|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 July, 2012

அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்று வருகிறது உத்தரவு!


தமிழ்நாட்டுக்கு அதிக வருவாயை அள்ளிக் கொடுக்கும் மதுபானக் கடைகளை அடியோடு இழுத்து மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மத்திய அரசை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உருவாக ஒரே வழி என்ன? என்று ஜெயலலிதா தமது ஆலோசகர்களிடம் விவாதித்திருக்கிறார். அப்போதுதான் தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினால் நிச்சயம் பெண்களின் வாக்குகள் அனைத்துமே அதிமுகவுக்கு கிடைக்கும் என்றும் முன்னுதாரணம் மிக்க அரசாக தமிழக அரசு திகழும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இதனை முழு அளவில் ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நிச்சயமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்துவது என்ற முடிவில் ஜெயலலிதா உறுதியாக இருந்தாலும் டாஸ்மாக் அளவுக்கு வருவாய் தரக் கூடிய வழிகள் என்ன என்பதுதான் அவர் எழுப்பிய கேள்வி. இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தரவும் மூத்த அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் முழுமையான அளவில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ள போதும் லாபம் ஈட்டக் கூடிய பட்ஜெட்டை வேளாண்துறை மூலம் சாதித்து வருகிறது அம்மாநில அரசு. குஜராத் அரசு எப்படியான வழிகளில் வருவாயைப் பெருக்குகிறது என்று ஆராயவும் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம்.அனேகமாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்றோ அல்லது அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்றோ இதற்கான அதிரடி அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

பார்த்ததில் பிடித்தது...













30 July, 2012

துப்பு கெட்டவர்கள்!


பெரும்பான்மையான மனிதர்கள் துப்புவதை மிக இயல்பாகச் செய்கிறார்கள். வெகுநாள் கழித்து நண்பனைச் சந்தித்தால் பேசுவதற்கு ஆயத்தமாவதற்கு துப்புகிறார்கள். முகவரி தேடி அலுத்துப் போனால் துப்புகிறார்கள். முகவரி கிடைத்துவிட்டாலும் சந்தோஷத்தில் துப்புகிறார்கள். பஸ்ஸைவிட்டு இறங்கியதும் துப்புகிறார்கள். பஸ்ஸில்  போகும்போது ஜன்னல் ஓர இருக்கை கிடைத்துவிட்டால் வசதியாகத் துப்பிக் கொண்டே செல்கிறார்கள். பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பு படிக்கட்டுக்கு இரண்டடி முன்பு, ஓர் அவசரப் பணியாகத் துப்பிவிட்டு ஏறிச் செல்வதையும் பார்த்திருப்பீர்கள். 

சிலர் கோபம் வந்தால் துப்புகிறார்கள். சந்தோஷம், வெட்கம், துக்கம், ஏமாற்றம், மோனநிலை, ஏகாந்த நிலை என்று அனைத்துப் மெய்ப்பாடுகளுக்கும் துப்பும் செயல் ஏற்புடையதாக இருக்கிறது.என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் என்னைப் பார்த்ததும் ஒவ்வொரு நாளும் பரவசம் பொங்கும் முகத்தோடு எதிர் கொள்வார். அதே பரவசத்தோடு சட்டென இடப்பக்கமோ, வலப்பக்கமோ திரும்பி 'பிளிச்' என்று துப்புவார். என்னிடம் பேசுவதற்கு முன்பு வாயைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்கு அவர் செய்து கொள்ளும் உபாயமாக அது இருக்கலாம். ஒருவகையில் அது எனக்குத் தரும் மரியாதை என்று கருதுகிறார் போலும். அவமரியாதையே மரியாதை செயலாய் மாறிவிடும் விந்தைத் தருணம் அது. அவருடைய முகக் குறிப்பை வைத்து நான் இதை ஆழமாக உணருகிறேன்.

சில மனிதர்கள் துப்புவதை தங்கள் சுய உரிமையாக கருதுகிறார்கள். இந்த உரிமைப் பிரச்னையைப் புரிந்து கொள்வது சுலபம். 'இங்கே துப்பவும்' என்று போர்டு எழுதி தொட்டி வைத்திருக்கும் இடத்தைப் பார்த்தால் அது தெரியும். தொட்டிக்குள் துப்புவதைவிட அதன் பக்கத்தில் இருக்கும் சுவரிலோ, தரையிலோ துப்புவதுதான் அதிகமாக இருக்கும். வெற்றிலை போட்டு துப்புவதோ, புகையிலை போட்டு துப்புவதோ துப்புவதை வேகப்படுத்துவதற்கு உகந்த வழியாக இருக்கிறது. வாய் நிறைய சுமார் அரை டம்ளர் கொள்ளளவுள்ள புகையிலைச் சாறை வைத்துக் கொண்டு.. அதே நிலையில் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி, அல்லது கேள்வி கேட்டுவிட்டு  மொத்தமாகத் துப்புபவர்கள் உண்டு. 


பான்பராக் விற்பனைக்கு வந்தபோது இந்தத் துப்பல் கலாசாரம் வண்ணமயமாகியது, வாசனை மயமாகியது. வீட்டைவிட்டு வெளியே வந்ததும் ஒரு சரம் பான்பராக்கை வாங்கி பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டால் அந்த நாளில் தன் கண்ணில் படுகிற மரம், போஸ்ட் கம்பம், குப்பைத் தொட்டி, வாஸ் பேஸின், சிறுநீர் கழிக்கும் பீங்கான் என எல்லாவற்றிலும் 'எச்சில் இலக்கம்' பொறிக்கத் தொடங்கிவிடுகிறான் மனிதன். எச்சில் இலக்கியம் என்று பொருள் கொண்டாலும் பிழையில்லை.புலி, நாய், பூனை போன்ற விலங்குகள் தங்கள் எல்லையைத் தீர்மானித்து வைக்க சிறுநீர் இலக்கம் இட்டு வைக்கும். தம் உமிழ் நீரைப் பயன்படுத்தி இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தை அமைக்கும் திறன் மனிதனுக்கு மட்டுமே உண்டு.பொது இடங்களில் எச்சில் துப்புவது குற்றம் என்று காவல்துறை சொல்கிறது. பொது இடங்களில் புகைப்பிடிப்பது குற்றம் என்றும் ஒரு சட்டம் காற்றிலே பறக்கவிட்டது போல அதுவும் ஒரு சட்டமாக இருக்கிறது. இவையெல்லாம் மனிதர்களின் ஆதி உரிமைகள் என்பது அரசுக்கும் போலீஸாருக்கும் புரிந்திருக்கும்தானே?


அவர்களின் பெருந்தன்மையை அவர்கள் போட்டிருக்கும் சட்ட நுணுக்கங்கள் மூலமாகவே நாம் அறிந்து கொள்ள முடியும்.பொது இடங்களில் சிகரெட்டை எல்லா பெட்டிக் கடைகளிலும் விற்கலாம். ஆனால் அதை பொது இடத்தில் பயன்படுத்தக் கூடாது. பான்பராக்கை விற்பதற்குத் தடை, ஆனால் அதை மென்று கொண்டிருக்கும் மனிதனின் வாய்க்கு எந்தவிதத் தடையும் இல்லை. பான்பராக் விற்கத் தடையாயிற்றே நீ எப்படி பான்பராக் மென்று கொண்டிருக்கிறாய் என்று எந்த போலீஸ்காரரும் கேட்பதில்லை. ஏன்? 

துப்புதல் யார்க்கும் இயல்பாம். சில ஆண்டுகளுக்கு வெளியாகி சக்கைபோடுபோட்ட டைட்டானிக் படம் நினைவிருக்கலாம். அதில் கதாநாயகன் ஜாக் கப்பலின் மேல் தளத்தில் இருந்து கடல் நீரை நோக்கித் துப்புவான். கப்பலில் இருந்து எவ்வளவு தூரத்துக்குத் துப்ப முடியும் என்பது போட்டி. அதை நாயகி ரோஸ்-ம் மிகுந்த ஈடுபாட்டுடனும் மகிழ்ச்சியுடனும் செய்வாள். இயக்குநர் ஜேம்ஸ் காமரூனுக்கு இப்படி காட்சி வைக்க வேண்டும் என்று எப்படி தோன்றியிருக்க முடியும்? தன் முனைப்பான இயல்பூக்கம் காரணமாகத்தான் இந்தக் காட்சி படத்தில் புகுத்தப்பட்டதாகத் தெரிகிறது.துப்புபவரை நோய் பரப்புபவர் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று சண்டைக்கு வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. துப்புபவரே துப்புறவாளர்கள். துப்புறவாளன் என்பதின் வேர் சொல் எது? துப்புதானே? 

