|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 September, 2011

குமரியில் ரூ.2.25 கோடியில் ஒலி- ஒளி காட்சி கூடம்!


கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 2.25 கோடி ரூபாய் மதிப்பில் ஒலி-ஒளி காட்சி கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் 2.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள ஒலி-ஒளி காட்சி கூடத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், மதுரை மஹாலில் ஒலி-ஒளி காட்சி கூடம் இருப்பது போல் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களிலும் அமைக்கப்படுகிறது.

சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, பகவதியம்மன் கோயில், புனித அலங்கார உபகார அன்னை ஆலயம், திற்பரப்பு நீர்வீழ்ச்சி, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம், சொத்தவிளை கடற்கரை போன்ற சுற்றுலா தலங்களை பற்றி கன்னியாகுமரிக்கு வரும் அனைத்து சுற்றுலாபயணிகளும் அறியும் வகையில் ஒலி-ஒளி காட்சி கூடம் அமைக்கப்படுகிறது.

மாலை, 6 மணிக்கு துவங்கும் இந்த ஒலி-ஒளி காட்சிகள் தினமும், 2 காட்சிகளாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள இடத்தில் 200 பேர் அமரும் வகையில் காலரி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜெனரேட்டர் அறை, புரெஜக்டர் அறை, கம்ப்யூட்டர் சாதனம் காமிரா போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் அமைய உள்ள இந்த ஒலி-ஒளி கூடத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பணி நடந்து வருகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் இந்த காட்சி கூடம் அமைக்கப்பட்டு, இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்த சுற்றுலாத்துறை முயன்று வருகிறது.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஒருவர் கூட விடாமல் கடுமையாக தண்டிக்க வேண்டும்- வாச்சாத்தி பெண்கள்!


வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரையும் விடாமல், அனைவரையும் மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும். எங்களது உடலிலும், மனதிலும் ஏற்பட்ட வலி அப்போதுதான் தீரும் என்று வாச்சாத்தி கொடூரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். வன்கொடுமையின் உச்சகட்ட வெறித்தனத்தை 19 ஆண்டுகளுக்கு முன்பு மலை கிராமமான வாச்சாத்தியில் வக்கிரத்துடன் நிறைவேற்றிய வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையின் கோர வெறியாட்ட வழக்கில், இன்று தர்மபுரி கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

வாச்சாத்தியில் வெறியாட்டம் ஆடிய 269 பேரில் தற்போது 215 பேர்தான் உயிருடன் உள்ளனர். மற்றவர்கள் செத்துப் போய் விட்டனர். இந்த 215 பேர் மீதும் இன்று தர்மபுரி கோர்ட் தீர்ப்பளித்தது. ஒருவரையும் விடாமல் அத்தனை பேரையும் குற்றவாளிகள் என நீதிபதி அதிரடியாக தீர்ப்பளித்தார்.

இதுகுறித்து கோர்ட் வளாகத்தில் கூடியிருந்த பாலியல் பலாத்காரம், சித்திரவதை உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஆளான பெண்கள் கூறுகையில், எங்களை மனிதர்களாகக் கூட மதிக்காமல் அன்று வெறித்தனமாக நடத்தினர் காவல்துறையினரும், வனத்துறையினரும். அவர்கள் யாரையும் சும்மா விடக் கூடாது. அத்தனை பேருக்கும் கடுமையான தண்டனை தர வேண்டும் என்று நீதிபதி ஐயாவைக் கேட்டுக் கொள்கிறோம்.

அவர்களால் நாங்கள் பட்ட சித்திரவதை கொஞ்சநஞ்மல்ல, அதை வார்த்தையாலும் சொல்ல முடியாது. அன்று எங்களுக்கு ஏற்பட்ட உடல் வலியும், மன வலியும் இன்னும் கூட மறக்க முடியவிலல்லை. குற்றம் செய்த அத்தனை பேரையும் கடுமையாக தண்டித்தால் மட்டுமே எங்களது வேதனை தீரும் என்று கண்ணீருடன் கதறியபடி கூறினர்.

