|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 November, 2011

கேபிள் டி.வி. கட்டணம்: ரூ.70க்கு மேல் வசூலித்தால் கடும் நடவடிக்கை!

அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர்ந்துள்ள ஆபரேட்டர்கள், சந்தாதாரர்களிடம் இருந்து ரூ.70க்கு மேல் மாதக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் பதிவு செய்து அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களாக தொழில் செய்து வரும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அனைவரும் தங்களுடைய சந்தாதாரர்களிடம் இருந்து வசூலித்த மூன்று மாத முன் பணம் மற்றும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான சந்தா தொகையை விரைவில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சந்தாதாரர்களிடமிருந்து வசூலித்த தொகையினை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு செலுத்தாமல் தாமதம் செய்து வரும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த அறிவிப்பினை மீறி சந்தா தொகையை செலுத்தாத ஆபரேட்டர்களின் பதிவு ரத்து செய்யப்படுவதோடு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு அவர்கள் பதிவு ரத்து செய்யப்படும் போது அவர்களுக்கு பதிலாக அந்த பகுதியில் புதிய கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நியமிக்கப்படுவார்கள். மேலும், அரசு நிர்ணயித்த தொகையான ரூ.70க்கு மேல் சந்தாதாரர்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால், அந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீதும் மேற்கூறியவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

உலக உணவுகள் ஒரே இடத்தில்!

உலகின் ருசிமிக்க பலவித உணவுகளை சுவைத்துப் பார்க்க சென்னையில் ஒரு இடம் உள்ளது. அதுவும் நகரப் பரபரப்பு எதுவுமே தெரியாத அமைதியான ஏரியாவில்.அந்த உணவகத்துக்குப் பெயர் பர்கன்டி. அமைந்துள்ள இடம் எம்ஆர்சி நகரின் சாமர்செட் வளாகம். செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி அருகில்.
உணவகத்துக்குள் உள்ளே நுழைந்தாலே இனிய நறுமணமும், கண்களை உறுத்தாத வெளிச்சமும் நல்ல சூழலை உணரவைக்கின்றன.தோசை, பீஸா, பாஸ்தா, அசைவ உணவுகள் என அத்தனையும் இங்கு உண்டு. காரசாரமான மதுரைக் கோழி குழம்பும் கிடைக்கும், அசத்தலான இத்தாலிய, ஸ்பானிஸ் வகை உணவுகளும் கிடைக்கும். அதுதான் பர்கன்டியின் விசேஷம்.

வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் வெளியில் அறையெடுத்துத் தங்கி, சாப்பாட்டுக்கு இங்கு வரவேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால், இந்த உணவக மாடியில் சகல வசதிகளுடன் கூடிய நட்சத்திர அறைகளை ஏற்பாடு செய்து தருகிறார்கள். அமைதியான சூழலில் தங்கி விரும்பிய உணவை உண்ணலாம். இந்த உணவகத்தை நடத்தும் விபின் ஏற்கெனவே சப்வே, டஸ்கானா போன்ற உணவகங்களை நகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறார். இந்த உணவகத்துக்கு திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள். எனவே முன்கூட்டியே ரிசர்வ் செய்வது சிறந்தது. ரிசர்வேஷனுக்கு 49001000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

காதலில் ஆறு வகை... உங்கள் காதல் எந்த வகை?

காதல் என்பது இளமையின் வசந்தகாலம். மனம் கவர்ந்தவரை கண்டவுடன் அவரை தக்கவைத்துக்கொள்வதற்காக எண்ணற்ற செயல்களை செய்யத் தூண்டுகின்றன ஹார்மோன்கள். காதலிப்பவர்களை கவர்வதற்காக இளமையின் வேகத்தில் எத்தனையோ சாகசங்களை செய்பவர்கள் ஏராளம். மனதிற்குள் பூக்கள் பூத்த அந்த தருணங்களை சேகரித்தாலே ஆயிரம் ஆயிரம் திரைப்படங்களுக்கும், நாவல்களுக்கு கதையாக உருவாக்கலாம். நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம். உங்கள் `ரொமான்டிக்’ செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எப்படிப்பட்டது என்பதை விவரிக்கிறார்கள் இங்கே…

புரிதலும் விட்டுகொடுத்தலும்: காதல் பிறந்த உடனேயே அனைவரும் கவிஞர்களாகிவிடுகின்றனர். பேப்பரும் பேனாவும் கிடைத்தாலே போதும் சரம் சரமாக கவிதைகள் ஊற்றெடுக்கும். உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும் காதல் வரிகளை மட்டுமே உதடுகள் உச்சரிக்கும். நீங்களும் அப்படிப்பட்டவர் எனில் காதல்வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம். உங்கள் கட்டுக்கடங்காத விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக காதலியின் விருப்பத்தை எதிர்பார்த்து பாடலாக பாடி அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதனை மன்மதக்காதல் என்கின்றனர் ரொமான்டிக் ஆய்வாளர்கள். இந்த வகை காதலர்கள் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து ஆத்மார்த்தமான காதலர்களாக திகழ்வார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஒருவருக்கொருவர் புரிதல் தன்மையுடனும், மற்றவர் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி விட்டுக் கொடுத்தும் வாழ்வார்கள். இந்த காதலர்கள் மகிழ்ச்சியாகவும், கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்.

பொழுது போக்கு காதல்: காதலியின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஏகப்பட்ட செயல்களை செய்து அவளை தன்வசமே வைத்திருக்கும் காதலர்கள் ஏராளமானோர் உண்டு. இத்தகைய காதல் கவன ஈர்ப்புக்காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள். உங்களுக்குள் காதல் உணர்வுகள் நிரம்பி இருக்கிறது. ஆனால் அவளுக்குள் அதுபோன்ற உணர்வு நிறைய இருக்காது எனவே இது முழுமையான காதல் அல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள் நிலைமை இப்படி இருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் ரசிப்பீர்கள். அவள் தனிமையில் சந்திப்பதையோ, நெருக்கத்தை அனுமதிப்பதையோ விரும்பமாட்டாள். இது பொழுதுபோக்கு காதலென்கின்றனர் அவர்கள்.

வாழ்க்கை முழுதும் தொடரும்: காதாலியின் மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் உண்டு. அவள் மீது உள்ள அக்கறையினால் எண்ணற்ற செயல்களை செய்து அவளின் நன்மதிப்பினை ஏராளமாக பெறும் ஆண்கள் உண்டு. கண்ணியமான பார்வையும் நேசத்தை வெளிப்படுத்த சரியான தருணத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் காதலை சேமிப்புக் காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள். காதல் உணர்வையும் புரிந்து வைத்திருப்பீர்கள். `காதலி கிடைத்தால் இவளைப்போல கிடைக்கவேண்டும்’ என்று ஏங்கவும் செய்வீர்கள். ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அளவுக்கு நேசம் வைத்திருப்பீர்கள். இருவரும் ஆழமான அன்பு வைத்திருந்தாலும் கிட்டத்தட்ட இது ஆழமான நட்புணர்வே. நீங்கள் விரும்பினால் இந்த நட்பை வாழ்க்கை முழுவதும் நீடிக்கவும் செய்யலாம்.

எல்லைமீறாத காதல்: இருவருக்கும் பரஸ்பரம் பிடித்திருக்கிறது. இருவரும் நன்றாகவே பேசிக்கொண்டாலும் எல்லைமீறாமல் செல்கிறது உங்கள் காதல். ஒருவருக்கொருவர் பிரச்சினைகளை பட்டியலிட்டாலும் முட்டிக்கொள்வதில்லை. காமத்தைப் பற்றிப் பேசினாலும் விசரம் இல்லை எனில் உங்கள் காதல் திட்டமிட்டக் காதல். வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுக்கவும், வாழவும் விரும்பும் ஜோடி நீங்கள். உங்கள் உணர்வுகளும் கூட எல்லைக்குட்பட்டதுதான். உங்கள் அன்பும் என்றும் நீடித்திருக்கும்.