அவமானமாய் இருக்கு ஆனாலும் பாராட்டுக்கள்!


கண்ணுக்கு தெரியாத லிதோனியா நீச்சல்ல கோல்ட் வாங்கிருக்கு  பிரேசில் லுக்கு மேல இருக்கிற சின்ன  கொலம்பியா 2 வெள்ளி வாங்கி இருக்கு இரானுக்கு மேல குட்டி பறவையாய் இருக்கும் அசர்பைஜான். கூட நாமும் இன்னும் வெண்கலத்துடன்( இரண்டாவது மக்கள் தொகை கொண்ட  நாடு ) 

27 July, 2012

பார்த்ததில் பிடித்தது!

இந்த டம்மி பீசுகளுக்கு நம்மோட பணத்தினை எப்படி செலவு செய்யராங்க 


பாருங்க.. இந்திய மக்களே.
ஒரு கட்டயே கட்ட மேல படுத்துருக்கெ அடடா ஆச்சிரியக்குறி!

 நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?

* குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?

* எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?

* எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?

* ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?

* அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?

* அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?

* முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?

* ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?

* மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?

* நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?

* எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

* அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?

* அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?

* பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?

* சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா? தோழர் தமிழ்ச்செல்வன் கேள்விகள் நியாயம் இருக்கிறது அவர் கேள்வியில்

26 July, 2012

காய்கறி விற்று சமூக சேவை சென் ஷு-சூ!

தாய்வான் நாட்டைச் சேர்ந்த காய்கறி விற்கும் பெண்ணான சென் ஷு-சூ, இந்த ஆண்டு மகசேசே விருது பெற தேர்வான ஆறு பேரில் ஒருவராவார்.இவர் தினமும் காய்கறிகளை விற்பனை செய்து அதில் வரும் பணத்தைக் கொண்டு பல அறக்கட்டளைகளுக்கும், அனாதை இல்லங்களுக்கும் நன்கொடை வழங்கி பலரது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்துள்ளார்.சாதாரண எளிய வீட்டில் வசிக்கும் சென், தனக்காக எந்த ஆடம்பரப் பொருட்களையும் வாங்காமல், தரையில் படுத்துத்தான் உறங்குகிறார். தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், ஆதரவற்றவர்களுக்கும், பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுவதையே வாடிக்கையாக வாழ்ந்துள்ளார். இவரை கௌரவிக்கும் வகையில் மகசேசே விருது வழங்கப்பட உள்ளது.

பார்த்ததில் பிடித்தது


விபசாரத்தில் ஈடுபடும் AIRTEL , VODAFONE , DOCOMO. 

விபசாரம் என்பதில் ஆண் , பெண் தவிர இடைத்தரகர்களாக சிலர் வருவார்கள் அவர்கள் போல செயல்படுகின்றது இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் (பெயரிளியே தொடர்பு என இருப்பதாலோ என்னவோ ).இதில் எனக்கு தெரிந்து Airtel , Vodafone, Docomo மூன்றிலும் வரும் செய்திகளை கிழே குடுத்துள்ளேன் ...

சில தினகளுக்கு முன் வந்த ஒரு SMS in தமிழாக்கம் : 

“தமிழ் ஹாட் கேர்ள் சங்கீதா உங்களுக்காக காத்திருகின்றார். அவருடன் பேச உடனே தொடர்பு கொள்ளுங்கள்” என கூறி ஒரு எண் குடுத்து உள்ளனர் . கால் கட்டணம் நிமிடத்திற்கு 5 ருபாய்.

மற்றொரு SMS :

தனது இரவு நேர அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சுதா காத்திருக்கிறார். உடனே அழையுங்கள் . இதுக்கும் கால் கட்டணம் நிமிடத்திற்கு 5 ருபாய்.

இது போல SMS மட்டுமல்லாது உங்கள் கணக்கில் உள்ள தொகையினை சோதிக்கும் போதும் வருகின்றது . இதில் என்ன கொடுமை என்றால் சண்டே அன்று 50% தள்ளுபடியாம்

நேற்று வந்தது :
Make new friends and Love chat with beautiful Girl 24 Hours call Now 006745599251 Neha.. ISD rates apply only 18 Yrs +.
(கடல்கடந்து கடலைபோட வழி செய்றாங்களாம் )


ரோட்டு ஓரத்தில் நின்று கொண்டு, பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு ஆட்கள் பிடிக்கும் மாமாக்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்.

TRAI க்கு சில கேள்விகள் :

•இது போன்ற SMS அனுப்புவது உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ?•வியாபார சம்பந்தமாக SMS அனுப்புவதை தடுக்க தினமும் 200 SMS மட்டுமே அனுப்பலாம் என தடை போட்ட நீங்கள் இதுக்கு ஏன் தடை போடவில்லை ?•போட்டிக்கு அனுப்பும் SMS முலம் மீடியாக்கள் கோடி கணக்கில் வருமானம் பார்கின்றது. மீடியாக்களும் தினமும் இவ்வளவு SMS தான் பெற முடியும் என கொண்டு வந்தால் என்ன ?•குழந்தைகள் கூட பதில் சொல்லும் கேள்விகளை கேட்டுவிட்டு Call Waiting இருந்தாகூட நிமிடத்திற்கு 10 ரூபாய் பிடுங்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு ஏன் அனுமதி வழங்கவேண்டும் ?•Vodafone இல் ஓகே பட்டனை அழுத்தினாலே சில கட்டண வசதிகள் தானாகவே Activate ஆகின்றது . கேட்டால் உங்கள் மொபைல்ல FLASH MESSAGE என்ற வசதியை OFF பண்ணி வையுங்கள் என்கின்றனர் . இது தெரியாத கிராமத்து ஆட்கள் என்ன செய்வார்கள் ?•ரீ-சார்ஜ் செய்தால் குறைந்த பைசாவும் , சில SMS உம் தருகின்றன நிறுவனங்கள் . SMS அனுப்ப தெரியாத , அனுப்பாத நபர்களுக்கு இது வேஸ்ட் தானே ?

இது போல பல தேவை இல்லாத செயல்களில் பல தொலை தொடர்பு நிறுவங்கள் ஈடுபடுகின்றது இதை தடுக்க என்ன வழி ?

சிவனின் மடியில் முருகனும் பார்வதியின் மடியில் விநாயகனும் சிறுவர்களாக இருப்பதைப் போன்ற பேமிலி ஓவியத்தை நிறைய இடங்களில் பார்த்திருப்பீர்கள். இதை சோமாஸ்கந்தமூர்த்தம் என்கிறார்கள். இதற்கு பின்னால் ஒரு செயல்திட்டம் உள்ளது அது சைவம் எனும் மார்க்கம் ஒற்றை பெருமதமாய் திரட்டப்பட்டக் கதை. இது கி.பி எட்டாம் நூற்றாண்டு அல்லது அதற்கு பிறகான காலங்களில் நிகழ்ந்திருக்கலாம்.

