|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 November, 2011

சாதி மதம் குறிப்பிடாமல் பள்ளியில் சேர்க்க முடியும். அரசாணை நகல்!

சாதி மதம் குறிப்பிட விரும்பாதவர்கள் இதை நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

அதிகாலையில் கண் விழித்தால்...?


அதிகாலையில் கண் விழிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ரோகாம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பிவைப்பார்கள் என்று கூறியுள்ளனர். இரவு ஆந்தைகளைப்போல விடிய விடிய வேலை பார்ப்பவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமனுடனும் இருப்பார்கள் என்று கூறுகிறது அந்த ஆய்வு முடிவு. 1,068க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிகாலையில் எழுபவர்கள் சராசரியாக காலை 6.58 மணிக்கு எழுந்திருத்தனர். ராக்கோழிகள் எனப்படும் சோம்பேரிகள் காலை நேரத்தை சராசரியாக 8மணி 54 நிமிடத்திற்கு தொடங்குகின்றனர்.


வார இறுதி கொண்டாட்டம்: வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும் இளைஞர்கள் காலையில் 7மணி47 நிமிடத்திற்கு எழுந்திப்பதாக தெரிவித்தனர். அதேசமயம் இரவு ஆந்தைகள் எனப்படும் ராக்கோழி இளைஞர்கள் விடிய விடிய ஆட்டம் போட்டுவிட்டு காலையில் மறுநாள் காலை 10 மணிக்கே கண் விழிக்கின்றனர். அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இலேசான உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பதாகவும் இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட டாக்டர் ஜார்ஜ் ஹப்பர் டெலிகிராப் ஆங்கில நாளிதழில் தெரிவித்துள்ளார். அதிகாலையில் கண் விழிப்பது சுறுசுறுப்பானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட என்று தெரிவிக்கின்றது இந்த ஆய்வு முடிவு.

Sri Venkatachalapathi Darshanam...


இதே நாள்...


  •  கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள் ( 1956)
  •  அல்ஜீரியா தேசிய தினம்
  •  இந்தியாவில் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன(1956)
  •  மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது(1973)
  •  நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திர பிரதேச மாநிலமாக்கப்பட்டது(1956)

நாட்டின் 12 மாநிலங்களில் உள்ள 1,405 நகரங்களில், 50 சதவீத நகரங்களில் குடிநீர் வசதி மற்றும் கழிவுநீர் அகற்றும் வசதி இல்லை!


நாட்டின் 12 மாநிலங்களில் உள்ள 1,405 நகரங்களில், 50 சதவீத நகரங்களில் குடிநீர் வசதி மற்றும் கழிவுநீர் அகற்றும் வசதி இல்லை' என, அரசு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, துப்புரவு வசதி, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்டவை குறித்து மத்திய நகர்ப்புற அமைச்சகம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. 12 மாநிலங்களில் உள்ள 1,405 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 50 சதவீத நகரங்களில் இந்த அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என, கண்டறியப்பட்டுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் அமைத்து குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும். ஆனால், 50 சதவீத நகரங்களில் இந்த வசதி செய்து தரப்படவில்லை. இந்த நகரங்களில், 80 சதவீத வீடுகளில் ஐந்து மணி நேரத்துக்கும் குறைவான அளவே, குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகின்றன. இந்நகரங்களில் 70 சதவீத வீடுகளில் கழிவறை வசதியோ, கழிவுநீர் அகற்றும் வசதியோ இல்லை. மகாராஷ்டிராவில் 249 நகரங்கள் உள்ளன. இதில், நவி மும்பை மற்றும் மால்காபூரில் மட்டும் தான் 24 மணி நேர தண்ணீர் சப்ளை உள்ளது. பெரும்பாலான நகரங்களில் பாதாள சாக்கடையே கிடையாது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 19 இடங்களில் தான் உள்ளது. கர்நாடகாவில் 52 நகரங்களில் மட்டும் கழிவுநீர் அகற்றும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் 124 நகரங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்யும் வசதி செய்து தரப்படவில்லை.இந்த நகரங்களில் கழிவுநீர் அகற்றும் வசதியும் இல்லை. மத்திய பிரதேசத்தில் 46 சதவீத நகரங்களில் மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இவ்வாறு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து நகர்ப்புற நிர்வாகத்துறை இயக்குனர் சீனிவாஸ் சாரி குறிப்பிடுகையில், "பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நினைக்கும் அரசு, இது போன்ற அடிப்படை வசதிகள் விஷயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்' என்றார்.

ஜாமின் மனுவை எதிர்க்கப் போவது இல்லை என, எந்த காரணத்தை அடிப்படையாக வைத்து முடிவு எடுத்தீர்கள்' சி.பி.ஐ.,யிடம், சுப்ரீம் கோர்ட்!


 கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேரின் ஜாமின் மனுவை எதிர்க்கப் போவது இல்லை என, எந்த காரணத்தை அடிப்படையாக வைத்து முடிவு எடுத்தீர்கள்' என, சி.பி.ஐ.,யிடம், சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர்கள் சஞ்சய் சந்திரா, வினோத் கோயங்கா, ஹரி நாயர், கவுதம் தோஷி மற்றும் சுரேந்திர பிபரா ஆகியோருக்கு ஜாமின் அளிக்க, டில்லி சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது.ஆனாலும், தி.மு.க., எம்.பி., கனிமொழி, கலைஞர் "டிவி' நிர்வாகி சரத்குமார் மற்றும் ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால், கரிம் மொரானி உள்ளிட்டோரது ஜாமின் மனுவை எதிர்க்கப் போவது இல்லை என்றும் கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து, சஞ்சய் சந்திரா உள்ளிட்ட ஐந்து பேரும், ஜாமின் அளிக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில்,"ஜாமின் அளிக்கும் விவகாரத்தில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும், சி.பி.ஐ., சமமாக பார்க்க வேண்டும். ஆனால், எங்கள் ஐந்து பேருக்கும் ஜாமின் அளிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது' என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எச்.எல்.டாட்டு ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், "எந்த காரணத்தை அடிப்படையாக வைத்து, கனிமொழி உள்ளிட்டோரது ஜாமின் மனுவை எதிர்க்கப் போவது இல்லை என முடிவு செய்தீர்கள் என்பது குறித்து, நாளை (இன்று) கோர்ட்டில் பதில் அளிக்க வேண்டும்' என, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டனர். சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ்: டில்லி ஐகோர்ட்டில், ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில்,"ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தில், எங்களுக்கு 9.9 சதவீதத்துக்கும் குறைவான பங்குகளே இருந்தன. அந்த குறைவான பங்குகளும், ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவதற்கு முன்பே விற்கப்பட்டு விட்டன. எனவே, ஸ்வான் நிறுவனம், எங்களின் துணை நிறுவனம் என்ற, சி.பி.ஐ.,யின் குற்றச்சாட்டு தவறானது. எனவே, ஸ்பெக்ட்ரம் வழக்கில் எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்ய வேண்டும்' என கூறப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி முக்தா குப்தா முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார். ஆனாலும், தொலைத் தொடர்புத் துறை, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்ற, ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் கோரிக்கையை, நீதிபதி நிராகரித்து விட்டார்.

குழந்தை தயங்கும் பெண்கள்!


தவமாய் தவமிருந்து பிள்ளை பெற காத்திருக்கும் பெண்களை அதிகமாக கொண்ட நமது நாட்டில், பிள்ளை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட நினைக்கும் நவநாகரீக பெண்களும் அதிகரித்து வருகிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்ள பெண்கள் ஆசைப்பட்ட காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. தற்போது பெண்கள் அதுவும் நகரவாசிகள் குழந்தை பெற்றுக் கொள்ளவே தயங்குகின்றனர். 'நாம் இருவர் நமக்கேன் இன்னும் ஒருவர்' என்ற புதுமொழியை உருவாக்கும் பெண்கள் அதிகரிக்க ஆரம்பித்து விட்டனராம். முன்பெல்லாம் குழந்தை பெறுவதில் கணக்கே இருக்காது. உடம்பு தாங்கும் வரை பிள்ளை பெற்றுக் கொள்வார்கள் அந்தக் காலத்துப் பெண்மணிகள். இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் பல குழந்தைகள் அன்று இருந்தனர். ஆனால் இன்று 'கூட்டமே' இல்லாத குடும்பங்கள்தான் அதிகமாக உள்ளது.

குழந்தை பெற்றுக் கொள்ள இந்தக் காலத்துப் பெண்கள் யோசிக்க, தயங்க பல காரணங்கள். வேலைக்குப் போகும் பெண்களாக இன்றைய மகளிர் அதிகளவில் இருப்பதால் வேலைக்கும் போய்க் கொண்டு குழந்தையையும் பார்த்துக் கொள்ள சிரமப்படுகின்றனர். குழந்தை பெற்றால் எடை அதிகரித்து அழகு போய் விடும். உடல் தளர்ந்து விடும், உடல் கட்டு குலைந்து விடும். குழந்தைக்காகவே முழு நேரத்தையும் செலவிட வேண்டும். நினைத்தப்படி நினைத்த இடத்திற்கு எல்லாம் செல்ல முடியாது. கணவரை முன்பு போல் கவனிக்க முடியாது. இதெல்லாம் குழந்தை பெறத் தயங்கும் பெண்கள் கூறும் சில காரணங்கள். கஷ்டப்பட்டு உழைத்து அலுவலகத்தில் நல்ல பெயர் எடுத்திருப்போம். பதவி உயர்வு கிடைக்கும் நேரத்தில் பிரசவ லீவு போட்டால் பதவி உயர்வு போய் விடும். இப்படிப் பல காரணங்களை வைத்திருக்கிறார்கள் இந்தப் 'பிள்ளை விரும்பா' பெண்கள். இதனால் வேலைக்குப் போகும் பெண்கள் முடிந்த அளவுக்கு குழந்தை பெறுவதை தள்ளிப்போடுகின்றனர். உனக்கு கல்யாணமாகி 4 ஆண்டுகளாகிவிட்டதே, குழந்தை பெறும் எண்ணமே இல்லையா என்றால், அதுக்கென்ன அவசரம், அப்புறம் பார்க்கலாம் என்கிறார்கள் பலர்.

