|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 December, 2011

யாரு மாக்கான் ? ஊருக்கு நாலு பேரு (O4P)

கலக்கலான இளமை துள்ள ஒரு விழிப்புணர்வு படம். நன்றி கணேஷ் குமார் மோகன்.  நம்பள மாக்கான்னு நினைச்சு கும்பல் கும்பலா சுத்துனாங்க கூட இருந்தவன் எல்லாம் 6,500 ருபாய் கட்டுனாங்க, US வந்தும் துரத்துனாங்க..நாம யாரு? .அவங்களுக்கு எல்லாம் இப்படம் சமர்ப்பணம்...



ஊரை மொத்தமாக கொள்ளை அடிபவனை எல்லாம் விட்டுவிடுவார்கள் ஒரு தங்க நகையை திருடியவனை பாவம்...


பார்த்ததில் பிடித்தது ..!

முல்லை பெரியாருக்காக தனியாய் போராடும் திருமா... 


திருக்கார்த்திகையில் தீபம் ஏற்றுவதன் சிறப்பு ...

திருக்கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபங்களை யார் பார்த்தாலும், ஏன்....விலங்குகள் பார்த்தாலும் கூட அவைகளுக்கு நீண்ட ஆயுள் உண்டாகும் என்பது ஐதீகம். கார்த்திகை தீபத் திருநாள் அன்று 60 வயது நிரம்பிய சுமங்கலிப் பெண்ணைக் கொண்டு தீபம் ஏற்றி, அதிலிருந்து 6 தீபங்கள் சுமங்கலிப் பெண்கள் ஏற்ற வேண்டும். அவர்கள் ஏற்றும் தீபங்களில் இருந்து ஆறு, ஆறாக பசுநெய் விளக்குகளை ஏற்றி வீட்டை அலங்கரித்தால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலித்துவ வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. வடமாநிலங்களில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று பெண்கள் தீபம்ஏற்றி, அதை இலையில் வைத்து ஆற்றில் விடும் வழக்கம் உள்ளது. இப்படிச் செய்தால், தங்கள் உடன் பிறந்தவர்கள் நீண்ட ஆயுள் பெறுவார்கள் என்று நம்புகிறார்கள்.

2012 முதல் எம்.பி.ஏ. சேர்க்கைக்கு சிமேட் அவசியம்..


2012ம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள அனைத்து மேலாண்மைக் கல்வி மையங்களிலும் எம்.பி.ஏ. சேர்க்கைக்கு காமன் மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் எனப்படும் சிமேட் தேர்வு அவசியமாக்கப்படும் என்று ஏஐசிடிஇ தலைவர் மந்தா தெரிவித்துள்ளார். அடுத்த கல்வியாண்டில் இருந்து அனைத்து கல்வி நிறுவனங்களிலும் எம்.பி.ஏ. சேர்க்கை சிமேட் நுழைவுத் தேர்வை அடிப்படையாக வைத்தே நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை நிராகரிப்பதற்கு கல்வி நிறுவனங்களுக்கோ, மாநிலங்களுக்கோ எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை. ஏஐசிடிஇ-யினால் சிமேட் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுவதால், அனைத்துக் கல்லூரிகளும் இதனை பொதுவானதாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தனித்தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல் இதனால் தீர்வு பெறும்.
பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் பங்குபெற மாணவர்கள் உழைப்பையும், ஏராளமான பணத்தையும் செலவிட வேண்டியுள்ளது. சிமேட் தேர்வினால் இந்த நிலை முடிவுக்கு வருகிறது என்று மந்தா தெரிவித்துள்ளார். சிமேட் தேர்வு இந்தியாவில் உள்ள 62 மையங்களில் நடைபெறுகிறது. சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர். 100 மதிப்பெண்களைக் கொண்ட இந்த தேர்வில் 4 பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 25 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
மேலும், எம்.பி.ஏ., பொறியியல், பார்மசி, எம்.சி.ஏ. போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர்களை சேர்க்கும் சேர்க்கை முறை முழுமையையும் ஏஐசிடிஇ தலைமை ஏற்று நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இதனால் நுழைவுத் தேர்வுக்குப் பிறகு நடைபெறும் நேர்காணல் போன்றவற்றில் முறைகேடுகள் நடைபெறாமல் தவிர்க்கலாம்.புதிய கல்லூரிகளுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கும் காலம் அக்டோபர் 6ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரையிலும், அனுமதி அளிப்பது மார்ச் 31ம் தேதி வரையிலும் முடிந்துவிட்டால், ஏப்ரல் மாதத்தில் புதிய கல்லூரிகள் சேர்க்கை துவங்க சரியாக இருக்கும். இதனால் மாணவ சேர்க்கையும் எளிதாக நடைபெறும். ஆனால் தற்போதோ, சில கல்லூரிகள் ஜுன், ஜுலை மாதங்களில் அனுமதி பெறுகின்றன. அப்போது மாணவ சேர்க்கை துவங்கிவிடுகிறது. அதன் பிறகு அந்த கல்லூரிகளில் மாணவ சேர்க்கையை நடத்துவது மிகவும் சிரமத்திற்குள்ளாகிறது என்று மந்தா கூறினார்.