சிவனை வழிபடும் சைவம், விஷ்ணுவை வழிபடும் வைணவம், சக்தியை வழிபடும் சாக்தேயம் அல்லது சாக்தம், விநாயகனை வழிபடும் காணபத்தியம், முருகனை வழிபடும் கெளமாரம், சூரியனை வழிபடும் செளரம் என ஆறு மார்கங்கள் இந்தியாவெங்கும் பரவலாக இருந்தது.. இந்த ஆறையும் தொகுத்துத் தான் தற்போதைய இந்து மதம் உருவானது.. இதில் சைவம் எனப்படும் சிவமார்கம் சக்தி, விநாயகன், முருகன் எனும் தனித் தனி வழிபாட்டு முறைகளை உள்வாங்கி சைவம் எனும் ஒற்றைப் பெருமதமாய் வளர்ந்தது.. வைணவம் சூரியனை வழிபடும் செளரத்தை மட்டும் உள்வாங்கிக் கொண்டது (சூரியநாரயணர் ஓவியம் பார்த்திருப்பீர்கள் அது செளரத்தை உள்வாங்கியதை குறிப்பிடுகிறது).. பின்னாட்களில் இந்த சைவமும் வைணமும் இணைந்து வேதமறுப்பு பேசும் பெளத்தம் சமணம் தவிர நாட்டார் தெய்வங்கள் போன்றவற்றை உள்வாங்கிக் கொண்டு இன்றைய இந்து மதமாய் வளர்ந்து நிற்கிறது..

24 July, 2012

பார்த்ததில் பிடித்தது!


கடவுளே உனக்கு கருணையே இல்லையா? சகுனி விமர்சனம்.

இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே யதார்த்த படங்களாக பார்த்து பார்த்து கண்ணு ரெண்டும் அவிஞ்சிபோச்சு.. விளிம்பு நிலை மக்களின் சொல்லப்படாத பக்கங்களை புரட்டி புரட்டி.. விரல்கள் பத்தும் வீங்கிபோச்சு. அழுக்கு முகங்களையும் இருட்டு மனிதர்களையும் ரத்தம் சொட்டும் அரிவாள்களையும் பார்த்து பார்த்து கிட்டத்தட்ட அரைமென்டலாகித்தான் அலைந்துகொண்டிருக்கிறோம். இதுமாதிரி நேரத்தில் கொஞ்சம் ரிலாக்ஸாக மூச்சுவிடவும் உழைச்ச களைப்பு தீரவும் வீங்கின நெஞ்சை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும்... நாலு பாட்டு, அஞ்சு பைட்டு, நிறைய காமெடி, கொஞ்சம் ரொமான்ஸ், ஒருகவர்ச்சி டான்ஸ் என நல்ல மசாலா படமொன்று வராதா என ஏங்கிக்கொண்டிருந்தோம். 

உன்னதமான ஆகச்சிறந்த மசாலா படம் வேண்டி பெருமாள் கோயிலுக்கு பொங்க வைத்து கடாவெட்டி பிரார்த்தித்தோம். தவமாய் தவமிருந்தோம். இந்த கடவுள் இருக்கிறாரே.. கடவுள்.. கொஞ்சம் கூட கருணையேயில்லாதவர். முதலில் விக்ரம் வாழ்ந்த ராஜபாட்டையை நமக்கு பரிசளித்தார்.. அய்யோ அம்மா.. என்று கதறினோம்.. நம்முடைய குரல் கடவுளின் காதுகளை எட்டவேயில்லை. பிறகு சிம்பு நடித்த ஒஸ்தியை வழங்கினார்.. கடவுளே எங்கள விட்டுடு.. தெரியாம கேட்டுட்டோம் என தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டோம்.. எங்களுக்கு மசாலாவும் வேண்டாம் மண்ணாங்கட்டியும் வேண்டாம் ஆளவுடு என கெஞ்சினோம்.. ஆனால் கொஞ்சம் கூட இதயத்தில் ஈவு இரக்கமேயில்லாத கடவுள் இதோ இப்போது சகுனியை கொடுத்திருக்கிறார்.. நாங்க என்ன பாவம் செஞ்சோம்.. கடவுளே... முடியல.. 

‘’மைநேம் இஸ் ரஜினி.. ஐயாம் கமல்’’ என மிரட்டலாக.. ட்ரைலரிலேயே அடடே போடவைத்த சகுனி சென்ற வாரம் ரிலீஸானது. உதயம் தியேட்டரில் நுழையும்போதே ஒரே கூச்சல்.. ஆராவாரம்.. குத்தாட்டம்தான்.. கும்மாளம்தான்.. அடேங்கப்பா கார்த்திக்கு இவ்வளவு ரசிகர்களா என ஆச்சர்யகுறியை தலைக்குமேல் போட்டு உள்ளே நுழைந்தோம்.. படம் ஆரம்பித்து. பத்தே நிமிடங்கள்தான்.. ஜஸ்ட் டென்மினிட்ஸ்.. கூச்சலும் கும்மாளமும் அடங்கியது. ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா என்னும் பாடலுக்கேற்ப நாம் இருப்பது உதயம் தியேட்டரா அல்லது கண்ணம்மாபேட்டை சுடுகாடா என்கிற சந்தேகமே வந்துவிட்டது! 

ஓக்கே திஸ் டைரக்டர் நமக்கு வேற ஏதோ வித்தியாசமான படம் காட்டப்போறார் போல.. நாமதான் வேற எதையோ எதிர்பார்த்து வந்துட்டோம்.. லெட் அஸ் கான்சென்ட்ரேட் ஆன் திஸ் மூவி என்று மும்முரமாக படத்தை பார்க்கத்தொடங்கினோம். கடவுள் சிரித்தார்! தன் வீட்டை இடிக்க போகிறார்கள் என மந்திரியிடம் மனு கொண்டு போய் கொடுக்கிறார் ஹீரோ.. மந்திரி மனுவை வாங்கிக்கொள்கிறார்.. ஹீரோ மகிழ்ச்சியாக மந்திரிவீட்டு வாசலில் இருக்கிற தள்ளுவண்டி பஜ்ஜி கடையில் பஜ்ஜி சாப்பிடுகிறார்.. பஜ்ஜி ஆயிலை கசக்க பேப்பரை எடுத்தால் ஹீரோ கொடுத்த மனு! ஹீரோ அப்படியே ஷாக் ஆகிறார். வாவ் வாட் ஏ சீன்.. நூறாண்டு இந்திய சினிமா இப்படியொரு பிரமாதமான காட்சியை கண்டதுண்டா! இதுமாதிரி பல காட்சிகள் அடங்கிய அற்புதமான திரைப்படம்தான் சகுனி!

படத்தின் முதல் பாதி முழுக்க அப்பாவியாகவே திரிகிறார் ஹீரோ.. எலி ஏன் அப்படி திரியுது என்றால் இரண்டாம்பாதியில் முதலமைச்சரை எதிர்த்து சண்டை போடுகிறார். முதலமைச்சரே இவரை பார்த்து அஞ்சுகிறார். எதிர்கட்சி தலைவரை முதல்வராக்குகிறார். அதற்காக அவர் செய்யும் சகுனி வேலைகள்.. தமிழ்சினிமா காணாதது! இறுதியில் ஸ்டேட் கவர்மென்ட்டு முடிந்து சென்ட்ரல் கவர்மென்ட்டும் அவரை அழைப்பதோடு படம் முடிகிறது. செகன்ட் பார்ட் ஹிந்தியில் போல.. நாம தப்பிச்சோம்.. பானிபூரி பாய்ஸ் செத்தானுங்க... மூணாவது பார்ட் ஹாலிவுட்டா இருக்கலாம்.. வெள்ளை மாளிகையை காப்பாற்ற குஷ்பூவை அமெரிக்க அதிபரா ஆக்குவார்னு தோணுது!

