|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 December, 2011

பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம்...

 உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன்: பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம். காய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும். கால்சியம், வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்பதும் வீண் தான். பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இருக்கும். அவை காய்ச்சும் போது அழிந்துவிடும். இன்று பெரும்பாலும் பாக்கெட் பாலை வாங்குகிறோம். அது ஏற்கனவே, சுத்தம் செய் யப்பட்ட பின் தான், பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை. பாலைக் காய்ச்சியதும் குடித்து விடலாம். ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி, சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கலாம். பசும் பால் வாங்குபவர்கள், பால் பொங்கியதும், உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால், பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் பால், 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும். பதப்படுத் தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கனவே, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டிருப்பதால், அதை, 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும். பொதுவாக எந்த வகைப் பாலாக இருந்தாலும், அதை இரண்டு முறைக்கு மேல் சு ட வைக்க வேண்டாம். ஒருமுறை பாலைக் காய்ச்சியபின், அதை பிரிஜில் வைக் கலாம். காபி, டீ என தயார் செய்யும்போது, மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் தேவைப்படுகிறதோ, அந்தளவிற்கு மட்டும் பாலை எடுத்து தயார் செய்யலாம்.

ராமதாசுக்கு பெட்டி போச்சா?


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், யார் யாரை மிரட்டிப் பணம் பறித்தார் என்பதற்கு என்னிடம் டேப், வீடியோ ஆவணங்கள் உள்ளன'' என்று, முன்னாள் எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசினார்.

கடலூர் மாவட்டம், காடாம்புலியூரில், இளம்புயல் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. அந்த கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசியதாவது: நான் 1996ல் தான் கட்சிக்கு வந்தேன் என்றும், எப்படி எனக்கு பணம் வந்தது என்றும் கேட்டு, துரோகி எனவும் பழிசுமத்துகின்றனர். ராமதாஸ் 1990ல், டி.எஸ்.ஈ.1850 என்ற ஒரு அம்பாசிடர் கார் தான் வைத்திருந்தார். கடந்த 20 ஆண்டுகளாக, தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகளிடம், அவர் பெட்டி ஏதும் வாங்கவில்லை எனக் கூறட்டும். நான் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது வசூல் செய்தது இல்லை. கட்சி நிர்பந்தத்திற்காக சிலர் வசூல் செய்தனர். அவர்களும் இப்போது என்னிடம் இல்லை. கடந்த தேர்தலில் ஜி.கே. மணி, நான், குரு தவிர, மற்ற 27 பா.ம.க., வேட்பாளர்கள் ஒவ்வொருவரிடம், 2 கோடி சொத்துக்கு பவர் எழுதி வாங்கப்பட்டது. தகவல் உரிமைச் சட்டத்தில், 27 வேட்பாளர்களின் சொத்துக்கள் கேட்டால், யாருடைய பெயருக்கு மாறியுள்ளது எனத் தெரியும்.

ராமதாஸ், யார் யாரை மிரட்டி பணம் பறித்தார் என்பதற்கு டேப், வீடியோ ஆவணங்கள் உள்ளன. அரசியல் நாகரிகம் கருதி, அமைதி காத்து வருகிறேன். விரைவில் என் அமைதியை கலைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். வன்னியர் சங்கத்திலும், தி.மு.க., விலும் இருந்த நான், பின் பா.ம.க., வுக்கு மாறினேன். என்னை தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., - பா.ஜ., போன்ற கட்சிகள் அழைத்தன. ஆனால், நான் செல்லவில்லை. புதிய எழுச்சியுடன், வரும் தை மாதம் ஜாதி, மதம் கடந்து, உலகத் தமிழர்களின் ஆதரவுடன் புதிய கட்சி, மஞ்சக்குப்பம் மைதானத்தில் துவக்கப்படும். அப்போது, கட்சி கொள்கைகள் வெளியிடப்படும்.

உலகிலேயே உயரம் குறைவான பெண்...






 இரண்டடி ஒரு அங்குலம் உயரமே கொண்ட, நாக்பூரைச் சேர்ந்த ஜோதி அம்ஜி,18, உலகிலேயே மிகவும் உயரம் குறைவான பெண்ணாக, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், ஹிவ்ரி நகர் பகுதியில் வசிப்பவர் ஜோதிஅம்ஜி,18. இவர், நேற்று தன் பிறந்த நாளை பெற்றோர், உறவினர் களுடன் கொண்டாடினார். அப்போது, அவருக்கு, மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது. உலகிலேயே மிகவும் உயரம் குறைவான பெண்ணாக, அவர் தேர்ந்தெடுக்கப் பட்டு, கின்னஸ் உலக சாதனை புத்தகத் தில் இடம் பெற்றுள்ளார் என்பதே, அந்தச் செய்தி. கின்னஸ் உலக சாதனை புத்தக நிறு வனத்தைச் சேர்ந்த ராப்மோலி என்பவர், கடந்த இரு தினங்களாக, அக்கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது, மாறு பட்ட நேரங்களில், அப்பெண்ணின் உயரத்தை, மூன்று முறை அளந்து, விவ ரங்களை பதிவு செய்தார். அதேபோல், அவர் தேர்வு செய்த டாக்டர்களும், அப்பெண்ணை நிற்க வைத்தும், படுக்க வைத்தும் அளந்து பரிசோதித்தனர். பிறந்த நாளின் போது, உலக சாதனை புத்தகத்தில் பெயர் இடம் பெற்றது குறித்து அறிந்ததும், ஜோதி அம்ஜி ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