215 பேரும் குற்றவாளிகள் என்று கோர்ட் அறிவித்ததை கோர்ட் வளாகத்தில் கூடியிருந்த வாச்சாத்தி கிராம மக்கள் அமைதியுடன் வரவேற்றனர். அவர்களின் முழுக் கவனமும், கவலையும் குற்றவாளிகளுக்குக் கிடைக்கப் போகும் தண்டனை குறித்துதான் உள்ளது. இவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று அத்தனை பேரும் கோரியபடியும், தங்களது குல தெய்வமான மாரியம்மனை வேண்டிக் கொண்டும் உள்ளனர்.

அடைக்கலம் தேடிய 50 பேரை இலங்கைக்கு அனுப்பியது இங்கிலாந்து!

தனது நாட்டில் அடைக்கலம் தேடிச் சென்ற 50 பேரை இலங்கை நாட்டுக்கே திருப்பி அனுப்பியது இங்கிலாந்து அரசு. அடைக்கலம் தேடி வந்தவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருக்காது என்று மனித உரிமை அமைப்புகள் எச்சரித்த போதும் அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டு உள்ளனர்.

 நாடுகடத்தப்பட்ட 50 பேரும் வியாழக்கிழமை காலை கொழும்பு வந்துச் சேர்ந்தனர். இதில் பெரும்பான்மையோர் தமிழர்கள் ஆவர். குறைந்த அளவில் சிங்களவர்களும், முஸ்லிம்களும் இதில் அடங்குவர்.  இலங்கையில் நான்காம் ஈழப் போர் நடந்த காலகட்டத்தில் பல தமிழர்கள் ராணுவத்துக்கு அஞ்சி பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அவர்களில் சிலர் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடினர். இவ்வாறு சென்ற மக்கள் குழுவில் சிலரை இங்கிலாந்து அரசு இலங்கைக்கே திரும்பி அனுப்பியுள்ளது.

 
2009-ம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போருக்கு பின்பு இலங்கையில் நிலைமை சீரடைந்து விட்டதாக இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்து எல்லை அமைப்பு தஞ்சம் கோரியவர்களை திருப்பி அனுப்பி வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து இங்கிலாந்தில் தஞ்சம் கோரியவர்கள் திரும்ப அனுப்பப்படுவது இரண்டாவது முறையாகும்.  இலங்கைக்கு அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டால் அவர்கள் இலங்கை அரசால் சித்ரவதைக்கு உள்ளாவார்கள் என்றும் சில நேரங்களில் காணாமல் போய்விடுவதற்கும் வாய்ப்புள்ளது என்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் எச்சரித்து இருந்தன. எனினும் இலங்கையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தை அவர்கள் உதவிக்கு அணுகலாம் என்று இங்கிலாந்து கூறியுள்ளது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் புதிய ஆக்டோபஸ் இனம்!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் புதிய ஆக்டோபஸ் இனத்தை தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 இது தொடர்பாக இக்கல்லூரியின் மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க இயக்குநர் வை.கி. வெங்கடரமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

 தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள துடுப்புடைய மற்றும் ஓடுடைய மீன்களின் உயிரினப் பல்வகைமைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தபோது, கல்லூரியின் முதுநிலை ஆராய்ச்சியாளர் தி. வைத்தீஸ்வரன் புதிய மெல்லுடலி ஒன்றைக் கண்டறிந்துள்ளார். அந்த மெல்லுடலி, பழுப்புதாள் யானைக்கை (ஆர்கோனோடா ஹையன்ஸ்) என்ற ஓடுடைய பேய்க்கணவாய் (ஆக்டோபஸ்) ஆகும்.