நம் பாட்டிமார்கள் 12,13 குழந்தைகள் பெற்றனர். நம் அம்மாமார்கள் 2 முதல் 5 வரை பெற்றனர். தற்போதுள்ள தலைமுறை குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா என்று யோசிக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்வது சுமையல்ல அதுவும் ஒரு சுகம் தான் என்பதை இந்தப் பெண்கள் உணர வேண்டும். தாய்மைப் பேறு என்பது எல்லோருக்கும் கிடைக்காதது. எத்தனையோ பெண்கள் குழந்தைப் பேறுக்கு வழியில்லாமல் மனதுக்குள் ஒடிந்து புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் கிடைக்காத பேறு கிடைக்கும்போது அதை தட்டிக் கழிப்பது நிச்சயம் தவறு. காலம் போன பின்னர் குழந்தை குறித்து யோசித்து, அப்போது நமது உடல் அதற்கேற்ற தகுதியைத் தாண்டி போகும்போது வருத்தப்படுவதற்குப் பதில், முடிந்தவரை சீக்கிரமே ஒன்றோ அல்லது இரண்டோ பெற்றுக் கொண்டு முழுமை அடைவது புத்திசாலித்தனம் இல்லையா...?

தமிழ் சினிமாவுக்கு 80 வயது பூர்த்தியானது !

தமிழின் முதல் பேசும் சினிமா 'காளிதாஸ்' 1931ம் ஆண்டு தயாராகி வெளியானது. வட சென்னையில் முருகன் தியேட்டர் என்று அறியப்பட்ட கினிமா சென்ட்ரலில் இந்தப் படம் வெளியானது. டிபி ராஜலட்சுமி, பிஜி வெங்கடேசன், ராஜாம்பாள், சுசிலா தேவி, எல் வி பிரசாத், எம்எஸ் சந்தானலட்சுமி உள்ளிட்டோர் நடிக்க, மதுரகவி பாஸ்கர தாஸ் கதை, பாடல்கள், இசை ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றிருந்தார். ஹெச் எம் ரெட்டி இயக்கினார். அர்தேஷ்ரி எம் இராணி தயாரித்த இந்தப் படம்அக்டோபர் 31ம் தேதி வெளியானது.  மும்பையில் தயாரான இந்தப் படத்தின் ரீல் பெட்டிகளை ரயிலில் சென்னை கொண்டுவந்த போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி மலர் தூவி, மேள தாளம், தாரை தப்பட்டை முழங்க, குதிரை வண்டியில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு போய் கொண்டாடினார்களாம். இந்த 80 வருட சினிமா சரித்திரத்தில் முதல் வெற்றிப் படம் என்ற பெருமையும் காளிதாசுக்கே உண்டு. சினிமா என்ற ஆச்சர்யம் தாங்காமல் ரசிகர்கள் திரும்பத் திரும்ப வந்து பார்த்தனர் இந்தப் படத்தை. இந்தப் படத்தில் பணியாற்றிய பலரும் பெரும் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தனர் பின்னாளில். எல் வி பிரசாத் பெரிய சினிமா சாம்ராஜ்யத்தையே நிறுவினார். தமிழ் சினிமா உள்ளவரை நிலைத்திருக்கும் படமாக மாறிவிட்டது காளிதாஸ்.

அனைத்திலும் ஒன்று-அரிதான நாள்!


தேதி, மாதம், வருடம் என அனைத்திலும் ஒன்று வருவதால் இந்தநாள் அரிதானதாக கருதப்படுகிறது. 1-11-11 என ஐந்து ஒன்றுகள் இன்றைய தினம் வந்துள்ளது. இதேபோன்ற நிகழ்வு ஏற்கனவே ஜனவரி மாதம் 1-1-11, 11-1-11 என இரண்டுமுறை இதுபோன்ற அதிசய தேதிகள் வந்துள்ளன.

நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழ்வு: இதேபோல் நவம்பர் 11 –ம் தேதி 11-11-11 என ஆறு ஒன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அரிதான நிகழ்வு நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 1911 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி ஆறு ஒன்றுகள் வந்துள்ளன. இதனையடுத்து நூறு ஆண்டுகள் கழித்து தற்பொழுதுதான் ஆறு ஒன்று வருகிறது. இந்த ஆண்டு ஆறு கிரகணங்கள் தோன்றிய வகையிலும் இந்த ஆண்டு அரிதான ஆண்டாக கருதப்படுகிறது. எண் கணிதம் எனப்படும் நியூமராலஜிப்படி ஒன்று என்பது முதன்மையை குறிக்கும். இன்றைய தினம் பிறந்தவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் முதன்மையானவர்களாக இருப்பார்கள் என்பது எண்கணித நிபுணர்களின் கருத்து. நடிகை ஐஸ்வர்யா ராயும் கூட வருகிற 11ம் தேதி அதாவது 11-11-11 அன்று பிரசவிப்பார் என்ற பலமான எதிர்பார்ப்பு நிலவுகிறது, இதை வைத்து மும்பையில் பெட்டிங்கும் படு சூடாக நடந்து வருகிறது என்பது நினைவிருக்கலாம். எந்த எண்ணாக இருந்தால் என்ன, எதிலும் நம்பர் ஒன்னாக இருக்க முயற்சித்தால் போதும்...!

உங்களுக்கு ஏற்ற துணையாக நான் இருப்பேன்!


 திருமணமாகாத வாலிபர்களைக் குறி வைத்து நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ரேஞ்சுக்கு மயக்கும் வகையி்ல் பேசி பணமோசடியில் ஈடுபட்ட புதுச்சேரி பெண் அவரது கணவருடன் கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் விஜய். இவர் சென்னை கமிஷனர் திரிபாதியிடம் எஸ்.எம்.எஸ். மூலம் தான் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்தார். இது குறித்து விஜய் அளித்துள்ளபுகாரில் கூறியிருப்பதாவது, எனது செல்போன்னுக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் என் பெயர் அகிலா. என்னை பற்றிய தகவல்களை பெற இணையதளத்தை பார்க்கவும் என்று கூறி குறிப்பிட்ட இணையதள முகவரி அனுப்பப்பட்டு இருந்தது. அந்த இணையதளத்தில் தகவல்களை பெற ரூ.2,000 கேட்டிருந்தனர். அதை நான் செலுத்தினேன். ஆனால் எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங், துணை கமிஷனர் ராதிகா ஆகியோர் மேற்பார்வையில் சைபர் கிரைம் கூடுதல் துணை கமிஷனர் சுதாகர், இன்ஸ்பெக்டர் அன்பரசன் ஆகியோர் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் புதுச்சேரியைச் சேர்ந்த சித்ரா என்பவர் அவரது கணவர் வெங்கடேசனுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. விஜய் உட்பட 4 வாலிபர்களிடம் இந்த தம்பதியர் பணமோசடியில் ஈடுப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

திருமண தகவல் மைய இணைய தளங்கள் மூலம் திருமணமாகாத வாலிபர்களின் மொபைல்போன் நம்பர்களை பெற்றிருக்கிறார் சித்ரா. அதில் சிலரை மொபைல்போனில் அழைப்பார். அப்போது திருமண தகவல் மைய இணையதளத்தில் உங்கள் விவரங்களை பார்த்தேன். உங்களுக்கு ஏற்ற துணையாக நான் இருப்பேன் என நினைக்கிறேன் என மயக்கும் குரலில் தெரிவிப்பார். இதில் மயங்கும் சிலர் சித்ரா அளிக்கும் இணையதள முகவரியில் சென்று பார்ப்பார்கள். ஆனால் தகவல்களை பெற கட்டணம் செலுத்துமாறு தெரிவிக்கப்படும். இதில் சிலர் கட்டணம் செலுத்தி ஏமாந்துள்ளது தெரிய வந்துள்ளது. சித்ராவையும், அவரது கணவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் சோனியா, ராகுலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்துள்ளதாகக் கூறி வழக்கறிஞர் மனோகர்லால் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, சுவிஸ் நாட்டில் ஒரு வங்கி கணக்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்கு சோனியா மற்றும் ராகுல்காந்திக்கு சொந்தமானது என்ற சந்தேகம் உள்ளது. இந்த கணக்கு மீது இவர்கள் இருவரும் இதுவரை உரிமை கோரவில்லை என்ற போதிலும், இந்த சொத்துக்கள் இவர்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். கடந்த தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில், இந்த விபரத்தை இருவரும் மறைத்துவிட்டனர். எனவே, சுவிஸ் வங்கியில் உள்ள சம்பந்தப்பட்ட கணக்கு விபரங்களை பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல சோனியா மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் தங்களது நிலையை விளக்கவும், அந்த கணக்கில் உள்ள பணத்தை இந்திய வங்கிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அவர்களின் நோக்கம் என்ன?

அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? 
கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில்


இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.

பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.
...
இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.

உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார்.ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?

தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா? அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.

இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.

திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:
1.இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.

2. ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.

3.கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும்

பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.

4.நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.

5.இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம்

இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.

இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.

இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்....

குடிமக்கள் சட்டம்...?