அவர் கண்ணீருடன் கூறுகையில், "இச்செய்தி, எனது பிறந்த நாளைக்கு கிடைத்த இரண்டாவது பரிசு. இதன் மூலம், நாக் பூரை உலக வரைபடத்தில் சேர்த்துள் ளேன். பள்ளிக் கல்வி முடித்துள்ள நான், விரைவில் பட்டம் பெற முயற்சிப்பேன்' என்றார். இவர், நான்கு மாத குழந்தையாக இருந்தபோது, வளர்ச்சியை தடுக்கும் அகோண்ட்ரோ பிளாசியா என்ற நோய் தாக்கவே, அவரது உயர வளர்ச்சி நின் றது. இவர், தன் 16வது வயதிலும், 2009ம் ஆண்டில் உலகில் உயரம் குறைந்த சிறுமி என, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். இவர், ஏற்கனவே, ஜப்பான் நாட்டு திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், நேஷனல் ஜியோகிரபி தொலைக்காட்சி சேனலிலும் பங்கேற்றுள்ளார். "ஒரு இந்தி படத்தில் நடிக்க வேண்டும்' என்பதே, அப்பெண்ணின் கனவாக இருந்து வருகிறது. இதற்கு முன்பாக, உலகில் உயரம் குறைந்த பெண்ணாக, அமெரிக்காவைச் சேர்ந்த பிரிட்ஜெட்டி ஜோர்டான்,22, இருந்து வந்தார். அவருக்கும் முன்பாக, துருக்கி நாட்டைச் சேர்ந்த எலிப் கோகாமன் (28.5 அங்குலம்), அதற்கு முன், நெதர்லேண்ட் நாட்டைச் சேர்ந்த பாவ்லின் மஸ்டர்ஸ் (24 அங்குலம்) இருந்தனர். பாவ்லின் மஸ்டர்ஸ், தன் 19வது வயதில், நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு, 1895ம் ஆண்டு இறந்தார்.

இதே நாள்...


  • பூட்டான் தேசிய தினம்
  •  கோவாவை இந்தியா, போர்ச்சுகலிடம் இருந்து கைப்பற்றியது(1961)
  •  அயர்லாந்தின் முதலாவது ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது(1834)
  •  பிரேசிலில் 25 ஆண்டுகளுக்குபின் முதலாவதுபொதுத்தேர்தல் நடைபெற்றது(1989)

பார்த்ததில் பிடித்தது!




தும்பைப்பூ சாறு.


காணும் இடம் எங்கும் சாலையோரங்களில் மலர்ந்திருக்கும் வெண்ணிற தும்பை மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. தீராத தலைவலி மற்றும் ஜலதோஷம் போக்கும் தன்மை இந்த தும்பைப் பூக்களுக்கு உண்டு.

தலைவலி போக்கும் சாறு தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் பத்து தும்பைப்பூக்களை பறித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து இரண்டு துளிகள் மூக்கில் விட்டு உறிஞ்சினால் தீராத தலைவலி நீங்கும். சகலவிதமான காய்ச்சலுக்கும் தும்பைப்பூ அருமருந்தாகும். ஒரு டீஸ்பூன் தும்பைப்பூ சாறுடன் சம அளவு தேன் சேர்த்து தினம் இரு வேளை கொடுத்து வர காய்ச்சல் குணமடையும். சளியினால் மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருக்கும் நிலையிலும் தும்பைப்பூ, இலை, சமஅளவு எடுத்து கசக்கி அதில் சாறு எடுத்து 2 துளிகள் தினமும் இருவேளை மூக்கில் விட எளிதில் குணம் தெரியும்.

வாதம் குணமடையும் கால் டீஸ் பூன் அளவு மிளகை பொன் வறுவலாக வறுத்து எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் அளவு தும்பைப்பூவும், சிறிதுவெல்லமும் சேர்த்து லேகியம் போல செய்து தினம் இருவேளை சாப்பிட குளிர் ஜுரம், வாதஜுரம் குணமடையும்.

பாம்பு கடி குணமடையும் பாம்புக்கடித்து மயக்கமானவர்களுக்கு உடனடியாக தும்பைப்பூவின் சாறை மூக்கில் பிழிந்து விட்டால் மயக்கம் தெளியும். அதன்பின் கடிக்கு வைத்தியம் பார்க்கலாம்.

