|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 December, 2016

ஊத்திய மூடிய உண்மைகள்!


ஏன், யார் என்ற எந்த மர்ம முடிச்சுக்களும் அவிழாமலேயே ஊத்தி மூடப்பட்டது ஐடி பொறியாளர் சுவாதி கொலை வழக்கு. கொலை என்றால் சாதாரண கொலை அல்ல. பட்டப் பகலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த ரயில் நிலையத்தில் கொத்தி எடுக்கப்பட்டது சுவாதியின் உடல். ரத்த வெள்ளத்தில் கிடந்த சுவாதியை சடலமாக ரயில்வே போலீசார் மீட்டனர். அந்த கொலை ஏன் செய்யப்பட்டது? யார் செய்தார்கள்? என்ற எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்காமலேயே ஊத்தி மூடப்பட்டுவிட்டது இந்த 2016 ஆண்டின் மிகப் பெரிய துயரம். சென்னை சூளைமேடு, கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுவாதி. ஐடி பொறியாளரான இவர் இன்போசிஸ் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். எப்போதும் போல் செங்கல்பட்டு பரனூரில் உள்ள அலுவலகம் செல்ல காலை 6 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த யாரோ ஒரு மர்ம நபர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் சில மணி நேரங்கள் கிடந்த சுவாதியின் உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினார்கள். ஆனால், விசாரணையில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டதாலும், கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க ரயில்வே போலீசார் தாமதம் செய்து வந்ததாலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் சுவாதி கொலை வழக்கு விசாரணை மாநில காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, அதிரடியாக விசாரணையை தமிழக போலீசார் மேற்கொண்டாலும் கொலைக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்குள் பல்வேறு யூகங்களும் கட்டுக் கதைகளும் சுவாதி பற்றி உலா வரத் தொடங்கின. சுவாதியை யாரோ ஒருதலையாக காதல் செய்ததாகவும், அதனை சுவாதி ஏற்றுக் கொள்ளாததால் கொலை செய்து விட்டதாகவும் வதந்திகள் பரவின.

இதற்கிடையே, பழைய நடிகர் ஓய். ஜி. மகேந்திரன், சுவாதி என்ற பிராமணப் பெண்ணை பிலால் மாலிக் என்ற மிருகம் கொன்றுவிட்டதாகவும், கொலையுண்டவர் பிராமணப் பெண் என்பதால் தமிழகத்தில் மயான அமைதி நிலவுவதாகவும் டுவிட்டரில் பதிவிட்டு குட்டையை குழப்பினார். அதற்கு கடுமையான எதிர்ப்பு வரவே தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்தப் பதிவை நீக்கியதோடு, மன்னிப்பும் கேட்டார் ஒய்.ஜி. மகேந்திரன். இப்படியே போன கொலை வழக்கில் திக்குத் தெரியாமல் திணறிக் கொண்டிருந்த தமிழக போலீஸ், அதிரடியாக நெல்லை மாவட்டம் மீனாட்சி புரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர்தான் குற்றவாளி என்று அவருடைய புகைப்படத்தை வெளியிட்டது. பின்னர், அவரது வீட்டிலேயே வைத்து அவரை கைது செய்தது. கைது செய்த போது ராம்குமார் கழுத்தை அறுத்துக் கொண்டதாக கூறி போலீசார் ராயப்பேட்டை மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ராம்குமார்.


சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி என்று கூறி கைது செய்யப்பட்ட ராம்குமார், தான் இந்தக் குற்றத்தை செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். போலீசார் ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர், மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், புழல் சிறையில் இருந்த ராம்குமார் செப்டம்பர் மாதம் 18ம் தேதி திடீரென மின்சார கம்பியை வாயில் கடித்து தற்கொலைக்கு முயன்றார் என்று கூறி பின்னர் மரணம் அடைந்தார் என்று போலீசார் அறிவித்தனர். இரும்பு மனிஷி என்று சொல்லப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந்த சிறைத் துறையின் கீழ் கடும் கட்டுப்பாடும், பலத்த பாதுகாப்பும் உள்ள புழல் சிறையில், ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது நகைப்புக்குரியதாகவும், பொருமலுக்குரியதாகவும் சமூக ஆர்வலர்களால் பார்க்கப்பட்டது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராம்குமாரின் மர்ம மரணம் பல கேள்விகளையும் இந்த சமூகத்தின் முன் எழுப்பியது. அவரது தந்தையும், ராம்குமாரின் மரணத்தில் உள்ள உண்மையை வெளி கொண்டு வர சட்டப் போராட்டத்தையும் நடத்தினார் . எதுவும் பயன்தரவில்லை.சுவாதி கொலைக்கும், அவரை கொலை செய்தவர் இவர்தான் என்று போலீசாரால் கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ராம்குமாரின் மர்ம மரணத்திற்கும் யார் பொறுப்பாளி என்பது இன்னும் தெரியவில்லை. இனியும் தெரியப் போவதில்லை. இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடந்திருக்குமானால் சுவாதியைக் கொன்ற உண்மைக் குற்றவாளி யார் என்பது உலகிற்கு தெரிய வந்திருக்கும். ஆனால் ராம்குமாரின் மர்ம மரணம் அதனை வெளிக் கொண்டு வர முடியாமல் செய்து விட்டது. இதற்கு யார் பொறுப்பேற்பது? மர்மமான முறையில், நடைபெற்ற இந்த மரணங்கள் இந்த ஆண்டு மிக அதிகமாக பத்திரிகை மற்றும் ஊடகங்களாலும், பொதுமக்களாலும் விவாதிக்கப்பட்ட இரு உயிர் பலிகளாகும்.


09 December, 2016

சசிகலாவுக்காக கச்சை கட்டும் ஊடகங்கள்.. விஜயகாந்த் துப்பியதில் தப்பே இல்லை!


அஇஅதிமுக பொதுச் செயலாளராக சசிகலா வரவேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டில் சில முன்னணி ஊடகங்கள் ஓவர் டைம் வேலை பார்க்க ஆரம்பித்து விட்டன. இந்த 'திருப்பணியை' நாளிதழ்கள், வாரமிருமுறை வரும் இதழ்கள் மற்றும் தொலைக் காட்சிகள் என்று ஜனநாயகத்தின் நான்காம் தூணின் பல தரப்பினரும் செய்யத் துவங்கி விட்டன. ஜெயலலிதா வின் மறைவுக்குப் பின்னர் சசிகலா வெளிப்படையாகவே தன்னுடைய அதிகாரத்தை காட்டத் துவங்கியிருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். குறிப்பாக ஜெ வின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த போது அங்கு நீக்கமற நின்றிருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் தெளிவாகவே ஒரு செய்தியை மக்களுக்கு உணரத்தி விட்டார்கள். இனிமேல் தமிழ் நாட்டில் அதிகாரம் யார் கையில் என்பதை அவர்கள் ஜெ உடல் வைக்கப் பட்டிருந்த அந்த 12 மணி நேரத்தில் நேர்த்தியாக வெளியுலகிற்கு காட்டி விட்டார்கள்.

