|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 July, 2011

இதே நாள் ..


சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய்!

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் உள்ளது' என, அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.சுவிட்சர்லாந்து உட்பட அன்னிய நாட்டு வங்கிகளில், இந்தியர்கள் ஏராளமான அளவில் பணத்தை டிபாசிட் செய்துள்ளதாகவும், அந்த கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், சமூக அமைப்புகளும் மன்மோகன் சிங் அரசை வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் பணம், 50 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என, இந்திய அரசியல்வாதிகளும், அரசு சார்பற்ற அமைப்புகளும் குறை கூறி வருகின்றன.
இந்நிலையில், சுவிஸ் நாட்டின் மத்திய வங்கி கூறியுள்ளதாவது:கடந்த 2010ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டுமே. 2009ம் ஆண்டில் இந்தியர்களின் கணக்கில் இருந்த பணம் 12 ஆயிரத்து 480 கோடி ரூபாய். 2008ம் ஆண்டில் டிபாசிட் செய்யப்பட்டிருந்த பணம் 11 ஆயிரத்து 40 கோடி ரூபாய்.உலக நாடுகளை பொருளாதார மந்தநிலை ஆட்கொண்ட பின், 2008ல் அமெரிக்காவின் லேமேன் வங்கி திவாலான பின், சுவிஸ் நாட்டின் பெரிய வங்கியான, "யுபிஎஸ்' உட்பட பல தனியார் வங்கிகள் பெரிய அளவில் நஷ்டத்தைச் சந்தித்தன.

இதைத் தொடர்ந்து, சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டிருந்த பணத்தில் கணிசமான அளவு வாபஸ் பெறப்பட்டது.அமெரிக்காவைச் சேர்ந்த பலர், வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கிகளில் அந்தப் பணத்தை டிபாசிட் செய்ததாக புகார் எழுந்ததால், சுவிஸ் வங்கிகளுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டன. மேலும், பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை டிபாசிட் செய்துள்ளதாக புகார்கள் கூறப்பட்டதால், சர்வதேச நாடுகளில் நெருக்கடியும் உருவானது.இந்த நெருக்கடி காரணமாக, வங்கி விதிமுறைகளில் சில திருத்தங்களையும் சுவிஸ் அரசு கொண்டு வந்தது. குறிப்பாக, ஜி-20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் நிர்பந்தம் காரணமாக, வங்கி ரகசிய சட்டங்களில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இவ்வாறு மத்திய வங்கி கூறியுள்ளது.

அதே நேரத்தில், 2008ல் உலக நாடுகள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்தபோது, சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்திருந்த பணத்தை, இந்திய கம்பெனிகளும், இந்தியர்கள் பலரும் சிங்கப்பூர் வங்கிகளுக்கு மாற்றி விட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.இருந்தாலும், "தற்போது சுவிஸ் வங்கிகளின் நிலைமை மாறிவிட்டது. அவற்றின் நிதி நிலைமை நன்றாக உள்ளது. தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளை விட, சுவிஸ் வங்கிகளின் நிதி நிலைமை சிறப்பாக உள்ளது. சுவிஸ் வங்கிகளுக்கு மற்ற நாடுகளில் இருந்து பணம் வருவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது' என, ஜெனிவாவில் வசிக்கும் இந்திய வங்கியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

10 ஆண்டுகளில் ரூ.15.5 லட்சம் கோடி ஊழல்!

கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவில் 15.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புனேயைச் சேர்ந்த "இந்தியா போரன்சிக்'என்ற நிறுவனம், இந்தியாவில் நடந்த ஊழல் அளவு குறித்த ஆய்வை நடத்தியது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக வைத்து மதிப்பிடப்பட்ட ஆய்வில், இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் மட்டும், 15.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை, இந்தியாவுக்கு வெளியில் நடந்த சட்ட விரோத நிதி பரிமாற்றங்கள் தொடர்பானவை.
இந்த ஆய்வின் அடிப்படையில், ஊழல் என்ற பெயரில், தனிப்பட்ட நபர் ஒவ்வொருவரும், 2,000 ரூபாய் வரை செலவிடுவதாக தெரியவந்துள்ளது.ஆனால், கடந்த 2000-09 ஆண்டுகளில், 70 ஆயிரத்து 773 ஊழல் வழக்குகள் விசாரிக்கப்பட்டதாகவும், இவற்றில், ஊழலில் தொடர்புடைய 190 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், வர்த்தக மோசடி, கடத்தல், போதை மருந்து கடத்தல், வரி ஏய்ப்பு, வங்கி மோசடிகள் ஆகியவற்றால், நாட்டு பொருளாதாரத்துக்கு, 22 ஆயிரத்து 528 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சத்யம் மோசடி, வெளிநாடுகளில் பணபரிவர்த்தனை மோசடியை கண்டுபிடிக்கும் அமைப்பின் தகவல் ஆகியவற்றின் அடிப்படையில், ஊழல் பற்றி ஆய்வு நடத்தியதாக, "இந்தியா போரன்சிக்' அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஆரோக்கிய வாழ்வுக்கான டாப் 10 உணவுகள்!

உணவு மருந்து’ என்ற வழிமுறையில் சென்ற நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர். இன்றைக்கோ அவசரம் அவசரமாக எதையாவது உண்டு ‘மருந்தே உணவு’ என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்றைய நவீன உலகில் மக்களை பல விதமான நோய்கள் ஆட்டிப் படைக்கின்றன.அதில் இரத்த அழுத்தம் முக்கிய மானதாகும். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. நாம் உண்ணும் உணவே நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதயத்திற்கு இதம் தரும் நிபுணர்கள் பரிந்துரைந்த உணவுகள் எவை எனப் பார்ப்போம்.

பச்சை நிறமே பச்சை நிறமே: பச்சை இலைகளைக் கொண்ட கீரைகள், முள்ளங்கிஇலைகள், பாகற்காய்,போன்றவை குறைந்த கொழுப்புச்சத்தும் குறைந்த கலோரிகளை தரக்கூடியவையாகும். நார்ச்சத்து அதிகம் கொண்ட இந்த பச்சை கீரைகளில் போலிக் ஆசிட், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளன. பச்சைநிற காய்கறிகள் மற்றும் கீரைகளில் நிறைந்துள்ள தாது உப்புக்கள் இதய நோய் ஏற்படுவதை இது 11 சதவிகிதம் குறைக்கிறது

தானியங்கள்: இதயநோயை கட்டுப்படுத்துவதில் தானியங்கள் இரண்டாவது இடம் வகிக்கின்றன. அரிசி, கம்பு, கோதுமை, ராகி, சோளம், பார்லி, போன்ற தானியங்களிலும் பருப்புவகைகளிலும் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின்களும் காணப்படுகின்றன. குறிப்பாக வைட்டமின் இ, இதயத்தைப் பலப்படுத்தவும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்துக்கும் நரம்புகளின் செயலூக்கத்துக்கும் உடல் பலத்துக்கும் பயன்படுகின்றன. மேலும் இவற்றில் உள்ள கால்சியம், குரோமியம், இஎஃப்ஏ, நார்ச்சத்துகள், ஃப்ளேவனாயிட்ஸ், ஃபோலிக் அமிலம், அயோடின், இரும்புச் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், துத்தநாகம் போன்றவை எலும்பு வளர்ச்சி, சீரான ரத்த ஓட்ட சுழற்சி, ரத்தத்தில் சர்க்கரையை நிலைநிறுத்துதல், நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாட்டை முறைப்படுத்துதல், நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குதல் போன்ற இன்றியமையாத பணியையும் உடலில் செய்கின்றன.

