|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 September, 2011

என்.ஐ.டி.யின் பல படிப்புகள் அங்கீகாரம் பெறவில்லை!


நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிஸ் அளிக்கும் பாதிக்கும் மேலான படிப்புகளுக்கு தேசிய அங்கீகாரக் கழகத்தின் அங்கீகாரம் பெறவில்லை என்று நாடாளுமன்றத்தில் இன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது தேசிய கணக்காளர் ஒருவர் இது குறித்து சுட்டிக்காட்டிப் பேசுகையில், "என்.ஐ.டி. கல்வி நிறுவனம் 88 இளநிலை படிப்புகளையும், 191 முதுநிலை படிப்புகளையும் வழங்குகிறது. இதில் 45 இளநிலை படிப்புகளும், 137 முதுநிலை படிப்புகளும் அங்கீகாரம் பெறாதவை. இதன் மூலம், தேசிய அங்கீகாரக் கழகம் நிர்ணயித்த தரத்துடன் இப்படிப்புகள் அமையவில்லை என்பது நிரூபணமாகிறது. சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி இன்ஜினியரிங் படிப்புகளில் சில சமயம், நிர்ணயிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாகவும், ஒரு சில ஆண்டுகளில் குறைவாகவும் சேர்க்கை நடைபெறுகிறது. சில கல்வியாண்டுகளில், 1.38 முதல் 42.31 சதவீதம் இடங்கள் இளநிலை படிப்புகளிலும், 3.13 முதல் 87 சதவீத இடங்கள் முதுநிலை படிப்புகளிலும் காலியாகவே இருந்துள்ளன. இதேப்போல ஒரு சில கல்வியாண்டில், நிர்ணயிக்கப்பட்ட மாணவ எண்ணிக்கையை விட 0.83 முதல் 23.89 சதவீதம் இளநிலை படிப்புகளிலும், 3.30 முதல் 116.67 சதவீதம் முதுநிலை படிப்புகளிலும் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொது கணக்காளர் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் சில புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பாடப்பிரிவுகளின் தேவையை எந்த தரப்பிலும் கருத்துக் கணிப்பை நடத்தாமலும், அதற்கான தேவையை ஆராயாமலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துர்காபுர் மற்றும் சில்சார் என்.ஐ.டி.க்களில் 2009-10ம் கல்வியாண்டில் 2 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பாடப்பிரிவுகளில் தொடர்ந்து காலியிடங்களே நீடிக்கிறது. இதேப்போல குருக்ஷேத்ரா, போபால், சிலாச்சர், சூரத்கல் என்.ஐ.டி.க்களில் கடந்த கல்வியாண்டுகளில் அறிமுகமான 12 பாடப்பிரிவுகளுக்கும் மாணவர்களிடையே வரவேற்பில்லை என்பது தொடர்ந்து நிலவும் காலியிடங்களே சான்றாக உள்ளது" என்றார். எனவே, என்.ஐ.டி.க்களின் உள்கட்டமைப்புப் பணிகளை சீராக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களை தவிர்க்க புதுதிட்டம்!

மொபைல் போனில் வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.,களை தவிர்க்க மத்திய அரசு எடுத்துள்ள புது நடைமுறை வரும் 27ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் மொபைல்போன் பயன்பாடுபடுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், பயன்படுத்துவோருக்கு பல தொல்லைகளும் ஏற்படுகிறது. இந்திய மக்கள் தொகையில், சுமார் 85 கோடிக்கும் மேற்பட்டோர் மொபைல்போன் பயன்படுத்துவதாக தெரிகிறது.

இந்நிலையில் மொபைல்போன் இணைப்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பவர்களும் உண்டு.

சில மாதங்களுக்கு முன்பு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கே வீட்டுக் கடன் வேண்டுமா சார் என்று கேட்டு ஒரு வங்கியிலிருந்து வந்த அழைப்பு அவரைக் கடுப்பாக்கியதை நாடே அறியும்.அதுகுறித்த புகார்கள் பெருகி வந்த நிலையில், மத்திய தொலை தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம், 'தேவையற்ற அழைப்புகளின் பதிவு' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் இதில் பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டது.