தலிபான் அமைப்பிற்கு நன்றி அமைச்சர் ரெஹ்மான் மாலிக்...

பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி வருகிறது என்று சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும் வேளையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக், தலிபான் அமைப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொகரம் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஷியா முஸ்லீம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. தலிபான் தலைமையிலான பயங்கரவாத அமைப்பு, இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கூறியதாவது, பாகிஸ்தானில் மொகரம் பண்டிகை அமைதியாக நடைபெற்றது. இதற்கு, தலிபான் பயங்கரவாத அமைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். பயங்கரவாதிகளும், மதச் சடங்குகளை கடைப்பிடித்து வருவது இதன்மூலம் நிரூபணமாகி உள்ளது. அவர்கள் (பயங்கரவாதிகள்) தீவிரவாத செயலை கைவிட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட முன்வரவேண்டும் என்று அவர் பயங்கரவாதிகளுக்கு கோரிக்கை விடு‌த்துள்ளார்.

கள்ளக்காதலன், அக்காளுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி!



சென்னை அருகே உள்ள மாங்காடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 42) லாரி டிரைவர். இவரது மனைவி மீனாட்சி (36). இவர்களுக்கு அப்பு (13), என்ற மகனும் அம்மு (12), என்ற மகளும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ராயப்பனும், மீனாட்சியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 1 1/2 ஆண்டுக்கு முன்னர் ராயப்பன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். நேற்று மாலையில் ராயப்பன், திருவேற்காட்டில் வசித்து வரும் மீனாட்சியின் அக்காள் விஜயாவின் வீட்டுக்கு இரவு 7.30 மணியளவில் சென்று ராயப்பன் அங்கு படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவு 2 மணி அளவில் பார்த்த போது ராயப்பன் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்படடு கிடந்தார்.  
 
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவேற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜயாவிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர், 6 பேர் கொண்ட கும்பல் ராயப்பனை கொலை செய்து விட்டு தப்பி சென்றதாக கூறினார். இதனை நம்பாத போலீசார் விஜயாவையும் ராயப்பனின் மனைவி மீனாட்சியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.  
 
அப்போது கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வரும் கள்ளக்காதலன் லட்சுமணன், அக்காள் விஜயா ஆகியோருடன் சேர்ந்த ராயப்பனை மீனாட்சியே தீர்த்துக் கட்டியிருப்பது தெரிய வந்தது.ராயப்பன் அக்காள் வீட்டுக்கு வந்த தகவல் கிடைத்ததும் மீனாட்சி, லட்சமணனுடன் அங்கு சென்று, ராயப்பனை கழுத்தை அறுத்து கொன்றுள்ளார். இதையடுத்து மீனாட்சி, விஜயா, லட்சமணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மீனாட்சி போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்கு மூலம் வருமாறு:   
 
நானும் ராயப்பனும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, எங்களது குடும்ப வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. 1 1/2 ஆண்டுகளுக்கு முன்னர் எனது கணவர் என்னையும், மகன்களையும் தவிக்க விட்டு விட்டு எங்கோ சென்று விட்டார். இதன் பிறகே எனது வாழ்க்கை திசைமாறியது.கோயம்பேட்டை சேர்ந்த லட்சுமணன் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரது சொந்த ஊர் திண்டுக்கல். எப்போதாவது ஊருக்கு செல்லும் அவர் இங்கு அடிக்கடி வந்து செல்ல தொடங்கினார். 4 மாதங்களுக்கு முன்பு திரும்பி வந்த எனது கணவர், லட்சுமணனுடனான தொடர்பை துண்டிக்குமாறு என்னிடம் கூறினார். லட்சுமணனுடன் ஏற்பட்ட தொடர்பை துண்டிக்க முடியாத நான் எனது கணவர் ராயப்பனை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன்.
 
நேற்று இரவு எனது அக்காள் விஜயா எனக்கு போன் செய்து கணவர் ராயப்பன் வந்திருப்பதாக கூறினார். நான் லட்சுமணனுடன் அங்கு சென்றேன். போகும் போது புதிதாக கத்தி ஒன்றை வாங்கினேன். விஜயாவின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராயப்பனை 3 பேரும் சேர்ந்து முதலில் உருட்டுக்கட்டையால் தாக்கினோம். பின்னர் ராயப்பனின் கழுத்தை அறுத்து நான் கொலை செய்தேன். கொலை பழியில் இருந்து தப்பிப்பதற்காக 3 பேரும் சேர்ந்து மர்ம கும்பல் கொன்று விட்டதாக நாடகம் ஆடினோம். இவ்வாறு மீனாட்சி வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீசார் 
 

கள்ளத் தொடர்பால் விபரீதம் எங்கே செல்லும் தமிழகம்?