சந்தானம் படம் முழுக்க பேசிக்கொண்டேயிருந்தால் படம் ஹிட்டாகிவிடும் என்று யாரோ இயக்குனரிடம் சொல்லித்தொலைத்திருக்க வேண்டும்.. படம் முழுக்க வாய் வீங்க வீங்க சந்தானம் பேசுகிறார். சில இடங்களில் அவர் மட்டும்தான் படத்தையே காப்பாற்றுகிறார். சமீபத்தில் வெளியான பல படங்களிலும் குடிப்பழக்கத்தை ஆதரிப்பது போல வசனங்கள் இடம்பெறுவது வாடிக்கையாகிவிட்டது. இதையெல்லாம் யாரும் எதிர்த்து போராடமாட்டார்களா? ஹீரோ கார்த்தி சிரிச்ச மூஞ்சியாகவே ஒரே ரியாக்சனுடம் படம் முழுக்க வருகிறார். விஜயை போலவே வளைந்து வளைந்து நடனமாடுகிறார்.. பஞ்ச் டயலாக் பேசுகிறார்! நல்ல வேளை இந்த படம் செம ஃப்ளாப்! இல்லாட்டி போன இன்னும் பத்து படத்திலாவது இதேமாதிரி பஞ்ச் டயலாக் பேசி டான்ஸ் ஆடி நம்மை தாலியறுத்திருப்பார்! விஷால்,பரத் வரிசையில் இந்த தளபதியும் இணைந்து நாட்டுக்கு நன்மை செய்வார் என்பது தெரிகிறது. படமும் சரியல்லை.. ஹீரோயினும் சரியில்லை.. இயக்குனருக்கு ஆன்ட்டி போபியோவோ என்னவோ ரோஜா,ராதிகா என சீரியல் ஆன்டிகளை வேறு அள்ளிக்கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார். ம்ம்.. என்னத்த சொல்ல.. வில்லனாக பிரகாஷ்ராஜ் இந்தப்படத்திலும் முட்டாளாகவே வாழ்கிறார். கத்துகிறார். சவால் விடுகிறார். டேய்.. என்கிற வார்த்தையை விதவிதமான மாடுலேஷன்களில் சொல்கிறார்.

படத்தில் டெக்னிக்கல் சமாச்சராங்களை கவனிக்கவே முடியாத அளவுக்கு படம் அவ்வளவு சிறப்பாக இருந்ததால் அதைப்பற்றியெல்லாம் எழுதவே தோணலை. படத்தின் இயக்குனர் சிறந்த வசனகர்த்தாவாக இருக்கலாம். படத்தின் பல வசனங்கள் நச்சென்று இருந்தன. இந்த உலகப்படம் பார்க்கிற அறிவுஜீவிகள்தான் மசாலா படம் பார்க்கிறவனை முட்டாளாக நினைத்து பீட்டர் விடுவதை இச்சமூகம் கண்டிருக்கிறது.. வரவர மசாலா பட இயக்குனர்களே தன்னுடைய ரசிகனை முட்டாளாக நினைக்கத்தொடங்கியிருப்பது மசாலா பட ரசிகர்களை வெறிகொள்ள செய்துள்ளது..  பைனலாக ஒன்றே ஒன்றுதான்.. கடவுளே உனக்கு கருணையே இல்லையா.. மொக்கை மசாலா படங்களிடமிருந்து எங்களை காப்பாற்று யதார்த்த படமொக்கைகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்!  

18 July, 2012

படத்துக்கும் பாட்டுக்கும் சம்பத்தம் சத்தியமா இல்லை...?


தத்தாரி அரசாளும்
தனிக்காட்டு ராஜ்ஜியத்தில்
கத்தரீக்கோல்  மந்திரியாம்,
கன்னக்கோல் காவலராம்,
கஞ்சிக்கலயத்தில்
கட்டெறும்பு  கடிக்குத்தடா,
பஞ்சத்துக்குப்  பஞ்சமில்லை
பாவிப்பய ராஜ்ஜியத்தில்!
                                                     போஜன் திரைப்படம் (1948)   

17 July, 2012

ஆடியில் வாங்கினாலும் சரி, ஆவணியில் வாங்கினாலும் விலை மாறாது.


ஆரம்பமாகிவிட்டது ஆடித் தள்ளுபடி சீசன். வருஷா வருஷம் வருகிற திருவிழாக்களைபோல ஆடித் தள்ளுபடியும் ஒரு கொண்டாட்டமாகவே மாறிவிட்டது. பண்டிகை காலத்தில் விலையைப் பார்க்காமல் வாங்கும் அதே துணிமணிகள் குறைந்த விலையில் கிடைக்கும்போது வாங்கலாமே என்கிற ஆசையில் பல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கித் தள்ளிவிடுகிறார்கள் மக்கள். துணிமணிகள் மட்டுமல்ல, மொபைல்கள், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், அவ்வளவு ஏன், செருப்புகள்கூட இப்போது ஆடித் தள்ளுபடியில் விற்கப்படுகிறது.இந்த ஆடித் தள்ளுபடியில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா? தள்ளுபடி என்று அறிவித்துவிட்டு, விலையை ஏற்றி, இறக்கி விற்கிறார்களா? என்பதை அறிய களத்தில் இறங்கி, விசாரித்தோம். நாம் முதலில் சென்றது துணிக் கடைகளுக்கு. முன்பெல்லாம் விற்க முடியாமல் இருக்கும் துணிமணிகளை தள்ளுபடி தந்து விற்றார்கள். ஆனால், இன்று ஆடி தள்ளுபடிக்காகவே பல துணிக் கடைகள் துணிமணிகளை வாங்கி, விற்கின்றன. புதுத் துணிக்கு இவ்வளவு தள்ளுபடியா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால், இங்குதான் இருக்கிறது வியாபாரத் தந்திரம். புதிய துணிமணிகளோடு, விற்க முடியாமல் தேங்கிக் கிடக்கும் பழைய துணிமணிகளையும் கலந்துவிடுவது, சிறிய அளவில் டேமேஜ்-ஆன துணிமணிகளை புதிய துணிகளோடு கலந்துவிடுவது போன்ற வேலைகள் சூப்பராக நடக்கும்.

விலையில் தள்ளுபடி என்பது வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு மட்டும்தான். 10 முதல் 20 சதவிகித தள்ளுபடியைத்தான் பெரும்பாலான கடைகள் தள்ளுபடி தருகின்றன. இது ஓரளவு நியாயமான தள்ளுபடி. ஆனால், 50 சதவிகித தள்ளுபடி என்பது விளம்பரத்துக்காகச் சொல்லப்படும் வாசகம் மட்டுமே. அதை நம்பி உள்ளே போனால், ஒப்புக்கு ஒன்றிரண்டு பொருட்களை மட்டுமே 50 சதவிகித தள்ளுபடி விலையில் வைத்திருப்பார்கள். மற்றவற்றுக்கு 10-20 சதவிகித தள்ளுபடிதான் இருக்கும். துணிகளின் மீது விலைப்பட்டியல் ஒட்டுவதில்தான் பலே தந்திரங்களை கடைப்பிடிக்கிறார்கள் சில கடைக்காரர்கள். பொதுவாக, இரண்டு வகை விலைப்பட்டை உண்டு. ஒன்று, துணியின் உண்மையான விலை, மற்றொன்று தள்ளுபடிக்காகவே ஒட்டப்பட்ட விலை. 350 ரூபாய் கொண்ட ஒரு புடவையின் விலை ஆடித் தள்ளுபடியில் 600 ரூபாயாக உயர்ந்து மீண்டும் 350 ரூபாயாக குறையும். இந்த முறையில் ஆடியில் வாங்கினாலும் சரி, ஆவணியில் வாங்கினாலும் துணியின் விலை மாறாது. கடைக்காரர்கள் பயன்படுத்தும் அடுத்த டெக்னிக், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது. யாருமே வாங்க விரும்பாத மோசமான துணியை ஒரு நல்ல துணியோடு சேர்த்து விற்பது இந்த டெக்னிக். ஒரு நல்ல துணி 300 ரூபாய், ஒரு மோசமான துணி 150 ரூபாய் என இந்த இரண்டையும் சேர்த்து, 450 ரூபாய் விற்பார்கள். காசைக் கொடுத்து நல்ல துணியை மட்டும் வாங்குவது புத்திசாலித்தனம்.  

ஆடித் தள்ளுபடியில் துணி வாங்கும்போது நன்றாக பிரித்துப் பார்த்து வாங்க வேண்டும். அப்போதுதான் இழை இல்லாமல் இருப்பது, சாயம் ஒட்டி இருப்பது போன்றவற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

மொத்தமாக கூடைகளில் கொட்டிக்கிடக்கும் துணிகளை வாங்காமல் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அவை மிக பழைய ஸ்டாக்-ஆக இருக்கும். அதிக டேமேஜும் இருக்கும்.