விட்டுக்கொடுக்காத காதல்: ஒருவருக்கொருவர் சீண்டிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பார்கள். எல்லை மீறல்கள் இருந்தாலும், அந்த சீண்டலை அனுமதிப்பர். உங்களுடைய காதல் இப்படிப்பட்டது என்றால் அதனை ‘இனிப்பு காதல்’ என்று வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இவர்களுக்குள் ஆழமான காதல் உணர்வு இருக்கும். அதிக உணர்ச்சியும் கொஞ்சம் கூச்சம் உடையவராகவும் இருப்பார்கள். இவர்கள் காதலில் காமம் கலந்திருப்பதால், ஒருவரின் தீண்டலை இன்னொருவர் தடுக்கமாட்டார். இவர்களுக்குள் தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும், சில ஒளிவு மறைவு ரகசியங்களும் இருக்கும். ஆனால் காதலை கடைசிவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

உயிர் தரும் காதல்; காதலிக்கோ, காதலருக்கோ ஏதாவது ஒன்று என்றால் உடனே அக்கறையுடன் கவனிக்க கிளம்பிவிடுவார்கள். விளையாட்டுக்கு அழைத்தால் கூட லீவ் போட்டுவிட்டு உடனே காதலிப்பவர்களை உடனே பார்க்க கிளம்பிவிடுபவர்களா நீங்கள். அப்படியானால் ஆத்மார்த்தமான இந்த காதலை வெற்றிக்காதல் என்கின்றனர் ஆய்வாளர்கள். உங்கள் காதல் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இப்படிப்பட்ட காதலர்கள் ஒருவருக் கொருவர் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள். பிரச்சினை என்றால் தன்னையே தரவும் தயாராவார்கள். என்ன காதலர்களே நீங்களும் உங்கள் காதல் எப்படிப்பட்டது? எந்த வகையைச் சார்ந்தது என்பதை கண்டுபிடித்துவிட்டீர்களா?

இப்படி ஒரு அனுபவம் நேர்ந்ததில்லை! - பார்த்திபன்!

பாரதிராஜாவின் 'அன்னக்கொடியும் கொடி வீரனும்' படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனாலும் என் 20 வருட சினிமா வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு அனுபவம் நேர்ந்ததில்லை,'' என்று வருத்தப்பட்டுள்ளார் பார்த்திபன். சாதனை இயக்குநர் பாரதிராஜா தனது லட்சிய படைப்பாக, 'அன்னக்கொடியும் கொடி வீரனும்' என்ற படத்தை உருவாக்குகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக பார்த்திபன் நடிப்பார் என்றும், படப்பிடிப்பு 17-ந் தேதி தேனியில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. பட பூஜையும் தேனியிலேயே நடக்கிறது.

இந்த நிலையில், திடீரென்று 'அன்னக்கொடியும் கொடி வீரனும்' படத்தில் இருந்து பார்த்திபன் நீக்கப்பட்டுள்ளார். இதனை பார்த்திபனும் உறுதிப்படுத்தி, ட்விட்டரில் எழுதியிருந்தார். 'அவ்வளவு சம்பளம் கொடுக்க மாட்டார் பாரதிராஜா' இதுபற்றி பார்த்திபன் அளித்துள்ள விளக்கத்தில், " நான் இயக்கி வரும் வித்தகன் படத்தை தயாரிக்கும் மாணிக்கம் நாராயணன் ஒருநாள் என்னிடம், "ஒரு பெரிய இயக்குநரின் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும். எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டார். நான் ஒரு தொகையை சொன்னேன்.

"அவர் அவ்வளவு சம்பளம் கொடுக்க மாட்டார்'' என்று சொன்ன மாணிக்கம் நாராயணனிடம், "யார் அந்த டைரக்டர்?'' என்று கேட்டேன். "பாரதிராஜா'' என்றார். "அவர் படம் என்றால், சம்பளம் இல்லாமலே கூட நடிக்க தயார். அவர் பக்கத்தில் இருந்தாலே போதும்'' என்றேன். குறைவான சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். பாரதிராஜா படத்தில் நடிக்க வேண்டும் என்று நான் வாய்ப்பு கேட்டு போகவில்லை. அவர்தான் என்னை அழைத்தார். இரண்டு மூன்று முறை என்னை அழைத்து, நான் நடிக்க வேண்டிய 'கட்டுவிரியன்' என்ற கதாபாத்திரம் பற்றி விளக்கினார். ஒரு தொகையை 'அட்வான்ஸ்' ஆக கொடுத்தார். பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார்.

நான் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பேனா? என்று 'டெஸ்ட்' எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் திடீரென்று, "போட்டோ எடுக்க வேண்டும்'' என்றார்கள். நான் போட்டோ எடுத்துக்கொடுத்து அனுப்பினேன். போட்டோவை பார்த்துவிட்டு, "சட்டை தைத்து போட்ட மாதிரி, அந்த கதாபாத்திரத்துக்கு பார்த்திபன் பொருத்தமாக இருக்கிறார்'' என்று பாரதிராஜா கூறியிருக்கிறார். மேலும் ஒரு போட்டோ ஷூட்டுக்காக கடந்த 9-ந் தேதி நான் தேனி போய் இருக்க வேண்டும். பாரதிராஜா அலுவலகத்தில் இருந்து தகவல் எதுவும் வரவில்லை. 10-ந் தேதி, அமீரை வைத்து போட்டோ சூட் எடுப்பதாக தகவல் அறிந்தேன். ஆனால், இந்த நிமிடம் வரை எனக்கு பாரதிராஜாவிடம் இருந்து தகவல் சொல்லப்படவில்லை. என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியாது. சீமந்தமா நடக்கிறது, 'செண்டிமெண்ட்' பார்க்க? சினிமாதானே பண்ணுகிறோம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு, 'வித்தகன்' படத்தின் ரிலீஸ் வேலைகளில் ஈடுபட்டேன்.

20 ஆண்டுகளில் கிடைக்காத அனுபவம்: பாரதிராஜா படத்தில் நடித்தால் புது அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். இப்படி ஒரு அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பாரதிராஜா படத்தில் நீங்கள் நடிக்கவில்லையா? என்று என்னிடம் சேரன் உள்பட நிறைய பேர் விசாரித்தார்கள். அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வது, எனக்கு சங்கடமாக இருக்கிறது. எது எப்படியோ... பாரதிராஜாவின் லட்சிய படம் வெற்றி பெற வாழ்த்துகள்,'' என்றார்.

இந்த வார ராசி பலன்(13-11-11 முதல் 18-11-11 வரை)

மேஷம்: பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் நிதானம் தேவை. பெண்களுக்கு: கணவருடனான ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

ரிஷபம்: பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். உடன் பிறப்புகளிடம் எதையும் மனம் திறந்து பேச வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். கணவரை அனுசரித்துச் செல்லவும். உறவினர்களுடன் பேசுகையில் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பண வரவு இரட்டிப்பாகி மகிழக்கூடும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மிதுனம்: பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்படச் செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பொருளாதாரம் மேம்படும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கடன் தொல்லை இருக்காது. உறவினர்களும், நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத பலன்கள் கிடைக்கும்.

கடகம்: பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். பொருளாதாரம் மேம்படும். சேமிப்பு பெருகும். தடைகள் அகலும். மனம் உற்சாகமாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். அடுத்தவர்கள் வீட்டுப் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும்.