இளம்பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால், மாடியிலிருந்து குதித்த பீகார் வாலிபர், தலையில் அடிபட்டு இறந்தார்.பீகாரை சேர்ந்தவர் நாராயண திவாரி,30, இவர், எருக்கஞ்சேரியில் வீடு எடுத்து, தனியாக வசித்து வந்தார். தண்டையார்பேட்டையில், சுந்தரம்பிள்ளை தெருவில், ஸ்டீல் நிறுவனத்தில் லோடுமேனாக பணிபுரியும் நாராயண திவாரிக்கும், அப்பகுதியில் வசிக்கும் திருமணமான இளம்பெண் ஒருவருக்கும் தொடர்பு இருந்தது. இது, அப்பெண்ணின் கணவனுக்கு தெரிந்ததும், மனைவியை அடித்து உதைத்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, அப்பெண்ணின் வீட்டிற்கு நாராயண திவாரி சென்றார். இதையறிந்த அப்பெண்ணின் கணவன், உறவினர்களுடன் வீட்டை முற்றுகையிட்டார்.இதனால், பயந்துபோன நாராயண திவாரி, அவர்களிடமிருந்து தப்பிக்க, மொட்டை மாடியிலிருந்து குதித்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து, ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.  

பள்ளி மாணவியுடன் விஷம் குடித்த டிரைவர் சாவு...


சேலம் ஓமலூர் அருகே உள்ள மூங்கில்பாடியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணபதி (வயது 30). இவருக்கு லலிதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். சேலம் 4 ரோடு அருகே உள்ள ஒரு பள்ளியில் வேன் டிரைவராக கணபதி பணியாற்றி வந்தார்.  இவர் தினமும் காலை வேளையில் பள்ளிக்கு வேன் மூலம் மாணவிகளை அழைத்து வந்து விட்டு, பள்ளி முடிந்ததும் மாலையில் வீட்டிற்கு கொண்டு விடுவார். அப்போது சேலம் செங்கரட்டை சேர்ந்த மாணவி செல்வி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) கணபதி டிரைவராக உள்ள வேனில் பள்ளிக்கு சென்று வந்தார். 9ம் வகுப்பு படித்து வந்த செல்வியும், கணபதியும் தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் முதலில் நட்பாக பழகிய அவர்களுக்குள் பின்னர் காதல் மலர்ந்தது.

மனைவி, குழந்தைகள் உள்ள நிலையில் அதனை மறந்த கணபதிக்கு மாணவி செல்வியுடன் உள்ள தொடர்பு புதிய மகிழ்ச்சியை தந்தது. இந்த நிலையில் அவர்களுக்குள் உள்ள முறைகேடான கள்ளக்காதல் பலருக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கள்ளக் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டனர். அதன்படி நேற்று நள்ளிரவு செல்வி பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி கணபதியை ரகசியமாக சந்தித்தார்.பின்னர் கள்ளக்காதல் ஜோடிகள் அந்த பகுதியில் உள்ள மஞ்சள் காட்டு பகுதிக்கு சென்று உள்ளனர். இதற்கிடையே காலை வேளையில் அந்த பகுதிக்கு வந்தவர்கள் கணபதி,செல்வி ஆகியோர் மயங்கி கிடப்பதை பார்த்தனர். உடனடியாக அவர்களை சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவர்களை பரிசோதித்த டாக்டர் கணபதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். மேலும் ஆபத்தான நிலையில் உள்ள மாணவி செல்விக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பற்றி ஓமலூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மார்பில் குத்திய கத்தியுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த பெண்...


கரூர் மாவட்டம் மாயனூரை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி தங்கம் (35). இருவரும் கரூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைலஸ் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மனைவி தங்கத்தின் நடத்தையில் ரெங்கநாதன் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் கணவன்  மனேவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வேலை முடிந்து தங்கம் ரோட்டில் நடந்து வந்து கொண்டு இருந்தார்.அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த ரெங்கநாதன், திடீரென தான் வைத்திருந்த கத்தியால் தங்கத்தின் மார்பில் குத்தினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மார்பில் குத்திய கத்தியதில் தங்கம் வலி தாங்க முடியாமல் அலறினார். இருப்பினும் மார்பில் குத்திய கத்தியுடன் கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தங்கம் நடந்து சென்றார். ரத்தம் சொட்ட சொட்ட கத்திக்குத்து காயத்துடன் தங்கம் வந்ததால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் டாக்டர்கள் , அவருக்கு சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் பொலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

முல்லைப் பெரியாறு அணை காக்க வைகோ விழிப்புணர்வு பிரச்சாரம்!

கேரள அரசு முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக தேவையற்ற வதந்திகளை பரப்பி வருகிறது. கேரளாவின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் பெரியாறு அணை உடையும் வகையில் உள்ள குறும்படம் 5 லட்சம் சி.டி.க்களை தயாரித்து கேரளாவில் வினியோகித்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக அணை உடைந்து விடும் என்பதை மேலும் நம்பும் வகையில் டேம் 999 என்ற திரைப்படத்தை கேரள அரசின் நிதி உதவியோடு கேரளாவில் உள்ள பணக்காரர்களின் தூண்டுதலோடு அக்கிரமமான நோக்கத்தை சித்தரிக்கும் வகையில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. அந்த படத்தை தமிழகத்தில் திரையிட முடிவு செய்தார்கள். சென்னையில் 10 தியேட்டர்களில் இந்த படத்தை வெளியிட இருந்தது. இதையடுத்து நான் தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் மூலம் இந்த படத்தை திரையிட வேண்டாம் என்று எழுதினேன். அதன் பயனாக டேம் 999 படத்தை வெளியிடமாட்டோம் என்று அவர்கள் என்னிடம் உறுதி அளித்தனர். மேலும் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக வருகிற 15 ந்தேதி அவர்கள் ஒரு நாள் திரையரங்கு மூடப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள். இதற்காக நான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கேரள முதல்வர் உம்மன் சாண்டியும், முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனும் நேற்று ஒரு கூட்டத்தை கூட்டி அணையில் 120 அடி தண்ணீர் தேக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். பெரியாறு அணையை உடைக்க ரூ.40 கோடியும், புதிய அணை கட்ட ரூ.600 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கேரள அமைச்சர் ஜோசப் சொல்கிறார்.