 இப்புதிய மெல்லுடலியை, தூத்துக்குடி கடல் பகுதியில் 300 முதல் 310 மீ. ஆழத்தில் அவர் சேகரித்துள்ளார். புற அமைப்பு மற்றும் ஓடு அமைப்பின் அடிப்படையில் இவ்வுயிரினமானது ஆர்கோனோடா ஹையன்ஸ் என்ற ஓடுடைய பேய்க்கணவாய் சிற்றினத்தைச் சேர்ந்தது என உதவிப் பேராசிரியர் ந. ஜெயக்குமார் இனம் கண்டறிந்துள்ளார்.  இந்தியாவை பொறுத்தவரை இந்த உயிரினம் தற்போதுதான் முதன் முதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, மெல்லுடலிகள் தொகுப்பின் கீழ்வரும் தலைக்காலிகள் வகுப்பைச் சேர்ந்தது.  இது 15.4 செ.மீ., நீளமும் 15 கிராம் எடையும் கொண்டுள்ளது. உலகளவில் இதுவரை நான்கு ஓடுடைய பேய்க்கணவாய் இனமானது வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதியில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 இந்த உயிரினத்தின் ஓடானது யானைக்கை என்றழைக்கப்படும் நாட்டிலஸ் இனத்தின் ஓட்டைப்போல் தோற்றமளித்தாலும், இவை ஓடுடைய பேய்க்கணவாய் வகையைச் சார்ந்தவை.  இதன் ஓடானது தாளை போன்று மெல்லியதாகவும், பழுப்பு நிறத்துடனும் இருப்பதால் பழுப்புத்தாள் யானைக்கை என அழைக்கப்படுகிறது.  இவை,மீன்களை உண்டு வாழும். இவை ஜெல்லி மீன்களை ஒட்டி வாழும். பெண் இனத்துக்கு மட்டுமே ஓடு உள்ளது. ஆண் இனம் உருவில் மிகச்சிறிய அளவிலே உள்ளது என்றார் அவர்.

இந்தியாவுடனான தடையற்ற வாணிபம் கைவிடப்படும் ஐரோப்பிய யூனியன்!

தடையற்ற வாணிப ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்வோம் என்று ஐரோப்பிய யூனியன் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

 வாணிப ஒப்பந்தத்தில் பல்வேறு விஷயங்களில் இந்தியாவுடன் கருத்தொற்றுமை ஏற்படாததை அடுத்து ஐரோப்பிய யூனியன் இவ்வாறு கூறியுள்ளது.  ஆண்டுதோறும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இந்த வாணிப ஒப்பந்தப் பேச்சு முறிந்தால் இந்தியாவுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.

 
தில்லியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இது தொடர்பாக இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் இடையே பேச்சு தொடங்கியது. இந்நிலையில் இது தொடர்பாக 2012- பிப்ரவரிக்குள் இறுதி முடிவு எடுக்க வேண்டுமென ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் கெடு விதிக்கப்பட்டுள்ளது.  இந்தியா இறுதி முடிவு எடுக்காவிட்டால், இந்த ஒப்பந்தம் பொது விவாதத்துக்கு வரும். இது தொடர்பாக இந்தியாவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய யூனியன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 
27 நாடுகள் உள்ள ஐரோப்பிய யூனியனில் டென்மார்க் மட்டுமே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐரோப்பிய யூனியன் வர்த்தகப் பிரிவு ஆணையர் கார்ல் டி குசட், "மலையளவில் சிக்கல் எழுவதால் இந்தியாவுடன் தடையற்ற வாணிப ஒப்பந்த பேச்சை நிறுத்திக் கொள்ளலாம் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்' என்றார்.  முக்கியமாக கார், ஒயின் உள்ளிட்ட பானங்கள், பல்வேறு சேவைகள் தொடர்பாக இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே தடையற்ற வாணிப ஒப்பந்தப் பேச்சு நடைபெற்று வந்தது.  இரு தரப்பு வர்த்தகத்தை 2015-ல் ஆண்டுக்கு ரூ.11 லட்சத்து 85 ஆயிரம் கோடி வரை உயர்த்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. 2010-ல் 4 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

எங்கேயும் எப்போதும் சரவணனை பாராட்டிய அமீர் கான்!

எங்கேயும் எப்போதும்" படத்தை பார்த்து, ஏ.ஆர்.முருகதாஸிடமும், அவரது உதவியாளரும், படத்தின் இயக்குநருமான சரவணனை வெகுவாக பாராட்டினாராம் பாலிவுட் ஸ்டார் அமீர் கான். அமீர்கானுக்கு இந்தியில் கஜினி என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தவர் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். அப்போது முதலே ஏ.ஆர்.முருகதாஸ் மீது மிகுந்த பற்று கொண்டுள்ளார் அமீர் கான். இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த ஏ.ஆர்.முருகதாஸின் முதல்பட தயாரிப்பான எங்கேயும் எப்போதும் படத்தை பார்த்துள்ளார் அமீர்கான். படம் ரொம்பவே அவரை கவர்ந்துவிட்டதாம், உடனே ஏ.ஆர்.முருகதாசை தொடர்பு கொண்டு, படம் ரியலி் சூப்பர். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு ஆர்ட்டிஸ்ட், படத்தின் கதை, அது சொல்லப்பட்ட விதம் என ஒட்டு மொத்தமும் சூப்பர் என்றாராம் அமீர். கூடவே படத்தின் இயக்குநர் சரவணனையும் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினாராம். மேலும் இந்தபடத்தை தனது பேனரிலேயே இந்தியில் ரீ-மேக் செய்ய ஆர்வம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அமீர் கானின் வாழ்த்து மழையால், ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறாராம் சரவணன்.

பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள வேண்டாம்: ஐ.நா!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு கமிட்டிக் கூட்டம் இந்தியா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் எந்தச் சூழலிலும் பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள வேண்டாம் என உறுப்பு நாடுகளை பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக் கொள்ளும் என அறிக்கை வெளியிடப்பட்டது.

 
தங்கள் நாட்டில் தங்க பயங்கரவாதிகளை அனுமதிக்காமல் நீதியின் முன் அவர்களை நிறுத்துங்கள் என்று அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது. பயங்கரவாதத்தைத் தடுக்கவும் அதை எதிர்த்துப் போராடவும் உறுப்பு நாடுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கை கேட்டுக்கொண்டது.

 பயங்கரவாத எதிர்ப்புக் கமிட்டி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியொன்றில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

 
மேலும், செப்டம்பர் 11-ம் தேதி நடந்த அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றி 10 ஆண்டுகள் ஆவதையும் இந்நிகழ்ச்சி குறித்தது.  எல்லைப் பகுதிகளை தகுந்த கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் பயங்கரவாதிகளின் ஆயுத நடமாட்டத்தை தடுப்பதில் உறுப்பு நாடுகள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கேட்டுக்கொண்டது.

 
 சில அறக்கட்டளை நிறுவனங்களுக்குச் சென்று சேரும் நிதி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படாமல் இருப்பதை உறுப்பு நாடுகள் உறுதி செய்ய வேண்டும். பயங்கரவாத நடவடிக்கையின் நோக்கம் எதுவாக இருந்தாலும், பயங்கரவாதம் ஒரு குற்றமே; அதை நியாயப்படுத்த முடியாது என்பதை உறுப்பு நாடுகள் உறுதி செய்யவேண்டும் என்று அறிக்கை கேட்டுக்கொண்டது.

 போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் ஹவாலா தொழிலில் ஈடுபடுதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டுவரும் சர்வதேசக் கும்பல்களுக்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிக்கை கவலை தெரிவித்தது.

 
பயங்கரவாத எதிர்ப்புக் கமிட்டி உருவாகி 10 ஆண்டுகள் ஆன பின்னரும் தேசிய, சர்வதேச, பிராந்திய அளவில் செய்யவேண்டியவை நிறைய உள்ளன என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.  நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், அமெரிக்கா மீதான தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் ஆன பின்னரும் பயங்கரவாதம் முக்கிய ஆபத்தாக இன்னமும் உள்ளது. இந்த ஆபத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரை இழக்கின்றனர். பிராந்திய இணக்கம் குலைகிறது என்று கவலை தெரிவித்தார்.

 

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் புரி, பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் உறுப்பு நாடுகளிடையே ஓர் ஒற்றுமையை உருவாக்கியிருக்கிறது. சர்வதேச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தையை சாத்தியமாக்கியிருக்கிறது என்றார்.  பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளாமல் இருப்பது என்பது, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தல், தங்கள் மண்ணைப் பயன்படுத்த பயங்கரவாதிகளை அனுமதித்தல் ஆகியவற்றுக்கு எதிரானது என்றார் ஹர்தீப் சிங்.

சவாலாகும் தேமுதிக - கம்யூனிஸ்ட் கூட்டணி!

கோவை மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு சவால் விடும் வகையில் தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி அமைந்துள்ளது.

 அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பிரதான கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால் கோவை மாநகராட்சித் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

 
ஆளும்கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, திமுக சார்பில் துணை மேயர் நா.கார்த்திக், மதிமுக சார்பில் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ், மார்க்சிஸ்ட் சார்பில் யு.கே.சிவஞானம், காங்கிரஸ் சார்பில் ஆர்.சின்னையன், போட்டி வேட்பாளராக மாவட்ட துணைத் தலைவர் பச்சமுத்து, கொமுக-பாஜக கூட்டணி சார்பில் ஜி.கே.செல்வகுமார், பாமக சார்பில் கே.ராஜேந்திரன் ஆகியோர் மேயர் வேட்பாளர்களாகக் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 தேமுதிக மற்றும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. கோவை மாநகராட்சி மேயர் பதவியை, கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு தேமுதிக விட்டுக் கொடுத்துள்ளது.

 கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அநேக இடங்களில் தோல்வி அடைந்தாலும், கோவை மாவட்டத்தில் 9 இடங்களில் வெற்றி பெற்றது.

 ஆனால், தேர்தலுக்கு அடுத்து 2 மாத இடைவெளியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 72 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் அதிமுக வெறும் 10 இடங்களை மட்டும் பிடித்தது. மாநிலம் முழுவதும் ஒரு மேயர் பதவியில் கூட வெற்றி பெறவில்லை.

 
அமோக வெற்றி பெற்ற அதிமுக: ஆனால், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் 10-க்கு 10 இடங்களையும் பிடித்து அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேர்தலில் பெற்ற வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி களம் இறக்கப்பட்டுள்ளார். மேயர் மற்றும் வார்டு உறுப்பினர்களில் ஆளும்கட்சியாக உள்ள அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என அக்கட்சியினர் கணக்குப்போட்டு வேலை செய்யத் தொடங்கி விட்டனர்.

 அண்மையில் டாஸ்மாக் கடைகளை ஏலம் எடுத்த பலர், அதிமுகவில் வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 திமுகவை பொறுத்தவரையில் தெற்கு மண்டலத் தலைவர் பைந்தமிழ் பாரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் நிலப்பறிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவங்கள் திமுகவினரிடையே சோர்வை உண்டாக்கி இருப்பதும், அதிமுகவுக்கு சாதகமாகவே இருக்கும் என பேசப்படுகிறது.

 
ஏற்கெனவே துணை மேயராக உள்ள நா.கார்த்திக், திமுகவில் மேயர் வேட்பாளராக களம் இறக்கிவிடப்பட்டுள்ளார். திமுகவினர் மீதான நிலப்பறிப்பு வழக்குகள், கோவையில் நிறைவேறாத பாதாள சாக்கடைத் திட்டம், பில்லூர் குடிநீர்த் திட்ட பணிகள் சுணக்கம் ஆகியவை அக்கட்சிக்கு பாதகமாகவே இருக்கும் என கருதப்படுகிறது.  மேலும் 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெறாததும் அக்கட்சிக்கு பலத்த பின்னடைவாக உள்ளது.  2006 உள்ளாட்சித் தேர்தலின்போது கோவை மாநகராட்சியில் உள்ள 72 வார்டுகளில் திமுக-29, அதிமுக-10, காங்கிரஸ் -8, மார்க்சிஸ்ட்-7, மதிமுக -2, பாஜக-1, கம்யூனிஸ்ட் -4, தேமுதிக -3, சுயேட்சை-8 என உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இப்போது மறுசீரமைப்பில் 100 வார்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளன.

 மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவையில் கணிசமான அளவுக்கு செல்வாக்கு உள்ளது. 

 
அக்கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜன், கோவை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளதும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்க வாக்குகளும், புத்தெழுச்சி பெற்று வரும் தேமுதிகவின் வாக்குகளும் அக்கட்சிக்கு பலம் சேர்க்கிறது.  தேமுதிக, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் ஆகிய 3 கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதால் திமுகவுக்கு அடுத்து அதிமுகவுக்கு சவால் விடும் அணியாக தேமுதிக தலைமையிலான கூட்டணி அமைந்துள்ளது.  காங்கிரஸ் கட்சியில் 2 மேயர் வேட்பாளர்கள்: காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.சின்னையன் மேயர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். ஆனால்,

 
கோஷ்டி பூசல் காரணமாக அதிருப்தி வேட்பாளராக அக்கட்சி சார்பில் பச்சமுத்து திடீரென மேயர் வேட்பாளருக்கு மனு செய்துள்ளார். கோஷ்டிபூசல் உள்ளது என்பதை மேயர் வேட்பாளர் வேட்புமனு தாக்கலிலும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது காங்கிரஸ் கட்சி.  மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் மற்றும் ஆர்.பிரபு அணி என பிரிந்து நிற்கும் காங்கிரஸ் கட்சியில், இப்போது இரண்டு பேர் மேயர் வேட்பாளராக களத்தில் உள்ளனர்.