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவர் முன் தலை காட்ட முடியாமல் இருந்த நடராஜன் ராஜாஜி ஹாலில் முதலில் தூணுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார். பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி வந்த போது வெளிப்படையாகவே வெளியில் வந்தார். அவரை மோடிக்கும், ராகுலுக்கும் அங்கிருந்தவர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அதே போலத்தான் சசிகலாவின் தம்பி திவாகரன். இவரும் ஜெ வால் ஓரங் கட்டப்பட்டிருந்தவர். நடராசன் மற்றும் திவாகரன் மீது 2011 - 2016 ஆட்சிக் காலத்தில் திரும்பத் திரும்ப நில அபகரிப்பு வழக்குகளை போட்டு பல முறை சிறையில் தள்ளியவர்தான் முதலமைச்சர் ஜெயலலிதா. இருவர் மீதும் பல நில அபகரிப்பு வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருந்து கொண்டிருக்கின்றன. இதே போலத்தான் சசிகலா வின் வேறு பல உறவினர்கள் மீதும் வழக்குகள் தொடர்ச்சியாக போடப்பட்டன. இன்று கிட்டத்தட்ட அவர்கள் எல்லோருமே வெளிப்படையாகவே போயஸ் தோட்டத்தில் உலா வரத் துவங்கி விட்டனர்.
நாடு விடுதலை அடைந்து இந்த 69 ஆண்டு காலத்தில் பதவியிலிருக்கும் போது ஒரு முதலமைச்சர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டது தமிழ் நாட்டில்தான். 2014 செப்டம்பர் 27 ல் இது நடந்தது. ஜெ வைத் தவிர தண்டிக்கப்பட்ட மற்ற மூவர் சசிகலா மற்றும் அவரது உறவினர்களான சுதாகரன், இளவரசி. ஆகவே ஏக இந்தியாவிலும் இல்லாத விதமாக செந்தமிழ் நாட்டுக்கு இந்த அளப்பரிய பெருமையை தேடித்தந்ததில் நால்வரில் மூவர் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள். நாட்டைக் காக்கும் களப் போரில் விழுப்புண்களை ஏந்திய, வலுவான தியாகப் பின்புலத்தை கொண்ட, இத்தகைய ஒருவரைத்தான் இன்று தமிழ் நாட்டு ஊடகங்களின் ஒரு தரப்பினர் ஆதரிக்கின்றன. அவரை அசுர பலங் கொண்ட ஆளும் அஇஅதிமுக வின் பொதுச் செயலாளர் பதவியில் உட்கார வைப்பதற்கு கச்சைக் கட்டிக் கொண்டு களத்தில் நின்று கொண்டிருக்கின்றன. நீதிபதி மைக்கேல் ஜான் டீ குன்ஹா வின் தீர்ப்பை ஊன்றிப் படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரியும். 66 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட அந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ குற்றவாளி என்று தீர்ப்பு உருவாவதற்கு இந்த மூவரும் செய்த காரியங்கள்தான் முக்கியமான காரணிகளாக இருந்திருக்கின்றனர். 1988 ம் ஆண்டு ஊழல் வழக்கு சட்டத்தின்படி இந்த வழக்கு நடத்துப்பட்டது. இந்த சட்டம் தெளிவாகவே ஒன்றைக் கூறுகிறது. அரசு ஊழியராக, அதாவது பொது ஊழியராக இருக்கும் ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்ப்பது எவ்வளவு குற்றமோ அதற்கிணையான குற்றம்தான் அதற்கு துணை போகுபவர்கள் செய்யும் குற்றமும். அதனால்தான் ஜெ உடன் சேர்த்து மற்ற மூவருக்கும் நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாததற்காக ஜெ மீது போடப்பட்ட வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்தான் சசிகலா.
1996 ல் ஜெ தோற்ற பின்னர் முதலில் கைதானது சசிகலாதான். அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கைதாகி 1996 ஜூன் முதல் 1997 ஏப்ரல் வரையில் 10 மாதங்கள் சிறையில் இருந்தவர். மத்திய அரசின் அமலாக்கப் பிரிவால் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. ஒவ்வோர் வழக்கிற்கும் உச்ச நீதி மன்றத்திற்கு போய் தடை வாங்கினார்கள். எல்லா வழக்குகளும் அப்படியே அமுங்கிப் போயின. சில வழக்குகள் இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் நின்று கொண்டிருக்கின்றன. 2011 டிசம்பர் 19 ம் தேதி சசிகலா, நடராஜன் உள்ளிட்ட அவரது பல உறவினர்கள் அஇஅதிமுக விலிருந்து நீக்கப்பட்டனர். இவர்களுடன் கட்சிக்காரர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாதென்று ஜெ வே வெளிப்படையாகவே அறிவித்தார். ஆனால் நான்கரை மாதங்களில் சசிகலா மட்டும் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 2012 ஏப்ரல் 1 ம் தேதி மீண்டும் ஜெ உடன் சேர்ந்தார். அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு சசிகலா எழுதிய ஒரு கடிதத்தில் 'எனக்குத் தெரியாமல் என்னுடைய உறவினர்கள் சிலர் துரோகம் செய்து விட்டனர். அவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். இனிமேல் அவர்களுடன் எனக்கு எந்த உறவும் கிடையாது. என் வாழ்வை நான் அக்காவுக்கு முற்றிலுமாக அர்ப்பணித்து விட்டேன்' என்று கூறியிருந்தார்.