இந்திய வரைபடத்தில் கேரள இருக்கிறதா? என அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். நாளைய தினம் கம்பத்தில் எனது தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தேன். அங்கு தற்போது தடை உத்தரவு உள்ளதால் தேனியில் உண்ணாவிரதம் நாளை நடைபெறும். முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய போலீசாரை நிறுத்த பிரதமரை சந்தித்து வற்புறுத்தி உள்ளேன். கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதை தமிழக மக்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள். 7 ரிக்டர் அளவில் பூகம்பம் வந்தாலும் பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படாது. பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் தமிழர்கள் வெகுண்டு எழுவார்கள். பெரியாறு அணை குறித்து கேரள அரசியல் கட்சிகள் பீதியை கிளப்பி வருகிறார்கள். ஆனால் தமிழக கட்சிகள் பொறுப்புடன் செயல்பட்டு வருகின்றன. முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும் பேச்சுக்கே இடமில்லை. தமிழகமும் அனுமதிக்காது. கேரளாவுக்கு எதிராக பொருளாதார முற்றுகைக் கும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

வயிறு கோளாறுகளை தீர்க்கும் மெருகன் கிழங்கு...


இன்றைய உணவுப்பழக்கத்தினால் எண்ணற்றோர் இதயநோய், நீரிழிவு, புற்றுநோய் போன்ற வற்றினாலும், வயிறு தொடர்புடைய நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கையே எண்ணற்ற மருந்துகளை உற்பத்தி செய்து அளிக்கிறது. காட்டுப்பகுதிகளில் செழித்து வளர்ந்திருக்கும் மெருகன் கிழங்கு சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்றது அல்ல என்றாலும் சித்தமருத்துவதில் அதிக அளவு பயன்படுகிறது. இது உடல்சூடு, வயிற்றுவலி, மூலம் உள்ளிட்ட எண்ணற்ற நோய்களை போக்க வல்லது. இதனை சூரணமாகவோ, லேகியமாகவோ, தயாரித்து சாப்பிடலாம். இதற்கு உலக்கை, முசலம், கந்த புட்வி, என்ற பெயர்களும் உண்டு. இதனை வெருகன் கிழங்கு என்று அழைப்பர்.

உடல்சூடு தணிக்கும் வெருகன் கிழங்கை சுத்தம் செய்து துண்டுகளாக்கி, நன்கு காயவைத்து இடித்து பொடியாக்கிச் சலித்து சூரணமாகத் தயாரிக்கலாம். அதிகமாக உடல் சூடு உள்ளவர்கள் இந்த தூளை பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டையும் சேர்த்து சாப்பிடலாம்.

மூலநோய்க்கு மருந்து வெருகன் கிழங்கு தூளை சிறிதளவு வாயில் போட்டு வெந்நீர் அருந்த வேண்டும். இதுஅனைத்து வகை மூல நோய்களையும் குணமாக்க வல்லது. இது மூலநோய் மட்டுமின்றி மேக நோய்களையும் குணமாக்கும். இருமல் போக்கும் ஈளை இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் இஞ்சிச் சாற்றுடன் இந்த சூரணத்தைக் கலந்து சாப்பிட்டால் தொல்லை நீங்கும்.

வயிறு நோய்கள் தீரும் வயிற்றுவலி, வயிற்று உப்பிசம், பொறுமல்,அசீரணம்,வயிற்றுப்போக்கு, போன்ற நோய்களுக்கு இந்தச் சூரணத்துடன் சுக்குத்தூள் மற்றும் சர்க்கரைக் கலந்து சாப்பிட வயிறு தொடர்புடைய நோய்கள் தீரும்.

இதயநோய் தீரும் மெருகன் கிழங்கில் உள்ள சோடியம் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க வல்லது. ஹைபர் டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நோயை குணமாக்கும். இதில் உயிர்ச்சத்துக்கள் சி,ஈ, ஆகியவை காணப்படுகின்றன. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். இது இதயநோயை தடுக்கும். இதனை சூரணமாக மட்டுமின்றி லேகியமாகவும் சாப்பிடலாம். இம்மருந்து சாப்பிடும்போது அதிக காரம், புளி சேர்க்கக் கூடாது. மிளகு எலுமிச்சைச் சேர்க்கலாம். எண்ணெயும் சேர்க்கக் கூடாது. நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக்...