நீங்கள் வாங்கிய பொருட்களில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதனை ஓரிரு நாட்களில் மாற்றிக்கொள்வது நல்லது. பத்து, இருபது நாட்கள் கழித்து சென்றால் கடைக்காரர்கள் நம்மை இழுத்தடிப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு. சில கடைகளில் தள்ளுபடி விற்பனையில் வாங்கிய பொருளை மாற்றித்தரமாட்டார்கள். மற்ற நாட்களில் எல்லாம் நிறைய லாபம் வைத்து விற்கும் கடைக்காரர்கள் ஆடி மாதத்தில் மட்டும் எப்படி இவ்வளவு தள்ளுபடி தருகிறார்கள்? இந்த கேள்வியை திண்டுக்கல்லில் கடை நடத்தும் சுப்ரமணியம் அண்ட் கோ-வின் உரிமையாளர் ஜோதிகுமாரிடம் கேட்டோம். ''சில துணிவகைகள், சில அளவுகளில் இருக்கும்போது அதை விற்றுத் தீரவேண்டும் என்பதற்காக ஆடித் தள்ளுபடி அறிவிக்கிறோம். இதனால் அடுத்தடுத்து வரும் பண்டிகைகளுக்கு புதிய துணிகளை எங்களால் வாங்கி வைக்க முடியும். நாங்கள் ஆடித் தள்ளுபடி தருவது போல எங்களுக்கும் சப்ளையர்களும் தருவார்கள். அதை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு தந்துவிடுவோம். மற்றபடி வாடிக்கையாளர்களை ஏமாற்ற வேண்டும் என்கிற நோக்கம் எங்களுக்கு கிடையவே கிடையாது'' என்றார்.


எப்பவுமே இப்படித்தான்... ஆச்சரியப்படாதீங்க!


டெசோ மாநாட்டில் தமிழீழத் தனிநாடு கோரும் தீர்மானம் நிறைவேற்றப்படமாட்டாது என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பது அதிர்ச்சிக்குரியதோ ஆச்சரியத்துக்குரியதோ அல்ல என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.தமிழ் ஈழக் கோரிக்கை இப்போதைக்கு இல்லை என்றும் தனி ஈழத்துக்கான போராட்டமோ, கிளர்ச்சிகளோ நடத்தும் எண்ணம் இல்லை என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்த செய்தி அதிர்ச்சியையோ, ஆச்சர்யத்தையோ அளிக்கவில்லை. ஈழப் பிரச்சினையில் எப்போதும் சரியான நிலைப்பாட்டை எடுக்காத கருணாநிதி இப்போதும் அப்படியே நடந்துக் கொண்டிருக்கிறார்.தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு (டெசோ) என்ற செத்துப்போன அமைப்பிற்கு காலாவதியான காலத்தில் உயிர்கொடுக்க முயன்று தற்போது, ஈழக் கோரிக்கை எதையும் மாநாட்டில் தீர்மானமாக வைக்கப்போவது இல்லை என்று கூறி ஈழத்தமிழர்களுக்கு மீண்டும் தமது துரோக முகத்தை வெளிக்காட்டி உள்ளார் கருணாநிதி.

ஈழம் மலர வேண்டும் என்று பேசுவாராம், தீர்மானம் நிறைவேற்றி இந்திய அரசையோ, உலக நாடுகளையோ வலியுறுத்த மாட்டாராம். ஈழம் மலருவதற்கு இன்னமும் அவகாசம் தேவையாம். எப்போது, எஞ்சிய தமிழர்களையும் இலங்கை அதிபர் ராஜபக்சே கொன்று தீர்த்த பின்னரா? என்பதை கருணாநிதிதான் உலகிற்கு விளக்க வேண்டும்.மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தம்மை சந்தித்து அரசியல் பேசவில்லை என்றால், இரண்டு பேரும் சேர்ந்து என்ன பேசினார்கள்? சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தை எப்படி மடை மாற்றம் செய்யலாம் என்பது குறித்தா? அல்லது ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தா? என்பதை விளக்க வேண்டிய கடமை கருணாநிதிக்கு உண்டு.

ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமது பதவிக்காலத்தில் ஈழம் மலர வேண்டும் என்று உளப்பூர்வமாக ஒருபோதும் சிந்தித்ததும் இல்லை. செயல்பட்டதும் இல்லை. இப்போது உலகத்தமிழர்களின் வெறுப்புப் பார்வை மட்டும்தான் கருணாநிதிக்கு எஞ்சியுள்ளது. மீண்டும், மீண்டும் தெளிவற்ற அறிக்கைகள், பேச்சுகள், பேட்டிகள் கொடுத்து தம்மை மிகச்சிறந்த குழப்பவாதி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் துரோகத்தால் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று கருணாநிதி நினைத்தால் இனி தமது எஞ்சிய வாழ்நாளில் ஒருபோதும் ஈழம் குறித்தோ ஈழத்தமிழர்கள் குறித்தோ பேசாமல் இருப்பது ஒன்றே அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்

16 July, 2012

பார்த்ததில் பிடித்தது...




கர்ம வீரர் காமராசர்.
'அவர் இறந்தபோது அவரது வீட்டை வீட்டு உரிமையாளர் எடுத்துக்கொண்டார். அவரது காரை காங்கிரஸ் கட்சி எடுத்துக்கொண்டது. அவரது உடலைப் பூமி எடுத்துக்கொண்டது. அவரது பெயரை மட்டும் வரலாறு எடுத்துக்கொண்டது' - 'காமராஜர் ஒரு சகாப்தம்’ நூலில் கோபண்ணா எழுதிய வரிகள் இவை."

இவனெல்லாம் தலைவன் ?


என் உயிர் பிரிவதற்குள் தமிழீழத்தைக் காண விரும்புகிறேன்-கருணாநிதி!தமிழ் ஈழம் அமைவதுதான் எனது வாழ்வின் லட்சியம். நான் உயிர் விடுவதற்குள் தமிழ் ஈழம் அமைவதைக் காண விரும்புகிறேன். அப்படி தமிழ் ஈழம் அமைந்து, அதற்கு அடுத்த கணமே நான் இறந்தாலும் மகிழ்ச்சிதான். நான் உயிரிழந்தால்தான் தமிழீழம் அமையும் என்றால், அதற்காக உயிரை விடவும் நான் தயார் என்றார் திமுக தலைவர் கருணாநிதி


திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலைஞர்! 

இன்று... தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம்: கருணாநிதி!
 "தமிழீழம்" என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று மத்திய அரசு எச்சரித்துவிட்ட நிலையில் தமிழீழம் கோரி திமுக நடத்த உள்ள டெசோ மாநாட்டில் "தமிழீழம்" கோரி தீர்மானம் போடமாட்டோம் என்று திமுக தலைவர் கருணாநிதி....?  அது போனமாசம் இது இந்தமாசம் 

15 July, 2012

பாருக்குள்ளே கொடுமை நாடு!

மாணவியை சிறுநீர் குடிக்க வைத்தது,சாலையில் சென்ற டீன் ஏஜ் பெண் 20 பேர்  கும்பலால் மானப்பங்கப்படுத்தப்பட்டது, பணம் திருடியதாக மாணவியிடம் ஆடை களைந்து  சோதனை என்ற அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான கொடுமைகளின்  உச்சமாக, கர்நாடகாவில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை கணவன் சிறுநீர்  குடிக்க வைத்த சம்பவம்  என கடந்த ஒரு வார காலத்தில்,  அடுத்தடுத்து பெண்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள கொடுமைகள் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளன. 