கண்கோளறுகளுக்கு மருந்து கண் தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கைப்பிடியளவு தும்பைப் பூவை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து வதக்கி ஒரு டம்ளர் வீதம் எடுத்து தேக்கரண்டியளவு தேனும் சேர்த்து சாப்பிட்டு வர கண் நோய்கள் குணமடையும்.

சிறுநீரக கோளாறு...


தேவ மூலிகை அல்லது விருட்சம் என்று கூறப்படும் வெள்ளெருக்கு அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் குப்பை மேடுகளிலும், தரிசு நிலங்களிலும் காணப்படும் எருக்கன் செடியை விஷ செடி என்று நாம் ஒதுக்கி விடுகிறோம். எருக்கன் செடியில் பூக்கும் பூக்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. விஷக்கடிக்கு மருந்தாக பயன்படும் இந்த பூக்கள் சிறுநீரக கோளாறுகளை மூன்று நாட்களில் குணமடையும்.

ஆஸ்துமா குணமடையும் வெண்மை நிற எருக்கன் பூக்கள் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும். வெண்ணிற எருக்கன் பூக்களை அவற்றில் உள்ள நடு நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் எடுத்து அதனுடன் சம அளவு மிளகு, கிராம்பு, சேர்த்து மை போல அரைத்து கிடைத்த விழுதை மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொள்ளவும். இதனால் இரைப்பு நோய் அதிகரிக்கும் சமயம் ஒரு உருண்டை சாப்பிட்டு நீர் அருந்த உடனே தணியும். 10 கிராம் இஞ்சி,3வெள்ளெருக்கன் பூ,6 மிளகு இவற்றை நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி தினம் இருவேளை பருகி வர இரைப்பு குணமாகிவிடும்.

வாதவலி வீக்கம் எருக்கன் பூவை தேவையான அளவு எடுத்து வதக்கி வீக்கம், கட்டிகள் மீது வைத்துக்கட்ட வீக்கம், கட்டி குறையும். ஆறாத புண்கள் இருந்தால் எருக்கன் பூக்களை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த பொடியை புண்களின் மீது மருந்தாக போட்டு வர சீக்கிரத்தில் புண்கள் ஆறிவிடும்.

பாம்பு கடி விஷமருந்து நல்ல பாம்பு கடித்து விட்டால் உடனே எருக்கன் பூ மொட்டு 5 எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட சொல்ல வேண்டும். இதனால் விஷம் இறங்கிவிடும். இதன்பின்னர் மருந்துவரிடம் சென்று சிகிச்சை அளிக்கவேண்டும்.

கண்கள் = உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடி!


சந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும். உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். மொத்தத்தில் கண்கள்தான் உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள். சோர்ந்து, களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்துவிடும். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால்தான் அழகு. அழகுக்கு அழகு சேர்க்க மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.

கருவளையம் போக்க நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்வது மற்றும் உற‌க்கம் குறைவதாலு‌ம் கண்களை சுற்றி கருவளைய‌ங்க‌ள் ஏ‌ற்படு‌ம். இது கண்களின் அழகையே கெடுத்துவிடும். இதற்கு கண்களை அவ்வப்போது குளிர்ந்த நீரை‌க் கொ‌ண்டு முகத்தை‌க் கழுவுவது‌ம், அடிக்கடி கண் பகுதியில் படு‌ம்படி தெளிப்பதும் நல்லது. அதிகமாக டி‌வி பா‌ர்‌ப்பதை‌த் த‌வி‌ர்‌ப்பதோடு கண்களுக்குப் போதிய உறக்கம் அளித்தால் கருவளையம் மறையும். தொட‌ர்‌ந்து பு‌த்தக‌ங்க‌ள் படி‌ப்பது ந‌ல்லது. க‌ண்ணு‌க்கு ‌சிற‌ந்த ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம்.

கண்களுக்குப் பயிற்சி உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கும் பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம். கட்டை விரலை நடுவில் வைத்துக்கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும்.

எட்டுமணி நேர தூக்கம் கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம். கால்ஷியம், வைட்டமின்கள் நிறைந்த சத்தான உணவு உட்கொள்ள வேண்டும். பால், பால் பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். கண்க‌ள் பு‌த்துண‌ர்‌ச்‌‌சியுட‌ன் இரு‌க்க வே‌ண்டுமானா‌ல் அடிக்கடி குளிர்ந்த பாலில் நனைத்த பஞ்சு அ‌ல்லது உருளைக்கிழங்கு துண்டு அ‌ல்லது வெள்ளரி துண்டினை கண்களின் மீது வைக்கலாம். இளஞ்சூடான நீரில் நனைக்கப்பட்ட டீ பேகை கண்களின் மேல் சிறிது நேரம் வைக்க கண்களின் உலர் தன்மை மறைந்து உற்சாகம் கிடைக்கும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக கண்களின் அழகைப் பராமரிக்க தினசரி எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

தேவர்களின் வைகறைப் பொழுதான மார்கழி மாதம்...


மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று பகவத் கீதையில் கண்ணன் அருளியிருக்கிறார். அத்தகைய பெருமைக்குரிய மார்கழி மாதம் சனிக்கிழமை பிறக்கிறது. தட்சிணயனத்தின் கடைசி மாதமாக விளங்கும் மார்கழி மாதத்தின் பெருமைகளை தெரிந்து கொள்வோம்.

வைகறைப் பொழுது மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். இந்த ஒருநாளின் வைகறைப் பொழுதாக மார்கழி அமைகிறது. உடல் சுறுசுறுப்பும், உள்ளத் தெளிவும் நிறைந்த வைகறைக் காலை வழிபாடு எப்போதும் சிறந்தது. எனவே வைகறைப் பொழுதான மார்கழி, தேவர்களை வழிபடுவதற்கு மிகப் பொருத்தமான மாதம் என்பது இந்த மாதத்தின் சிறப்பாகும். மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்களுக்குரிய மார்கழி நோன்பு, பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசி, சிவனுக்குரிய திருவாதிரை, மற்றும் பழையன கழியும் போகிப்பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

பிரம்ம முகூர்த்தம் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. வழிபாட்டுக்கு ஏற்ற காலமும் இதுவே. இந்த நேரத்தில் ஓசோன் வாயு நில உலகத்தில் மென்மையாகப் படர்ந்து பரவுகிறது. இது உடலுக்கு நலம் தரும்; புத்துணர்ச்சி தரும். உள்ளத்துக்கு இதம் தரும்; புதுக் கிளர்ச்சி தரும். மார்கழி விடியற்காலையில், ஓசோன் வாயு நிலவுலகத்தில் சற்று அதிகமாகப் பரவுகிறது. இதன் காரணமாகவே பண்டைய தமிழர்கள் மார்கழி விடியற் காலையில் நோன்பிருந்து இறைவனை வணங்கினர்.

சரணாகதி தத்துவம் மார்கழி மாதத்திற்கு சூன்ய மாதம் என்ற பெயரும் உண்டு சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை கடைபிடிக்க வேண்டும். மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்’ என்று வடமொழியில் சொல்வர். ‘மார்கம்” என்றால், வழி  “சீர்ஷம்’ என்றால், உயர்ந்த – “வழிகளுக்குள் தலைசிறந்தது’ என்பது இதன் பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. “உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்…’ என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள். மருத்துவ நூல்களில் மார்கழியைப் பீடை மாதம் என்று குறிப்பிடுகின்றன. மார்கழியின் பனிக்குளிர்ச்சி சிலருக்கு நோய்த் துன்பங்களைத் தரலாம். எனவே, இது பீடை மாதமாகலாம். பீடு-பெருமை. பன்னிரு மாதங்களில் மிக்க பெருமையை உடையது பீடை மாதம் என்று மற்றொரு பொருளும் கூறலாம். பல காரணங்களால் மார்கழி பெருமையுடைய மாதம்.

மார்கழிப் பாடல்கள் திருப்பாவை ஆண்டாள் இயற்றியது வைணவத் தொடர்புடையது. திருவெம்பாவை மாணிக்கவாசகர் இயற்றியது; சைவத் தொடர்புடையது. இந்த இரண்டும் பாவை நோன்பு அல்லது மார்கழி நோன்பினைப் பாடுகின்றன. மார்கழியில், திருப்பாவை, திருவெம்பாவை, தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருப்பள்ளி எழுச்சி, மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சி ஆகிய நான்கு நூற்பாடல்களை வீடுகளிலும், கோயில்களிலும் பாராயணம் செய்கின்றனர். மார்கழியில், சிறப்பாக பாராயணம் செய்ய வேண்டும் என்ற பெருமை இந்த நான்கு நூல்களுக்கே உண்டு.இவை தவிர வைணவக் கோயில்கள் சிலவற்றில் மார்கழியில் ராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் பாராயணம் செய்கின்றனர்.

நல்ல வாழ்க்கைத்துணை மார்கழி நோன்பு முழுக்க முழுக்க கன்னிப்பெண்களுக்கே உரியது. விடியலுக்கு முன் எழுந்து ஆற்றில் நீராடி நல்ல கணவன் கிடைக்க பாவை நோன்பு நோற்கின்றனர். பாவையை, வைணவக் கன்னியர்கள் கவுரி தேவியாகவும், சைவக் கன்னியர்கள் பார்வதி தேவியாகவும் போற்றி வழிபடுகின்றனர். பாவைப் பாடல்களைப் பாடி வணங்குகின்றனர்.