குடி’யின் கெடுதல் குறித்து, தமிழ் சமூகத்தில் எவருக்கும் கட்டுரை எழுதி புரிய வைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இன்று தமிழகத்தில், பத்து விழுக்காடு மக்கள் அதாவது ஏழரை லட்சம் மக்கள் தினமும் மது அருந்துகின்றனர் என்றும், மேலும் 13 வயது பள்ளி மாணவர்களும் கூட மது அருந்துவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டிய நமது ஆட்சியாளர்கள், குடும்பத்தலைவனை குடி பழக்கத்திற்கு அடிமையாக்கி அந்த குடியானவனைக் கொன்றுவிட்டு, அதன் மூலமாகக் கிடைக்கும் வருவாயைக்கொண்டு, அவனது மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்கி வருகின்றனர். இப்படியாக ஒரு நாட்டின் குடிமக்கள், அவர்களின் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு போதைக்கு அடிமையாக்கப்பட்டு வருகின்றனர் என்பது கண்கூடு.

இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் மது விலக்கு“உணவு சத்துக்களை மேம்படுத்தவும், அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும், நல்வாழ்வினை உயர்த்தவும், தேவையானவற்றைத் தமது தலையாய கடமைகளாக அரசு கருத வேண்டும். அதிலும் குறிப்பாகப் போதையூட்டும் மதுவகைகளையும், உடலுக்குத் தீங்கு பயக்கும் நச்சுப் பொருள்களையும், மருந்துக்காக அன்றி வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மதுவிலக்கை அமல்படுத்த முயற்சி செய்யவேண்டும்.” என்று இந்திய அரசியலமைப்பு சாசனம், 1950ல் ‘அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ள, பிரிவு 47 கூறுகிறது.

மது விலக்கு:  போதை தரக்கூடிய, மது வகைகளை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும், அதனை அருந்துவதற்கும் சட்டப்படி தடை செய்தல் முறையே மது விலக்கு என குறிப்பிடப்படுகிறது.  தமிழ் சமூகத்தில் தனி மனித வாழ்க்கையில் பெரும் ஒழுக்கக்கேடுகளாகக் கருதப்படுகின்றவற்றில் மது பழக்கமும் ஒன்று. பௌத்த மதத்தைப் பின்பற்றுவோர் கடைபிடிக்கும் ‘’பஞ்ச சீலம்’’ என அழைக்கப்படும் ஐந்து கொள்கைகளில், நான்காவது கோட்பாடானது, மதுவையோ அல்லது வேறு வகையான போதை பொருட்களையோ பயன்படுத்தக் கூடாது என்பதாகும். உலக பொதுமறையாம் ‘திருக்குறளில்”, அறத்துப்பால் எனும் தலைப்பில் இயற்றப்பட்டுள்ள குறள்களில் 93வது அதிகாரமாக “கள்ளுண்ணாமை” குறித்து அய்யன் வள்ளுவரால் பாடப்பட்டுள்ளது.. மது விற்பனையின் மூலமாகக் கிடைக்கும் வருவாயினை, ஒரு நாட்டின் கல்வி மற்றும் பொது சேவைக்குப் பயன்படுத்துவது குற்றம். மேலும் மது விற்பனையின் மூலமாக பெறப்படும் பணமானது கறை படிந்த ஒன்று. எனவே அது தேசத்தைச் சீரழித்துவிடும் என்று இந்தியாவின் தேசத்தந்தையாகப் போற்றப்படும், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எச்சரித்தார். மது விலக்கை வலியுறுத்தி ராஜாஜி “விமோசனம்” என்ற பெயரில் இதழ் ஒன்றை நடத்தினார். தந்தை பெரியார், 1921ம் ஆண்டில் ஈரோட்டில் நடந்த கல்லுக்கடை மறியல் போராட்டத்தில் பங்குபெற்றதோடு மட்டுமின்றி, அதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் தனக்குச் சொந்தமாக தாத்தம்பட்டியிலுள்ள தோப்பிலிருந்த ஐநூறு தென்னை மரங்களையும் வெட்டினார்.

தமிழ்நாட்டில் மது விலக்கு: ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது, கடந்த 1937ம் ஆண்டில் ராஜாஜியின் ஆட்சியின்போது “தமிழ்நாடு மது விலக்கு சட்டம்” என்றொரு சட்டம் இயற்றப்பட்டு தமிழகத்தில் மது விலக்கு அமலுக்கு வந்து விட்டது. இப்படியாக, இந்தியாவில் மதுவிலக்கு கொண்டு வந்ததற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. கடந்த, 1952ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் முழு மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது ராஜாஜி முதல்வராக இருந்தார். பின்னர், காமராஜர் ஆட்சி காலத்திலும், 1967ம் ஆண்டு அண்ணா முதல்வரான பிறகும்கூட தொடர்ந்து மது விலக்கு அமலில் இருந்தது.

தமிழ்நாட்டில் மது விலக்கு நீக்கம்: சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டிலும், குஜராத் மாநிலத்திலும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் மதுவிலக்கை மற்ற மாநிலங்களுக்கும் பரவலாக்கும் நோக்கத்தில் மத்திய அரசானது, புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்கப்படும் என்றும், ஆனால் ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்திவரும் மாநிலங்களுக்கு மானியம் ஏதும் வழங்கப்படமாட்டாது என்றும் 1970ம் ஆண்டில் அறிவித்தது. ஏற்கனவே மதுவிலக்கை அமல்படுத்திவரும் மாநிலங்களுக்கு இப்படி தண்டனை அளிப்பதா? எங்களுக்கும் மானியம் கொடுங்கள், என்று அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தபோதும் அது ஏற்கப்படாததைத் தொடர்ந்து, அவரது ஆட்சியின் போது, 1971 ஆகஸ்டு மாதம் 30ம் நாள் முதல், மதுவிலக்கு தள்ளி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

மது விலக்கை நீக்கும் அவசர சட்டம்:  தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு வழிவகுக்கும் வகையில் ‘’தமிழ்நாடு மது விலக்கு சட்டம்,1937 அமல்படுத்தப்படுவது அடியோடு நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும், அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’’ என்றும் கூறி, அவசர சட்டம் ஒன்றை கடந்த 1971ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30ம் நாள், சட்டசபை கூட்டம் கூட்டப்படாமலேயே, அப்போதைய ஆளுனர் கே.கே.ஷா பிறப்பித்தார். மேலும், தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி கள்ளுக்கடைகள் திறக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கருணாநிதி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகள், சாராயக்கடைகள், ஒயின் மற்றும் மது கடைகள் திறக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 7,395 கள்ளுக்கடைகளும், 3,512 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. சென்னை நகரில் 120 ஒயின் மற்றும் மது கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. பிற மாவட்டங்களில் தலா 60 முதல் 100 கடைகள் வரையிலும் திறக்கப்பட்டன. 

 மீண்டும் மது விலக்கு:  1973ம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் முதல் படியாக, 1973 ஜுலை 30ம் நாள் முதல் 7 ஆயிரம் கள்ளுக்கடைகளும், 1974 செப்டம்பர் 1ஆம் தேதி சாராயக் கடைகளும் தமிழ்நாட்டில் மூடப்பட்டன. 1981ம் ஆண்டில் மே மாதம் கள் மற்றும் சாராயத்தை உரிமத்துடன் விற்பனை செய்யலாம் என்று கூறப்பட்டது. 1984 வரையிலும், மதுபானங்களைத் தயாரிக்கும் உரிமம் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் ஜுலை மாதம் “தமிழ்நாடு மாநில வாணிப கழகம்”(TASMAC) நிறுவனம் உருவாக்கப்பட்டு, அந்த நிறுவனமானது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள் மற்றும் சாராயத்துக்கான மொத்த விற்பனைக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.

மது விலக்கு சட்ட திருத்தம், 2003:  ‘’தமிழ்நாடு மது விலக்கு சட்டம், 1937ல், கடந்த 29.11.2003 அன்று, அப்போதைய ஜெயலலிதா ஆட்சியின் போது, மது தொடர்பாக சில்லறை விற்பனை செய்வதற்கும் அதிகாரம் பெற்ற ஒரே முற்றுரிமையாளராக, “தமிழ்நாடு மாநில வாணிப கழகம்” (TASMAC) மட்டுமே விளங்கும் என்று சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அடுத்து 2006ல் பொறுப்பேற்ற கருணாநிதி ஆட்சியின் போதும் அதேநிலைதான் தொடர்ந்தது. 

மது விலக்கு கோரி வேண்டுகோள்: கடந்த 2008ம் ஆண்டு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், அப்போதைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அவர்களது கோரிக்கையை பரிசீலித்து படிப்படியாக மது விலக்கை நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமென்றும், 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் மட்டும் தமிழகம் முழுவதிலும் 1,300 மதுக் கூடங்களும், 128 சில்லரை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில், படிப்படியாக முழு மது விலக்கினை எய்திடும் வகையில், முதற்கட்டமாக இனி புதிய மதுக்கடைகள் எதையும் தமிழகத்தில் திறப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே 6 சாராய ஆலைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்த நிலையில் தற்போது மேலும் 8 ஆலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையின் கருத்து: டாஸ்மாக்கினால் ஆண்டுக்கு 14000 கோடி வருமானம் வருகிறது. டாஸ்மாக்கை மூடினால், இந்த வருமானம் சமூக விரோதிகளுக்குப் போய்ச் சேர்ந்துவிடும். அதேவேளையில், இந்த வருமானத்தை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கினால், மாநில அரசு அவற்றை மூடுவதற்குத் தயார். தமிழகத்தில் இருந்த கள்ளசாராய வியாபாரிகள் பெருமளவில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் மாநிலத்தில் சாராயம் விற்பனை முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில், மதுவிற்பனை நடக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அப்படி செய்தால் தமிழகம் தனித்தீவு போல காட்சியளிக்கும். மேலும், கள்ளச்சாராயமும், மதுவிற்பனையும் நடக்க வழிவகுக்கும். தமிழகத்தோடு சேர்ந்து, அண்டை மாநிலங்களும் மதுவிலக்கை அமல்படுத்தினால் அது பூரண மதுவிலக்கிற்கான வெற்றியை தரும் என்றும் தமிழ்நாட்டின், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் நாள் சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.  மது விலக்கு அமலுக்கு வந்தால் கள்ள சாராயம் பெருகும் என்பது ஆட்சியாளர்களால் முன் வைக்கப்படும் வாதங்களில் ஒன்று. ஆனால் மது விலக்கு அமலில் இல்லாத தற்போது, கடந்த ஏப்ரல் 25, 2011ல், தமிழக அரசு கொடுத்த செய்தி அறிக்கையின் படி, தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்தப்பட்ட தொடர் மது விலக்கு சோதனையில் 1,057 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 134 பெண்கள் உள்பட 1,002 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் படி பார்த்தால், கள்ள சாராயம் எல்லா காலத்திலும் காய்ச்சப்படுகிறது என்பது புலனாகிறது. 