சிம்மம்: பொது: நிதானமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். சமுதாயத்தில் மதி்ப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். தேவையற்ற பயணங்களைத் தள்ளிப் போடுவது நல்லது. பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் புதிய திருப்பங்கள் ஏற்படலாம். சிலருக்கு திடீர் என்று இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் பாராமுகமாக இருப்பார்கள். வேலையில் கூடுதல் கவனம் தேவை.

கன்னி: பொது: வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். உறவினர்கள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வேலை பளு அதிகரிக்கும். எதிர்பார்க்கும் விஷயங்கள் நடக்கும்.

துலாம்: பொது: சுமாரான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவு சீராக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவும். ஆன்மீகத்தில் ஈடுபடவும். பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடக்கூடும். உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சியில் குடும்பத்தோடு கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த கடன்தொகை கிடைத்து மகிழக்கூடும். அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.

விருச்சிகம்: பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். உறவினர்களும், நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பண புழக்கம் அதிகரிக்கும். பிரிந்த உறவுகள் தேடி வரும். உடல் நலம் மேம்படும். கணவரின் உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

தனுசு: பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்வீர்கள். வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சிறப்பாக பணிபுரிந்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம்.

மகரம்: பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நல்லவை உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டு. பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழக்கூடும். பேச்சில் நிதானம் தேவை. இல்லதில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும். குடும்பத்தோடு ஆன்மீக பயணம் மேற்கொள்ளக்கூடும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கக்கூடும். பண வரவுக்கு குறைவிருக்காது. உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். வேலை பளு அதிகரித்தாலும் சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள்.

கும்பம்: பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு அல்லது மனை வாங்கும் யோகம் உண்டு. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக இருக்கும். கணவன் மனைவி இடையை ஒற்றுமை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் சந்தோஷப்படுவீர்கள். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு குறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கக்கூடும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மீனம்: பொது: சாதகமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக நடக்கும். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். பண வரவு நன்றாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடன் பிறப்புகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. குலதெய்வ வழிபாடு செய்ய வெளியூர் சென்று வருவீர்கள். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்படச் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். அடுத்தவர்களைப் பற்றி வீண் பேச்சு பேச வேண்டாம்.

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கின் இறுதி விசாரணையை இம்மாதம் 22 – ம் தேதிக்கு!

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கின் இறுதி விசாரணையை இம்மாதம் 22 – ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. சார்க் மாநாட்டில் டக்ளஸ் தேவானந்த பங்கேற்ற புகைப்படத்துடன் மனுதாரர் வழக்கறிஞர் உயர்நீதி மன்ற பெஞ்ச் முன்பு சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வந்ததை அடுத்து நீதிபதிகள் இறுதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

தேடப்படும் குற்றவாளி: இலங்கையின் பாரம்பரியத் தொழில்கள் மற்றும் சிறுதொழில்கள் அமைச்சராக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. கடந்த 1986 மற்றும் 87ம் ஆண்டுகளில் இவர், சென்னையில் தங்கியிருந்தபோது, சூளைமேடு காவல் நிலையத்தில், திருநாவுக்கரசு என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கும், 7 வயது சிறுவனை கடத்தி, பணம் கேட்ட வழக்கு உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகின்றன. இதில், டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கின் மனுதாரரின் வழக்கறிஞரான ராதாகிருஷ்ணன், நீதிபதிகள் நாகப்பா, சுதந்திரம் ஆகியோர் கொண்ட பெஞ்சில், சிறப்பு கவன ஈர்ப்பை வெள்ளிக்கிழமை கொண்டு வந்தார்.

தேடப்படும் குற்றவாளி: அதில், ’’ஐகோர்ட்டில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாலத்தீவில் நவ., 10ம் தேதியன்று நடந்த சார்க் மாநாட்டில், இந்திய பிரதமரை சந்தித்து, தமிழகத்தின் மீனவர் பிரச்னை உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்ததாக, புகைப்படத்துடன் செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் குறித்து, பிரதமருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், இந்திய பிரதமர் அவரை சந்தித்திருக்கலாம். ஆனால், தேடப்படும் குற்றவாளி, சர்வதேச நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். எனவே, அவரை விசாரணைக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறினர். இதையடுத்து, நீதிபதிகள் நாகப்பா, சுதந்திரம் ஆகியோர், வழக்கின் இறுதி விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

கட்டண கொள்ளை... 6 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து!

பெற்றோரிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்து துன்புறுத்திய 6 பெரிய தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை அங்கீகாரத்தை ரத்து செய்து நீதிபதி சிங்காரவேலு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தாறுமாறாக கல்வி கட்டணம் வசூலிப்பதாக தமிழக அரசுக்கு புகார் வந்த வண்ணம் உள்ளது. இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டணத்தை நிர்ணயிக்க கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவித்தது.

பின்னர், நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜபாண்டியன் நியமிக்கப்பட்டு, அவரும் புதிதாக கல்வி கட்டணத்தை நிர்ணயித்தார். பின்னர் இதுவரை கட்டணம் நிர்ணயிக்காத பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி இதுவரை கல்வி கட்டணம் நிர்ணயிக்காத பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், பல பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிப்பதாக கூறியும், 'ஸ்மார்ட் கிளாஸஸ்' நடப்பதாக கூறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் அந்த பெற்றோர்களையும், பள்ளிகளின் நிர்வாகத்தினரையும், நீதிபதி சிங்காரவேலு அழைத்து விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து நேற்று நீதிபதி சிங்காரவேலு, நிருபர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக 400 பள்ளிக்கூடங்கள் மீது புகார்கள் வந்துள்ளன. அவற்றில், 40 பள்ளிகள் மீது விசாரணை நடந்துள்ளது. ஏற்கனவே கட்டணம் நிர்ணயிக்காத பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்து வருகிறோம். இருப்பினும் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விசாரணை நடத்தியதில், 6 பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸஸ்' என்று கூறி கூடுதல் கட்டணம் வசூலித்து வந்தனர்.

அவ்வாறு வசூலிக்கக்கூடாது என்று அந்த பள்ளிகளுக்கு அறிவுரை கூறியும், தொடர்ந்து எங்கள் உத்தரவை மதிக்காமல் கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்து வந்துள்ளனர். எனவே, 6 பள்ளிக்கூடங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
அந்த பள்ளிக்கூடங்களின் பெயர் விவரம் வருமாறு:

1. அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி
2. கில் ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி
3. அழகப்பா மெட்ரிகுலேஷன் பள்ளி
4. லயோலா மெட்ரிகுலேஷன் பள்ளி
5. ஹோலி ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி
6. ஹோலி ஃபேமிலி மெட்ரிகுலேஷன் பள்ளி.

அனைத்துப் பள்ளிகளுமே சென்னையில் உள்ளவை. மேலும், கூடுதலாக வசூலித்த பணத்தை திரும்ப கொடுக்கக்கோரி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது," என்றார்.

புலிகளை ஒழிக்கவே இந்தியா விரும்பியது - நார்வே!

சுதந்திர ஈழத்துக்காக போராடிய விடுதலைப் புலிகளை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்றே இந்தியா விரும்பியது. சமாதான முயற்சிகள் சீர்குலைய இந்தியாவும் ஒரு பிரதான காரணம், என நார்வே குற்றம்சாட்டியுள்ளது. இலங்கை அரசின் சமாதான முயற்சிகள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழு, நார்வே அரசின் சார்பில் போரில் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட, ‘அமைதிக்கான அடமானங்கள்‘ (Pawns of Peace) என்ற தலைப்பிலான அறிக்கை, ஆஸ்லோவில் வெளியிடப்பட்டது.

