன்றுள்ளது. அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், சினிமா, நடிகன், நட்சத்திரம், அந்தஸ்து என்பதெல்லாம் தற்காலிகமானது என்று திண்ணமாக நம்புபவன் நான். அதையும் தாண்டி, ஒரு நிலையை நாம் வாழ்ந்தோம் என்பதற்கு சின்னமாக, நாம் வாழ்ந்ததற்கான சாயல்களை வடுவாக இல்லாமல் சின்னமாக விட்டுச் செல்ல வேண்டுமானால், அது வரும் சந்ததியினர் - சமுதாயம், நாம் வாழ்ந்த இடங்களை சுத்தமாக வைத்திருப்பது போன்றவைதான். அதைத்தான் என் சகோதரர்களுக்கு, நானும் கற்றுக் கொண்டு அவர்களுக்கும் கற்றுத் தர முயற்சித்து வருகிறேன்.



முடிந்தவரை என் வாழ்க்கையை அப்படி வாழ்வதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களையும் ஈடுபடுத்துகிறேன். இதான் நான் என் ரசிகர்களுக்கு சொல்லுவது. நானும் என் ரசிகன்தான். என்னுடைய கடுமையான விமர்சகனும்கூட. அப்படித்தான் நீங்களும் இருக்க வேண்டும்.என்னைப் பொருத்தவரை நான் நடிகன், கலைஞன். மலர் போன்றவன். அதனால் அதை எப்படிப் பாதுகாக்கணுமோ அப்படி பாதுகாத்துக் கொள்வேன். விமர்சனங்களை மெலிதாகச் சொல்லி, வாடிவிடாமல் இருக்க அவ்வப்போது பாராட்டு தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்க வேண்டும். அதைத்தான் நானும் உங்களிடம் எதிர்ப்பார்க்கிறேன். நன்றி, வணக்கம்! 

 ரசிகர்கள் ரத்ததானம், உடல் உறுப்புதானம் கமல் பிறந்தாளையொட்டி அவரது நற்பணி மன்றத்தினர் ரத்ததானம், உடல் உறுப்பு தானம் செய்தனர்.நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 57வது பிறந்த நாளாகும். தனது பிறந்த நாளின்போது நற்பணிகள் செய்யுமாறு கமல்ஹாசன் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவுறுத்தியுள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நற்பணிகளை செய்துவருகின்றனர் ரசிகர்கள்.அந்த வகையில், இந்த ஆண்டும் உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் ரத்ததானம், உடல் உறுப்புதானம் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்று ரத்தானம் உடல் உறுப்புதானம் செய்தனர்.

உலக அழகியாக வெனிசுலா மாணவி...!





Birth Name: Ivian Lunasol Sarcos Colmenares
Birth Date: July 26, 1989 (1989-07-26) (age 21)
Birth Place: Ospino, Portuguesa, Venezuela
Occupation:
Height: 1.80 m (5 ft 11 in)
Measurements:
Hair color: Black
Eye color: Black
Title(s): Miss Amazonas 2010, Miss World Venezuela 2010
Major Competition(s): 
Miss World 2011


2011 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக வெனிசூலா நாட்டைச்சேர்ந்த இவியன் சர்கோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லண்டனில் நடைபெற்ற விழாவில் அவருக்கு உலக அழகியாக முடிசூட்டப்பட்டது. 2011-ம் ஆண்டு உலக அழகிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்தது. இதில் உலகம் முழுவதிலிருந்தும் 122 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி 150 நாடுகளில் தொலைக்காட்சி வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த , இவியன் லூனாசோல் சர்கோ என்ற 21 வயது மேலாண்மை பட்டதாரி மாணவி 2011-ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். 