மக்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் தமிழக மக்களின் நலனுக்காக தன் சொத்துக்களை எல்லாம் விற்று முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேயர் பென்னி குயிக் படத்திறப்பு விழா இன்று சென்னையில் நடக்கிறது என்று அந்த இயக்கத்தின் தலைவர் கே. ராஜன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், ராணுவ பணி பொறியாளராக தமிழ்நாட்டுக்கு வந்த பென்னி குயிக், இந்த நாட்டை ஒரு அடிமை நாடாக கருதாமல், தன் உற்றார்- உறவினர் வாழும் பூமிபோல கருதி, மழையை நம்பி மானாவாரி சாகுபடி செய்யும் மக்களின் விவசாயத்துக்காக, அவர்களின் குடிநீர் வசதிக்காக அரசாங்கம் நிதி உதவி செய்ய மறுத்த நிலையிலும், தன் சொத்துக்களையெல்லாம் விற்று, ஏன் மனைவியின் நகைகளைக்கூட விற்று `முல்லைப் பெரியாறு' அணையை கட்டினார்.

அப்போதுள்ள ஆங்கிலேய அரசாங்கமும் சரி, அதைத்தொடர்ந்து சுதந்திரம் பெற்றபின் தமிழகத்தை ஆண்ட அரசுகளும் சரி, அவருக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்கவில்லை என்றாலும் மக்கள் மனதில் குறிப்பாக தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்ட மக்களின் மனதில் பொன்னெழுத்துக்களால் அவருடைய பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு, கேரளா இரு மாநில மக்களும், பென்னி குயிக்கின் தியாகத்தால் உருவான இந்த அணையை போற்றி பாதுகாக்க வேண்டிய இந்த தருணத்தில், கேரள மாநிலம், `இந்த அணை பாதுகாப்பற்றது, இதை இடித்து தள்ளிவிட்டு, புதிய அணையை கட்டுவோம்' என்று சொல்வது, தமிழக மக்களின் இதயத்தை வேதனையால் வாட்டுகிறது.

அணையை மட்டும் சுக்குநூறாக உடைக்க சொல்லவில்லை. ஒரு வரலாற்று சின்னத்தையே அதுவும், போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய தியாக சின்னத்தையே சுக்குநூறாக உடைக்க சொல்வது, எந்த வகையில் நியாயம்? என்பதை எங்களுடைய கேரள சகோதரர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். கல்லணையே எத்தனை நூற்றாண்டுகளுக்கு பிறகும், இன்னும் உறுதியாக இருக்கும் நிலையில், அதே தொழில்நுட்பத்தோடு, அதே முறைகளை பின்பற்றி பென்னி குயிக், அதுவும் அவர் ஒரு பொறியாளர், அவர் கட்டிய அணை பலவீனமாக இருக்கிறது என்று சொல்வது அரசியல் காரணங்களுக்காகத்தானே தவிர, அது நிச்சயமாக உண்மை இல்லை.

இப்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றிருக்கும் பென்னி குயிக் பெயரை முல்லைப் பெரியாறு அணைக்கு சூட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், இப்படி ஒரு தியாகியின் பெயரை அந்த பகுதி மக்கள் நினைவில் வைத்திருந்தாலும், தமிழக மக்கள் அனைவரும் நினைவில் கொள்ளத்தக்க வகையில், அவருடைய வரலாற்றை பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியும், இன்று (செவ்வாய்க்கிழமை) அவருடைய திருவுருவ படத்திறப்பு விழாவை வண்ணாரப்பேட்டையில் உள்ள காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட கலையரங்கில் மாலை 3 மணிக்கு மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடத்துகிறது. இதே உணர்வை தமிழகம் முழுவதிலும் அரசியல் கட்சிகளும், ஆன்றோர், சான்றோர் பெருமக்களும், தமிழ் ஆர்வலர்களும் பிரதிபலிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிங்கிலீஷ் பாட்டுக்கு யு ட்யூப்பின் கோல்ட் விருது!


தனுஷ் எழுதிப் பாடி இன்று மிகப் பிரபலமான வீடியோ எனப் பேசப்படும் கொலவெறி என்ற தமிங்கிலீஷ் பாட்டுக்கு யு ட்யூப்பின் கோல்ட் விருது கிடைத்துள்ளது. தமிழும் இல்லாமல், ஆங்கிலத்திலும் சேராமல் இரண்டும் கெட்டானாக தனுஷ் எழுதிப் பாடிய இந்தப் பாடல் ஊடகங்களின் தயவால் மிகப் பிரபலமாகிவிட்டது. இணைய செய்தித் தளங்கள் பற்றி மிகத் தவறான கண்ணோட்டம் கொண்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு, இணைய வலிமை குறித்து புரிய வைக்க ஒரு வாய்ப்பாகவே இந்தப் பாடல் பார்க்கப்படுகிறது.

ஒரு கோடி பேருக்கும் மேல் பார்க்கப்பட்ட இந்தப் பாடல் குறித்து டைம் பத்திரிகையே தனது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த கொல வெறி பாடலுக்கு யு ட்யூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற வகையில் 'யு ட்யூப்கோல்ட்' விருது வழங்கப்பட்டுள்ளது. ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. விரைவில் படத்தின் முழு ஆடியோவும் வெளியாக உள்ளது. இந்தப் பாடலுக்கு இசையமைத்த அனிருத், ரஜினி குடும்பத்துக்கு மிக நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது!