தமிழ் சினிமாவில் மது விலக்கு:  1980களில் உன்னால் முடியும் தம்பி, பேர் சொல்லும் பிள்ளை, பொன்மனச் செல்வன் என்பது போன்ற பல்வேறு தமிழ் திரைப்படங்கள் மது விலக்கு தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. 

மதுவினால் விளையும் தீமைகள்:  மது அருந்தியதால் ஏற்பட்ட போதையில் தன் மகளிடமே தகாத முறையில் நடந்த தந்தை, தன் மருமகளிடம் மது போதையில் மதிகெட்டு நடக்கும் மாமனார், தனக்கு மது அருந்த பணம் தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பெற்ற தாயைக் கொலை செய்ய துணிந்த மகன், நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறையினரே மது அருந்திவிட்டு, பொது இடத்தில் கட்டிபுரண்டு சண்டை, தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துகளில் 60 விழுக்காடு மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதால் தான் என்கிறது புள்ளிவிபரம்.....இப்படி மது பழக்கம் கருவையே கருவருக்கின்றது.  “மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும், உடலுக்கும் கேடு” என்று பள்ளி பாட புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதைப்படிக்கும் மாணவன் பள்ளியை விட்டு வெளியே வந்தால் அங்கு தென்படுவது டாஸ்மாக் கடை. என்னவொரு விந்தை? அதேபோல, குடி குடியைக் கெடுக்கும்” என்ற தமிழ் பழமொழியானது, அனைத்து மது புட்டிகளிலும் அச்சடிக்கப்பட்டு அரசால் விநியோகிக்கப்படுகிறது. போதாததற்கு, திரைப்படங்களில் மது அருந்தும் கட்சிகளின் போது, இதே வாசகம் ஒளிபரப்பப்படுகிறது. இதையெல்லாம் காணும்போது நகைச்சுவை எண்ணம் தான் மேலேழுகிறதேதவிர, “குடி” குறித்த விழிப்புணர்வு எண்ணம் ஏதும் தோன்றுவதில்லை. ஒரு நாட்டின் மண்ணின் மைந்தன், தன்னை அந்த நாட்டின் “குடிமகன்” என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியாத வகையில், இங்கே “குடிமகன்” என்ற வார்த்தைக்கு அர்த்தமே மாறிப்போய் உள்ளது.

மது விற்பனை செய்வது தனது அடிப்படை உரிமை என்று எவரும் கோர முடியாது என்றும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைவிற்குள் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது என்ற வாதத்தை, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சூழலில் எடுக்க முடியாது என்பது போன்ற தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தொடர்ந்து வழங்கி வந்தாலும், மது விலக்கு தொடர்பான சரத்தானது, இந்திய அரசியலமைப்பு சாசனத்தில், ‘அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள்’ என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ளதால், அது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது அந்தந்த மாநிலங்கள் மட்டுமே. இதனால் இதில் நீதிமன்றங்களால் தலையிட முடியாத சூழலே நிலவுகிறது. ஆரம்பக் கல்வி வழங்க வேண்டியது, எப்படி அரசின் நெறியுறுத்தும் கொள்கைகள் என்பதிலிருந்து, அடிப்படை உரிமைக்கு மாற்றப்பட்டதோ அதேபோல, மது விலக்கும் அடிப்படை உரிமைக்கு மாற்றப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். பூரண மது விலக்கு மட்டுமே ஒரு நாட்டைத் துடிப்புடன் வைத்திருக்க முடியும்.

நன்றி: இராபர்ட் சந்திரகுமார்.

21 வயதில் தேர்ச்சி அடைந்த தமிழகத்தின் இளம் பெண் IPS அதிகாரி!



வாழ்க்கையின் எந்தத் தேர்விலும் வெற்றிபெற கடின உழைப்பு, ஈடுபாடு, நேர்மறை எண்ணம் ஆகிய மூன்று தோழர்கள் போதும்! - ரம்யா பாரதி IPS

ஆயிரம் மரம் வைத்த திம்மக்கா!


எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில்... இன்று சாலை நெடுக இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் சலசலக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை முழுக்க வரிசையாக (சாலுத) நின்று, ஊருக்கே நிழலாற்றும் அம்மரங்களை நட்டு வளர்த்த திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது... 101.. இந்த பசுமைச் சேவைக்காக... சிறந்த தேசியக் குடிமகன் விருது, நான்கு குடியரசுத் தலைவர்களின் கையால் பெற்ற விருதுகள், மூன்று பிரதமர்களிடமிருந்து பெற்ற விருதுகள், பல முதலமைச்சர்கள் அதிசயித்து அளித்த மாநில விருதுகள், தன்னார்வ, பெண் நல நிறுவனங்கள் வழங்கிய விருதுகள், பட்டங்கள் என குவித்திருக்கும் திம்மக்கா பாட்டியின் கூதூர் கிராமம் இருப்பது... செல்போன் சிக்னல்கூட கிடைக்காத, பெங்களூரு ஊரக மாவட்டமான மாகடி தாலுகாவில்! பயணம் நெடுகிலும் திம்மக்கா பாட்டி வளர்த்திருக்கும் ஆலமரங்கள் தலையசைத்து வரவேற்கின்றன. வாசலில் நம்மைக் கண்டவுடன், முந்தானையில் முடிந்திருந்த கசங்கிய 10 ரூபாய் நோட்டைக் கொடுத்து, டீ வாங்கிவர ஆள் அனுப்புகிறார். உடனடியாகக் குளித்து, விபூதி பூசி, பளிச்சென அணிந்து சிரிக்கிறார்... ஐந்து நிமிடங்களுக்குள்! ''ஏழைக் குடும்பத்துல பிறந்தவ நான். 16 வயசுல, என் எசமான் சிக்கையா கையில புடிச்சுக் கொடுத்துட்டாங்க. பேகூர்ல இருந்து கூதூருக்கு வந்துட்டோம். கல்யாணமாகி 10 வருஷம் ஆகியும், குழந்தை எதுவும் உண்டாகல. ஏறாத கோயில் இல்லை. விரதம் இருந்தே உடம்பு வீணா போச்சு. அக்கம்பக்கம் ஜாடை மாடையா பேசின பேச்சு, உயிரை வதைச்சுது. காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் காட்டுல உழைச்சுட்டு வீடு வந்தா, சோறு இறங்காது... நிம்மதியான தூக்கமும் இருக்காது. ஒரு கட்டத்துல தூக்கு மாட்டிக்கலாம்னு நினைக்கற அளவுக்கு மனசு வெறுத்துட்டேன்'' இதைச் சொல்லும்போது, இந்த 101 வயதிலும் கண்கள் இடுங்குகின்றன.

''வயித்துல சுமந்து வளர்க்கறது மட்டும்தான் உசுரா..? ஆண்டவன் படைப்புல ஆடு, மாடு, மரம், செடினு எல்லாமே உயிருதான்ங்கிற உண்மையை, அப்போ என் மனசு தவிச்ச தவிப்பு மூலமா உணர்ந்தேன். 'குழி பறிச்சு, கன்று நட்டு, தண்ணிவிட்டு... அந்தச் செடியையே புள்ளையா வளர்ப்போம். ஊர்ல எல்லாரோட புள்ளைகளும் அவுங்கவங்க அப்பன், ஆத்தாவைத்தான் பார்த்துக்குவாங்க. ஆனா, என் புள்ளைங்க வளர்ந்து, இந்த ஆத்தாவுக்கு மட்டுமில்ல... ஊருக்கே நிழல் கொடுக்கும்’னு என் மனசுக்கு ஒரு தெளிவு கிடைச்சுது. இந்த கூதூர் முழுக்க பொட்டல் காடுதான். வெக்கையா தகிக்கும். ரோட்டோர சுமைதாங்கிக் கல் பக்கத்துல ஒரு ஆலங்கன்று நட்டு வளர்த்தேன். ஆரம்பத்துல, 'இது என்னாடி கிறுக்குத்தனம்?’னு கோபப்பட்டார் என் எசமான். ஆனா... அந்தச் செடி வேர் பிடிச்சு, இலை துளிர்த்து வளர்ந்தப்போ... வயிறு குளிர்ந்து, மனசு குளிர்ந்து நான் அடைஞ்ச சந்தோஷத்தை ரசிச்சவர், அதுக்குப் பிறகு மரம் நடுற வேலைகள்ல எனக்கு உதவிகள் செய்ய ஆரம்பிச்சார்! காடு, மேடுனு அலைஞ்சி, திரிஞ்சி நிறைய ஆலமரக் கன்றுகளா கொண்டு வந்து, பதியம் போட்டு வளர்த்து, கொஞ்சம் பெருசானதும், ரோட்டோரத்துல குழி தோண்டி நட்டோம். இப்படி ஆலமரக் கன்றுகளா நட்டுட்டே இருந்தோம். மழை வரும்போதே குழிவெட்டி சேமிச்சாதான் தண்ணி. அப்படி சேர்ந்த தண்ணியை கிணத்துல, குளத்துல இருந்து எடுத்துட்டு வந்து நானும் எசமானும் கஷ்டம் பார்க்காம ஊத்தி ஊத்தி வளர்த்தோம். ஒரு தடவை குடிக்கக்கூட தண்ணி இல்லாத அளவுக்கு பஞ்சம். பக்கத்து ஊர்ல இருந்து ஆளுக்கு ரெண்டு மண்பானையில தண்ணி எடுத்துட்டு வந்து செடிகளுக்கு ஊத்தினோம். சுடுவெயில்ல தலையில ஒண்ணு, இடுப்புல ஒண்ணுனு ரெண்டு பானையோட வரும்போது, கல் தடுக்கி விழுந்து, முட்டியில ரத்தம். கீழ கிடந்து அழ ஆரம்பிச்சுட்டேன். 'சரியாயிடும்’னு என் எசமான் பதறிக் கட்டுப்போட, 'தண்ணியெல்லாம் கொட்டிப் போச்சேனுதான் அழுவறேன்’னு நான் சொல்ல, கண்கலங்கிட்டார்!'' ''அப்படி நாங்க அரும்பாடுபட்டு வளர்த்த ஆயிரம் மரங்கள்தான், இன்னிக்கு உயர வளர்ந்து ஒய்யாரமா நிக்குது. இந்தப் பொட்டல் காட்டுக்கு வர்ற சாலையைச் சோலையாக்கித் தந்திருக்கு. தன் காலடியில கிடக்கிற அத்தனை பேருக்கும் நிழல் தருது. ஊரோட வெம்மையைத் தணிச்சு, குளிர்ந்த காத்தைக் கடத்துது. 'மரத்தை வெச்ச மகராசி, நீ நல்லா இருக்கணும்!’னு சனங்க எல்லாம் சொல்லும்போது, நல்ல புள்ளையைப் பெத்த புண்ணியவதி மனசு குளிர்ற மாதிரி, என் மனசும் குளிர்ந்து போகுது!''