ஏழு நாட்டு அழகிகள் இறுதிச்சுற்றில் கொரியா, வெனிசூலா, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ்,போர்ட்டரிகோ தென்ஆப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளைச்சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இவர்களில் வெனிசூலா நாட்டைச்சேர்ந்த அழகி நடுவர்களின் கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்து அழகி 2011 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக முடிசூட்டப்பட்டார். இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை பிலிப்பைன்ஸ் அழகி ஜிவென்டோலைன் ரூயஸும் மூன்றாமிடத்தை போர்ட்டோரிக்கோ அழகி அமண்டா பரீஸும் பெற்றனர்.இதில் பீச் பியூட்டியாக இங்கிலாந்து அழகியும், சிறந்த அறிவுப்பூர்மான அழகி பட்டத்தை சிலி நாட்டு அழகியும் தட்டிச்சென்றனர்.முதல் 15 இடங்களில் கூட இந்தியா அழகி முன்னேற முடியவி்‌ல்லை. 2012 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப்போட்டி மங்கோலியாவில் உள்ள ஆர்டாஸ் நகரில் நடைபெற உள்ளது அதற்கான அறிவிப்பாக சீனாவை சேர்ந்த அழகியிடம் கொடி ஒப்படைக்கப்பட்டது.

கோடைகாலத்தில் பிறக்கும் குழந்தை அதிக அளவில் உயர் கல்வியில் சேருவதில்லை!

அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில், கோடைக்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக அளவில் உயர் கல்வியில் சேருவதில்லை என தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் கோடையை அடுத்த அறுவடை மற்றும் மழைக்காலங்களில் பிறக்கும் குழந்தைகள் அதிக அளவில் உயர் கல்விக்காக பல்கலைக்கழகங்களில் சேருகின்றனர். இது குறித்து உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஆய்வு செய்தபோது, 20 சதவீதம் பேர் ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் என்பதும் 15 சதவீதம் பேர் செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இது மட்டுமல்ல, கோடையில் பிறந்த குழந்தைகளை 7 வயது வரை பள்ளிக்கு கொண்டு விடுவதே பெற்றோருக்கு பெரும் சவாலாக இருக்குமாம். மேலும், பள்ளியிலும் மற்ற மாணவர்களை விட அந்த மாணவர்கள் மகிழ்ச்சியற்ற நிலையிலும், மன நெருக்கடியுடனும் இருப்பதாக ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டது.

கூடங்குளத்தை மேம்படுத்த 11 அம்ச தொலைநோக்குத் திட்டம்- அப்துல் கலாம்!


 கூடங்குளத்தை மேம்படுத்த ரூ. 200 கோடி செலவில் தொலைநோக்குத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக 11 அம்சத் திட்டத்தையும் அவர் பரிந்துரைத்துள்ளார். கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வ நடத்திய அப்துல் கலாம் அதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். இதைத் தொடர்ந்து அவர் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கழிவு நீரால் பாதிப்பில்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர், கடல் நீரின் வெப்பத்தை விட 5 டிகிரி சென்டிகிரேடு கூடுதலாக இருக்கும். ஆனால், இது 7 டிகிரி வரை இருக்கலாம். இதனால், மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படாது. இந்த சோதனையை 7 பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்து கடலில் கலக்கும் அணுஉலையின் நீரால் எந்த வித பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்துள்ளன.

மீன்வளம் பாதிக்கப்படாது: தாராப்பூர், கல்பாக்கம் அணுஉலைகள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. அதனால், மீன்வளத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கழிவுநீரினால் மீன்வளத்திற்கு பாதிப்பு ஏற்படாது. மீன்வளம் குறையாமல் இருக்க பாதாள சாக்கடை கழிவுநீரினை சுத்தப்படுத்தித்தான் கலக்க வேண்டும். அதுதான் மிக முக்கியம்.

தொலைநோக்குத் திட்டம்: கூடங்குளத்திற்கு ஒரு தொலைநோக்கு திட்டமும் உடனடியாக தேவைப்படுகிறது. 2015-ம் ஆண்டிற்குள் மத்திய அரசு கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அந்த பகுதி கடற்கரையோரம் உள்ள கிராமப்புறங்கள் அடங்கிய அதாவது, 50, 60 கிராமங்களை ஒருங்கிணைத்த, குறைந்தபட்சம் ஒரு லட்சம் மக்கள்தொகையை கணக்கில் கொண்டு `புரா' திட்டத்தை (கிராமப்பகுதிகளில், நகர்ப்புறங்களுக்கு இணையான வசதிகளை ஏற்படுத்தித்தரும் திட்டம்) ரூ.200 கோடி செலவில் அமல்படுத்த வேண்டும்.