 
மதிமுகவில் அர்ஜுன்ராஜும், கொமுக-பாஜக கூட்டணி சார்பில் பாஜகவின் மாநிலச் செயலாளர் ஜி.கே.செல்வகுமாரும் போட்டியிடுகின்றனர். கவுண்டர் சமூகத்தினரின் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக களத்தில் இறங்கியுள்ளது.  எல்லா உள்ளாட்சித் தேர்தல்களிலும் ஆளும் கட்சியே வெற்றி பெற்று வந்துள்ளது. இந்த முறை வெற்றி பெறப் போவது ஆளும் கட்சியான அதிமுகவா அல்லது திமுகவா அல்லது கழற்றிவிடப்பட்ட கூட்டணிக் கட்சிகளா என்பது உள்ளாட்சித் தேர்தல் முடிவில் தெரியவரும்.

ஆசிரியைகளின் பாலியல் அத்துமீறல்கள்!



கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்களை மேற்கொண்ட இரு ஆசிரியைகள் குறித்து அந்த சிறுமி கூறியதைக் கேட்கும் போது காது கூசிப் போய் விடும். அந்த அளவுக்கு அறுவறுக்கத்தக்க வகையில் இரு ஆசிரியைகளும் நடந்து கொண்ட விதம் அனைவரையும் கொதிப்படைய வைப்பதாக உள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள்தான் 4 வயது ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஷாலினி அப்பகுதியில்உள்ள புகழ் பெற்ற ஏகேடி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி படித்து வந்தாள்.

இந்த நிலையில்தான் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பள்ளியின் தலைமை ஆசிரியை லசி போஸ்கோ மற்றும் எல்கேஜி ஆசிரியை போர்ஷியா ஆகியோர் சிறுமியிடம் தகாதமுறையில் நடந்து கொண்டனர். இந்த அக்கிரமத்தைச் செய்த இருவரும், சிறுமியை மிரட்டியும் வைத்திருந்தனர். நடந்ததை யாரிடமாவது கூறினால் பாம்பு அடைக்கப்பட்ட இருட்டு அறையில் வைத்து உன்னைப் பூட்டி விடுவோம் என இவர்கள் மிரட்டியுள்ளனராம்.

ஆனால் ஆசிரியைகளின் அத்துமீறல் அதிகரித்துக் கொண்டே போன நிலையில் தனது மழலை மாறாத குரலில் பெற்றோரிடம் அதைக் கூறியபோது சுரேஷ் தம்பதியினர் அதிர்ச்சியில் நிலை குலைந்து போய் விட்டனர். அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் தெரிந்து அவர்கள் இரு ஆசிரியைகளையும் வீடு புகுந்து தாக்கினர். இதில் போர்ஷியா படுகாயமடைந்தார். அதன் பின்னர் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இவர்களைக் கைது செய்யாமல் போலீஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை அடைந்தது. அங்கு காவல்துறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர் நீதிபதிகள்.

இதையடுத்து சுதாரித்த போலீஸார் லசி போஸ்கோவைக் கைது செய்தனர். கேரளாவைச் சேர்ந்தவரான போர்ஷியா தனது ஊருக்கு ஓடி விட்டார். முன்ஜாமீனும் வாங்கி விட்டார். அதேபோல லசி போஸ்கோவும் ஜாமீனில் வெளியே வந்து விட்டார். லசி கடலூர் கோர்ட்டிலும், போர்ஷியா கள்ளக்குறிச்சி கோர்ட்டிலும் தினசரி கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்த இரு ஆசிரியைகளும் செய்த செயல்களை சிறுமி ஷாலினி தனது தந்தையிடம் கூற அதை அவர் வீடியோவில் பதிவு செய்து வைத்துள்ளார். அதைப் பார்க்கும் யாருக்கும், அந்தக் குழந்தை கூறியதை கேட்கும் யாருக்குமே இதயம் அடைத்துப் போய் விடும். அதில் கூறப்பட்டுள்ள செய்கைகளை அச்சில் ஏற்ற முடியாது. அந்த அளவுக்கு இரு ஆசிரியைகளும் மிகவும் அநாகரீகமாக அசிங்கமாக நடந்து கொண்டுள்ளனர்.