புலிகளை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்று நார்வேயிடம் இந்தியா கூறியதாக, தோல்வியடைந்த இலங்கையின் சமாதான முயற்சிகள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நார்வே அரசின் சார்பாக தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட, ‘அமைதிக்கான அடமானங்கள்' (Pawns of Peace) என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் சமாதான முயற்சிகள் முறிந்து போக இந்தியா எவ்வாறு காரணமாக இருந்தது என்பது பற்றி பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2003-2004 ல் சமாதான முயற்சிகள் மெதுவாக அவிழத் தொடங்கிய போது இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களை இந்தியா அனுதாபத்துடன் அணுகியதாக இந்த அறிக்கை கூறியுள்ளது. அப்போது வாஜ்பாய் ஆட்சிக் காலம். புலிகளுக்கு மறைமுகமாக இந்திய ஆதரவு இருந்தது.  ஆனால் 2004ல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு, தமிழர்களின் விருப்பங்களை பாதுகாப்பதாக கூறிக் கொண்டாலும், மகிந்த ராஜபக்சே அரசாங்கம் தமிழருக்கு எதிராக மேற்கொண்ட ராணுவத் தீர்வு முயற்சிக்கு எதிராக எந்தவொரு அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனிப்பட்ட சந்திப்புகளில் நார்வேயை 'புலிகளின் நண்பர்' என்று இந்தியா விமர்சித்ததாகவும், 'புலிகளை அப்படியே நிறுத்திவிட வேண்டும்' என்று கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால்தான் இலங்கை படைகளுக்கு இந்தியா ரேடார்கள், புலனாய்வுத் தகவல்களை வழங்கியது. இலங்கைக்கு தாக்குதல் போர்த் தளவாடங்களை வழங்குவதில்லை என்ற கொள்கையை டெல்லி கடைப்பிடித்தாலும் வேறு எவரிடம் இருந்தும் ஆயுதங்களை இலங்கை கொள்முதல் செய்ய எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. விடுதலைப் புலிகள் மீதான இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு, இலங்கைக்கு போரை நடத்துவதற்கு உந்துதலாக அமைந்தது.

கடந்த 2004ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது விடுதலைப் புலிகளால் தற்கொலை படை தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட ராஜிவ்காந்தியின் மனைவி சோனியா காந்தி, இந்தியாவின் சக்தி வாய்ந்த நபராக மாறியது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2008 இறுதியில் பொதுமக்களின் இழப்புகளை மட்டுப்படுத்துமாறு டெல்லி கோரிய போதிலும், ராணுவ நடவடிக்கையைத் தொடர்வதற்கும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கும் ஆதரவு வழங்குவதில் இந்திய அரசாங்கம் மிகவும் தெளிவாக இருந்தது.

விடுதலைப் புலிகளின் இறுதி நாட்கள் பற்றி குறிப்பிடும் இந்த அறிக்கையில், புலிகள் மிக நெருக்கமாக சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு கொழும்பு மிகக் குறைந்தளவே ஆர்வம் காட்டியது. போரின் இறுதியில் விடுதலைப் புலிகள் தப்பித்துக் கொள்வதற்கு இந்தியா ஆர்வம் காட்டியதா என்பது சந்தேகமாகவே இருந்தது. சமாதான முயற்சிகளில் இந்தியா கூடுதல் பங்கு வகிக்குமாறு 2007ல் நார்வே தொடர்ச்சியாக வலியுறுத்திய போதும் டெல்லி அதனை நிராகரித்துவிட்டது. ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்த போது தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்பதும் அப்போதே தெளிவாகியது.

போரின் இறுதிக் கட்டத்தில் இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தல் குறித்து இலங்கை கவலை கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சி தூக்கியெறியப்பட்டு வேறு யார் பதவிக்கு வந்தாலும் புலிகளுக்கு உதவி கிடைக்கலாம் என்ற கவலை இலங்கைக்கு இருந்தது என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்புக் கொண்டு, முன்வரைவு அறிக்கையை ஏற்று ஆயுதங்களை கீழே போட இணங்குமாறு ஆலோசனை கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தகவல் புலிகள் ஆதரவு அரசியல்வாதியான வைகோவுக்கு கசிந்ததும், இது காங்கிரசின் தந்திரம் என்று நிராகரிக்குமாறும், தேர்தலில் பாஜக கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் புலிகளை மீட்கும் என்றும் அவர் உறுதி கூறியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது நடக்கவில்லை. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போதே புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தார் என்று நார்வேயின் அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்மநாபசுவாமி கோயில் சொத்து பிரம்மாண்ட புராணத்தில் தகவல்!

சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் ஆபரணங்கள் உள்ளதாக பிரம்மாண்ட புராணத்தில் முன்பே கூறப்பட்டுள்ளதாகவும், இதில் 100 கோடி ரத்னங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்திய தேசியத்தின் முக்கிய அடையாளமான 18 புராணங்கள், 4 வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், 108 உபநிஷங்கள், இரண்டு காவியங்கள் உட்பட ஏராளமான ஏடுகள் உண்மையை பிரதிபலிப்பதாகவே உள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் புதைந்துள்ள பொக்கிஷங்கள் வெளி உலகத்திற்கு தெரிய வந்தன. இக்கோயிலிலுள்ள 5 அறைகளிலிருந்து 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஆபரணங்கள் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 6வது அறையான "பி அறையை திறப்பது குறித்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் இந்த ரகசிய அறையை திறக்கக் கூடாது என கோர்ட்டில் மனுதாக்கல் செய்து வழக்கும் நடந்து வருகிறது. இந்நிலையில் இக்கோயிலில் 100 கோடி ரத்னங்கள் வைக்கப்பட்டுள்ளதாக 18 புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. உலகம் உருண்டை என கலிலியோ கூறுவதற்கு முன்பே ஆயிரம் ஆண்டுகளை கடந்த கோயிலில் விஷ்ணு சுவாமியின் அவதாரங்களில் ஒன்றான மச்ச அவதாரத்தில் தன்னுடைய மூக்கின் மீது உலக உருண்டையை தூக்கி வரும் சிலைகள் இன்றும் உள்ளது. இந்நிலையில் பத்மபுராணம், சிவபுராணம், விஷ்ணு புராணம், தேவி புராணம், மல்ஷ புராணம், போன்ற புராண வரிசைகளில் வரும் பிரம்மாண்ட புராணத்தில் இச்சம்பவம் சொல்லப்பட்டுள்ளதாக சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் வழுப்பள்ளிமடம் ஸ்தானிகர் டாக்டர் சர்மா கூறுகிறார்.