வாசல் நிறையும் கோலங்கள் மார்கழி மாதம் வந்து விட்டாலே இளம் பெண்கள் வாசலை அடைத்து தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரித்து கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர். விளக்கேற்றுகின்றனர். பூசணிப் பூவின் மஞ்சள் நிறம், மங்கலத்தின் சின்னம். கோலத்தின் வெண்மை-பிரம்மன்; சாணத்தின் பசுமை-விஷ்ணு; செம்மண்ணின் செம்மை-சிவன். முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் மும்மூர்த்திகளை நினைவுபடுத்துகின்றன. மார்கழி மாதத்தில் எங்கும் பக்தி; எதிலும் தெய்வீகம் இவை அனைத்தும் இந்த மாதத்தின் சிறப்புகளாகும்.

நார்வேயில் பாலை படம் வெளியீடு!


ஊடகங்களில் பெரிதும் பாராட்டப்பட்ட தமிழ்ப் படமான ‘பாலை’, இந்தியாவுக்கு வெளியே உலகிலேயே முதல்முறையாக நார்வே நாட்டில் திரையிடப்படுகிறது. சங்க கால தமிழர்களின் வாழ்க்கை, போர்முறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பாலை. தமிழீழ மக்களின் போராட்ட வரலாற்றின் கருமையையும் இந்தப் படம் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படம் தமிழகத்தின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே வெளியானது. பாலையை இப்போது சர்வதேச அரங்கில் கொண்டுபோகும் முயற்சி நடக்கிறது. முதல் முறையாக நார்வேயில் பாலை படத்தை வெளியிடுகிறார்கள். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள ஃபில்மென்ஸஸ் கினோ அரங்கில் இந்தப் படம் வரும் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. நார்வே தமிழரான வசீகரன் சிவலிங்கத்தின் விஎம் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனமும், அபிராமி கேஷ் அண்ட் கேரி நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை நார்வேயில் வெளியிடுகிறது.

வங்கதேசத்தில் கல்லூரிக்கு படிக்க சென்ற மனைவியின் வலது கைவிரல்களை வெட்டிய கணவண்!


வங்கதேசத்தில் கல்லூரிக்கு படிக்க சென்ற மனைவியின் வலது கைவிரல்களை வெட்டிய கணவனை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். வங்கதேசத்தை சேர்ந்தவர் ரபிகுல் இஸ்லாம் (30) இவர் ஹவா அக்தர் ஜூய் (21) என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு, ஐக்கிய அரபு நாட்டுக்கு வேலைக்கு சென்றார். கணவன் தன்னோடு இல்லாத நிலையில், ஹவா அக்தர் ஜூய் கல்லூரியில் சேர்ந்து படித்து உள்ளார். இது குறித்து ஹவா, கணவரிடம் போனில் பேசும் போது தெரிவித்து உள்ளார். மனைவி கல்லூரியில் படிப்பதை அறிந்த இஸ்லாம், கல்லூரி படிப்பை நிறுத்துமாறு எச்சரித்து உள்ளார். ஆனால் ஹவா இதனை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் திடீரென நாடு திரும்பினார் ரபிகுல் இஸ்லாம். தனது மனைவி ஹவாவிடம் ஒரு ஆச்சரியமான பரிசு கொடுப்பதாக கூறி, கண்களை ஒரு துணியால் கட்டினார். பின்னர் ஹவாவின் கை, கால்களை ஒரு கயிற்றால் கட்டி, வாயில் துணியை திணித்தார். அதன்பிறகு ஹவாவின் வலது கையில் இருந்த 5 விரல்களையும் கொடூரமான முறையில் வெட்டினார் இஸ்லாம்.

வலியால் துடித்த ஹவாவிடம் கல்லூரிக்கு சென்று படித்த குற்றத்திற்காக இப்படி செய்ததாக கூறியுள்ளார் அவர். ஹவாவிற்கு இந்த தண்டனை அளிப்பதற்கு இஸ்லாமின் சில உறவினர்களும் ஆதரவாக செயல்பட்டு உள்ளனர். கையில் ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் மயக்கமடைந்த ஹவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், காலதாமதமாக கொண்டு வரப்பட்டதால் விரல்களை மீண்டும் இணைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

இது குறித்து ஹவா கூறியதாவது, கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டாம் என்ற கணவர் கூறினார். ஆனால் அவர் நாடு திரும்பிய மகிழ்ச்சியில் இருந்த போது, எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. பரிசளிப்பதாக கூறி எனது விரல்களை வெட்டிவிட்டார். கல்லூரி படிப்பிற்காக இவ்வளவு கொடூரமாக எனது கைவிரல்கள் வெட்டப்படும் என்று எனது கனவில் கூட நினைக்கவில்லை.