இந்த சிறப்பு திட்டத்தில் அமல்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள்:
- கூடங்குளத்தில் இருந்தும் மற்றும் 30 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிராமங்களில் இருந்தும் திருநெல்வேலிக்கும், கன்னியாகுமரிக்கும், மதுரைக்கும் செல்லும் நான்குவழி சாலைக்கு செல்ல 4 வழித்தடம் கொண்ட சாலைகள் அமைக்க வேண்டும்.

- 10 ஆயிரம் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பல்வேறு தொழிற்சாலைகள் 30 முதல் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைக்கப்பட வேண்டும். இளைஞர்களுக்கு வங்கிக்கடன் வசதி ஏற்பாடு செய்து 25 சதவீத மானியத்துடன் சுயதொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கூடங்குளம் பகுதி கடற்கரையோர மக்களுக்கு தேவையான பசுமை வீடுகள், அடுக்குமாடி வீடுகள், சமூக கூடங்கள், விளையாட்டு திடல்கள் மற்றும் அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் கொண்ட குடியிருப்புகள் உருவாக்கப்பட வேண்டும். மீனவ மக்களுக்கு தேவையான விசைப்படகுகள், படகு குழாம்கள், மீன்களை பதப்படுத்தும் மையங்கள், குளிர்பதன கிடங்குகள் ஆகியவற்றை அமைத்து கொடுக்க வேண்டும்.

- தினமும் கடல் நீரில் இருந்து 10 லட்சம் லிட்டர் குடிநீரை சுத்திகரித்து அங்கு வாழும் மக்களுக்கு வழங்க வேண்டும்.

- விவசாயத்திற்கும், குடிதண்ணீருக்கும் பேச்சுப்பாறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- 500 படுக்கைகள் கொண்ட உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும். அதில் அனைத்து கிராமங்களுக்கும் டெலிமெடிசின் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

- தமிழக அரசின் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்ட 5 பள்ளிகளை அமைத்து தரமான கல்வியை கொடுக்க வேண்டும்.

- எல்லா கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி, பிராட்பேண்ட் வசதி ஏற்படுத்த வேண்டும். 

- உடனடியாக பேரிடர் பாதுகாப்பு மேலாண்மை நிலையம் ஒன்றை அமைத்து, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.- மக்களுக்கும், அணுமின் நிலையத்திற்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி மக்கள் குழுக்களை அமைத்து ஒரு சமூக நல்லிணக்கத்தையும், பொருளாதார மேம்பாட்டை அடையவும், பேரிடர் காலங்களில் செயல்படும் வழிமுறைகளை செய்யவும், பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை உடனடியாக கிடைக்கச் செய்ய வேண்டும். - ஒவ்வொரு கிராமத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து மேற்படிப்பு படிக்கவைத்து நிரந்தர வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தோடு சன் டிவி குழும தலைவர் கலாநிதி மாறன் பின்லாந்து சென்றுள்ளார்!