கேரள மன்னர் குடும்பத்துடனும், அரசுடனும் நெருக்கமுள்ள இவர் இது குறித்து கூறும் போது:- கார்க்கி மகிரிஷி, தர்மபுத்திரரிடம் பேசக் கூடியதாக கூறப்பட்ட பிரம்மாண்ட புராணம், ஊர்களையும், ஊரின் வளத்தையும் பற்றி கூறுவதாகும். கடந்த ஆண்டுகளில் ஓலைச்சுவடிகளாக இருந்தவை 1912ம் ஆண்டு புத்தக வடிவில் அச்சிடப்பட்டது. கேரள மகாத்மியம் என்ற பகுதியில் 88வது அத்தியாயத்தில் அனந்தபுரவர்ணம் என்ற பகுதியில் 10 மற்றும் 11ம் பக்கங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் கருவறைக்கு அருகில் சுற்றுப்பிரகாரம் நடுவில் தனங்கள் வைக்கும் அறைகளில் 100 கோடி ரத்னங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதை பரசுராமன் ஆதித்ய மன்னனிடம் கூறியதாக, இதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆதித்ய மன்னனிடமிருந்து தற்போது வரை இந்த பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.இந்த வாக்கியத்தில் ஆதித்ய மன்னனாகிய நீயேதான் இதை பாதுகாக்க வேண்டும். ஸ்ரீபத்மநாபசுவாமி ஆலயம் பொக்கிஷம் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் குலசேகரன் என்ற பெயரில் அறியப்படுவாய் ஊரும், உலகமும் அறிய உன்னை போற்றுவார்கள் என இதில் கூறப்பட்டுள்ளது. இந்த மன்னனின் நினைவாகவே குமரி மாவட்டத்திலும், கேரளத்திலும் கூட குலசேகரன்புதூர், குலசேகரபுரம் என பல இடங்களில் குலசேகரன் பெயரிலேயே அமைந்துள்ளது. கேரள மகாத்யம் ஓலைச்சுவடி புத்தக வடிவில் அச்சடிக்கப்பட்ட காலமான 1912ல் சாமோதிரிபாடு மகராஜா கோழிக்கோட்டை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார். இந்த நூலை மலையாளத்தில் அச்சிட்ட பாலக்காட்டில் சேகரிபுரம் கிராமம் சேஷ்ட சாஸ்திரிகள் பிரம்மாண்ட புராணத்தை ஓலை சுவடியிலிருந்து புத்தக வடிவில் கொண்டு வந்தார் என அவர் கூறினார். புராணத்தில் கூறப்பட்ட சம்பவம் தற்போது உண்மையாக நடந்தேறியிருப்பதால் இந்த பிரம்மாண்ட புராணத்திலுள்ள மற்ற பகுதிகளும் உண்மையாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. 

கோவில் நிலங்களை இனி விற்பதில்லை அறநிலையத்துறை!

கோவில் சொத்துக்களை, குடியிருப்போருக்கு விற்பது, ஓர் ஆபத்தான முயற்சியாகவே கருதப்படுகிறது. எனவே, இனி, கோவில் நிலங்களை விற்பதில்லை என, இந்து சமய அறநிலையத் துறை, அதிரடி முடிவை எடுத்துள்ளது. கோவில் நிலத்தை விற்பனை செய்யலாமா, கூடாதா என முடிவு செய்யும் அதிகாரத்தை, அறநிலையத் துறைச் சட்டம், 1959ன் பிரிவு 34, அத்துறை ஆணையருக்கு அளிக்கிறது. அந்த விற்பனையும், கோவிலின் நலன் கருதி, மிக மிக அவசியமாகக் கருதப்பட்டால் மட்டுமே, மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், எப்போதுமே, சட்டத்துக்கு மாறாகத் தானே நடைமுறை இருக்கும். உள்ளூர் பலம், அரசியல் பின்புலம் மூலம், சட்ட ரீதியாகவே வாங்கி, கோவில் சொத்துக்களை, "ஸ்வாகா செய்வோர் அதிகரித்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முக்கியத்துவம் வாய்ந்த முடிவை, இந்து சமய அறநிலையத் துறை எடுத்துள்ளது.

குறைந்த விலை: சென்னையின் பிரபலமான கோவில்களில் ஒன்று, பாடி திருவல்லீஸ்வரர் கோவில்; பல்லவர்கள் காலத்துக்கும் முந்தையது. புண்ணியாத்மாக்கள் பலரின் முயற்சியால், இந்தக் கோவிலுக்கு, பாடியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், 55 ஏக்கருக்கும் மேல் நிலம் உள்ளது. இதில், 125 கிரவுண்டு மற்றும் 751.75 சதுர அடி நிலத்தில், 126 பேர் வரை குடியிருந்து வந்தனர். இவர்கள் அனைவரும், "ஜெகதாம்பிகை நகர் கூட்டுறவு வீட்டு மனை சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தைத் துவக்கி, "நாங்கள் குடியிருக்கும் அடிமனையை எங்களுக்கே விற்று விடுங்கள் என, கோரிக்கை வைத்தனர். அப்போதிருந்த கோவில் நிர்வாகமும், அறநிலையத் துறையும் அதை ஏற்று, 66 பேருக்கு, அடிமனையை கிரையம் செய்து கொடுத்துவிட்டன. இது நடந்தது 1984ல். அப்போது, ஒரு கிரவுண்டு, வெறும் 12 ஆயிரம், 15 ஆயிரம் மற்றும் 16 ஆயிரம் என விற்கப்பட்டது. ஆரம்பித்தது பிரச்னை: ஒரு பாதிப் பேருக்குக் கிடைத்துவிட்டால், மறு பாதியினர் விடுவரா? தங்களுக்கும் விற்பனை செய்ய வேண்டும் என, விடுபட்டவர்களுடன் புதிதாகச் சிலரும் சேர்ந்து, மொத்தம் 135 பேர், சட்டப் போராட்டத்தைத் துவக்கினர். சென்னை ஐகோர்ட்டில் வழக்கு, தள்ளுபடி, உத்தரவு, ரத்து என, அத்தனை அத்தியாயங்களும் அரங்கேறின. கடைசியாக, கடந்த ஜூலையில், "இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்பதா, மறுப்பதா என்பது குறித்து, பரம்பரை அறங்காவலர் மற்றும் பொதுமக்களின் ஆலோசனை, ஆட்சேபனைகளைப் பெற்று, எட்டு வாரத்துக்குள், அறநிலையத் துறை ஆணையர் இறுதி முடிவெடுக்க வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய அறநிலையத் துறை அதிகாரிகளும், ஆணையரும், விரிவான ஆலோசனை மேற்கொண்டனர். வழக்கு யுத்தம் துவங்கிய 25 ஆண்டுகளில், எல்லாமே தலைகீழாக மாறிவிட்டிருந்தது. பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள அம்பத்தூர், முகப்பேர், அண்ணா நகர் மேற்கு, கிழக்கு போன்ற பகுதிகளில், ஒரு கிரவுண்டு நிலத்தின் விலை, ஒரு கோடி ரூபாயை எட்டிவிட்டது. வாடகை, பூஜை கட்டணங்கள், உண்டியல் வருவாய், நன்கொடைகள் என, கோவிலின் வருவாயும் அதிகரித்து விட்டது. திருவல்லீஸ்வரரின் அருளால், வங்கியில் ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகை இருக்குமளவு, கோவிலின் நிதிநிலை உயர்ந்து விட்டது. ""முன்னோர், கோவிலைப் பரிபாலனம் செய்வதற்குக் கொடுத்த சொத்துக்களை அபிவிருத்தி செய்யலாமே தவிர, விற்கக் கூடாது என, அக்கோவிலின் பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரம், கடுமையாக வாதிட்டார்.

உருப்படியான முடிவு: நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவு: கோவில் இடத்தில் குடியிருந்து வருவோருக்கு, அந்த நிலத்தை விற்பனை செய்வது, ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து, தமிழகம் எங்கும் உள்ள கோவில் சொத்துக்கள், பராதீனம் அடையும் சூழ்நிலையை ஏற்படுத்தும். மேலும், பணவீக்கத்தின் காரணமாக, ரூபாயின் மதிப்பு ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது; அசையாச் சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. இன்றைய நில விற்பனைத் தொகை, நாளை எவ்விதத்திலும் கோவிலுக்குப் பயன்படாத நிலையாக மாறும். எனவே, கோவில் சொத்துக்களை, குடியிருப்போருக்கு ஒட்டுமொத்தமாக விற்பது, ஓர் ஆபத்தான முயற்சியாகவே கருதப்படுகிறது. எதிர்காலத்தில், கோவில்களின் நலன் பாதிக்கும் என்பது, தொலைநோக்குப் பார்வையில் புலப்படும். இவ்வாறான விற்பனை முடிவுகள், இதர கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களில் குடியிருப்போருக்கும், ஒரு தூண்டுகோலாக அமைந்து, கோவில் நிலங்களுக்கு, ஒரு பொதுவான ஆபத்து ஏற்படும். எனவே, திருவல்லீஸ்வரர் கோவில் மனைகளை விற்க முடியாது. இவ்வாறு, ஆணையர் உத்தரவிட்டார். அறநிலையத் துறை ஆணையரின் இந்த அதிரடி உத்தரவால், இனி, தமிழகத்தில் உள்ள எந்தக் கோவிலின் சொத்துக்களும், விற்பனை செய்யப்பட முடியாத, ஆரோக்கியமான நிலை உருவாகியுள்ளது.