ஆனால், இந்த முறை நுகர்வோரை முழுமையாக சென்றடையவில்லை. இதையடுத்து தற்போது, "தேசிய நுகர்வோர் விருப்ப பதிவு" என்ற புதிய முறை வரும் 27ம் தேதி முதல் அறிமுகப்படுத்த மத்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, 140 என்ற எண்ணை வர்த்தகம், விற்பனை, சேவை விபரங்கள் உள்ளிட்டவைகளை அறிவிக்க மொபைல்போன் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வேறு எண்களை பயன்படுத்த கூடாது.

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க விரும்பும் மக்கள், இந்த சேவைக்கு பதிவு செய்து கொண்டால், அவர்களுக்கு எந்த தேவையில்லாத அழைப்புகளும் வராது. அதை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.

கவர்ச்சிப் பெண்களின் நடனத்தால் கல்லா கட்டும் சீன ரயில்வே!

சீனாவில் உள்ள ரயில் நிலையங்களில் சமீபகாலமாக கவர்ச்சி அழகிகளின் நடனத்தால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ரயில்வே துறைக்கு வருவாய் அதிகரித்து வருகிறது.

சீன ரயில் போக்குவரத்து உலகளவில் புகழ் பெற்றது. உலகின் அதிவேக ரயில், அதிக வசதிகள் கொண்ட ரயில் என பல சிறப்பு அம்சங்களை கொண்டது. இந்நிலையில், ரயில் பயணிகளுக்கு உற்சாகம் அளிக்கும் புதுவித நடனம் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் நடந்து வருகிறது.

சீனாவின் புகழ் பெற்ற ஷாங்காய் மெட்ரோ ரயில்களில், கடந்த சில நாட்களாக இளம்பெண்களின் கிளுகிளுப்பு நடனத்தை பார்க்க முடிகிறது. ஷாங்காய் ரயில் நிலையத்தில் ரயில்களில் ஏறும் இந்த இளம் நடனமங்கைகள் ரயில்களில் உள்ள தாங்கு கம்பங்கள், இருக்கைகள், தரை, சுவர் என பல ஸ்டைல்களில் தங்கள் நடனத்தை அரங்கேற்றுகின்றனர்.

மேலும் தங்கள் நடனத்திற்கு இடையே அவ்வப்போது தங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை ஒவ்வொன்றாக களைந்து பயணிகளை சூடாக்குகின்றனர். இதைபோல சுரங்கப் பாதை ரயில்கள் கடந்து செல்லும், நாஞ்சிங் சுரங்கப் பாதையிலும் அவ்வபோது நடன மங்கைகளின் ஆட்டத்தை பார்க்க முடிகிறது.

கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் ஆடிவந்த நடன மங்கையர், மக்கள் மத்திய பிரபலமடைந்து உள்ளனர். இவர்கள் சில நேரத்தில் ரயில்களிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவது உண்டு என அவர்களின் ரசிகர்கள் சிலர் கூறுகின்றனர்.

இந்த நடனத்தால், நீண்டதூர ரயில் பயணத்தை, பயணிகள் உற்சாகமாக போக்குகின்றனர். இதனால், ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ரயில் நிலையங்களின் வருமானமும் அதிகரித்து வருகிறது.

இந்த நடன மங்கைகளின் கூத்துகளை சில பயணிகள் தங்கள் மொபைல்போன்களில் படப்பிடித்து, அவற்றை இணைதளத்தில் உலாவ விட்டுள்ளனர். இதில் உற்சாகமடையும் நடன மங்கைகள் பல கவர்ச்சி மாடல்களில் நின்று ஆடி போஸ் கொடுக்கின்றனர். நடன மங்கைகளின் ஆடைகளும் சீனாவில் பிரபலமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நீரிழிவு நோயாளிகளுக்கு 50 % இதயநோய் தாக்கும் அபாயம்!