வெட்டப்பட்ட விரல்களை இஸ்லாமின் உறவினர் ஒருவர் குப்பை தொட்டியில் போட்டுவிட்டார். அந்த விரல்களை தேடி எடுத்து டாக்டர்களிடம் கொண்டு வருவதற்குள் காலதாமதம் ஏற்பட்டதால், எனது விரல்களை மீண்டும் இணைக்க முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். தற்போது எனது தந்தையின் வீட்டில் உள்ள நான், மீண்டும் எனது கணவரோடு சேர்ந்து வாழ விரும்பவில்லை. எனது இடது கையால் எழுதி பழகி எனது கல்லூரி படிப்பை முடிப்பேன், என்றார். போலீசார், இஸ்லாமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட இஸ்லாமையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேச மனித உரிமைகள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

40 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் படம் பார்க்கிறார் ஹஸாரே!

ஊழலை எதிர்த்துப் போராடும் அன்னா ஹஸாரே கடைசியாக படம் பார்த்தது 1970-ல்தான். அதன் பிறகு அவர் சினிமாவே பார்த்ததில்லையாம். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் முதல் முறையாக ஒரு சினிமா பார்க்கிறார். அதுவும் தமிழ்ப் படம், சென்னையில். படத்தின் பெயர் முதல்வர் மகாத்மா. காமராஜ் படத்தை இயக்கிய அ பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப் படம், மகாத்மா காந்தி இப்போது முதல்வராக இருந்தால் பிரச்சினைகளை எப்படி எதிர்நோக்கியிருப்பார் என்ற சுவாரஸ்யமான கேள்விக்கு விடை சொல்கிறது. இந்தக் கதையை கேட்ட உடனே படம் பார்க்கச் சம்மதித்துவிட்டாராம் அன்னா ஹஸாரே. வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 18) முதல்முறையாக சென்னை நகருக்கு வரும் அவர், தனது மற்ற பணிகளுக்கு நடுவில் இந்தப் படத்தைப் பார்க்கவும் நேரம் ஒதுக்கியுள்ளார். அவருடன் பத்திரிகையாளர்களும் சேர்ந்து முதல்வர் மகாத்மாவைப் பார்க்கிறார்கள். நுங்கம் பாக்கத்தில் உள்ள ஃபோர்பிரேம்ஸ் அரங்கில் இந்த விசேஷ காட்சி நடக்கிறது!

கம்பத்தில் ஒன்றரை லட்சம் பேர் திரண்டு மாபெரும் பேரணி!


கேரளாவில் தமிழர்களைத் தாக்கி விரட்டியடிப்பதைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் தமிழர்களைக் காப்பாற்றக் கோரியும், கம்பத்தில் இன்று பெரும் திரளான பெண்களின் தலைமையில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் திரண்டு மாபெரும் பேரணி நடத்தினர். இன்று காலையிலிருந்தே மக்கள் அணி அணியாக இதில் பங்கேற்க திரண்டு வந்தனர். பெருமளவில் பெண்கள் வந்திருந்தனர். கம்பம் மற்றும் சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சாரை சாரையாக திரண்டதால் கம்பத்தில் பரபரப்பு நிலவியது. நாலாபுறமும் இருந்து ஆயிரக்கணக்கில் ஆண்களும், பெண்களும் குவிந்து வந்ததைப் பார்க்கும்போது அரபு நாடுகளில் சமீபத்தில் நடந்த மிகப் பெரிய மக்கள் கிளர்ச்சியைப் போல இருப்பதாக அங்கிருந்து நமக்குக் கிடைத்த தகவல் தெரிவிக்கிறது. 

காலை 9 மணியில் இருந்தே கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மக்கள் அணி, அணியாக வரத்தொடங்கினார்கள். இந்தப் பேரணிக்கு யாரும் திட்டமிடவில்லை. மக்களே தாங்களாக முன்வந்து கூடி பேரணியை நடத்தினர். மேலும் கம்பம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஒரு கடையும், வர்த்தக நிறுவனமும் செயல்படவில்லை. அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் பெண்களையும், தமிழர்களையும் தாக்கி விரட்டியடித்த மலையாளிகளின் செயலால் கம்பம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மக்கள் பெரும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர். தமிழகத்திற்கு அகதிகள் போல வந்த தமிழர்களை தேவாரம் பகுதியில் தங்க வைத்து பொதுமக்களே உணவு கொடுத்து ஆறுதல் கூறி அடைக்கலம் கொடுத்துள்ளனர்.

இந்த செயல்கள் கம்பம் பகுதியில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகப் பெரிய ஆவேசத்துடன் இன்று கம்பத்தில் திரண்ட இந்த மக்கள் கூட்டம் கேரள அரசையும், தமிழர்கள் மீதான தாக்குதலையும் கண்டித்து ஆவேச கோஷமெழுப்பினர். மிகப் பெரிய அளவில் மக்கள் திரண்டிரு்பபதால் கம்பத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. இந்த மக்கள் கூட்டம் அப்படியே கேரளாவை நோக்கி நகரக் கூடும் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. இதனால் எல்லைப் பகுதியில் மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது. போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சச்சினுக்கு பாரத ரத்னா வழங்க சட்டத் திருத்தம்...