மதுரை அருகே அரசுப் பேருந்தில் டைம்பாம் வெடிகுண்டு கண்டுபிடிப்பு!


மதுரை அருகே அரசு பேருந்தில் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கிற வகையைச் சேர்ந்த அந்த வெடிகுண்டை போலீஸார் செயலிழக்கச் செய்துள்ளனர். மதுரை மாவட்டம் மேலூரை அருகே உள்ள திருவாதவூரில் இருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த பேருந்தை போலீசார் சாதரணமாக சோதனை செய்தபோது டிபன் பாக்ஸ் போல இருந்த மர்ம பார்சலை கண்டு பிடித்தனர். அதனை சோதனை செய்தபோது அதில் வெடிகுண்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இது நண்பகல் 12 மணிக்கு வெடிக்கும் வகையில் பொருத்தப்பட்டிருந்தது. இந்த வெடிகுண்டு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து குண்டு முத்தம்பட்டி கண்மாய்க்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு வைத்து அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். சமீபத்தில்தான் அத்வானி சென்ற பாதையில் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஒரு வெடிகுண்டு சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பேருந்தில் துப்பாக்கி குண்டுகள் இதனிடையே பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்ற அரசு பேருந்தில் துப்பாக்கிகளும், குண்டுகளும் அனாதையாக கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநரும், நடத்துனரும் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கிகள் மற்றும் பைகளை மீட்டு திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் ஒப்படைத்தனர்.

பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் நலலெண்ணத்தை அழித்து விடாதீர்கள்...


காரணமே இல்லாமல் கற்பனையாக எதையோ சிந்தித்துக் கொண்டு, பழிவாங்கும் உணர்ச்சியோடு தேவையில்லாத வன்முறையில் தயவு செய்து ஈடுபடவேண்டாம். இரண்டு மாநில மக்களுக்கு இடையேயும் பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டு, வலுவோடு உள்ள நல்லெண்ணம், நல்ல நம்பிக்கை போன்றவற்றை தயவு செய்து அழித்து விடாதீர்கள். இதுதான் நான் மிகவும் மரியாதையோடும், உயர்ந்த எண்ணத்தோடும், அறிவாளிகளாகவும், கல்வியாளர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் பார்க்கும் மக்களுக்கு முன்பு வைக்கும் வேண்டுகோளாகும் என்று கேரள மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்து அறிக்கை விடுத்துள்ளார்.

கேரள மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வாகனம் கேரள சகோதரர்களால் தாக்கப்பட்டு வருகிறது என்ற செய்தி எனக்கு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட நம்பர் பிளேட்டுகளை கொண்ட வாகனங்கள் வேண்டுமென்றே தாக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல கேரளாவில் உள்ள தமிழ் நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோரும் அச்சத்தில் உள்ளனர். இதற்கு காரணம் தமிழகத்துக்கும், கேரள அரசுகளுக்கும் இடையே உள்ள முல்லைப் பெரியாறு பிரச்சினைதான். இதுபோன்ற ஒரு குறுகிய மனப்பான்மையில் பிரிவு உணர்ச்சியில், சமூக விரோதிகளின் செயல்பாட்டுக்கு யாரும் இரையாக வேண்டாம் என்று படித்த மற்றும் அறிவுள்ள இந்த நாட்டைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

அரசியல் காரணங்களுக்காக கற்பனையான மற்றும் அச்சுறுத்தும் நோக்கத்தில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகள் உள்ள சூழ்நிலையில் மக்கள் உணர்ச்சி வசப்படுவார்கள். அவர்களை சமுதாயத்தின் முக்கியஸ்தர்கள் சரியான வழியில் நடத்துவது அவசியம். முல்லை பெரியாறு அணை பலவீனமானது என்றும், பாதுகாப்பற்றது என்றும், அது உடைந்து இடுக்கி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அழிவை ஏற்படுத்தும் என்றும் கூறுவதை நம்ப முடியாது. அந்த அணை சரியாக பராமரிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட காலங்களில் பலப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அணையின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப வல்லுநர்கள், உயர்ந்த தகுதியைக் கொண்ட நிபுணர்கள் அதை சோதித்து, அந்த அணை முழுக்க, முழுக்க பாதுகாப்பாக இருக்கிறது என்று திரும்ப திரும்ப கூறியிருக்கின்றனர். 116 ஆண்டுகள் பழமை கொண்டது என்பதற்காக அந்த அணை பாதுகாப்பற்றது என்று சந்தேகிக்கக்கூடாது. தமிழகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கரிகாலசோழன் கட்டிய கல்லணைதான் உலகத்திலேயே அதிக வயதான அணையாகும். அது இன்னும் நிலைத்து நின்று பாதுகாப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

கிறிஸ்துவின் இறப்புக்கு பின் கட்டப்பட்ட அந்த அணை 1900 ஆண்டுகளை கடந்து முழு பாதுகாப்போடு விளங்குகிறது. கல்லணை எந்த கல்லால் (சுண்ணாம்பு கல்) கட்டப்பட்டதோ அதே கல்லால்தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டு உள்ளது. எனவே, முல்லைப் பெரியாறு அணை தரமான கட்டுமானத்துடன் இல்லை என்றும், அதிக பழமையாகி விட்டதால் அதன்மூலம் அச்சங்கள் ஏற்படுகின்றன என்பதும் தேவையற்ற ஒன்று. இந்த அணை நீண்ட நாட்களாக நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கையில் அடிப்படையில்தான் சென்னை மாகாணத்துக்கும், திருவாங்கூர் மாகாணத்துக்கும் இடையே அப்போது இருந்த ஆங்கிலேயர் அரசு 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த அணை நில அதிர்ச்சி ஏற்படக்கூடிய பகுதியில் இருக்கிறது என்று சமீபத்தில் புரளி மூலம் பரவலாக பீதியை கிளப்பி உள்ளனர்.