மனித வாழ்வில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கொடிய நோய்களான எய்ட்ஸ், புற்றுநோய், ஆகியவற்றின் வரிசையில் தீராத நோயாகி கடைசி வரை மெல்லக்கொல்லும் நோயாக திணறவைக்கிறது சர்க்கரை நோய். பெயரைக்கேட்டால் இனிப்பாக இருந்தாலும் இந்நோய் தாக்கியவர்களின் வாழ்க்கை கசப்பாகத்தான் இருக்கிறது என்பது உண்மை.

மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றினால் உருவாகும் சர்க்கரை நோய்க்கு இந்தியாவில் 18 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ உலகம் தெரிவித்துள்ளது. 2025-ம் ஆண்டில் மட்டும் உலக அளவில் இந்நோய்க்கு 30 கோடி மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏன் வருகிறது சர்க்கரைநோய்? உடலில் இன்சுலின் சுரப்பு குறைபாடினால் ஏற்படும் இந்த நீரிழிவு நோய் பரம்பரை வழியாகவும், உடல் பருமனாலும் வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. நகரங்களில் வசிப்பவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு இருப்பது உடல் பருமனுக்கு காரணமாகிறது. இதனால் ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் ஏற்பட்டு சிறு வயதிலேயே நீரிழிவு நோய்க்கு பலரும் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும் மனஅழுத்தம் நிறைந்த பணியில் இருப்பவர்களை இந்நோய் எளிதில் தாக்கிவிடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்க்கரை நோய்க்கான சர்வதேச கூட்டமைப்பு 2007-ம் ஆண்டு வெளியிட்டுள்ள புள்ளி விபர தகவலின்படி இந்தியாவில் 4 கோடிக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. சர்க்கரை நோய் அதிகம் உள்ள மாநிலங்களில் ஆந்திரா முதலிடத்தையும், கேரளா இரண்டாவது இடத்தையும், தமிழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

கண்களை தாக்கும்: நீரிழிவு நோயாளிகளுக்கு சட்டென்று பாதிப்பு ஏற்படுவது கண்கள்தான். 10 முதல் 20 சதவிகிதம் பேர் கண் தொடர்பான நோயினால் பாதிக்கப்படுகின்றனர். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாவிட்டால் சிறிய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு கண்பார்வை சேதமடைகிறது. இதனால் கண்களில் கட்டிகள் வருவதுடன், கருவிழியில் புண்களும் தோன்றுகின்றன. இதனால் விழித்திரை கிழிந்து பார்வை நரம்புகளில் வீக்கங்களும் ஏற்படுகின்றன.

நரம்புகளை பாதிக்கும் நீரிழிவு: பத்தாண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்படுவதால் உச்சி முதல் பாதம் வரை பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் பசி மயக்கம் ஏற்பட்டு வலிப்பும் வரும் என்கின்றனர். நரம்புமண்டலம் பாதிக்கப்படுவதால் கண் பார்வை குறைவதோடு, முக்கியமாக பக்கவாதம் வரும் வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கால்களில் அபாயம்: கால் நரம்புகள் பாதிக்கப்படுவதால் வலி, வீக்கம், புண்கள் தோன்றி கால் விரல்கள் கருகிவிடுகின்றன. மேலும் ரத்த ஓட்டம் குறைவதால் உணர்ச்சியற்ற தன்மை உருவாகிறது. இதனால் கால்களில் காயம் ஏற்பட்டாலும் கவனிக்காமல் விட்டு விடுவதால் காலையை இழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே கால்களை பாதுகாக்க செருப்புகள் இல்லாமல் நடப்பதை தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

இதயநோய் வாய்ப்பு: சர்க்கரை நோய் உள்ள 50 சதவிகிதம் பேருக்கு இதயநோய் ஏற்படும் பாதிப்பு அபாயம் உள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2011 ஜூன் மாதம் வரை 25 வயது முதல் 65 வயது வரை உள்ள மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவை சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மையம் மற்றும் இருதய பாதுகாப்பு மையத்தின் இயக்குனரும் தலைவருமான டாக்டர் எஸ். தணிகாசலம் வெளியிட்டுள்ளார்.