பாரத ரத்னா வழங்குவதற்கான நெறிமுறைச் சட்டத்தில் முக்கியத் திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதை அடுத்து சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. கலை, இலக்கியம், அறிவியல், பொதுமக்கள் சேவை உள்ளிட்ட தளங்களில் பணியாற்றியவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த பாரத ரத்னா விருது, இனி அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், சச்சின், ஹாக்கி வீரர் தயானந்த் சந்து உள்ளிட்டோருக்கும் பாரத ரத்னா விருது கொடுக்கப்படலாம் என விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அண்ணா நூலக இடமாற்றத்துக்கு தடை தொடர்கிறது...

சென்னை அண்ணா நூலக இடமாற்றத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு அரசு தரப்பில் விடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 5 பேர் தாக்கல் செய்த பொதுநல மனு மீது நடந்த விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், நுங்கம்பாக்கம் கல்வித்துறை வளாகத்தில் புதிய நூலகம் கட்டும் பணிகள் ஏதாவது நடைபெறுகிறதா என்று நீதிமன்றம் கேட்டது. அரசுத் தரப்பில் இல்லை என்று பதில் வந்தபின், மறு உத்தரவு வரும்வரை, கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது. மேலும், ஜன.19க்குள் பதிலளிக்குமாறு கூறிய நீதிமன்றம், ஜன.19ம் தேதி விசாரணை நடைபெறும் என்று ஒத்திவைத்தது. மேலும், தற்போதை நிலையில், அண்ணா நூலகத்தை சீராகப் பராமரிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் தடைக்கு எதிரான வழக்கு விரைந்து நடத்த தலைமை நீதிபதியிடம் வைகோ கோரிக்கை!


விடுதலைப்புலிகளுக்கு இந்திய அரசு விதித்த தடையை நீக்க வேண்டுமென கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடுத்த ரிட் மனு உயர் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கோரி இன்று (16.12.2011) உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அமர்வில் வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார்.

"இந்திய அரசு நியமித்த தீர்ப்பாயம் விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்த தடையை ஏற்றுக் கொண்டு வழங்கிய ஆணையை எதிர்த்து இந்த உயர் நீதிமன்றத்தில் நான் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறேன். தடை உத்தரவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு நீட்டித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதியன்றும் இந்த உயர் நீதிமன்றத்தில் இதுபற்றி நான் குறிப்பிட்டேன். எனவே, எனது ரிட் மனு மீது விரைவில் விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று வைகோ கூறினார். தலைமை நீதிபதி இக்பால், "உங்கள் ரிட் மனு ஜனவரியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" என்றார்.

முல்லைப் பெரியாறு அணை பற்றி நீங்க என்ன நினைக்கிறிங்க? நிருபரின் காலில் விழுந்த நடிகர் ஜெயராம்!


சபரிமலை கோவிலுக்கு மலையாள நடிகர் ஜெயராம் சென்றிருந்தார். தமிழக - கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பதட்டம் நிலவி வரும் நேரத்தில், இதுகுறித்து ஜெயராமிடம் கேரள தொலைக்காட்சி நிரூபர் ஒருவர், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து கருத்து கேட்டபோது,  ''ஐயோ ஆளவிடுங்கப்பா சாமி'' என்று அந்த நிருபரின் காலில் விழுந்தார். 

கடந்த வருடம் நடிகர் ஜெயராம் நடித்த 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற மலையாள படம் வெளியானது. இ‌ந்த பட‌‌த்‌தி‌ல் வீட்டு வேலைக்காரப் பெண்ணை ''சை‌ட்'' அடிப்பது போல் காட்சிகள் உள்ளன. இந்த படம் தொடர்பான பேட்டி ஏசியா நெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில், 'டாக் ஷோ'வில் பங்கேற்ற ஜெயராமிடம், இது பற்றி குறிப்பிட்டு நிஜ வாழ்க்கையில் நீங்கள் வேலைக்காரியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார். 