 குடும்பத்தோடு சன் டிவி குழும தலைவர் கலாநிதி மாறன் திடீரென பின்லாந்து கிளம்பிப் போய் விட்டார். சிபிஐ விசாரணை வளையத்தின் கீழ் உள்ள நிலையில் அவர் குடும்பத்தோடு பின்லாந்து போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர்செல் நிறுவனம் சிவசங்கரன் வசம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திடம் அதை விற்று விடுமாறு கலாநிதி மாறனும், அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த கலாநிதியின் தம்பி தயாநிதி மாறனும் நிர்ப்பந்தித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், ஏர் செல் நிறுவனத்திற்கு 2ஜி உரிமங்களை வழங்காமல் தயாநிதி மாறன் இழுத்தடித்தார் என்பதும் சிபிஐ வைத்துள்ள குற்றச்சாட்டு. வேறு வழியில்லாமல் மலேசிய நிறுவனத்திடம் ஏர்செல்லை சிவசங்கரன் விற்ற பின்னர் படு வேகமாக அந்த நிறுவனத்திற்கு 2ஜி உரிமங்களை தயாநிதி மாறன் வழங்கினார். இதற்குப் பிரதியுபகாரமாக மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்டர் நிறுவனத்தில் ரூ. 629 கோடி அளவுக்கு முதலீடுகளைச் செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா சதெய்தார். இந்த வழக்கில் தயாநிதி மாறன், ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நிறுவனம், மேக்சிஸ் நிறுவனம் ஆகியவற்றின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கலாநிதி மாறனும் குற்றம் சாட்டப்பட்டோரில் ஒருவர் ஆவார். இந்த வழக்கை படு தாமதமாக தாக்கல் செய்த சிபிஐ இன்னும் தாமதமாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் குடும்பத்தினரின் வீடுகள், அலுவலங்கள், சன் டிவி அலுவலகம் ஆகியவற்றில் ரெய்டுகளை நடத்தியது. இந்த நிலையில், கலாநிதி மாறன் தனது மனைவி காவேரி, மகள் காவியா ஆகியோருடன் திடீரென பின்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். தனி விமானத்தில் சென்ற இவர்கள் தங்களுடன் பெருமளவில் லக்கேஜ்களையும் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று அதிகாலையில் இந்த விமானம் சென்னையை விட்டுக் கிளம்பியுள்ளது. துபாய் போய் அங்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டு அங்கிருந்து பின்லாந்து போயுள்ளது. திடீரென கலாநிதி மாறன் பின்லாந்து கிளம்பிப் போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை வளையத்தின் கீழ் உள்ள நிலையில், இன்னும் விசாரணைக்கு அழைக்கப்படாமல் உள்ள நிலையில் அவர் குடும்பத்தோடு பின்லாந்து போயிருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவர் சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதால் வெளிநாடு போவதாக இருந்தால் சிபிஐயிடம் அனுமதி வாங்கிய பின்னர்தான் செல்ல முடியும். ஆனால் அவர் அனுமதி பெற்றாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

விசாரணையிலிருந்து தப்புவதற்காகவே கலாநிதி மாறன் வெளிநாடு போய் விட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. எப்படி ஐபிஎல் ஊழல் விவகாரத்தில் விசாரணைக்கு வராமல் லண்டனில் உட்கார்ந்தபடி லலித் மோடி டேக்கா கொடுத்துக் கொண்டிருக்கிறாரோ அதேபோல கலாநிதி மாறனும் செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மேலும் பின்லாந்து நாட்டுடன் இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான எந்த ஒப்பந்தமும் இல்லை. எனவே ஒருவேளை பின்லாந்தில் கலாநிதி மாறன் தங்கி விட்டால் அவரை அங்கிருந்து கொண்டு வருவது மத்திய அரசுக்குப் பெரும் சவாலானதாக இருக்கும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கலாநிதி மாறன் ஓய்வுக்காக போயிருக்கிறாரா அல்லது ஒரேயடியாக அங்கு போய் விட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


தும்பை விட்டு வாலை தேடும் CBI.   

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக- 2வது இடத்திற்குப் போன 'சன்' நியூஸ்!


 சன் டிவி குழும வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நிறுவனத்தின் சானல் ஒன்று, 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் மட்டுமே இருந்து வந்த காலத்தில் மக்கள் விடிவு தேடி அலைந்தபோது விடிவெள்ளியாக வந்தது சன் டிவி. சன் டிவியின் புதுமையான மற்றும் புதுப் பொலிவுடன் கூடிய, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மக்கள் மனதை சட்டென்று கவர்ந்தன. அன்று முதல் இந்த நிமிடம் வரை தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்புக்குரிய தொலைக்காட்சியாக சன் டிவி விளங்கி வருகிறது.