சம்பவம் 1:மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சாந்தி நிகேதன் என்ற பள்ளியின்  விடுதியில்,ஒரு மாணவி படுக்கையில் சிறுநீர் கழித்தால் என்பதற்காக, அந்த மாணவி  சிறுநீர் கழித்த போர்வையை எடுத்துவரச் செய்து,பின்னர் அதனை பிழிந்து குடிக்கச்  செய்துள்ளார் அந்த விடுதி வார்டன்.இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி கடும் கண்டனக்குரல்கள் எழுந்தவுடன், படுக்கையில்  சிறுநீர் கழிக்கும் சிறுவர்களுக்கு அளிக்கப்படும் ஒருவித பாரம்பரிய சிகிச்சையாகவே தாம்  அதனை செய்ததாக அந்த விடுதிவார்டன் சால்ஜாப்பு சொன்னார்.
ஆனால்  தமக்கு தண்டனை அளிப்பதற்காகவே அவ்வாறு செய்ததாக அந்த  மாணவி கதற, அந்த வார்டன் தற்போது கம்பி எண்ணுகிறார். 

சம்பவம் 2


இந்த சர்ச்சை ஓய்வதற்குள்,அசாமில் ஒரு டீன் ஏஜ் பெண்ணை  20 பேர் கொண்ட  கும்பல் மானப்பங்கம் செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.சம்பவம்  நிகழ்ந்து மூன்று தினங்கள் கழித்தே, நேற்று இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. 

அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள பார் ஒன்றில், நண்பரின் பிறந்த  நாளையொட்டி,  இரவு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, வீடு  திரும்பிக்கொண்டிருந்த அப்பெண்ணை,சுமார் 20 க்கும் அதிகமானோர்களை கொண்ட ஒரு  கும்பல் அந்த பெண்ணை முடியை பிடித்து இழுத்தும்,மேலே தூக்கியும், கீழே   போட்டும், அடித்து உதைத்தும்,ஆடைகளை இழுத்து, கிழித்தும்   மானப்பங்கப்படுத்தியுள்ள்னர்.

போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் நடைபெற்ற இச்சம்பவத்தை,உள்ளூர்  தொலைக்காட்சி ஒன்று படம்பிடித்து ஒளிபரப்பாக்கியது.அத்துடன் சமூக  வலைதளங்களான யூ டியூப், ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரிலும் அந்த வீடியோ  வெளியிடப்பட்டது.இதனையடுத்தே,அசாம் அரசு இது குறித்து விசாரணை நடத்தி  குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டது.



இதனையடுத்து காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அக்கும்பலை   சேர்ந்த 4 பேரை மட்டும் இதுவரை கைது செய்துள்ளனர்.மேலும் 11 பேர் அடையாளம்   காணப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த பிரச்னை சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தை  கிளப்பிய நிலையில்,தேசிய மகளிர் ஆணையம்,மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்  மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் சம்பந்தப்பட்ட  குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தினர்.இவ்வாறு நெருக்கடிகள் அதிகரித்ததை தொடர்ந்து குற்றவாளிகளை இன்னும் 48 மணி நேரத்திற்குள் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு இன்று கெடு விதித்துள்ளார் அசாம் முதல்வர் தருண் கோகை! 

சம்பவம் 3 : 

நேற்றைய அசாம் சம்பவ அதிர்ச்சி மற்றும் மேற்கு வங்கத்தில் மாணவியை ஏற்கனவே  சிறுநீர் குடிக்கவைத்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி விலகுவதற்குள், அதே மாநிலத்தில்  மாணவியிடம் ஆடையை களைந்து சோதனை செய்யப்பட்டதாக இன்று செய்தி வெளியாகி, மேலும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் பாரக்னாஸ் மாவட்டத்தில் இயங்கி வரும் கோபால் நகர் பாலிகா   வித்யாலாயா பள்ளியிலேயே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.இப்பள்ளியின் 8 ஆம் வகுப்பில் பணம் காணாமல் போனது. இதையடுத்து குறிப்பிட்ட   அந்த மாணவி மீது சந்தேகம் அடைந்த ஆசிரியை ரூபாலி,மற்ற மாணவர்கள் முன்பு அந்த  மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்தார்.இதனால் அந்த மாணவி மிகுந்த வேதனையடைந்து அவமானம்   அடைந்தார்.அழுதுகொண்டே வீடு திரும்பிய அந்த மாணவி, இது குறித்து தமது   பெற்றோரிடம் கூறினார்.அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து போலீசில் புகார்   அளித்தனர்.இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி   வருகின்றனர்.

சம்பவம் 4  மேற்கூறிய சம்பவத்திற்கெல்லாம் உச்சமாக, கர்நாடக மாநிலத்தில் கர்நாடகாவில்  கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை சிறுநீர் குடிக்கவைத்து கணவன்  கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம்,  மகளிர் அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அருகே உள்ள தவான்கரே என்ற இடத்தை சேர்ந்த சப்னா என்ற 27 வயது  பெண்ணுக்குத்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. இவரது கணவர் ஆகாஷ் ராஜ் ஒரு பல் மருத்துவர்.கடந்த 2011 ஆம் ஆண்டு இவர்கள்  இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது ஆகாஷ் ராஜுக்கு, ஒரு கிலோ தங்கம்,ஐந்து கிலோ வெள்ளி  சாமான்களை வரதட்சணையாக கொடுத்துள்ளார் சப்னாவின் தந்தை.


ஆனால் திருமணம் ஆனதிலிருந்தே,”வரதட்சணை போதாது;மேலும் 25 லட்சம்  ரூபாயை உனது தந்தையிடமிருந்து வாங்கி வா..!” என்று கூறி சப்னாவை அடித்து  துன்புறுத்தி வந்துள்ளார் ஆகாஷ் ராஜ்.இதற்கு ஆகாஷ் குடும்பத்தினரும் உடந்தையாக  இருந்துள்ளனர். இந்த அராஜகத்தின் உச்சமாகத்தான் சப்னாவை தனது சிறுநீரை குடிக்கவைத்து  கொடுமைப்படுத்தியுள்ளார் ஆகாஷ் ராஜ்.பொறுத்து பொறுத்து பார்த்த சப்னா,கணவன் வீட்டைவிட்டு வெளியேறி தனது சகோதரன்  வீட்டிற்கு வந்துவிட்டார்.அவர்களிடம் நடந்த சம்பவங்களை கூறி அவர் அழுதார். இதனையடுத்து தற்போது ஆகாஷ் ராஜுக்கு எதிராக காவல்துறையில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது.காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அடுத்தடுத்து நடந்துள்ள இந்த கொடுமைகளை பார்த்தால்,”பாருக்குள்ளே கொடுமை  நாடு... இந்த பாரத நாடு!”  என்று பெண்கள் பாடும் நிலைமை ஏற்பட்டுவிடும்போல!

பிரபாகரனின் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும்' பழ.நெடுமாறன்.

பழ.நெடுமாறன் எழுதிய 'பிரபாகரன் தமிழர் எழுச்சி வடிவம்' நூலின் அறிமுக விழா சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது.இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய பழ.நெடுமாறன்,"உலகத்தில் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் விடுதலைப் போராட்டத்தை ஒப்பிட முடியாது.ஏனெனில் பிரபாகரன் போராட்டத்துக்கு எந்த ஒரு நாடும் உதவி செய்யவில்லை.மாறாக 20 நாடுகள் அணி திரண்டு அவரை ஒழிக்க முயற்சித்தன.


உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் நிதி திரட்டி ஆயுதங்களைப் பெற்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் போரை நடத்தியவர் பிரபாகரன்.இன்று போரில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம்.மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5-ம் கட்ட விடுதலைப் போர் நிச்சயம் தொடரும். பிரபாகரனின் வீரம் செறிந்த வரலாறு கொண்ட இந்நூல்,தமிழக இளைஞர்களுக்கு அளித்த ஆயுதமாகும்.இந்நூலைப் படிக்கும் இளைஞர்கள் பிரபாகரனின் அடுத்த கட்ட போராட்டத்துக்கு துணை நிற்க வேண்டும்,தோள் கொடுக்க வேண்டும்.
இலங்கை தமிழர் படுகொலையில் ராஜபக்ச மட்டும் குற்றவாளி அல்ல. மன்மோகன்சிங்கும் குற்றவாளி,அதற்கு துணையாக நின்ற கருணாநிதியும் குற்றவாளிதான்" என்றார்.