திம்மாக்காவின் வார்த்தைகளை, சுற்றி நின்ற ஊர்க்கூட்டம் நன்றியும், நெகிழ்ச்சியுமாக ஆமோதித்தது ! திம்மக்கா பாட்டியின் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, இப்போது முதுமையில், தனிமையில் இருக்கிறார் பாட்டி. ஆனால்... சர்க்கரை, ரத்த அழுத்தம் என எந்த நோயும் இல்லை. கண் பார்வை அத்தனை துல்லியம். டெலிபோனில் பேசுமளவுக்கு கேட்கும் ஆற்றல். அவருடன் நடந்தால் மூச்சு வாங்குகிறது நமக்கு. அரசாங்கம் வழங்கும் முதியோர் நலத்திட்டத் தொகையான 500 ரூபாயை மட்டுமே ஆதார வருமானம். வாசலில் சாணி தெளிப்பது முதல் சமையல் வரை வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார் இந்த 101 வயதிலும்!  ''ஊர்ல இருந்து டவுன் ரொம்ப தூரம்ங்கறதால, அவசர ஆத்திரத்துக்கு மருத்துவ உதவி இல்ல; பிரசவத்துக்குப் போற பொண்ணுங்க ரொம்ப சிரமப்படுறாங்க. எனக்கு பெங்களூருல, கவர்மென்ட் வீடு கொடுத்துருக்கு. ஆனா, அதை நான் பார்த்ததுகூட கிடையாது. அதெல்லாம் எனக்கு தேவையில்ல... எங்க ஊருல ஆஸ்பத்திரி கட்டிக்கொடுத்தா போதும்!'' என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் இந்த 'செஞ்சுரி' பாட்டி... ஓர் ஆச்சர்யக்குறிதான்!’

நெகிழவைக்கும் சேலம் பெண்கள்!


வீடு வரை உறவு... வீதி வரை மனைவி'' என்றார் கண்ணதாசன். கணவரே இறந்துவிட்டால்கூட வீதி வரைதான் மனைவி. ஆனால், சாலை ஓரங்களில் கிடக்கும் சடலங்களையும் அரசு மருத்துவமனைகளில் கேட்பாரற்றுக்கிடக்கும் அநாதைப் பிணங்களையும் மனித நேயத்துடன் நல்லடக்கம் செய்துவருகிறார்கள் சேலம் 'லைஃப் டிரஸ்ட்’ அமைப்பைச் சேர்ந்த பெண்கள்! லைஃப் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர் தயாநிதி மாறன், ''நான் பள்ளி மாணவனா இருந்தப்ப அப்பா வுக்கு நெஞ்சு வலி வந்தது. உடனே, பாண்டிச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனாதான் பிழைப்பார்னு சொல்லிட்டாங்க. ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணி வண்டியும் வந்தது. ஆனா, எட்டாயிரம் பணம் கட்டினாத்தான் வண்டியை எடுக்க முடியும்னு சொல்லிட்டாங்க. அந்தத் தாமதத்துல அவர் இறந்தே போயிட்டார். அடக்கம் பண்ணக்கூட முடியாத அளவுக்கு வறுமை யில் வாடிய காலம் அது!''- என்று கண் கலங்கியவர், சின்ன இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்.

அப்பவே கஷ்டப்படுறவங்களுக்கு நம்மால முடிஞ்ச நல்லது செய்யணும்னு வைராக்கியம் உண்டாச்சு. படிச்சு முடிச்சு ஒரு நிலைமைக்கு வந்த உடனே, இந்த அமைப்பைத் துவக்கினேன். ஏகப்பட்ட பேர் பஸ்ஸ்டாண்டுலயும் சாலை ஓரத் துலயும் நிராதரவா கிடக்குறாங்க. அவங்க கிடைச்சதைச் சாப்பிட்டு வாழ்ந்து, வய சான பின்பு நடை தளர்ந்து, தவழக்கூட முடியாம முடங்கிக்கிடப்பாங்க. நாம அவங்களுக்கு காசு கொடுத்தாக்கூட அதை எடுத்துட்டுப் போய் சாப்பாடு வாங்கிச் சாப்பிடத் திராணி இருக்காது. அப்படி இருக்குறவங்களைத் தேடிப்பிடிச்சு நாங்க பராமரிக்கிறோம். அதேபோல, அநாதையா இறக்குற பலரது உடல் சீண்டுவார் இல்லாம கவர்மென்ட் ஆஸ்பத்திரிகளில் கிடக்குது. அந்த உடல்களை வாங்கி நல்லடக்கம் செய்யறோம். எங்கள் அமைப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்கள்தான். இயல்பாவே ஆண்களைவிடக் கருணை உள்ளம்கொண்டவங்க பெண்கள். கடந்த ஒன்றரை வருஷத்துல இதுவரை 198 அநாதை உடல்களை நல்லடக்கம் செஞ்சு இருக்கோம். ஆரம்பத்துல வசதி இல்லாம பாடையில் கட்டித் தூக்கிப் போயிட்டு இருந்தோம். அப்புறம் எங்க சேவையைப் பார்த்துட்டு, கருணை உள்ளம்கொண்ட சிலர் ஆம்புலன்ஸ்  ஒண்ணு வாங்கிக் கொடுத்தாங்க!'' என்கிறார் நெகிழ்வுடன். இதன் ஒருங்கிணைப்பாளர் கலைவாணி, ''ஒவ்வொருத்தரும் வாழ்ற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கணும்ங்க. எங்க வாழ்க்கைக்கு நாங்க அர்த்தம் கற்பிச்சிக்கிட்டு வர்றோம். நாளைக்கே நான் இறந்தாக்கூட, வாழ்க்கையை முழுசா வாழ்ந்து முடிச்ச மன நிறைவோட ரொம்பவும் சந்தோஷமா கண்ணை மூடுவேன். ஆரம்பத்துல இறந்த உடல்களைத் தூக்கும்போது பயமா இருந்துச்சு. வீட்லயும் கடும் எதிர்ப்பு. இப்ப எல்லாம் சரியாப்போச்சு. இந்த அமைப்புல இருக்குற சுமார் 20 பெண்கள் படிச்ச, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான். எந்த நேரம் கூப்பிட்டாலும் சிரமம் பார்க்காம இறுதிக் காரியத்துக்கு வந்துடுவாங்க!'' என்றார் கருணை மிளிர. ஊருக்குச் பலர் இவர்கள்போல வேண்டும்!

எ. டி. எம். கார்டு கிரிமினல்களின் புதிய அவதாரங்கள்!