அதற்கு பதில் அளித்து ஜெயராம் கூறும்போது, என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி, போத்து (எருமை) மாதிரி இருப்பாள்; அதைப்போய் எப்படி சைட் அடிக்க முடியும்?" என்றார். இது அந்த தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ஒளிபரப்பானது. த‌மி‌ழ் பெ‌ண்களை அவதூறாக பே‌சியதற்காக ஜெயரா‌மின் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது அலுவலகத்தின் மீது 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தமது பேச்சுக்காக ஜெயராம் மன்னிப்புக் கேட்டார். தமது தாய் தமிழ்ப் பெண் என்றும், தமது தாய் மொழி தமிழ் என்றும், தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்துவது தமது தாயை இழிவுப்படுத்துவதற்கு சமமானது என்றும், நகைச்சுவையாகவே தாம் தொலைக்காட்சியில் அவ்வாறு கூறியதாகவும் அவர் மேலும் விளக்கம் அளித்திருந்தார்.எதையாவது பேசிட்டு மன்னிப்பு கேட்டு காலில் விழுவதைவிட, பேசாமல் காலில் விழுவதே மேலானது என்று முடிவு எடுத்துவிட்டார் நடிகர் ஜெயராம்.

சனி பெயர்ச்சி எளிய பரிகாரம்!

சனிதோஷம் விலக வழி: சனிபகவானுக்குரிய இலை வன்னி இலை. இந்த இலையால் நவக்கிரக மண்டபத்திலுள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊர் கோயில்களில் வன்னிமரம் வைக்க ஏற்பாடு செய்யலாம். மேலும், சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். நவக்கிரக மண்டபத்திலுள்ள சனீஸ்வரருக்கு நீலநிற வஸ்திரம் அணிவிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், அவலட்சணமாக இருப்பவர்களுக்கு உதவி செய்தால், மிகுந்த நன்மை தருவார். திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு ( திருவாரூர்), குச்சனூர்(தேனி) ஆகிய ஊர்களிலுள்ள  கோயில்களுக்கு சென்று  அர்ச்சனை செய்து வரலாம்.  அஷ்டமச்சனி பரிகாரம்: நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் இந்த மூன்று எண்ணெயையும் கலந்து, ஒரு இரும்பு விளக்கில் எட்டு முகம் வைத்த திரியை கொண்டு சனீஸ்வரனுக்கு விளக்கேற்றி, அவரை வலம் வந்து வழிபட்டால் அஷ்டமச்சனி விலகிவிடும். நிம்மதி பிறக்கும். வாழ்க்கை சந்தோஷமாகும்.

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை...


பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான அட்டவணையை, தேர்வுத் துறை இயக்குனரகம், நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் படி, தேர்வுகள் வரும் மார்ச் 8ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கின்றன. இத்தேர்வை, 7 லட்சத்து 63 ஆயிரத்து 124 பேர் எழுதுகின்றனர் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளை, தேர்வுத் துறை இயக்குனரகம், முழு வீச்சில் செய்து வருகிறது. மாணவர்களும், பொதுத் தேர்வுகளுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இரு தேர்வுகளுக்கும், தேர்வு மையங்களை அமைப்பதற்கான பணிகளும், விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதற்கிடையே, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான அட்டவணையை, தேர்வுத் துறை இயக்குனரகம், நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு மார்ச் 8ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, 7 லட்சத்து 63 ஆயிரத்து 124 மாணவர்கள் எழுதுகிறார்கள். இவர்களில், 4 லட்சத்து 9 ஆயிரத்து 171 மாணவியர், 3 லட்சத்து 53 ஆயிரத்து 953 பேர் மாணவர்கள்.
பிளஸ் 2 தேர்வு, மார்ச் முதல் வாரத்தில் துவங்கி விடுவது வழக்கம். ஆனால், வரக்கூடிய பொதுத்தேர்வு ஒரு வாரம் தாமதமாக துவங்குகிறது. இது குறித்து, தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறும் போது, "பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்காக, அனுப்பி வைத்தோம். மாணவர்களின் நலன் கருதி, தேர்வுக்கு சிறப்பாக தயாராக வேண்டும் என்பதை மனதில் வைத்து கொண்டு, தேர்வை ஒரு வாரம் தள்ளி வைத்து, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது" என்றார்.
பிளஸ்-2 தேர்வு கால அட்டவணை :
மார்ச் 8-ந் தேதி - தமிழ் முதல் தாள்.
9-ந் தேதி - தமிழ் 2-வது தாள்.
12-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள்.
13-ந் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்.
16-ந் தேதி - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்.
19-ந் தேதி - கணிதம், விலங்கியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.
20-ந் தேதி - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.
22-ந் தேதி - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து.
26-ந் தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்.
28-ந் தேதி- கம்மியூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய பண்பாடு, கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரிவேதியியல், சிறப்பு மொழித்தேர்வு, தட்டச்சு தேர்வு.
30-ந் தேதி - அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.
தேர்வுகள் அனைத்தும் காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிகிறது. ஆனால் மாணவ-மாணவிகள் காலை 10 மணிக்கு முன்னதாக தேர்வு அறையில் இருக்க வேண்டும். காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படுகிறது. 10.10 மணி வரை வினாத்தாள் வாசிக்க நேரம் ஒதுக்கப்படுகிறது. 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளில் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்கள் எழுத நேரம் ஒதுக்கப்படுகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...