ஆதி மனிதனின் முழுமையான முதல் எலும்புக் கூடு!



ஆதி மனிதன் ஒருவனின் முழுமையான எலும்புக்கூடு ஒன்று முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடு இது என்றும் தெரிய வந்துள்ளது.ஆதி மனிதன் ஒருவனின் எலும்புக் கூட முழுமையாக நமக்குக் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆதி மனிதர்களின் உடல் கூறு குறித்த புதிய பரிமாணத் தகவல்கள் நமக்குக் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.
தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள்தான் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இது கண்டுபிடிக்கப்பட்டதே பெரும் சுவாரஸ்யமானதாகும். தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரின் வடக்கே ஒரு பாறைப் பகுதியில் 2008ம் ஆண்டு இந்த எலும்புக்கூட கண்டுபிடிக்கப்பட்டது. இதை முழுமையாக ஆராய்ச்சி செய்வதற்காக ஆய்வகத்திற்குக் கொண்டு சென்றனர்.அந்தப் பாறைப் பகுதி ஆய்வகத்திலேயே இருந்து வந்தது. அதில் என்ன இருக்கிறது என்பது கூட சரியாக அனுமாணிக்க முடியவில்லை. இந்தநிலையில் அந்தப் பாறையில் ஒரு பல் ஒட்டிக் கொண்டிருப்பதை ஆய்வக உதவியாளரான ஜஸ்டின் முகாங்கா பார்த்தார். இதை விஞ்ஞானிகளிடம் அவர் சொன்னார்.
இதையடுத்து அந்த பாறையை தீவிரமாக ஆராய்ந்தனர். அப்போதுதான் அந்தப் பாறையில் ஒரு மனிதனின் எலும்புக் கூட பாசில் வடில் ஒட்டிய நிலையில் புதைந்திருந்தது தெரிய வந்தது.இந்த மனிதனுக்கு நீண்ட கால்கள், கைகள் உள்ளன. மூளை சிறிதாக உள்ளது. முதல் வரிசை மனித இனத்தைச் சேர்ந்தவனாக இந்த ஆதி மனிதன் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.எனவே இந்த மனிதன் குறித்த ஆய்வு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த எலும்புக் கூட்டுக்கு கரபோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மனின் இறந்தபோது அவனுக்கு 9 முதல் 13 வயதுக்குள் இருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த எலும்புக் கூட கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை உலக பாரம்பரிய பகுதியாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. மனித குலத்தின் தொட்டில் என்றும் இப்பகுதி விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. காரணம், இங்கு பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துவண்ணம் உள்ளன. மனிதனின் தோற்றம் குறித் பல முக்கியத் தகவல்களும் இந்தப் பகுதியில் ஏற்கனவே கிடைத்துள்ளன.தற்போது ஒரு முழுமையான ஆதி மனிதனின் எலும்புக் கூட கிடைத்திருப்பதால் இப்பகுதியில் மேலும் தீவிர சோதனைகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உணர்வு பெரியார் தி.கா.மட்டும்தானா?



சென்னை தாம்பரத்தில் இலங்கை விமானப் படையினருக்கு பயிற்சி தந்த விவகாரத்தின் சூடு தணிவதற்குள்ளாகவே 4 இலங்கை ராணுவ அதிகாரிகள் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்துக்கு வந்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது,இலங்கை, வங்கதேசம், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 40 அதிகாரிகள் பயிற்சிக்காக தமிழ்நாட்டின் குன்னூர் வெலிங்டன் பயிற்சி முகாமுக்கு வந்துள்ளனர்.
ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள இனவெறி ராணுவத்துக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி தரக்கூடாது என்பது ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கோரிக்கையாக இருந்து வருகிறது. அண்மையில் தாம்பரத்தில் பயிற்சி பெற்ற சிங்கள அதிகாரிகள், தமிழகத்தின் எதிர்ப்பால் வெளியேற்றப்பட்டிருந்தனர்.இந்நிலையில் குன்னூரில் மீண்டும் பயிற்சிக்காக மத்திய அரசு அனுமதித்திருக்கிறது. சிங்கள படையினரை குன்னூரில் இருந்து வெளியேற்றாவிட்டால் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று பெரியார் தி.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய அமைப்புகள் எச்சரிக்கைவிடுத்துள்ளன.

விடுதலைப் புலிகள் பெரும் அச்சுறுத்தல்-மத்திய அரசு.

*கட்டுக்கட்டாய் கருப்புப்பணம் அச்சுறுத்தல் இல்லையா?

*காமென்வெல்த் ஊழல் அச்சுறுத்தல் இல்லையா?

*தேர்தலில் ஜெயிக்காமல் வெற்றி அடைந்ததாய் அறிவித்த ஜனநாயக படுகொலை அச்சுறுத்தல் இல்லையா?

*ஒரு இத்தாலிய பெண் இந்தியாவின் அரசியலை தீர்மானிப்பது அச்சுறுத்தல் இல்லையா?

*நீரா ராடியா இந்தியாவின் அமைச்சர்களை தீர்மானிப்பது அச்சுறுத்தல் இல்லையா?

போங்கடா உங்க நாட்டுப்பற்றுல தீயை வைக்க...

-இறையாண்மையுடன் இந்தியத் தமிழன்.

ஏமாற்றாதே ஏமாறாதே...!



திரையரங்குகளில் வெளியாகியுள்ள பில்லா 2 திரைப்படம் லாஜிக்கலி தோல்வியடைந்தாலும், நேற்று நண்பர்களோடு டெக்னிக்கலாக போட்டுப்பார்த்த ஒரு கணக்குப்படி முதல் மூன்று நாளிலேயே 69 கோடி ரூபாயை வசூல் செய்யும் என தெரிகிறது! குப்பை படங்களை போதிய மார்க்கெட்டிங் மூலமாக ஹைப் ஏற்றி, மக்களை முட்டாளாக்கி முதல் மூன்று நாளிலேயே பல கோடிகளில் லாபம் ஈட்ட முடியுமெனில் எப்படி நல்ல படங்கள் எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் நம் இயக்குனர்களிடமும் திரைத்துறையினரிடமும் உருவாகும்! இப்படியே போச்சினா இயக்குனர்களும் ஹீரோக்களும் கதை திரைக்கதைக்காக யோசிக்காமல் எப்படி அக்ரஸீவாக மார்க்கெட் பண்ணி முதல் மூன்றுநாளில் வசூலை அள்ளலாம் என்பதை பற்றி சிந்திக்கத்தொடங்கலாம். 

13 July, 2012

பார்த்ததில் பிடித்தது ...

பில்லா 2 திருட்டு டிவிடி ரெடி ...! - செய்தி # இது ஒன்னுதான்யா எனக்கு புடிக்கவே மாட்டேங்குது... படம் ரிலீஸ் ஆயி எவள நேரமாச்சு..! ஒரு திருட்டு DVD ரெடி பண்ண ஏழு மணி நேரமா...!?