சபரிமலை வழிபாடு கட்டணத்தில் தேவசம்போர்டு பெரும் மாற்றம்!

சபரிமலை வழிபாடு கட்டணத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு பெரும் மாற்றம் செய்துள்ளது. புதிய கட்டணத்தில் படிபூஜை 50 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அப்பம், அரவணை பிரசாத கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் மண்டல சீசன் தொடங்க இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் சீசனில் வழிபாடு கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. புதிய கட்டண விபரங்கள் வருமாறு. பழைய கட்டணம் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அபிஷேக நெய்- 50 (40), நெய் அபிஷேகம் 10, (5), அப்பம் ஒரு பாக்கெட் 25 (20), அரவணை 60 (50) அஷ்டாபிஷேகம் 2000 (1500), அஷ்டோத்தர அர்ச்சனை 20 (15), ஐயப்ப சக்கரம் 120 (100) , பகவதி சேவை 1000 (800), சோறு ஊட்டு 100 (61), கணபதிஹோமம் 200 (160), களபாபிஷேகம் 3000 (2000) , லட்சார்ச்சனை 4000 (3000), மலர் நிவேத்யம் 15 (3) மலவடிபூஜை 15 (4), மஞ்சள் குங்குமம் 25 (10), முழுக்காப்பு 500 (301), நாகராஜா பூஜை 25 (15), நாமகரணம் 70 (61), நவக்கிரகபூஜை 100 (61), நீராஞ்சனம் 75 (61), நெய்விளக்கு 15 (3). நித்யபூஜை 2501 (2501), படிபூஜை 50,000 (30,000), பஞ்சாமிர்தம் 20 (5), பஞ்சாமிர்தம் 100 மில்லி 50 (30), பறையடி 120 (100), பூஜித்த விளக்கு 100 (50), பூஜித்த மணி 70 (40), புஷ்பாபிஷேகம் 2000 (1500), சகஸ்ரகலசம் 25,000 (19,000),தங்க ஆபரணபூஜை 20 (10), சகஸ்ரநாம அர்ச்சனை 20 (15), தங்க அங்கி சார்த்து 7500, துலா பாரம் 100 (61), உச்சபூஜை 2001 (2001), உடையாடை சார்த்து 15 (10), உடையாடை நடைக்கு வைத்தல் 15 (10), உதயாஸ்தமன பூஜை 30,000 (20,001), உற்சவபலி 15,000 ( 5001), உஷபூஜை 501 (501), வல்சம் நிவேத்யம் 25 (15),வர நிவேத்யம் 15 (10), வெள்ளி அங்கி சார்த்து 4000 (2501), விபூதி பிரசாதம் 15 (10), எழுத்து தொடங்கி வைத்தல் 101 (101).பம்பை தேவசம்: கணபதிஹோமம் 100 (61), புஷ்பாபிஷேகம் (புதிய கட்டணம்)1500, அவல் நிவேத்யம் 20 (10), இருமுடி கட்டு கட்டுதல் 160 (200), மோதகம் 25 (15), வடைமாலை 150 (65).

இந்திய புவியியல் துறை!


மாணவர் பருவத்தில், குறிப்பாக பள்ளி பருவத்தில், புவியியல் மீதான ஆர்வம் அனைவருக்கும் இருக்கும். தமது நாட்டை, மாநிலத்தை, மாவட்டத்தை, ஏன் நகரம் அல்லது கிராமத்தை தேடிக் கண்டுபிடித்து பார்த்து சந்தோஷப்படுதல், அந்த வயதின் ஆனந்தங்களுள் ஒன்று. இதுதவிர, மலைகள், நதிகள், பாலைவனங்கள் மற்றும் பனிப் பிரதேசங்கள் ஆகியவற்றையும் மாணவர்கள் விரும்பிப் பார்ப்பர். நம் நாட்டைத் தாண்டிய அல்லது கண்டத்தை தாண்டிய பிறிதொரு நிலப்பரப்பு எவ்வாறு இருக்கும்? அப்பகுதி மக்கள் எப்படி இருப்பார்கள்? அவைகளை எப்படி சென்றடைவது? என்பன குறித்த ஆர்வம், புவியியலின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவை. கி.மு.9ம் நூற்றாண்டில்தான், முதல் வரைபடம்(Map) உருவாக்கப்பட்டிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. கடல் பயண கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பலவித நடவடிக்கைகளுக்கு, வரைபடங்களை பயன்படுத்த தொடங்கிய காலம் முதல், புவியியல் துறை முக்கிய வளர்ச்சியைக் கண்டது. புவியியல் துறையின் நவீன வடிவங்களாக, பூகோள தகவல் அமைப்பு(Geographic Information system), நகர் திட்டமிடுதல் மற்றும் பருவநிலை அறிவியல் போன்றவை திகழ்கின்றன.

பழைய வரலாறு: சீனம், அரபு தேசம், கிரேக்கம், ரோம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தத்துவஞானிகள், கணிதவியலாளர்கள் மற்றும் பயணிகள் ஆகியோர், ஆரம்பகால புவியியல் துறை வளர்ச்சிக்கு பேருதவி புரிந்துள்ளார்கள். கி.மு.3ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க அறிஞர் எரடோஸ்தனிஸ், Geography என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் மற்றும் புவியின் சுற்றளவை முதன்முதலில் அளந்தவர் என்று வரலாறு கூறுகிறது. அதேசமயம், கி.மு.7ம் நூற்றாண்டில், காலிபாக்களின் வாள் வலிமையால் இஸ்லாமிய பேரரசு பரவத்தொடங்கிய காலகட்டத்தில், அம்மதத்தின் அறிஞர்கள், பயணிகள் மற்றும் வணிகர்கள், உலகின் தொலைதூரப் பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களுடன் தொடர்பை ஏற்படுத்தினார்கள் மற்றும் இத்துறையின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றினார்கள். இடைக்காலங்களில், ஐரோப்பியர்கள் இத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றினாலும், ஆட்டோமன் துருக்கியர்கள் கி.பி.1453ம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள்(Byzantium) நகரை கைப்பற்றியப் பிறகு, ஐரோப்பியர்கள், ஆசியர்களுடன் மேற்கொண்டிருந்த பாரம்பரிய வணிக வழி தடைபட்டதால், கடல்வழியாக புதிய வழியை கண்டுபிடிக்க ஐரோப்பியர்கள்(1492 முதல்) தொடங்கியபோது, இத்துறை அபாரமான வளர்ச்சியைக் கண்டது. புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், உலகை வரைபடமிடுதல் கலை மேம்படத் தொடங்கியது. ஐரோப்பிய பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, புவியியல் ஒரு பாடமாக 19ம் நூற்றாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய பல்கலைகளிலோ, கடந்த 1930களில் ஒரு பாடமாக புவியியல் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், கடந்துபோன ஆண்டுகளில், புவியியல் பாடம் என்பது பலவித சுற்றுச்சூழல் நிலைகள், இடங்கள், புவிஅமைப்புகள் மற்றும் அவற்றின் தொடர்புகள் பற்றி படிப்பது என்ற அளவில் புவியியல் துறை ஒரு கருத்தமைப்பை பெற்றுள்ளது.

