|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 November, 2014

'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை'

கம்பனின் இந்த வரி மிகப் பிரபலமானது. நதியில் நீர் இல்லை என்றால் அது, நதி செய்த பிழையல்ல; மழை பெய்யாதது தான் பிழை என்பது, இதற்கு அர்த்தம். மழை பெய்தும், சென்னையில் உள்ள கோவில் குளங்கள் நிரம்பாதது யார் செய்த பிழை? குளங்களின் பிழையா அல்லது அரசு துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றாததால் ஏற்பட்ட குளறுபடிகளின் விளைவா?சென்னையில் கடந்த ஒரு மாதத்தில், 39 செ.மீ., மழை பெய்த போதும், அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்வேறு கோவில் குளங்கள் வறண்ட நிலையிலேயே காட்சியளிக்கின்றன.

தமிழகத்தில் அறநிலைய துறை கட்டுப்பாட்டில், 36,488 கோவில்கள்; 56 திருமடங்கள், அவற்றோடு இணைந்த 58 கோவில்கள்; 17 சமணர் கோவில்கள் மற்றும் அறக்கட்டளைகள் உள்ளன.இக்கட்டடங்களிலும், கோவில் குளங்களிலும் மழை நீர் சேகரிப்புத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த அறநிலைய துறை முடிவு செய்தது.இதன்படி, முதல்கட்டமாக, நிதி வசதி கொண்ட, 4,500 கோவில்கள், அவற்றுக்கு சொந்தமான கோவில் குளங்கள், அவற்றுடன் இணைந்த, பிற நிர்வாக பயன்பாட்டுக்கான கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான திட்டத்தை அறநிலைய துறை, கடந்த ஜூன் மாதம் துவக்கியது.

இந்த திட்டத்தில், ஒவ்வொரு கோவிலுக்கும், 4,000 முதல், 20,000 ரூபாய் வரை, செலவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி தமிழகத்தில் பெரும்பாலான பெரிய கோவில்களில் மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டதாக அறநிலைய துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மழை

இந்த நிலையில், இந்த ஆண்டு வழக்கத்தைவிட, இரு நாட்கள் முன்னதாக வடகிழக்கு பருவமழை துவங்கியது. அக்.,18ம் தேதி, வடகிழக்கு பருவமழை துவங்கினாலும், அக்டோபர் மாதத்தில் மட்டும் 39 செ.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட, 53 சதவீதம் அதிகம். இதில், வடகிழக்கு பருவமழை துவங்கியபின் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் தொடர்ச்சியாக, 18 செ.மீ. மழை பதிவானது. இந்த மழையால், தாழ்வான பகுதிகள் மட்டுமல்லாது சமவெளியான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. ஆனால், 20 முதல், 25 அடி வரை ஆழம் உள்ள கோவில் குளங்கள் மட்டும் இந்த மழைக்கு பின்னும் வறண்டு கிடப்பது பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில்...

சென்னையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோவில், நுங்கம்பாக்கம் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், மேற்கு மாம்பலம் கோதண்ட ராமர் கோவில் என ஏராளமாக கோவில்களில் மிகப்பெரிய அளவில் குளங்கள் உள்ளன. இவை அனைத்திலும் மழைநீர் சேகரிப்புக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறநிலைய துறை கூறுகிறது.ஆனால், கடந்த ஒரு மாத்தில் பெய்த மழையில், ஓரளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ள குகுளங்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் இன்னமும் வறண்ட நிலையிலேயே காட்சியளிக்கின்றன.

காரணம் என்ன?

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத கோவில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:அறநிலைய துறை உத்தரவுப்படி, மழைநீர் சேகரிப்பு வசதிகள் செய்த பின்னும், கோவில் குளங்கள் வறண்டு இருப்பது பலருக்கும் புதிராக உள்ளது. கோவில்களில் விழும் மழைநீர், வீணாக வெளியில் செல்லாமல் தடுக்கப்பட்டு, ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகளில் விடப்பட்டுள்ளன. இந்த தொட்டிகளில் விழும் நீர் பல்வேறு கட்டத்துக்கு பின், குழாய் வழியாக குளத்துக்கு சென்று சேரும் வகையில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு கோவில் குளம் உள்ள பகுதியிலும், அக்கம்பக்கத்தில் பெய்யும் மழைநீர் அதற்கான மழைநீர் வடிகால்கள் வாயிலாக, குளங்களுக்கு வருவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், சமீபகாலமாக, சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால்களில், கழிவுநீர் கலப்பதால், அந்த நீர் நேரடியாக குளத்துக்கு வருவது தடுக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழைநீர், குளங்களுக்கு வராததற்கு, இதுவும் ஒரு காரணம்.

தற்போது துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழை முடியும்போது குளங்களில் கணிசமாக தண்ணீர் தேங்கும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத நிலத்தடி நீர்வள துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

* கோவில் குளங்களை துார்வாருவதில், இயற்கைக்கு உகந்த வழிமுறைகளை கடைப்பிடிக்காமல், மனம் போன போக்கில் இயந்திரங்களை பயன்படுத்தி துார்வாருவது

* கோவில் குளங்களுக்கு வந்து சேரும் மழைநீர் வடிகால்களை, மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காதது

* மழைநீர் வடிகாலில், கழிவுநீரை விடக் கூடாது; குப்பையை கொட்டக்கூடாது என்ற விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இல்லாதது

* அறநிலைய துறை, கோவில் குளங்களுக்கு சுற்றுச்சுவர் கட்டி, முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட காரணங்களால், கோவில் குளங்கள் வறண்டு கிடக்கின்றன.

* அறநிலைய துறை மட்டுமல்லாது, நீர்வள ஆதார துறை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், ஆகியவை கூட்டாக செயல்பட்டால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

கோவில் குளங்களில் தண்ணீர் தேங்கினால் தான், அதன் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...