மேலும் அவர்களின் செய்கையால் குழந்தை ஷாலினி மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளாள். அதிலும் பாம்பு அடைக்கப்பட்ட இருட்டு அறை என்று ஆசிரியைகள் கூறியது அவளது மனதிலிருந்து இன்னும் விலகவில்லையாம். இதனால் பள்ளியிலிருந்து ஷாலினியை நிறுத்தி விட்டனர் சுரேஷ் தம்பதியினர்.

அதற்குப் பதிலாக தனது மகளுக்கு வீட்டிலேயே சிடிக்களைப் போட்டு பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார் சுரேஷின் மனைவி. மேலும் குழந்தையை சரளமாக, இயல்பு நிலைக்குக் கொண்டு சுரேஷும், அவரது மனைவியும் தீவிரமாக முயன்று வருகின்றனராம். அடுத்த ஆண்டு வேறு பள்ளியில் ஷாலினியைச் சேர்க்கவுள்ளார் சுரேஷ்.

இந்தக் கொடூரச் செயலை செய்த இரு ஆசிரியைகளும் திருமணமானவர்கள், குழந்தைகளும் உள்ளனர். ஆனால் சிறுமி ஷாலினியிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் கள்ளக்குறிச்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கு தற்போது போயுள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி இந்த இரு ஆசிரியைகளால் பாதிக்கப்பட்டோர் குறித்த முழு விவரம், ஆசிரியைகளின் பின்னணி, குறிப்பாக போர்ஷியாவின் பின்னணி உள்ளிட்டவை குறித்த உண்மைகளை வெளிக் கொணர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவெறும்பூர் பேரூராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்தது செல்லும்-உயர்நீதிமன்றம்!


திருவெறும்பூர் பேரூராட்சியை, திருச்சி மாநகராட்சியுடன் இணைத்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது இந்த தீர்ப்பை பிறப்பித்தது உயர்நீதிமன்ற பெஞ்ச். முன்னதாக திருவெறும்பூரை சேர்ந்த பாலசந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், திருவெறும்பூர் பேரூராட்சியி்ல் மட்டும் 17,000 மக்கள் உள்ளனர்.

இங்கு புகழ் பெற்ற எறும்பீஸ்வரர் கோயில், பல்வேறு தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. கடந்த 6.9.2010 அன்று திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சி மற்றும் பாப்பாகுறிச்சி, எல்லக்குடி, ஆலத்தூர் ஊராட்சிகளை இணைத்து எல்லையை விரிவுபடுத்துவது என்று திருச்சி மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது.

இதன் அடிப்படையில் திருவெறும்பூர் பேரூராட்சி, ஊராட்சிகளின் கருத்துக்களை தெரிவிக்கும்படி திருச்சி மாநகராட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த இணைப்புக்கு திருவெறும்பூர் பேரூராட்சியும், 4 ஊராட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றின. இதை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் 28.9.2010, 15.10.2010, 3.1.2011 ஆகிய தேதிகளில் அரசாணை வெளியிட்டார்.

இந்த அரசாணையானது தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளுக்கு எதிரான முறையாகும். மற்றும் திருச்சி மாநாகராட்சி சட்டத்திற்கும் எதிரானது. ஏனெனில் இந்த அரசாணை குறித்தும், இணைப்பு குறித்தும் எந்த பத்திரிகைகளிலும் விளம்பர அறிவிப்பு வெளியிடப்படவில்லை. பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்படவில்லை.

இந்த இணைப்பை குறித்து திருவெறும்பூர் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் நிறைவேற்றிய தீர்மானமும் கருத்தில் கொள்ளவில்லை. ஆகையால் இது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். இணைப்பையும் செல்லாது என்று அறிவித்தார்.

இதையடுத்து தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இன்று விசாரித்தது. விசாரணையின் இறுதியில் அரசின் மேல் முறையீட்டை ஏற்று தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். திருவெறும்பூரை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்தது செல்லும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதே நாள்...


  • உலக மொழிபெயர்ப்பாளர்கள் தினம்
  •  போட்ஸ்வானா விடுதலை தினம்(1966)
  •  தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது(2003)
  •  உலகின் முதலாவது நீர்மின் திறன் அமெரிக்காவின் விஸ்கென்சின் மாகாணத்தில் அமைக்கப்பட்டது(1882)
  • LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...