இன்றைய நிலை: இன்றைய தொழில்புரட்சி யுகத்தில், புவியியல் என்ற துறையின் வளர்ச்சியை ஆய்ந்து நோக்க வேண்டியுள்ளது. சமநிலையற்ற வளர்ச்சி, நீடித்த வளர்ச்சி, நகர்மயமாக்கல், பருவநிலை மாற்றம் போன்ற பலவித அம்சங்களை ஆய்வுசெய்ய புவியியல் பயன்படுகிறது. புவியியல் என்பது விவரணம் என்ற நிலையிலிருந்து பகுப்பாய்வு என்ற நிலைக்கு தன்மை மாற்றம் அடைந்துள்ளது.

அறிவியலுக்கும், சமூகத்திற்கும் இடையில்: ஒரு பிரச்சினையை, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக அலசுவது எந்தளவு முக்கியமோ, அதேஅளவிற்கு, புவியியல் ரீதியாக அலசுவதும் மிகவும் முக்கியம். ஏனெனில், புவியியலின் முக்கியத்துவம் அந்தளவிற்கானது. சமூக அறிவியலையும், பெளதீக அறிவியலையும் இணைக்கும் முக்கியப் பகுதி புவியியலில் அடங்கியுள்ளது.புவியியல் துறை தனக்குள் பலவித அம்சங்களைக் கொண்டுள்ளதால், திட்டமிடுதல், இயற்கை வளங்களை சுரண்டுதல், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சிறப்பு பகுப்பாய்வு போன்றவைகளில் அதன் பங்களிப்பு உண்டு. புவி மற்றும் சுற்றுச்சூழல் குறித்து தரவுகளை உருவாக்க ரிமோட் சென்சிங் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது, இத்துறையின் முக்கியத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

புவியியலில் உயர்கல்வி: இந்தத்துறை, பெளதீக ரீதியான புவியியல்(Physical Geography) மற்றும் மனித சம்பந்தப்பட்ட புவியியல்(Human Geography) என்று இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பெளதீக ரீதியான புவியியல் என்பது, பூமியின் அடுக்குகள், சுற்றுச்சூழல், மண் மற்றும் விலங்குகள் - பறவைகள் பற்றி புரிந்துகொள்ள உதவுகிறது. முக்கியமாக, பாறை அமைப்புகள் மற்றும் புவியின் வடிவமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியது. பெளதீக புவியியல் என்பது பெருமளவில் கணக்கீட்டு முறையை சார்ந்துள்ளது. மனித புவியியல் என்பது மனிதனுக்கும், அவனது இயற்கைச் சூழலுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து, அதன்மூலம், மனித சமூகங்களை வடிவமைக்கும் பரந்த சமூக அமைப்பு சாத்தியக்கூற்றை நிறுவுகிறது. மேலும், பொருளாதார மற்றும் சமூக புவியியலை ஒருங்கிணைத்து, அரசாங்கம், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுடைய செயல்கள் மக்களையும், இடங்களையும் பாதிக்கின்றன என்ற அகப்பார்வையை படிப்பவருக்குத் தருகிறது. மனித புவியியலில், பெளதீக புவியியல் போலன்றி, தரநிலையிலான ஆராய்ச்சி முறைகள் பயன்படுகின்றன. (உ.ம்) பங்கேற்பவரின் கவனம் மற்றும் நேர்முகத் தேர்வு போன்றவை)

ஒட்டுமொத்த கருத்தாக்கங்கள்: பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை, புவியியல் என்பது சமூக அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது தனிப் பாடமாகவோ கற்பிக்கப்படுகிறது. மேல்நிலை பாடத்தில் புவியியலை தேர்வு செய்யாத மாணவர்கள்கூட, கல்லூரி நிலையில் அப்பாடத்தை தேர்வு செய்யலாம். அதேசமயம், பள்ளி மேல்நிலைப் படிப்பில், கணிதம் மற்றும் உயிரியல் படித்திருந்தால், அந்த மாணவருக்கு, மேல்படிப்பு நிலையில், புவியியலின் நுட்பங்களைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும் என்று ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லாபத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள்: நஷ்டம் என்பது போலி கணக்கா?

நாட்டில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி வரும் நிலையில், நஷ்டம் ஏற்படுவதாக அந்நிறுவனங்கள் சொல்வது உண்மை தானா என்ற சந்தேகம், மக்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று முக்கிய நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்து, நாடு முழுவதும் விற்பனை செய்கின்றன.ரூ.319 கோடி நஷ்டம்: பெட்ரோலியப் பொருட்களின் விலையை இந்நிறுவனங்கள், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உயர்த்திக் கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன் விளைவாக, கடந்த 2010 ஜனவரியிலிருந்து, இதுவரை 14 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது."உலகச் சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வே, விலை உயர்விற்கு காரணம்' எனக் கூறும் இந்நிறுவனங்கள், தற்போது, ஒரு லிட்டர் டீசலுக்கு, 6.61 ரூபாயும், ரேஷன் மண்ணெண்ணெய்க்கு, 24.63 ரூபாயும், வீட்டு சிலிண்டர் ஒன்றுக்கு 270 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாக அறிவித்துள்ளன.

அரசு வழங்கும் மானியத்தையும் மீறி, நாளொன்றுக்கு, 319 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக அறிவித்துள்ளன.கடந்த 2008ம் ஆண்டு, பேரல் ஒன்றிற்கு கச்சா எண்ணெய், 105 டாலராக இருந்த போது, பெட்ரோல் விலை 49 ரூபாயாக இருந்தது. பின், கச்சா எண்ணெய் விலை குறைந்தது. 2009ம் ஆண்டில், சராசரியாக, 69 டாலருக்கு வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலையில், பெரிய மாற்றம் எதுவும் இல்லை. ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை படிப்படியாக உயர்த்திய வண்ணம் உள்ளன. 2008ல், 49 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை, தற்போது 72 ரூபாய்க்கு வந்துள்ளது.

ஐகோர்ட்டில் வழக்கு: எண்ணெய் நிறுவனங்கள் சொல்வதில் உண்மை இல்லை எனக் கூறி, கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், எண்ணெய் நிறுவனங்களின் ஆண்டு வரவு - செலவு கணக்கை, கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி கூறியுள்ளனர்.இதற்கிடையே, பெட்ரோலியப் பொருட்களை அதிகளவில் கையாளும் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தணிக்கை செய்யப்படாத, 2011ம் ஆண்டு, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான, மூன்று மாத வரவு - செலவு கணக்கு விவரத்தை, நேற்று வெளியிட்டுள்ளது. அதில், மேல் குறிப்பிட்ட காலாண்டில் 7,485 கோடி ரூபாய், நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது கோர்ட் உத்தரவை சமாளிக்கும் நடவடிக்கையாகத் தெரிகிறது. ஏனெனில், மூன்று பெரிய பெட்ரோலிய நிறுவனங்களுமே, கடந்த மார்ச் வரையிலான, 2010 - 2011ம் நிதியாண்டில், லாபம் ஈட்டியிருப்பது, அந்த நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள வரவு-செலவு கணக்கு அறிக்கையின் மூலம் தெளிவாகிறது. மேலும், 2009-2010ம் நிதியாண்டில், மேல் குறிப்பிட்டுள்ள காலாண்டிற்கும், தணிக்கை செய்யாத கணக்கையே வெளியிட்டுள்ளது. அதில், அந்த காலகட்டத்தில், லாபம் வந்துள்ளதாக கணக்கு காண்பித்துள்ளது.அதாவது, கடந்த ஆண்டு லாபம் வந்ததாகவும், இந்த ஆண்டு எண்ணெய் விலை கச்சா உயர்வு காரணமாக நஷ்டம் வருவதாகவும் காண்பித்துள்ளது. நஷ்டம் ஏற்படுவதாக தொடர்ந்து தணிக்கை செய்யப்படாத கணக்கு மூலம் கூறி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவது, மக்களை ஏமாற்றும் வேலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதே நாள்...