தமிழ் உணர்வே இல்லாத கருணாநிதி...! ஜெ


புலி போல் பாய வேண்டிய இந்தியப் பேரரசு சுண்டெலி போல் இலங்கை அரசிடம் பணிந்து செல்வது வருந்தத்தக்கது. இலங்கை விமானப் படை வீரர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
ஒட்டுமொத்த தமிழர்களின் கடும் எதிர்ப்பையடுத்தும், எனது கடும் கண்டனத்தையடுத்தும், இலங்கை விமானப் படை வீரர்களுக்கு அளிக்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சியை சென்னையில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்திலிருந்து பெங்களூரில் உள்ள எலகங்கா விமானப்படை நிலையத்திற்கு மாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்ற தகவல் வரப் பெற்றவுடன், இலங்கை வீரர்கள் எவருக்கும் இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், தமிழினத் தலைவர் என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு, தமிழினத்தை இலங்கை அரசு அழிக்க காரணமாக இருந்த திமுக தலைவர் மு. கருணாநிதியோ, மத்திய அமைச்சர் பதவிகள் பறிபோய்விடுமோ என்ற பயத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில், இலங்கை ராணுவத்திற்கு தமிழகத்திலே பயிற்சி அளிக்காமல், வேறு மாநிலங்களிலே பயிற்சி அளித்தால்.. என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அப்படி பயிற்சி அளிக்க முன் வந்தால் அப்போது பார்ப்போம் என்று தமிழ் உணர்வே இல்லாமலும், நழுவலாகவும் பேசியிருக்கிறார்.
இதை நினைக்கும் போது, முல்லைப் பெரியாறு பிரச்சனைக்காக மத்திய அரசை எதிர்த்து மதுரையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்து, அதை கேரள அரசுக்கு எதிரான போராட்டமாக மாற்றி, கடைசியில் அதையும் கைவிட்ட நிகழ்ச்சி தான் நினைவிற்கு வருகிறது. தன்னுடைய நடவடிக்கைகள் அனைத்தும் கபட நாடகங்கள் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் கருணாநிதி. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இந்த நடவடிக்கைகள் உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம் என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகின்றன.
தமிழ் இனத்தின் மீது கருணாநிதிக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், தான் தாங்கிப் பிடித்திருக்கும் மத்திய அரசை வற்புறுத்தி, பயிற்சிக்காக இந்தியா வந்திருக்கும் இலங்கை விமானப் படை வீரர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் தனக்கும், தன் குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் மத்திய அரசை மிரட்டி சாதிக்கும் திறமை படைத்த கருணாநிதி, இலங்கைத் தமிழர் நலனுக்காக அவ்வாறு செயல்படாதது அவரைப் பற்றி அறிந்த எவருக்கும் வியப்பை ஏற்படுத்தாது. புலி போல் பாய வேண்டிய இந்தியப் பேரரசு சுண்டெலி போல் இலங்கை அரசிடம் பணிந்து செல்வது வருந்தத்தக்கது என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை விமானப் படை வீரர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.

12 July, 2012

"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்'’

"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்'’-என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்.  அதற்காக, குக்கிராமங் களிலும் கல்விக் கூடங்களை நிறுவச் செய்து தமிழக மக்க ளின் கல்விக் கண் திறந்த  காமராஜரை, "கருப்புக்கடவுள்' என அழைத்துவிடலாமா? முகத்துக்கு நேராக சிலர் இப்படி துதி பாடியதை உயிரோடு இருந்த காலத்திலேயே  அவர் ஏற்றுக் கொண்டதில்லை. கோயில்களுக்குச் செல் வார். பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வார். விபூதியெல்லாம் பூசிக் கொள்வார். ஆனாலும், சராசரி மனிதர்களைப்போல கடவுள் நம்பிக்கை அவரிடமிருந்து வெளிப்பட்டதில்லை. 


""விஞ்ஞான ஆராய்ச்சி வளராத காலத்தில், அறிவுக்கு எட்டாத விஷயங்களைக் கடவுள் செயல் என்று மனிதன் நம்பினான். இப்போது மனிதன், தானே சிந்தித்து பகுத்தறிவுடன் செயல் படும்போது ஏன் இன்னும் அந்த மூடநம்பிக்கை? கடவுளை நம்புகிறவர்களை விட, நம்பாதவர்கள் எந்த வகையில் தாழ்ந்தவர்கள்?'' -தந்தை பெரியா ரைப் போல இப்படி பகுத்தறிவுப் பிரச் சாரத்தில் காமராஜர் ஈடுபட்டதில்லை. அதே நேரத்தில், கடவுள் குறித்து அவருக் கென்று ஒரு பார்வை இருந்திருக்கிறது...



உலகப் படிப்பை படிக்கவேண்டும் என்பதற்காகாத்தான் தன் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தினாரோ என்னவோ? காமராஜர் படித்தது வெறும் ஆறாம் வகுப்புதான். ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதல் அமைச்சர் பதவியேற்ற அவர் தான் தலை சிறந்த தலைமைத்துவத்தை 9 ஆண்டுகளாக தமிழ் நாட்டுக்கு வழங்கினார். காமராஜர் பட்டபடிப்பு படிக்காதவராக இருந்தாலும் அவரைச்சுற்றி எப்போதும் படித்த மேதைகள் இருப்பார்கள்.
அவர் முதல் அமைச்சர் ஆன உடன் நாட்டு மக்களின் கல்வியில்தான் முதல் அக்கறை செலுத்தினார். உணவின்மையால் மாணவர்களின் கல்வி கெட்டுப்போகக்கூடாது என்பதற்காக பள்ளிகளில் இலவச உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்தார். "நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை, வரும் தலைமுறையாவது பெற்று, வளர்ந்து வாழட்டும். அன்னதானம் நமக்கு புதியது அல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்குப் போட்டோம்.
இப்போது, பள்ளிக் கூடத்தை தேடிப்போய் போடச்சொல்கிறோம். அப்படி செய்தால் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுக்கும் புண்ணியம் இரண்டும் சேரும்.......என் மனதில், எல்லோர்க்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட முக்கியமான வேலை இப்பொதைக்கு இல்லை. நான் இதையே எல்லாவற்றிலும் முக்கியமானதாகக் கருதுகிறேன். எனவே மற்ற வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, ஊர் ஊராக வந்து, பகல் உணவுத் திட்டத்திற்க்குப் பிச்சையெடுக்கச் சித்தமாக இருக்கிறேன்" என்று பேசியவர் பெருந்தலைவர்.எழுத்தறிவு இன்மையை போக்க 11 ஆம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வியை அறிமுகப்படுத்தினார். அனைத்துப் பள்ளி குழந்தைகளுக்கும் இலவச சீருடை வழங்கினார் .
அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே தன்னுடன் சேர்த்துக்கொண்டார் . அவர் முதலமைச்சர் ஆனவுடன் அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களையே அமைச்சர் ஆக்கினார். தான் முதல் அமைச்சராக இருந்த போது வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்பு சலுகைகள் தராதவர் . அவரது காலகட்டத்தில்தான் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை தமிழ் நாடு பெற்றது .தமிழுக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று கொடுத்தவர் காமராஜர். நீதி மன்றம் அரசு அலுவலகம் அனைத்திலும் தமிழை கொண்டுவந்தார்.
மூத்த தலைவர்கள் அரசியலில் பதவி வகிக்ககூடாது,பதவி விலகி கட்சி நலனுக்காக செயல்ப்பட வேண்டும் என்று கூறியதோடு நிற்காமல் தானும் பதவி விலகி முன் உதாரணமாக இருந்தார்.இரண்டு முறை பிரதமராகும் வாய்ப்பிருந்தும், லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமராக்கிய கிங்மேக்கர் அவர். சினிமா என்றால் காமராஜருக்கு எட்டிக்காய். சினிமாவில் நாம் பார்த்து ஆச்சரியப்படும் ஹீரோக்களைப் போல அல்லாமல் ரியல் ஹீரோவாக வாழ்ந்தவர் அவர்.
அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்தான். என்றைக்கும் தான் ஏழைப்பங்காளன்தான் என்பதை வாழ்நாளில் நிரூபித்துவிட்டு சென்ற உத்தமர் அவர். அவரது நீங்காத நினைவுகளை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்வதில் பெருமிதம் கொள்வோம். தமிழகத்தை ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்கள் பெருந்தலைவர் காமராஜரை கட்சி சார்பற்ற தலைவராக பார்க்காமல் அவரது பிறந்தநாளினை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.இன்றைக்கு தமிழகம் கண்டுள்ள பல வளர்ச்சிகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் இந்த கருப்புத் தங்கம்தான். நல்ல தலைவர் கிடைக்காமல் தத்தளித்து வரும் இன்றைய தமிழகத்திற்கு, உண்மையிலேயே பெரும் தலைவராக விளங்கியவர் காமராஜர் மட்டுமே. தமிழகத்தின் உண்மையான பொற்கால ஆட்சி என்றால் அது காமராஜரின் ஆட்சி மட்டுமே. மீண்டும் காமராஜரின் ஆட்சி வருமா... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அது பெரும் கனவாகவே தோன்றுகிறது..

பார்த்ததில் பிடித்தது...








LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...