தொடர்ந்து முதலிடத்திலேயே சன் குழுமத்தின் சானல்கள் அத்தனையும் இருந்து வருவது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. நிகழ்ச்சிகளை வழங்கும் விதம், துல்லியம், மக்கள் மனதைப் படித்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை வழங்குவது, அனைவரிடமிருந்தும் தனித்துவத்துடன் தனித்து நிற்பது என பல பிளஸ் பாயிண்டுகள் இதற்குக் காரணம். ஆனால் முதல் முறையாக சன் நியூஸ் சானல் 2வது இடத்திற்குப் போயுள்ளது. அதுவும் நேற்று புதிதாக பிறந்த புதிய தலைமுறை சானல், சன் நியூஸ் சானலை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து புதிய தலைமுறை தரப்பில் கூறுகையில், தொலைக்காட்சி பார்வையாளர்களை கணக்கிடும் ஏசி நீல்சன் நிறுவனத்தின் TAM கணக்கீட்டின்படி, தமிழகத்தில் கடந்த 8 வாரங்களாக முன்னேறி, சென்ற வாரம் ஜிஆர்பி எனப்படும் மொத்த மதிப்பீட்டுப் புள்ளிகளில் 35.94 என்ற அளவை புதிய தலைமுறை எட்டி, முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் நியூஸ் சானலுக்கு 31.24 புள்ளிகள் கிடைத்துள்ளனவாம். ஜெயா பிளஸ் 3வது இடத்திலும், கலைஞர் செய்திகள் 4வது இடத்திலும், ராஜ் நியூஸ் 5வது இடத்திலும், என்டிடிவி ஹி்ண்டு 6வது இடத்திலும் உள்ளன.புதிய தலைமுறை செய்தி சானல் சமீபத்தில்தான் தொடங்கப்பட்டது. சன் நியூஸுக்குக் கடும் போட்டியைக் கொடுக்கும வகையில் உருவெடுத்துள்ள இந்த சானல் காரணமாக சன் நியூஸிலும் கூட பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. முன்னிலும் விறுவிறுப்பான முறையில் செய்திகளை கொடுக்க ஆரம்பித்தது சன் நியூஸ். இருப்பினும் தற்போது முதலிடத்தை அது தவற விட்டுள்ளது. பழைய தலைமுறை, 'புதிய தலைமுறை'க்கு வழி விடுகிறதா...?

இதே நாள்...


  • இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் பிறந்த தினம்(1888)
  •  போலந்து வேதியியல் அறிஞர் மேரி க்யூரி பிறந்த தினம்(1867)
  •  இந்திய ஆன்மிகவாதி கிருபானந்த வாரியார் இறந்த தினம்(1993)
  •  உலகின் மிகப் பழமையான தி லண்டன் ‌கசெட், முதலாவது இதழ் வெளியானது(1665)
  •  உலகின் முதலாவது விமான தபால் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது(1910)

44 நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் போதிய வசதியில்லை நிபுணர் குழு !


நிகர்நிலை பல்கலைக் கழகங்களுக்கான அந்தஸ்து இன்றி, 44 பல்கலைக் கழகங்கள் செயல்படுகின்றன என்ற, நிபுணர் குழுவின் அறிக்கை உண்மையானதே' என, சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட ஆய்வுக் கமிட்டி தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள நிகர்நிலை பல்கலைக் கழகங்களில், பெரும்பாலான பல்கலைக் கழகங்கள், போதிய கட்டமைப்பு வசதியின்றி செயல்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக, பேராசிரியர் டாண்டன் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.இந்த குழு, நாடு முழுவதும் செயல்படும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்து, சில பரிந்துரைகளை அளித்தது. இதன்படி, 44 நிகர்நிலை பல்கலைக் கழகங்கள், போதிய கட்டமைப்பு வசதியின்றி செயல்படுவதாகவும், இவை, நிகர்நிலை பல்கலைக்கான அந்தஸ்து இன்றி, கல்லூரி போல் செயல்படுவதாகவும் கூறப்பட்டது.நிகர்லை பல்கலைக் கழகங்களுக்கு யு.ஜி.சி., வரையறுத்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, இவை செயல்படவில்லை என்றும், போதிய பயிற்சி பெறாதவர்கள் பேராசிரியர்களாகச் செயல்படுவதாகவும், பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், போதிய தகுதியுடையவர்களுக்கு பதிலாக, குடும்ப உறுப்பினர்களே நிர்வாகப் பொறுப்பை கவனித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த 44 பல்கலைக் கழகங்களுக்கும், நிகர்நிலை பல்கலைக் கழகங்களுக்கான அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு, இந்த நிபுணர் குழு அறிக்கை அளித்தது.இதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்கள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக, அசோக் தாகூர், சின்கா, எஸ்.கே.ராய் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, தற்போது தன் அறிக்கையை, கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த 44 பல்கலைக் கழகங்களும், நிகர்நிலை பல்கலைகளுக்கான அந்தஸ்து இன்றி செயல்படுகின்றன என்றும், இவற்றில், போதிய கட்டமைப்பு உள்ளிட்ட தர வசதிகள் இல்லை என்றும், நிபுணர் குழு அளித்த அறிக்கை உண்மையானது தான். இந்த நிகர்நிலை பல்கலைகள், யு.ஜி.சி., வரையறுத்த விதிமுறைகளுக்கு பொருத்தமாகச் செயல்படவில்லை. இவற்றில் பெரும்பாலான பல்கலைகள், தாங்கள் வெறும் கல்லூரிகளாகச் செயல்படுவதாகவும், சம்பந்தப்பட்ட மாநில பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் பெற்று செயல்படுவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளன. புதிய பாடத் திட்டங்களைத் துவக்குவதற்கோ, பிஎச்.டி., தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை துவக்குவதற்கோ, தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் இவை தெரிவித்துள்ளன. எனவே, இந்த 44 பல்கலைகளும், நிகர்நிலை பல்கலைகளுக்கான போதிய தரம் இன்றி செயல்படுகின்றன என்ற, முந்தை நிபுணர் குழுவின் அறிக்கையில் இருந்து, மாறுபடுவதற்கான காரணம் எதுவும் இல்லை.இவ்வாறு அந்த கமிட்டி தெரிவித்துள்ளது.