இந்தக் கடிதம் எல்லா ஊடகங்களிலும் வந்து, இன்று பொது வெளியில் உள்ளது. தற்போது சசிகலாவுக்காக வெண் சாமரம் வீசிக் கொண்டு, அவருக்கு ஆதரவாக தார, தப்பட்டையுடன் கிளம்பி வந்துக் கொண்டிருக்கும் ஊடகங்கள் இந்த கடிதத்தைப் பற்றியும் சற்றே பிரஸ்தாபித்தால் அது நன்றாக இருக்கும். நாட்டின் சுதந்திர வேள்வியில் முக்கிய பங்காற்றிய அந்த நாளிதழ் சசிகலாதான் ஆளுங்கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக வேண்டும் என்று தலையங்கம் எழுதுகிறது. நிச்சயமாக அந்த நாளிதழுக்காக தங்கள் உதிரம் சிந்திய அதனுடைய முன்னாள் ஆசிரியர்கள் தங்களுடைய கல்லரையில் புரண்டு கொண்டிருப்பார்கள். மற்றோர் நாளிதழ் ஜெ வின் கடைசி நிமிடங்களில் சசிகலா எப்படித் துடித்தார் என்று அப்பல்லோவில் அருகில் இருந்து பார்த்தது போல சித்தரிக்கிறது. இன்னுமோர் வாரமிருமுறை இதழ் கடந்த 34 ஆண்டுகளில் ஜெ வுக்காக சசி எப்படியெல்லாம் துன்பங்களை அனுபவித்தார் என்று காவியம் படைக்கிறது. மற்றுமோர் காட்சி ஊடகம், முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை சசிகலாவுக்குக் கொடுக்கிறது. இதுவரையில் எந்த முதலமைச்சரையும் இந்தளவுக்கு அந்த காட்சி ஊடகம் இருட்டிப்பு செய்தது இல்லை. தற்பொழுது செய்கிறது. அண்ணா திமுக வில் யார் பொதுச் செயலாளாக வர வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது அந்தக் கட்சியும், அதனது தொண்டர்களும்தான். ஒருவேளை சசிகலாவே பொதுச் செயலாளராக வந்தால் அப்போது அதனை ஆதரிக்கவும், எதிர்க்கவும் ஊடகங்களுக்கு எல்லா உரிமையும் உண்டுதான். ஆனால் அதற்கு முன்பே சசிகலாவை செல்வாக்கு மிக்க கட்சிப் பதவியில் அமர்த்தும் காரியத்தில், கூச்ச நாச்சமில்லாமல் ஈடுபடுவதும், எழுதுவதும், அதற்காக லாபி செய்வதும், பொதுக் கருத்தை ஏற்படுத்த முயற்சிப்பதும் அருவருப்பான காரியங்கள். இது குறைந்த பட்ச பத்திரிகை தர்மம், நேர்மை இல்லாத காரியமாகும். இதற்குப் பெயர்தான் பெயிட் நியூஸ் .... அதாவது காசு வாங்கிக் கொண்டு எழுதுவது, கூவுவது!

இரண்டாண்டுகளுக்கு முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஊடகவியலாளர்களைப் பார்த்து 'ஒரு காரியத்தை'ச் செய்தார். விஜயகாந்த் அப்படிச் செய்தது சரியானதுதான் என்ற கருத்தை 90 சதவிகித மக்களிடம் ஏற்படுத்தும் காரியத்தைத்தான் சசிகலா விவகாரத்தில் சில ஊடகங்கள் இன்று செய்து கொண்டிருக்கின்றன .... இதுதான் உண்மை!
                                                                                    
                                                                                             நன்றி  தட்ஸ்தமிழ். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...