  • சர்வதேச கருணை தினம்
  •  உலக வலைப் பின்னல்(WWW) ஆரம்பிக்கப்பட்டது(1990)
  •  கார்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது(1957)
  •  கிரீஸ் நாட்டின் புதிய அரசியலமைப்பு பெறப்பட்டது(1864)

ராணுவத்தால் சுடப்படுவதை, ராஜபக்ஷேயும் கண்டித்தார் மன்மோகன் சிங்!

இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவத்தை தடுத்து நிறுத்த வேண்டும்; தமிழர்கள் மறு குடியரமர்த்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என, இலங்கை அதிபர் ராஜபக்ஷேயிடம் வற்புறுத்தினேன்'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். மாலத்தீவில், சார்க் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு, நேற்று பிரதமர் மன்மோகன் சிங் டில்லி திரும்பினார்.ஏர்-இந்தியா விசேஷ விமானத்தில் பயணம் செய்த அவர், தன்னுடன் பயணம் செய்த பத்திரிகையாளர்களிடம், விமானத்திலேயே பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:மாலத்தீவில் நடந்த சார்க் மாநாடு, மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தெற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள பிரச்னைகள் பற்றி, விரிவாக விவாதித்தோம். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான், மாலத்தீவு ஆகிய நாடுகளின் தலைவர்களுடன், தனிப்பட்ட முறையிலும், பேச்சுவார்த்தை நடத்தினேன்.இலங்கை அதிபர் ராஜபக்ஷேயிடம் பேசும் போது, தமிழக மீனவர்கள், தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படும் சம்பவம் குறித்து பேசினேன். தமிழக மீனவர்கள் ராணுவத்தால் சுடப்படுவதை, ராஜபக்ஷேயும் கண்டித்தார்.இந்த பிரச்னை குறித்து, இரு நாட்டு மீனவர்கள் குழுக்களுக்கு இடையே, பேச்சுவார்ததை நடத்த ஏற்பாடு செய்வதாகவும், இரு நாட்டு பிரதிநிதிகள் மட்டத்தில் பேச நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். இலங்கையிலேயே, அகதிகளாக முகாம்களில் வசிக்கும் தமிழர்களை, மறு குடியமர்த்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என, ராஜபக்ஷேயிடம் கூறினேன். முகாம்களில் இன்னமும் ஏழாயிரம் பேர் மட்டுமே உள்ளதாகவும், அவர்களும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என்றும், ராஜபக்ஷே கூறினார்.

கலிபோர்னியாவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012

கலிபோர்னியா : கடந்த 13 வருடங்களாக புலம்பெயர்ந்த தமிழ் குழந்தைகளுக்குத் தமிழ் பயிற்றுவித்து வரும் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம், மற்ற புலம் பெயர்ந்த தமிழ்பள்ளிகளுடன் இணைந்து புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 என்ற மாநாட்டை 2012ம் ஆண்டு ஜூன் 8, 9, 10 ஆகிய தினங்களில் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் உள்ள சான்டா கிளாரா கன்வென்ஷன் சென்டரில் நடத்த இருக்கின்றது. சவால்கள், நோக்குகள், சாத்தியங்கள் என்ற கருப் பொருளின் பின்னணியில் இம்மாநாடு நடத்தப்பட உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களும், பள்ளி மாணவர்களும் கலந்துக் கொள்ள உள்ளனர். இம்மாநாட்டின் ஆய்வரங்கக் குழு இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த சூழல்களில் தமிழ்ப் பயிற்றுவிப்பதற்கான ஆய்வுக்கட்டுரைகளை வரவேற்கின்றது. உங்கள் ஆய்வுக் கட்டுரைகள் கீழ்கண்ட 4 தலைப்புகளில் ஏதாவதொன்றினைச் சார்ந்து இருத்தல் வேண்டும்.
* தமிழ் கல்விக்கான கருவிகள், உத்திகள், தொழில் நுட்பங்கள்,
* பயன்மிக்க பாடத் தொகுப்புகளும், திட்டங்களும் ,
* தமிழ்க் கல்வியில் கலை, சமூகம், கலாச்சாரத் தாக்கங்கள்
* தமிழ் கல்விக்கான வலையமைப்பு உருவாக்கம்
ஆய்வுக் கட்டுரையின் ஆய்வுச் சுருக்கங்களை நவம்பர் , 2011க்கு முன்னதாக இங்கு சமர்ப்பிக்க வேண்டுகின்றோம். இம்மாநாட்டில் நடைபெற இருக்கும் கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளவும்,பார்வையாளர்களாய் பங்கெடுக்கவும் , தன்னார்வ தொண்டர்களாய் செயல்பட விரும்புபவர்களும் , விளம்பரதாரர்கள் மற்றும் கலந்துகொள்பவர் அனைவரையும் இம்மாநாடு இனிதே வரவேற்கிறது. அனைவரும் கலந்துக் கொண்டு இம்மாநாட்டை சிறப்பிக்குமாறு கலிபோர்னியா தமிழ் கழகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான இன்று, கல்வி உரிமை நாளாக கொண்டாட, மத்திய மனித வள மேம்பாடு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் கபில் சிபல் உத்தரவு!

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மவுலான அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான இன்று, கல்வி உரிமை நாளாக கொண்டாட, மத்திய மனித வள மேம்பாடு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் கபில் சிபல் உத்தரவிட்டுள்ளார். பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மவுலான அபுல் கலாம் ஆசாத், விடுதலை இந்தியாவில் கல்வி பயிற்று முறையான அடித்தளமிட்டவர். அவரது பிறந்த நாளை கல்வி உரிமை நாளாக இன்று கொண்டாட வேண்டும். கல்வி உரிமையில் செய்ய வேண்டியவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதை காலை இறைவணக்க கூட்டத்தில், ஒரு மாணவனை வாசிக்க செய்து, அனைத்து மாணவர்களும் கேட்கும் படி செய்ய வேண்டும். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாக உறுப்பினர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், பெற்றோர்களையும் பங்கு பெற செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளார். மாணவர் வாசிக்க வேண்டிய தகவல்:
 
* குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ கூடாது, அவர்களுடன் நயந்து பழக வேண்டும்.
பெண் குழந்தைகள் , பிற்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர் என பாகுபாடு காட்ட கூடாது.
*பள்ளியை சரியான நேரத்திற்கு திறக்க வேண்டும். ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு வர வேண்டும். விதி முறைகளின் படி கால அளவை கடைபிடிக்க வேண்டும்.
*எந்த குழந்தையையும் பள்ளியில் சேர்க்காமல் நிராகரிக்க கூடாது. பள்ளியை விட்டு நீக்கவும் கூடாது. அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும்.
*தேர்வு திட்டமானது குழந்தைகளை பயமுறுத்தாமல் ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும்.குழந்தைகளின் அறிவாற்றலை முழுமையாக , தெளிவாக மதிப்பிட தகுந்த வகையில் இருக்க வேண்டும்.
*பள்ளி நிர்வாகத்தின் விதி முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
*ஒவ்வொரு பள்ளியிலும் உடற்பயிற்சிகூடம், சுத்தமான குடி நீர், கழிப்பறை வசதிகளை உருவாக்கி கொடுக்க வேண்டியது கல்வி அமைச்சகத்தின் பொறுப்பு. பள்ளியுடன் நீங்களும் கலந்து ஆலோசித்து, தேவையான திட்டங்களை வரையறுத்து, கல்வி அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...