.டி.எம். மையங்களைக் குறிவைத்து நடக்கும் மோசடிகளால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது. ஏற்கெனவே கனரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எஃப்.சி. போன்ற வங்கி களின் கார்டுகளை வைத்து இருந்தவர்களிடம் நூதன மோசடி செய்த, ஷார்ட்டி என்கிற உமேஷ் என்பவன் தலைமையில் செயல்பட்ட கும்பலை போலீஸ் பிடித்துவிட்டது. ஆனாலும், அவர்கள் திருடிய கார்டுகளின் ரகசியத் தகவல்களை வெளி நாடுகளில் உள்ள கிரிமினல்களிடம் விற்பனை செய்துவிட்டனர். அதனால் இங்கு இருப்பவர்களின் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை ஆன்-லைன் டிரான்ஸ்ஃபர் மூலம் கொள்ளை அடிப்பது தொடர்ந்து நடக்கிறது. அதனால் யாரும் பணத்தை இழந்துவிடாமல் இருக்க, 'உடனே பின் நம்பரை மாற்றுங்கள்' என்ற அவசர வேண்டுகோளை சென்னை போலீஸார் விடுத்தனர். கார்டு மோசடி எப்படி எல்லாம் நடந்துள்ளது என்பதை அறிந்து பதறிப் போயிருக்கிறார்கள் போலீஸார்! சென்னையைச் சேர்ந்த ஒரு பிரமுகர், 'நான் புதிய கிரெடிட் கார்டு கேட்டு விண்ணப்பித்து இருந்தேன். கார்டு எனக்கு வந்து சேரவில்லை. ஆனால், எனது கணக்கில் இருந்து ருபாய்  2.5 லட்சம் எடுக்கப்பட்டு இருக்கிறது!’ என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

உடனே அந்த வங்கியை போலீஸ் அணுகியபோது, 'புதிய கார்டை நாங்கள் அந்த வாடிக்கையாளருக்கு கூரியர் தபாலில் அனுப்பிவைத்தோம்' என்றனர். கூரியர் நிறுவன ஊழியர்களிடம், 'ஸ்பெஷல்’ விசாரணை நடத்தவே, உண்மையைக் கக்கிவிட்டனர் அவர்கள். ''கிரெடிட் கார்டை இவர்கள் எப்படி எடுக்கிறார்கள் என்பது அப்போதுதான் எங்களுக்கு முழுமையாகத் தெரிய வந்தது...'' என்கிறார்கள் போலீஸில்.''கூரியரில் அனுப்ப கிரெடிட் கார்டு வந்தால், உடனே பாலாஜி என்பவருக்குத் தகவல் சொல் வோம். அவர் நேரில் வந்து, 'ஹாட் ஏர் கன்' எனப் படும் சாதனம் மூலம் தபாலின் கீழ் பாகத்தைப் பிரிப்பார். உள்ளே இருக்கும் கார்டை எடுத்து இன்னொரு மிஷினில் 'ஸ்வைப்' செய்வார். எங்க ளுக்கு ஒரு கார்டுக்கு  1,000 தருவார். மற்றபடி வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது!'' என்று உண்மையைக் கக்கி இருக்கிறார் கூரியரைக் கொண்டுபோய் கொடுக்கும் ஊழியர் ஒருவர். அதையடுத்து கூரியர்ஊழியர்களான ஸ்ரீதர், விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். தபால்களைப் பிரித்துக் கொடுக்கும் பாலாஜி, வினோத் ஆகியோர் பிடிபட்டு இருக்கிறார்கள். இவர் களுக்குத் தலைவனாக செயல்பட்ட மனோஜ்குமார் ராஜசேகர் தப்பிவிட்டான். இவனைத் தேடும் பணி நடக்கிறது.இது தவிர, வேறு ஒரு திருட்டுக் கும்பல் முக்கிய மான இடங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளையும் இதற்குப் பயன்படுத்தி இருக்கிறது. 'ஸ்கிம்மர்' மிஷினை இந்த திருட்டுக் கும்பல் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் சில ஊழியர்களிடம் ரகசியமாக கொடுத்து இருக்கிறார்கள். வாடிக்கையாளர் கிரெடிட் கார்டை பங்க் ஊழியர் பயன்படுத்தும்போது, திருட்டுத்தனமாக ஸ்கிம்மர் கருவியிலும்  'ஸ்வைப்' பண்ணிவிடுவார். இந்த வகையில் மோசடி செய்த கும்பலும் இப்போது பிடிபட்டு இருக்கிறது.

கார்டு மோசடி குறித்துப் பேசும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, ''சமீபத்தில் ரிசர்வ் வங்கி மற்றும் சில வங்கிகளின் உயர் அதிகாரி களை அழைத்து கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங் முன்னிலையில் முக்கிய  ஆலோசனை நடத்தப்பட்டது. ஏ.டி.எம். மையங்களில் ரகசிய கேமரா, உரிய பயிற்சி முடித்த இளம் வயது செக்யூரிட்டிகள் நியமனம், சர்ப்ரைஸ் விசிட் போன்றவற்றை அறிவுறுத்தி இருக்கிறோம். மேலும், பணத்தை வாடிக்கையாளர் எடுத்ததும் எஸ்.எம்.எஸ். முறையில் தெரிவிப்பது, போட்டோ ஒட்டிய கார்டுகள் மற்றும் 'சிப்' கார்டுகளைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கி இருக்கிறோம். புதிதாக அனுப்பப்படும் கார்டு, சரியான வாடிக்கையாளரிடம் போய்ச் சேர்ந்ததா என்பதை உறுதிப்படுத்திய பிறகுதான் அந்த கார்டை ஆக்டிவேட் செய்யவேண்டும். மேலும் ஒரு திருட்டு நடந்துவிட்டால் அடுத்த நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விளக்க வேண்டும். இதை வங்கி தரப்பினரிடம் நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம். அதே போல், வாடிக்கை யாளர்களும் உஷாராக இருக்க வேண்டும். அடிக்கடி பின் நம்பரை மாற்ற வேண்டும். கார்டு சம்பந்தப்பட்ட தகவலை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும்போது ஏதாவது சிக்கல் என்றால், சம்பந்தம் இல்லாத நபர்களிடம் உதவி கேட்கக் கூடாது. கார்டு நுழைக்கும் இடத்தில் ஏதாவது ஸ்டிக்கர் போன்ற ஏதாவது புதிய பொருள்  தென்பட்டால், அந்த மிஷினைத் தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளிலும் கார்டைப் பயன்படுத்தும் வசதியைத் தேவை இல்லாமல் வைத்திருக்க வேண்டாம். ஆன்-லைன் பண பரிமாற்றத்தை உங்களுக்கான வங்கியின் அதிகாரபூர்வ வெப்-சைட்டில் மட்டுமே செய்ய வேண்டும். யாராவது போனிலோ, இ-மெயில் மூலமாகவோ உங்கள் கார்டின் விவரங்களைக் கேட்டால், தரவே கூடாது!'' என்றார்.

வங்கிக் கொள்ளைத் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர், ''பணம் அச்சடிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில், அதில், மூன்று பாதுகாப்பு அம்சங்களே இருந்தன. இப்போது 13 அம்சங்கள் இருக்கின்றன. ஏனென்றால், கிரிமினல்கள் புத்திசாலித்தனமாக ஒவ்வொரு பாதுகாப்பு அம்சத்தையும் பிரேக் செய்கிறார்கள். அதனால், புதுவிதப் பாதுகாப்பு அம்சங்களை அரசாங்கம் அடிக்கடி அமல்படுத்துகிறது. இப்போது இந்த கிரடிட் கார்டு மோசடியிலும் அதே பாணியில்தான் கிரிமினல்களுக்கும் போலீஸுக்கும் போட்டி நடக்கிறது. வங்கிகளும், வாடிக்கையாளர்களும் எங்களுடன் ஒத்துழைத்தால் எப்படிப்பட்ட கிரிமினலையும் பிடித்து உள்ளே தள்ளிவிட முடியும்...'' என்கிறார். வங்கி மற்றும் காவல் துறையுடன் இணைந்து செயல்பட்டால்தான், வாடிக்கையாளர்களது பணம் தப்பும்!

டூ வீலரை துரத்தும் 'வலி'கள்!


ருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலியும், கழுத்துவலியும் அழையா விருந்தாளிகளாக தானாகவே வந்து விடுகின்றன. ''வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது, வாகனத்தை ஓட்டும் முறைக்கும், நம் உடலுக்கும் கொடுத்தால், வலிகள் வராமலே தடுத்துவிடலாம்'' என்கிறார் பிசியோதெரபிஸ்ட் பிரேம்குமார். ''வாகனம் ஓட்டும்போது, கழுத்து, இடுப்புப் பகுதிக்கு முன்னும் பின்னும் இருக்கிற தசைப் பகுதிதான் நம் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள உதவி புரிகிறது. இந்த இரண்டு தசைப் பகுதிகளும் ஒன்றுக்கொன்று உறுதுணையாகச் செயல்பட வேண்டும்.

பொதுவாகவே, உடல் தசைகளின் அமைப்பு முறைப்படி வேலை செய்யச் செய்யத்தான் அதன் உறுதித்தன்மை அதிகரிக்கும். நாம் வாகனம் ஓட்டும்போது, எதிர்காற்றைக் கிழித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்தச் சமயத்தில் காற்று நம்மைப் பின்னோக்கித் தள்ளும். அப்போது நமது உடலின் பேலன்ஸ் மாறும். இதைச் சரி செய்வதற்கு, நாம் உடலை முன்னோக்கித் தள்ளுவோம். இதனால், நம் முன் பக்க தசை அதிக அளவில் முன்னோக்கி வேலை செய்யும். அந்தச் சமயத்தில், பின் பக்க தசைகளுக்கான வேலைப் பளு குறைவாகவே இருக்கும். இப்படி, பின் பக்க தசைப் பகுதி ஓய்வு நிலையிலேயே இருப்பதால், அதன் உறுதித் தன்மையை இழந்து, முதுகெலும்புகளுக்கு மத்தியில் இருக்கக் கூடிய இணைப்புகள் சரிவர செயல்பட முடியாத நிலை உருவாகிவிடும். இதன் காரணமாக, முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள சிறு துவாரத்திலிருந்து வெளிவரும் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும்.  மேலும் இடுப்பையும், கழுத்தையும் சுற்றி இருக்கிற தசைப் பகுதிதான், இடுப்புப் பகுதியிலுள்ள 5 பெரிய எலும்புகளுக்கும், கழுத்துப் பகுதியிலுள்ள 7 எலும்புகளுக்கும் பக்க பலமாக இருக்கிறது. இந்த இரண்டு பகுதிகளும் உறுதியாக இருந்தாலே வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய 70 சதவிகிதப் பிரச்னைகளைத் தவிர்த்துவிட முடியும்'' என்றவர், வலிகளைக் தடுக்கும் வழி முறைகளையும் விளக்கினார்.'இரண்டு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு இருவிதமான வலிகள் வரலாம். ஒன்று, தசை வலி; மன்றொன்று, முதுகு எலும்புகளிலுள்ள இணைப்புகள் தொடர்பானது. வலி ஏற்படும் போது, அது தசை வலியா அல்லது எலும்பு இணைப்புகள் தொடர்பான வலியா என்பதை நாமே எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.