தியாகமின்றி வெற்றி இல்லை...!


இந்த பூமியில் மானுட வாழ்க்கை துவங்கியதிலிருந்து, இறைவன் தன் தூதர்களை உலகிற்கு அனுப்பி வந்தான்.ஆதம் (அலை) நபியிலிருந்து தொடங்கி, முஹம்மது நபி (ஸல்) உடன் அது முடிகிறது. இறைவனால் மனிதனுக்கு சத்திய நெறியை முழுமையாக போதிக்க, இறைவனுடைய கட்டளைகள்படி மனிதனின் இம்மை, மறுமை வாழ்க்கை சிறக்க, அந்த நபிமார்கள் பாடுபட்டனர்.அதற்காக அவர்கள் சந்தித்த சிரமங்கள், சிந்திய ரத்தங்கள், செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல...அப்படி இப்ராஹிம் நபி (அலை) செய்த தியாகத்தை நினைவுகூர்ந்து தான், தியாகத் திருநாள் என்றும், பக்ரீத் என்றும் இன்றைய நாளை உலகம் முழுக்க இருக்கும் அத்தனை முஸ்லிம்களும் கடைபிடிக்கின்றனர். அதை ஒரு பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.இப்ராஹிம் நபிக்கு, ஸாரா மற்றும் ஹாஜிரா என இரண்டு மனைவியர் இருந்தனர்.அவருக்கு நீண்டநாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவருக்கு 85 வயது இருக்கும்போது, ஹாஜிரா மூலமாக ஒரு பிள்ளை பிறந்தது.அவருடைய பெயர் இஸ்மாயில் நபி.அதற்குப் பின் சில ஆண்டுகள் கழித்து, ஸாரா மூலமாக ஒரு பிள்ளை பிறந்தது. அவருடைய பெயர் இஸ்ஹாக் நபி.இஸ்லாமிய சரித்திரம் ஆண்டு துவக்கமான முஹர்ரம் மாதமும், இறுதி மாதமான துல்ஹஜ் மாதமும், மாபெரும் தியாகங்களை உள்ளடக்கிய மாதங்களாகும்.கருணைமிக்க ரஹ்மானாகிய அல்லாஹ், ஒருமுறை நபி இப்ராஹிம் (அலை) உடைய கனவில் தோன்றி, "உம்முடைய மகன் இஸ்மாயிலை என் பெயரால் அறுத்து பலி இடு' என்று கட்டளையிட்டார்.இறைத்தூதர்களுக்கு வரும் கனவுகள் வெறும் கனவுகள் அல்ல; அவை கடவுளின் கடிதங்கள். உலகத்தையே படைத்து பரிபாலிக்கும் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற, இப்ராஹிம் நபி (அலை) தன் கனவை பற்றி தன்னுடைய மகன் இஸ்மாயிலிடம் கூறுகிறார்.