அதில் சரியான உடல் அமைப்பினை காட்டிலும் நகரங்களில் வசிப்பவர்கள் 47.92 சதவிகிதம் பேரும், கிராம மற்றும் நகர பகுதிகளிடையே வசிப்பவர்களில் 53,63 சதவிகிதத்தினரும், ஊரகப்பகுதிகளில் வசிப்பவர்களில் 28.34 சதவிகிதம் பேரும் உடல் பருமனைக் கொண்டிருந்தது தெரிந்தது ஆய்வில் பங்கேற்ற 8800 பேரில் 1200 பேருக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் இருப்பது கண்டறியப்பபட்டது. ஆயிரம் பேர் மட்டுமே எந்தவித பிரச்சினையும் இன்றி இருப்பது தெரியவந்துள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களில் 50 சதவிகிதம் பேருக்கு இதய நோய் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு என்றும் ஆய்வில் முடிவில் மருத்துவர் எஸ். தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

உணவுப்பழக்கம்: நீரிழிவு நோய் தாக்கியவர்கள் உணவுக்கட்டுப்பாட்டினை பின்பற்றினால் நோயினை கட்டுப்படுத்தமுடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். சரியான நேரத்தில் உண்ணப்படும் உணவுடன் நார்ச்சத்து மிக்க கோவைக்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், கீரை ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒமேக 3 கொழுப்பு நிறைந்த மீன் எண்ணெய், பாதம், பிஸ்தா போன்றவற்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

புரதச்சத்து மிக்க பால், முட்டை, கோழிஇறைச்சி, மீன் மற்றும் பருப்பு வகைகளும் உண்ணத்தகுந்தவை என உணவியல் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். நீரிழிவு நோயை குணப்படுத்தவோ, தடுக்கவோ முடியாது எனக்கூறும் மருத்துவவர்கள் சரியான உணவுப்பழக்கம், முறையான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் மருத்துவர்களின் ஆலோசனை பின்பற்றுவது அவசியம் என வலியுறுத்துகின்றனர். இவற்றை தவறாமல் பின்பற்றினால் சர்க்கரை நோய் தாக்கியவர்களும் நீண்ட ஆயுளோடு வாழலாம்.

தொடர் ஓட்டத்தில் போல்ட் தலைமையிலான ஜமைக்கா அணி மீண்டும் உலக சாதனை!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி நாளில் தொடர் ஓட்டத்தில் ஜமைக்கா அணி, உலக சாதனை படைத்தது. கொரியா நாட்டின் டேகு நகரில் 13வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது. இதன் கடைசி நாளில்ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டபந்தயம் நடத்தப்பட்டது.

இதில், உலகின் வேகமான மனிதன் என அழைக்கப்படும் உசேன் போல்ட்டின் ஜமைக்கா அணியினர் மிக சிறப்பாக செயல்பட்டனர். போல்ட் உடன், நெஸ்டா கார்டர், மைக்கேல் பிராடர், யோகன் பிளேக் ஆகியோர் பங்கேற்றனர்.

துவக்க வீரர் முதல் சிறப்பாக செயல்பட்ட ஜமைக்கா அணியினர், 400 மீட்டர் தூரத்தை 37.04 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்தனர். இதன்மூலம், அதே அணியினர் 2008ம் ஆண்டில் படைத்த 37.10 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்து தங்கப் பதக்கங்களை தட்டிச் சென்றனர்.

போட்டிகளின் முடிவில், பதக்க பட்டியலில் 12 தங்கம் வென்ற அமெரிக்க முதலிடத்தை பிடித்தது. 8 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட மொத்தம் 25 பதக்கங்களை பெற்றது. 2வது இடத்தை 9 தங்கம் வென்ற ரஷ்யாவும், 7 தங்கம் பெற்ற கென்யா 3வது இடத்தையும், 4 தங்கம் பெற்று சாதனை படைத்த ஜமைக்கா 4வது இடத்தையும் பெற்றது. இந்தியாவிற்கு ஒரு பதக்கமும் கிடைக்கவில்லை.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழாவில், ஒவ்வொரு நாட்டின் வீரர்களும் தங்கள் தேசியகொடியை ஏந்தி மைதானத்தை சுற்றி வந்து, ரசிகர்களின் உற்சாகமான கைதட்டல்களை பெற்றனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...