|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 September, 2011

நீரிழிவு நோயாளிகளுக்கு 50 % இதயநோய் தாக்கும் அபாயம்!

மனித வாழ்வில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கொடிய நோய்களான எய்ட்ஸ், புற்றுநோய், ஆகியவற்றின் வரிசையில் தீராத நோயாகி கடைசி வரை மெல்லக்கொல்லும் நோயாக திணறவைக்கிறது சர்க்கரை நோய். பெயரைக்கேட்டால் இனிப்பாக இருந்தாலும் இந்நோய் தாக்கியவர்களின் வாழ்க்கை கசப்பாகத்தான் இருக்கிறது என்பது உண்மை.

மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றினால் உருவாகும் சர்க்கரை நோய்க்கு இந்தியாவில் 18 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ உலகம் தெரிவித்துள்ளது. 2025-ம் ஆண்டில் மட்டும் உலக அளவில் இந்நோய்க்கு 30 கோடி மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏன் வருகிறது சர்க்கரைநோய்? உடலில் இன்சுலின் சுரப்பு குறைபாடினால் ஏற்படும் இந்த நீரிழிவு நோய் பரம்பரை வழியாகவும், உடல் பருமனாலும் வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. நகரங்களில் வசிப்பவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு இருப்பது உடல் பருமனுக்கு காரணமாகிறது. இதனால் ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் ஏற்பட்டு சிறு வயதிலேயே நீரிழிவு நோய்க்கு பலரும் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும் மனஅழுத்தம் நிறைந்த பணியில் இருப்பவர்களை இந்நோய் எளிதில் தாக்கிவிடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்க்கரை நோய்க்கான சர்வதேச கூட்டமைப்பு 2007-ம் ஆண்டு வெளியிட்டுள்ள புள்ளி விபர தகவலின்படி இந்தியாவில் 4 கோடிக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. சர்க்கரை நோய் அதிகம் உள்ள மாநிலங்களில் ஆந்திரா முதலிடத்தையும், கேரளா இரண்டாவது இடத்தையும், தமிழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

கண்களை தாக்கும்: நீரிழிவு நோயாளிகளுக்கு சட்டென்று பாதிப்பு ஏற்படுவது கண்கள்தான். 10 முதல் 20 சதவிகிதம் பேர் கண் தொடர்பான நோயினால் பாதிக்கப்படுகின்றனர். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாவிட்டால் சிறிய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு கண்பார்வை சேதமடைகிறது. இதனால் கண்களில் கட்டிகள் வருவதுடன், கருவிழியில் புண்களும் தோன்றுகின்றன. இதனால் விழித்திரை கிழிந்து பார்வை நரம்புகளில் வீக்கங்களும் ஏற்படுகின்றன.

நரம்புகளை பாதிக்கும் நீரிழிவு: பத்தாண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்படுவதால் உச்சி முதல் பாதம் வரை பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் பசி மயக்கம் ஏற்பட்டு வலிப்பும் வரும் என்கின்றனர். நரம்புமண்டலம் பாதிக்கப்படுவதால் கண் பார்வை குறைவதோடு, முக்கியமாக பக்கவாதம் வரும் வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கால்களில் அபாயம்: கால் நரம்புகள் பாதிக்கப்படுவதால் வலி, வீக்கம், புண்கள் தோன்றி கால் விரல்கள் கருகிவிடுகின்றன. மேலும் ரத்த ஓட்டம் குறைவதால் உணர்ச்சியற்ற தன்மை உருவாகிறது. இதனால் கால்களில் காயம் ஏற்பட்டாலும் கவனிக்காமல் விட்டு விடுவதால் காலையை இழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே கால்களை பாதுகாக்க செருப்புகள் இல்லாமல் நடப்பதை தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

இதயநோய் வாய்ப்பு: சர்க்கரை நோய் உள்ள 50 சதவிகிதம் பேருக்கு இதயநோய் ஏற்படும் பாதிப்பு அபாயம் உள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2011 ஜூன் மாதம் வரை 25 வயது முதல் 65 வயது வரை உள்ள மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவை சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மையம் மற்றும் இருதய பாதுகாப்பு மையத்தின் இயக்குனரும் தலைவருமான டாக்டர் எஸ். தணிகாசலம் வெளியிட்டுள்ளார்.

அதில் சரியான உடல் அமைப்பினை காட்டிலும் நகரங்களில் வசிப்பவர்கள் 47.92 சதவிகிதம் பேரும், கிராம மற்றும் நகர பகுதிகளிடையே வசிப்பவர்களில் 53,63 சதவிகிதத்தினரும், ஊரகப்பகுதிகளில் வசிப்பவர்களில் 28.34 சதவிகிதம் பேரும் உடல் பருமனைக் கொண்டிருந்தது தெரிந்தது ஆய்வில் பங்கேற்ற 8800 பேரில் 1200 பேருக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் இருப்பது கண்டறியப்பபட்டது. ஆயிரம் பேர் மட்டுமே எந்தவித பிரச்சினையும் இன்றி இருப்பது தெரியவந்துள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களில் 50 சதவிகிதம் பேருக்கு இதய நோய் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு என்றும் ஆய்வில் முடிவில் மருத்துவர் எஸ். தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

உணவுப்பழக்கம்: நீரிழிவு நோய் தாக்கியவர்கள் உணவுக்கட்டுப்பாட்டினை பின்பற்றினால் நோயினை கட்டுப்படுத்தமுடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். சரியான நேரத்தில் உண்ணப்படும் உணவுடன் நார்ச்சத்து மிக்க கோவைக்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், கீரை ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒமேக 3 கொழுப்பு நிறைந்த மீன் எண்ணெய், பாதம், பிஸ்தா போன்றவற்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

புரதச்சத்து மிக்க பால், முட்டை, கோழிஇறைச்சி, மீன் மற்றும் பருப்பு வகைகளும் உண்ணத்தகுந்தவை என உணவியல் வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். நீரிழிவு நோயை குணப்படுத்தவோ, தடுக்கவோ முடியாது எனக்கூறும் மருத்துவவர்கள் சரியான உணவுப்பழக்கம், முறையான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் மருத்துவர்களின் ஆலோசனை பின்பற்றுவது அவசியம் என வலியுறுத்துகின்றனர். இவற்றை தவறாமல் பின்பற்றினால் சர்க்கரை நோய் தாக்கியவர்களும் நீண்ட ஆயுளோடு வாழலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...