நம் கட்டை விரலைத் தவிர, மற்ற நான்கு விரல்களின் நுனிப் பகுதி தசையை அழுத்திப் பார்க்கவும். அதில் வலி ஏற்பட்டால் அது தசை வலி. அப்படி இல்லாமல் கைகள் மரத்துப் போனது போன்று தோன்றினால், கழுத்துப் பகுதியில் உள்ள ஏதோ ஒரு நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். இதேபோல், இடுப்பு முதல் பாதம் வரை வலியோ அல்லது மரத்துப் போனது போன்ற உணர்வோ இருந்தால், இடுப்புப் பகுதியிலுள்ள நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். தசை வலியாக இருந்தால், சுடு தண்ணீரால், வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தே தசை வலியைச் சரி செய்து விடமுடியும். அதுவே மூட்டுகளில் வலியாக இருந்தால், பிசியோதெரபிஸ்டை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்'' என்றவர், வாகனம் ஓட்டுகிற முறையையும் விரிவாகக் கூறினார்.

''இன்றைய கல்லூரி மாணவர்கள் பைக் டேங்க் நோக்கி சாய்ந்த வண்ணம் ஓட்டுவது மாதிரியான பைக்குகளைத்தான் அதிகம் விரும்புகின்றனர். பைக்குகளும் ஸ்போர்ட்ஸ் மாடலிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. பைக்கினுடைய பவரையும், சிசி அளவையும் கவனிப்பவர்கள், வாகனத்தின் இருக்கையின் அமைப்பு தங்களுக்கு ஏற்றவாறு இருக்கிறதா என்பதைப் பார்க்க மறந்து விடுகின்றனர். குறிப்பாக, வயது அதிகமுள்ளவர்கள் முதுகை வளைத்து, சாய்ந்த வாக்கில் ஓட்டுவது என்பது முற்றிலும் தவிர்க்க வேண்டிய விஷயம். அதே போல், பைக் இருக்கையின் மிக முன்பாகவோ அல்லது மிகவும் பின்னாலோ அமர்ந்து ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். தினமும் கழுத்து மற்றும் இடுப்புப் பகுதிக்கான பிரத்யேக உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் உடல் வலிப் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்'' என்றவர், அதற்கான உடற்பயிற்சிகளையும் கூறினார்.

*வெறும் தரையில் நேராக மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பிறகு, இரண்டு முழங்காலையும் மடக்கி நெஞ்சோடு சில விநாடிகள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு, காலை மடக்கியவாறே தரையில் வைக்கவும். இப்படி தினமும் பத்து முறை செய்து வந்தால், உடலின் பின் பக்கத் தசைகள் விரிவடைந்து, ரத்த ஓட்டமும் சீராகும்.

*குப்புறப் படுத்துக்கொண்டு இரண்டு கைகளையும் நெற்றிக்குக் கீழாக வைத்துக் கொள்ளவும். பின்பு, ஒரு காலை மட்டும் நீட்டிக் கொண்டு, மற்றொரு காலைத் தூக்க வேண்டும். இதேபோல், அடுத்த காலையும் தூக்கி நீட்டவும். இப்படிச் செய்வதன் மூலம், இடுப்புப் பகுதியிலுள்ள தசைகள் வலுவாகும்.

* சேரில் அமர்ந்தபடியே, இரண்டு தோள் பட்டைகளையும், மேலே உயர்த்தி, சில விநாடிகள் கழித்துக் கீழே இறக்கவும். தினமும் இந்தப் பயிற்சியை பத்து முறை செய்து வந்தால், கழுத்து தொடர்பான வலிகளை எளிதில் தவிர்க்க முடியும்'' என்றார் பிசியோதெரபிஸ்ட் பிரேம்குமார்.


தமிழ்படம் அமுதனின் அடுத்த படைப்பு தலைவலி!


 தமிழில் வெளிவந்த கமர்சியல் படங்களைக் கிண்டல் அடித்து வெளிவந்தது  'தமிழ் படம்'.  மிர்ச்சி சிவா, திஷா பாண்டே நடிக்க, அமுதன் இயக்கி இருந்தார். 'க்ளவுட் நைன்' நிறுவனம் தயாரித்திருந்தது. அப்படத்தில் பல முன்னணி கதாநாயகர்களை, அவர்களது படத்தில் வரும் காட்சிகளை, பலவாறு கிண்டல் செய்திருந்தார்கள். 'தமிழ் படம்' இயக்குனர் அமுதன் இப்போது தனது அடுத்த பட வேலைகளைத் துவங்கிவிட்டார். இப்படத்தில் அஜீத்தைப் போல தோற்றமளிக்கும் ஒருவரும், விஜய்யைப் போல தோற்றமளிக்கும் ஒருவரும் நடிக்க இருக்கிறார்கள். 'தல' அஜீத் போலவும் 'தளபதி' விஜய் போலவும் இருக்கும் நடிகர்கள் நடிக்கும் இப்படத்திற்கு பெயர்  ' தலைவலி '


திபாவளி ரேசில் முந்திய வேலாயுதம்...!



விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளிவந்த படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வெளியிட்டார். 'ஏழாம் அறிவு' படத்துடன் 'வேலாயுதம்' படம் போட்டியிட்டது. ஏழாம் அறிவு படம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், 'வேலாயுதம்' 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டது. 'ஏழாம் அறிவு'  நேற்று வரை ( அக்டோபர் 31 ) 40.25 கோடியும், 'வேலாயுதம்'  40 கோடியும் வசூல் செய்துள்ளன. குறைந்த தியேட்டர்களில் வெளியிட்டாலும் 40 கோடி வசூல் செய்ததால் விஜய் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். விஜய் இதற்காக தனது வீட்டில் ஜெயம் ராஜா, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினருக்கு விருந்து அளித்தார். சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் இரண்டு அரங்கத்திலும் 'ஏழாம் அறிவு' படத்தினை திரையிட்டு இருந்தார்கள். இன்று முதல் அதில் ஒரு அரங்கில் 'ஏழாம் அறிவு'க்கு பதிலாக  'வேலாயுதம்' திரையிட்டு இருக்கிறார்கள். இரண்டாம் வாரத்தில் நிறைய தியேட்டர்களில்  'வேலாயுதம்' படத்தினை திரையிட முன்வந்ததை அடுத்து கடும் சந்தோஷத்தில் இருக்கிறாராம் விஜய்

ஹாலிவுட் தயாரிப்பில் விக்ரம்?

இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட படம் 'ஆதாமிண்டே மகன் அபு'. சலீம் அகமது என்ற இளம் இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தில் நாயகனாக நடித்த சலீம் குமாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழ் திரையுலகில் தற்போது ஒரு புது தகவல் பரவி வருகிறது. 'ஆதாமிண்டே மகன் அபு' பட இயக்குனர் சலீம் அகமது, நடிகர் விக்ரமை தொடர்பு கொண்டு, தான் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டாராம். 1520 முதல் 1600 ஆண்டு வரை கோழிகோட்டில் வாழ்ந்த சாமுத்திரி ராஜா என்பவரிடம் தளபதியாக இருந்தவர் குஞ்சலி மாராக்கர். ஒரு இந்து அரசரிடம் ஒரு முஸ்லீம் தளபதியாக இருந்து அவருக்காக போர்ச்சுகீச படையினரிடம் போரிட்டாராம். இருக்கிறார். இந்த வரலாற்று பதிவை படமாக்க முடிவு செய்து இருக்கிறாராம் சலீம். இதில் குஞ்சலி மாராக்கர் பாத்திரத்தில் நடிக்க விக்ரமை அணுகி இருக்கிறாராம் சலீம். இப்படத்தில் ஒரு ஹாலிவுட் நிறுவனம் தயாரிக்க முன்வந்து இருப்பதாக கூறி வருகிறார்கள்.

200 எஸ்.எம்.எஸ். வரை அனுப்பலாம்!

ஒரு சிம் கார்டில் இருந்து நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 100 எஸ்.எம்.எஸ்.கள் மட்டுமே அனுப்ப முடியும் என்ற வரம்பை, 200 எஸ்.எம்.எஸ்.களாக உயர்த்தியது டிராய். தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையமான டிராய், ஒரு சிம் கார்டில் இருந்து 100 நாளொன்றுக்கு எஸ்.எம்.எஸ்.கள் மட்டுமே அனுப்பலாம் என கட்டுப்பாட்டு விதித்திருந்தது. தற்போது, அந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, அதிகபட்சமாக 200 எஸ்.எம்.எஸ்.கள் வரை அனுப்பலாம் என டிராய் அறிவித்துள்ளது. செல்போன் சேவை நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளால், எஸ்.எம்.எஸ். வரம்பு மாற்றியமைப்பட்டுள்ளதாக டிராய் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. நாளோன்றுக்கு அதிகபட்சம் 200 எஸ்.எம்.எஸ்.கள் என்ற வரம்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பிரச்னை உங்களது புரிதல் சரியானதா?


இலங்கையில் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சம உரிமை கொடுக்கப்படவில்லை. இதனை எதிர்த்து ஆயுதப் போராட்டம் பிரபாகரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அவரது இயக்கம் 'விடுதலைப்புலிகள்' என்று அழைக்கப்படுகிறது.  அவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக தீவிரமாக, வீரமாக போராடினார்கள். இன்னும் "பயங்கரவாதிகள்" என்றும் அவர்கள் கூறப்பட்டார்கள். இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே, விடுதலைப்புலிகளை அழித்தல் என்ற பெயரில் தமிழ் மக்களை கொன்று குவித்தார்." 