இந்திய நில அதிர்வு வரைபடத்தை வைத்து பார்க்கும்போது, கேரளா முழுமையும் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான பாகங்களும், சென்னையும் நில அதிர்வு 3-ம் மண்டலத்துக்குள் வருகின்றன. இங்கு மிதமான நிலை நீடிக்கும் என்று தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த வரைபடத்தை வலைதளங்களில் எளிதாக டவுன்லோடு செய்து பார்க்க முடியும். அப்படி ஒரு நில அதிர்வு ஏற்பட்டால் கூட அதன் அளவு 3 ரிக்டரை தாண்டாது. 2-ல் இருந்து 2.9 வரையிலான ரிக்டர் நில அதிர்வை பொதுவாக உணரவே முடியாது. ஆனால் அதை பதிவு செய்யலாம். இப்படிப்பட்ட அதிர்வுகள் ஒவ்வொரு நிமிடமும் உலகம் முழுவதும் ஏற்படுகின்றன. இவையெல்லாம் வானிலை ஆய்வுத் துறைக்குதான் தேவையான அளவுகளாகும்.

அதுபோல் 3-ல் இருந்து 3.9 வரையிலான ரிக்டர் நில அதிர்வு சில நேரங்களில் உணரப்படும். அந்த அளவின்படி மிக அரிதாகத்தான் பாதிப்புகள் ஏற்படும். அந்த அதிர்வுகளும் பரவலாக உள்ளன. ஆனால், அவை கவலைக்குரியது அல்ல. இப்படி இருக்கும் நிலையில், ஒரு பெரிய நில அதிர்ச்சி ஏற்பட்டு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று உருவாக்கப்படும் கற்பனையான அச்சம் அடிப்படை ஆதாரமற்றது. இது கேரளாவைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும். ஆனாலும், சில உள்நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் இப்படி ஒரு அச்ச உணர்வை உருவாக்கி முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று கூறி வருகிறார்கள்.

தமிழகத்தின் மிக நெருங்கிய மாநிலம் கேரளா. உண்மையிலேயே 1950-ம் ஆண்டுக்கு முன்பாக 2 மாநிலங்களும் ஒன்றாக இருந்தவை. கலாச்சாரம் மற்றும் மொழி, பாரம்பரியத்தில் மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் பங்கு உண்டு. கேரளாவில் ஏராளமான தமிழ் மக்கள் உள்ளனர். அதேப் போலவே தமிழகத்திலும் ஏராளமான மலையாளிகள் உள்ளனர். தமிழர்களும், மலையாளிகளும் எத்தனையோ ஆண்டாண்டு காலமாக சகோதரத்துவத்துடனும், ஒத்துழைப்புடனும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். கேரள மக்களுக்கு எதிராக அழிவை உருவாக்கும் எண்ணம் தமிழக அரசுக்கோ, தமிழக மக்களுக்கோ கிடையவே கிடையாது.

அந்த அணை முழு பாதுகாப்போடு இருக்கிறது என்ற உறுதியும், ஆதாரமும் இருப்பதால்தான் அப்படி சொல்கிறோமே தவிர பாதுகாப்பற்ற அணையை பாதுகாப்பான அணையாக நாங்கள் நிச்சயம் சொல்லமாட்டோம். பத்திரிகையாளர்களும், பத்திரிகைகளும் இந்த செய்தியை பொறுப்புணர்வோடும், கட்டுப்பாட்டுடனும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.நான் கேரள மக்களை மிகுந்த அக்கரையுடன் கேட்டுக் கொள்வது என்னவென்றால், தேவையில்லாத பிரச்சினைகளை கிளப்பும் பண்பாடற்ற, நாகரீகமற்ற, நல்லெண்ணம் இல்லாதவர்களின் செயல்பாட்டுக்கு இரையாக வேண்டாம் என்பதுதான்.

காரணமே இல்லாமல் கற்பனையாக எதையோ சிந்தித்துக் கொண்டு, பழிவாங்கும் உணர்ச்சியோடு தேவையில்லாத வன்முறையில் தயவு செய்து ஈடுபடவேண்டாம். இரண்டு மாநில மக்களுக்கு இடையேயும் பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டு, வலுவோடு உள்ள நல்லெண்ணம், நல்ல நம்பிக்கை போன்றவற்றை தயவு செய்து அழித்து விடாதீர்கள். இதுதான் நான் மிகவும் மரியாதையோடும், உயர்ந்த எண்ணத்தோடும், அறிவாளிகளாகவும், கல்வியாளர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் பார்க்கும் மக்களுக்கு முன்பு வைக்கும் வேண்டுகோளாகும். 2 மாநில மக்களுக்கு இடையே இருக்கும் இதயபூர்வமான உறவுகளை உடைக்கும் வகையில், உணர்ச்சிகளை தூண்டும் பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

குஜராத்தில் கள்ளச்சாராயம் விற்றால் தூக்கு தணட்னை!!