அதற்கு அந்த பிள்ளை, ""தங்களுக்கு அல்லாஹ் என்ன கட்டளையிட்டாரோ, அதை நிறைவேற்றுங்கள். நான் நிச்சயமாக பொறுமையோடு இருப்பேன்...'' எனக் கூறுகிறார்.என்ன ஒரு நம்பிக்கை பாருங்கள்...பிறகு, இப்ராஹிம் நபி (அலை) தன் மகன் இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு, மினா எனும் மலையடிவாரத்தில், பிள்ளைப்பாசம் தடுக்காமலிருக்க, தனது கண்களை துணியால் கட்டிக்கொண்டு, மகனது கழுத்தில் கூரிய கத்தியை வைத்து, "அல்லாஹ் மிகப்பெரியவன்' எனக் கூறியதும், மகன் இருந்த இடத்தில் ஒரு கொழுத்த ஆடும், மகன் விலகியிருந்த காட்சியையும் காண்கிறார்.""எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே... அனைத்தின் மீது ஆற்றல் கொண்டவன் அவனே... அவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறில்லை. நீயே என் அதிபதி,'' என, தன்னை சோதித்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.இதன் நினைவாகவே, இறுதி நபி முஹம்மத் (ஸல்) "இந்நாளில் நீங்கள் அனைவரும் அந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர்கள் ஓர் ஆட்டை குர்பானி கொடுத்து, அதன் கறியை ஏழை, எளியவர்களுக்கு கொடுத்து கொண்டாடுங்கள்' என்று சொன்னார்.

"நீங்கள் அறுத்த ஆட்டின் ரத்தமோ, இறைச்சியோ என்னை வந்து அடைவதில்லை. ஆனால், உங்கள் உள்ளங்களில் உள்ள எண்ணங்களை நான் நன்கு அறிந்தவனாக இருக்கிறேன்' என, இறைவன் கூறுகிறான்.குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான வணக்க வழிபாடு. குர்பானி கொடுக்கும் நாளில், குர்பானி கொடுப்பதை விட, அல்லாஹ் இடத்தில் வேறு சிறந்த வணக்கம் எதுவும் கிடையாது. குர்பானிக்காக பிராணியை அறுக்கும்போது, அதன் ரத்தச் சொட்டு பூமியில் விழுவதற்கு முன்னாலேயே, அல்லாஹ் இடத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதாகி விடுகிறது.எனவே, மனம் திறந்து குர்பானி கொடுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார். ஒரு தடவை நாயகத்திடம் தோழர்கள், "குர்பானி என்றால் என்ன?' என்று வினவியதற்கு, ""அது, உங்களின் தந்தையாகிய நபி இப்ராஹிம் (அலை) உடைய வழிமுறை,'' என நாயகம் (ஸல்) பதிலளித்தார்.

அதற்கு அந்த தோழர்கள், "அதனால் நமக்கு என்ன நன்மை இருக்கிறது' எனக் கேட்டனர்."குர்பானிக்காக அறுக்கப்படும் பிராணியின் ஒவ்வொரு ரோமத்திற்கும், நன்மை இருக்கிறது' என, நாயகம் (ஸல்) பதிலளித்தார்.குர்பானி, குறிப்பாக மூன்று நாட்களில் மட்டுமே கொடுக்க வேண்டும். அவை துல்ஹஜ் மாதத்தின் 10, 11 மற்றும் 12ம் தேதிகளில், எப்பொழுது நாடுகிறோமோ அப்போது கொடுக்கலாம். ஆனால், துல்ஹஜ் மாதத்தில் 10வது நாளில் குர்பானி கொடுப்பது மிகச் சிறந்தது.குர்பானிக்காக அறுக்கப்படும் பிராணியின் கறியை, மூன்று பங்காக பிரிக்க வேண்டும். ஒரு பங்கை தன் குடும்பத்திற்காக வைத்துக் கொள்ள வேண்டும். இன்னொரு பங்கை, நண்பர்கள், உறவினர்களுக்கு பங்கிட்டுத் தரவேண்டும். மூன்றாவது பங்கை, ஏழை, எளியவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு தரவேண்டும்.இப்ராஹிம் நபி (அலை) கட்டிய இறை இல்லாமே மக்கா வாகும் அங்கு துல்ஹஜ் மாதத்தில் செல்வது ஹஜ் என்றும், மற்ற காலங்களில் செய்வது உம்ரா என்றும் சொல்வார்கள்.ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஐந்து முக்கிய கடமைகளை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அவை: கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகும்.