இதுவே இன்றைய தமிழகத்தின் சாதாரண குடிமகன், இலங்கைத் தமிழர் நிலை பற்றி கொண்டுள்ள எண்ணம். ஆனால், இது ஒரு வெளித் தோற்றமே.  இலங்கையின் உண்மையான நாட்டு நிலமை எவ்வாறு இருந்தது / இன்னும் இருக்கிறது?அங்குள்ள தமிழ் மக்கள் ஏன் அமைதியாக வாழ முடியவில்லை? சிங்களர்களுடன் எவ்வாறு பெரும் விரோதம் உருவாகியது? என்பன போன்ற அடிப்படை விஷயங்களை தமிழ்நாடு வாழ் சாமானிய தமிழர்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.

முதலாவதாக, இலங்கையின் முப்படைகளைப் பற்றி அறிய வேண்டும். தரைப் படையான ராணுவம், ஆகாயப் படையான விமானப் படை, கடல் மார்க்க கடற்படை என்பன கிட்டத்தட்ட 100 சதவீத சிங்களரைக் கொண்டதே. இந்தியாவைப் போல் "தேசிய" ராணுவம் என்று சொல்லக்கூடியதாக அது அமைக்கப்படவில்லை. மாறாக, இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் 100 சதவீத தமிழ் மக்களைக்கொண்ட பிரதேசங்களாகவே இருந்தன. அப்படியாயின் நூறு சதவீத சிங்கள ராணுவத்தால் எவ்வாறு நூறு சதவீத வீத தமிழ் மக்கள் உள்ள பகுதியில் அமைதியை கொண்டு வரமுடியும்?

அடுத்ததாக, தமிழ் மக்கள் அந்நியப்படுத்தப்பட்டு உள்ளார்கள் என்பது. அவர்களால் நாம் இலங்கையர்கள் என உணர்வு கொள்ள முடியாதளவு இலங்கையின் அரசியல் செயல்பாடுகள் அமைந்துவிட்டன. ஊடகங்களில் வெளிவரும், தமிழ்ப் பிரதேசங்களில் அதிபர் ராஜபக்ஷே பேசிய அண்மைக்கால பேச்சுக்களிலிருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம். ஓர் உதாரணத்துக்கு அக்டோபர் 19 ஆம் தேதி கிழக்கு மாகாணத்தில் அவர் ஆற்றிய பேச்சின் ஒரு பகுதியைப் பாருங்கள்.

"எங்கள் பகுதிகளில் கூட இவ்வாறான ஒரு மிகப் பெரிய குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. உங்களுக்காக இந்தப் பெரிய மேம்பாட்டுத் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். உங்களுக்கு இருக்கின்ற எல்லா பிரச்னைகளும் நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்ளக்கூடிய பிரச்னைகள்தான். உங்கள் பகுதிகளிலே நாங்கள் பெரிய அளவில் வளர்ச்சித் திட்டங்களை செயற்படுத்தி வருகின்றோம். நாடு பூராகவும் அபிவிருத்தி செயற்றிட்டங்களை அமுல்படுத்தி வருகின்றோம். ஆனால், நீங்கள் ஏனைய பிரதேசங்களுக்குச் சென்று பார்த்தால் தெரியும், எந்தளவு பணம் செலவழித்து நாங்கள் அபிவிருத்தி வேலைகளை செயற்படுத்துகின்றோம் என்று நீங்கள் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்."

இதில் தெளிவாகவே உங்கள், எங்கள் என்று தமிழர்களை வேறுபடுத்தி பேசுவது தெரியும். இவ்வகையாகப் பேசுவது இரு பகுதியனருக்கும் பழக்கப்பட்டதொன்றாகவே உள்ளது. இரு இனங்கள் மட்டும் உள்ள ஒரு நாட்டில், நாடு முழுவதையும் ஆளும் ஓர் அதிபரிடம் இப்படியான வெளிப்பாடு இருப்பின், அது எவ்வளவு தூரம் புரையோடிப்போனதாக உள்ளது?   

மூன்றாவதாக மொழிப் பிரசனை. இலங்கை ஒரு சிறுநாடு. இந்தியாவை போன்று மாநில அமைப்பு அங்கு இல்லை. பல விஷயங்கள் மத்தியப்படுத்தப்பட்டு உள்ளன. அதாவது தலைநகர் கொழும்புவை மையமாக கொண்டு நடைபெறுகின்றன. அங்குள்ள அலுவலர்கள் பெரும்பாலானவர்கள் (90% மேல்) ஆங்கிலம் கூட பேசத் தெரியாதவர்கள். தமிழ்ப் பகுதிகளிலிருந்து செல்பவர்கள் 90 சதவீதத்தினர் சிங்களம் தெரியாதவர்கள். ஆனால்,  ஆங்கிலத்திலாவது வேண்டியதை தெரிவிக்கக் கூடியவர்கள். அதனால் கடவுச் சீட்டு, ஓய்வூதியம் போன்ற விஷயங்களுக்கு தமது தேவைகளை மேற்கொள்ள கொழும்பு சென்று அல்லாட வேண்டியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் தமிழோ ஆங்கிலமோ தெரிந்திருந்தாலும் கூட அதிகாரிகள் சிங்கள மொழியிலேயே பேசும் நிலையும் உண்டு. 

அரச சுற்றறிக்கைகள் கூட பல சந்தர்ப்பங்களில் சிங்கள மொழியில் மட்டுமே வெளிவருவதுண்டு. இந்நிலைமை தமிழருக்கு பாதகமான இன்னொரு நிலையையும் ஏற்படுத்துகிறது. அதாவது, வடக்கு கிழக்கு தவிர்ந்த அரச அமைப்புக்களில் வேலை வெற்றிடம் வரும்போது, தெரிவு செய்யும் அதிகாரிகள் பெரும்பாலும் சிங்கள மொழியில் மட்டுமே நேர்காணக் கூடியதாக இருப்பதால், சிங்கள மொழிப் புலமை உள்ளோரே தெரிவாகும் வாய்ப்பு உள்ளது. இது தொடராக நடைபெற நாளடைவில் அரச அமைப்புகளில் சிங்களம் மட்டும் பேசக்கூடியவர்களே இருக்கும் நிலை உண்டாகும். அவர்களால் தமிழ் பேசுபவர்களை நேர் கண்டு வேலையில் அமர்த்த முடிவதில்லை. 

அதாவது, தமிழ் பேசும் மக்கள் தமது பிரதேசம் தவிர்ந்து மத்திய அமைப்பில் வேலை எடுப்பது போகப் போக சிறுகும். இந்தியாவில் ஒரு காலக்டர், அவர் எம்மாநிலத்தவராக இருப்பினும் நாட்டின் எப்பகுதியிலும் கடமையாற்றுவார். இலங்கையில் அதற்கொப்பான ஒரு பதவியில் சிங்களப் பகுதியில் ஒரு தமிழரைக் காண முடியாது. (50 வருடங்களுக்கு முன்னர் அவ்வாறு இருந்தார்கள். 1983 இல் ஏற்பட்ட இனக் கலவரத்தின் பின்னர் நிலமை முற்றிலும் மாய் மாறிவிட்டது.) இன்றைய பொழுதில் தமிழ்ப் பகுதி கட்டுப்பாட்டு அதிகாரம் சிங்கள அதிகாரி, அநேகமாக ராணுவத்திலிருந்து வந்தவர், அல்லது ராணுவத் தலைவராகவே இருக்கிறார் - அது வேறு விஷயம்.

ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றபோது, இதற்கு முற்றிலும் மாறான நிலை இருந்தது. நாடு முழுவதும் பெரிய அதிகாரப் பதவிகளில் தமிழர்களே இருந்தார்கள். அப்பதவிகள் தகுதி அடிப்படையில் அடையப்பட்டவை. இதற்கு ஆங்கில மொழிக்கல்வியும், அதனை அடிப்படையாகக் கொண்ட அரச கரும தொழிற்பாடும் ஏதுவாக இருந்தது. இதனைச் சிங்கள அரசியல் கட்சிகள் எந்த அளவுக்கு பயன் படுத்தினார்கள் என்றால், அதன் உச்சக்கட்டமாக 1958-ல் "24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக்குவோம்" என்ற அறைகூவலுடன் ஆட்சியை புதிய அரசியல் கட்சி ஒன்று கைப்பற்றி இன்றுவரை அரசை அமக்கும் இரு பெருங்கட்சிகளுள் ஒன்றாக இருக்கிறது. இவ்வளவு தூரம் இலங்கை பிளவுபட்டிருப்பதற்கு காலங்காலமாக அரசியல் கட்சிகளால் நெய்யூட்டி வளர்க்கப்பட்ட மொழிப் பிரச்னையே காரணம்.  

தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம், நில ஆக்கிரமிப்பு, பௌத்த மத திணிப்பு எனும் சர்ச்சைக்குரிய பல விஷயங்கள் இருப்பினும், சிங்கள மக்களிடையே உள்ள தமிழர்கள் பற்றிய அச்ச உணர்வை சொல்லியே ஆகவேண்டும். உலகளவில் தமிழ் மக்கள் பரந்தும் ஒப்பீட்டளவில் மிக அதிகமாகவும் உள்ளனர். அதிலும் ஒரு கரை தாண்டி இலங்கையை விட பரப்புக் கூடிய தமிழ் மாநிலம் இந்தியாவில் இருப்பது, இலங்கையில் மட்டுமே வாழும் சிங்கள மக்களுக்கு பெரும் மனப்பிராந்தி. தமிழர்கள் ஓங்கினால் தாம் ஒடுக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தினால் அவர்களை ஒடுக்கி வைப்பதாலேயே நிம்மதி அடைகிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்குவதாக அவர்கள் நடத்தை அமைந்துள்ளது என்றும் சொல்லலாம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...