குஜராத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை வழங்கும் சட்டத்தி்ற்கு அமமாநில ஆளுநர் கமலா ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 136 பேர் பலியாகினர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான சட்டம் தேவை என்று குஜராத் முதல்வர் மோடி தலைமையிலான அரசு தீர்மானித்தது. தற்போது கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ 1 ஆண்டு சிறை தண்டனை தான் என்பதால் பலரும் துணிச்சலாக கள்ளச்சாராயம் விற்று வருகின்றனர்.

இந்த நிலையை மாற்ற கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் குஜராத் சட்டசபையில் கொண்டுவரப்பட்டது. அதன்படி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றால் 7 முதல் 10 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும். கள்ளச்சாராயத்தை குடித்து யாராவது இறந்தால் அதை விற்றவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும். இந்த சட்ட திருத்தத்திற்கு குஜராத் ஆளுநர் கமலா ஒப்புதல் அளித்துள்ளார். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க இந்த சட்ட திருத்தம் வழிவகுக்கிறது. குஜராத்தில் முழுமையான மதுவிலக்கு இருக்கையில் இவ்வாறு கள்ளச்சாராயம் விற்கப்படுவதைத் தடுக்க தான் இந்த கடுமையான சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

பலாத்காரம் செய்த போலீஸாரை கைது செய்யாதது ஏன்?- உயர்நீதிமன்றம் கண்டனம்!


திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய போலீசாரை இதுவரை கைது செய்யாத தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மண்டபம் என்ற ஊரில் இருளர் குடியிருப்பில் வசித்த நான்கு இளம் பெண்களை திருக்கோவிலூர் போலீசார் பத்து தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசாரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்தவாரம் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், இருளர் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய போலீசார் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.மனுதாரரின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பாலியல் பலாத்காரம் செய்த போலீசார் கைது செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். 

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அந்த பெண்களை உடனடியாக மருத்துவ சோதனைக்கு அனுப்பி அதன் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பிக்கு நீதிபதிகள் அப்போது உத்தரவிட்டனர். இந்த வழக்கில் 2 வாரத்தில் அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

21 தலைமுறை புண்ணியம்...


திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தினத்தின் முக்கிய விழாவான மகாதீப விழா வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவதால் அங்கு பாதுகாப்பு ஏற்படுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சிவபெருமானுக்குரிய பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப பெருவிழா 10 நாள்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

21 தலைமுறை புண்ணியம் திருவண்ணாமலையில் தீபத்தை பார்ப்பவர்களுக்கு 21 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் என்கின்றது அருணாசல புராணம். இதன்படி திருக்கார்த்திகை தீபம் தரிசிப்பவர்களுக்கு உணவுத்தட்டுப்பாடு வராது, பார்த்தவர்களுக்கு மட்டுமின்றி சிந்தித்தவர்களுக்கும் கூட இடையூறு நீங்கி விடும் என்று கூறப்பட்டுள்ளது.

பத்துநாட்கள் திருவிழா இந்த ஆண்டிற்கான விழா நவம்பர் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய அம்சமான மகாதீபம் நாளை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் காலை, மாலை இரு வேளையும் உற்சவ மூர்த்திகள் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கடந்த 4ம் தேதி 63 நாயன்மார்கள் உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், பெண்களே வடம் பிடித்து இழுத்த பராசக்தி அம்மன் தேரோட்டம் கடந்த திங்களன்று நடைபெற்றது.

பரணி தீபமும் மகாதீபமும் கார்த்திகை தீபத்தின் முக்கிய நிகழ்வான மகாதீபம் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவில் வைகுந்த வாயிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகாதீபத்தை ஏற்றும் உரிமை பர்வதராஜ குல மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைக் காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுள்ளனர். இதன்பின்னர் தமிழ்நாடு முழுவதும் உள்ள வீடுகளில் மக்கள் விளக்கேற்றி வழிபடுவர்

அர்த்தநாரீஸ்வரர் புறப்பாடு பார்வதி தேவியை சிவபெருமான் இடப்பாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராய் ஆனதைக் குறிக்கும் வகையில், கார்த்திகையன்று மாலையில் திருவண்ணாமலை கோவிலுக்குள் அர்த்தநாரீஸ்வரர் புறப்பாடு நடக்கிறது. இந்த ஒருநாள் மட்டுமே இவருடைய தரிசனம் கிடைக்கும்.

தெப்பத் திருவிழா உற்சவத்தின் தொடர்ச்சியாக 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்களும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. 12ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் விழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், நகராட்சி சார்பில் குடிநீர், கழிப்பிட வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 15 இடங்களில் மருத்துவ முகாம்கள், 9 இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், காவல்துறை சார்பில் 33 உதவும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து 2,000 சிறப்பு பஸ்கள் 6 ஆயிரம் நடைகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...