ஹஜ் எனும் புனிதப் பயணம் வசதிபடைத்த அனைவர் மீதும் கட்டாய கடமையாகும். இந்த பள்ளிவாசலை புதுப்பித்து, அங்கு தொழுகையையும், மார்க்க சொற்பொழிவையும் நடைமுறைப்படுத்தியவர் முஹம்மத் நபி (ஸல்)ஹஜ் காலங்களில் உலகத்தில் அனைத்து பகுதிகளிலிருந்தும், இனம், நிறம், மொழி, தேசம் என்ற எந்த பேதமுமின்றி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற, அங்கே கூடுவது கண்கொள்ளாத காட்சி..."லப்பைக் அல்லாஹகம்மா லப்பைக், லப்பைக் லாஷரிகலக லப்பைக் இன்னல் ஹம்தவல் நியமத லகவல்முல்க் லாஷரீகலக்...'"இதோ வந்துவிட்டோம் இறைவா... உன் அழைப்பை ஏற்று உன் இடத்திற்கு இதோ வந்து விட்டோம் இறைவா... உன் அருட்கொடைகளுக்கு நன்றி கூற' என்று, புனிதப் பயணம் மேற்கொள்பவர்களின் நா அசைந்து கொண்டிருக்கும்!இப்ராஹிம் நபி (அலை)யின் வாழ்க்கை தியாகமின்றி வெற்றி இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.நாம் எதை தியாகம் செய்வது? எப்படி வெற்றி அடைவது?

இந்த உலக வாழ்க்கையை இறைவன் எந்த ஒரு அர்த்தமும் இல்லாமல் வெறுமனே படைக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.நமக்கு சிந்திக்கின்ற ஆற்றலை இறைவன் கொடுத்திருக்கிறான். இறைவனுடைய படைப்பிலேயே ஆகச் சிறந்த படைப்பு மனிதன் தான். அவனால் படைக்கப்பட்ட இன்னொரு மனிதனை நாம் பரிகாசம் செய்வது, இறைவனையே நாம் பரிகாசம் செய்வது போலாகும்.நம் மனதில் மறைந்திருக்கும் கேடுகளை, ஆடுகளுடன் சேர்த்து இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம். நம் மனதில் மறைந்து கிடக்கும் நானே மேலானவன் என்கிற மமதையை, மாடுகளுடன் சேர்த்து இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம். செல்வம், அகம்பாவம், ஆடம்பரம் இவற்றின் ஆணவக் கூடுகளை ஒட்டகங்களுடன் சேர்த்து இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம்.இத்தியாகத் திருநாளில் எல்லாரும் இறைவனிடம் கையேந்துவோம்... இவ்வுலகை படைத்து பரிபாலிப்பவனே... அளவற்ற அருள் பொழிபவனே... நிகரற்ற அன்புடையோனே... தீர்ப்பு நாளின் அதிபதியே... உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயாக. அன்பு, பாசம், பரிசு, சகோதரத்துவம் ஓங்கச் செய்து, உலகமெங்கும் சுபிட்சம், அமைதி, சமாதானம், மனிதநேயம், மதநல்லிணக்கம் ஏற்படுத்துவாயாக ஆமீன்!நோய் நொடியற்ற வாழ்வு, இல்லாமை, கல்லாமை, இல்லை என்ற நிலை ஏற்படுத்தி, இந்த நல்ல நாளில் மட்டுமன்றி இனிவரும் நாட்களிலும் எல்லாருக்கும் சிறப்பான வாழ்வளிக்க உன்னையே வேண்டுகிறோம். எல்லாம் வல்ல இறைவனே.. உன்னிடமே உதவி கேட்கிறோம். ஆமீன்!நன்றியும், கருணையும், நட்பும், உதவும் மனோபாவமும் நம்மனங்களில் சுரக்கச் செய்வாயாக அல்லாஹ்...ஆமீன்...யா ரப்புல் ஆலமீன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...