ஒட்ஸ்:உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுவதில் ஒட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலையில் ஓட்ஸ் மூலம் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டால் ரத்தநாளங்களில் படிந்துள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கிறது. இதனால் இதயநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

பாதாம் பருப்பு: பாதாம் பருப்பை இதயத்தின் நண்பன் என்று அழைக்கின்றனர் அந்த அளவிற்கு இதில் ஒமேகா 3:6 எனப்படும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதனால் கெட்ட கொழுப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் பாதாம் பருப்பை சத்துக்களின் தங்கச் சுரங்கம் என்று அழைக்கப்படுகிறது. அதிக புரதச்சத்தும், நார்ச்சத்தும், தாதுஉப்புகளும், இதில் உள்ள வைட்டமின் பி17, மெக்னீசியம், இரும்பு துத்தநாகச்சத்தும் பாதம் பருப்பில் அடங்கியுள்ளன. இதனை உட்கொண்டால் இதய நோய் எட்டியே பார்க்காது.

சோயபீன்ஸ்: இதயநோய் வராமல் தடுப்பதில் சோயாபீன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. பீன்ஸ் உணவுகளில் உள்ள சோபிளவோன்ஸ் எனப்படும் உயிர்த்தாதுக்கள் நீரிழிவு நோயையும், மாரடைப்பின் தீவிரத்தையும் குறைக்கும் தன்மை உடையது. தொடர்ந்து சோயாபீன்ஸ் உணவுகளை சாப்பிட்டு வந்தால் அது கொழுப்பைக் குறைப்பதுடன் இரத்தத்தில் குளுக்கோசின் அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.

ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு: ஒருநாளைக்கு ஒரு ஆப்பிள் உண்டால் மருத்துவரை அணுகத் தேவையில்லை. அந்த அளவிற்கு ஆப்பிள் ரத்தத்தை சுத்திகரிப்பதில் சிறந்து விளங்குகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, ஃபோலிக் அமிலச் சத்துகள் அடங்கியுள்ளன. எலும்புகள் வலுவடையவும் புதிய சிவப்பணுக்கள் உண்டாகவும் ஆரஞ்சுப் பழச்சாறு உதவுகிறது. இதிலுள்ள Methionine Acid ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்து நீண்ட, இளமையான வாழ்வைத் தருகிறது. மேலும் ரத்தத்தில் கெடுதி செய்யும் கொழுப்பான எல்.டி.எல்-ஐ குறைக்கவும் நன்மை செய்யும் கொழுப்பான எச்.டி.எல்-ஐ அதிகரிக்கவும் உதவுகின்றன.

தக்காளி: ஏழைகளின் ஆப்பிள் என வர்ணிக்கப்படும் தக்காளியில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் சுத்தமான நீரும் பயோட்டின் (வைட்டமின் எச்) என்ற சத்தும் உள்ளது. இதிலுள்ள வைட்டமின் சி சத்து, முதுமையைத் தடுக்க உதவும் லைசின் எனும் அமிலத்தை ரத்தத்தில் குறையாமல் பாதுகாத்து இளமையைப் பேண உதவுகிறது. தக்காளியிலுள்ள பொட்டாசியம் உப்பு அதிக சோம்பல், படபடப்பு, ரத்தக் கொதிப்பு, இதயநோய் போன்றவை வராமல் தடுக்கிறது. அதோடு, புற்றுநோய் நிவாரணியாகவும் பயன்படுகிறது.

ஆலிவ் எண்ணெய் மற்றும் மாதுளை: ஆலீவ் எண்ணெய் இதயநோய் வரும் வாய்ப்பை 53 சதவிகிதம் குறைக்கிறது. மாதுளம் பழத்தில் உள்ள பாலி பெனோல்ஸ் என்ற இதயத்திற்கு நன்மை தரும் ஆன்டி ஆக்ஸிடென்டல் அதிகம் காணப்படுகிறது.

எனவே உணவே மருந்து என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நம் உடல் நலனுக்கு நன்மை தரும் உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்டாலே நம்மை எந்த நோயும் அண்டாது என்பது உறுதி.

பொக்கிஷ ரகசியத்தை வெளிக் கொணர்ந்த வக்கீல் சுந்தரராஜன் மரணம்!

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள பாதாள அறைகளைத் திறந்து அதில் குவித்து வைக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி அரிய வகை பொக்கிஷங்கள் வெளியுலகுக்குத் தெரிய வர காரணமாக இருந்த வழக்கறிஞர் சுந்தரராஜன் மரணமடைந்தார்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இதுவரை ரூ. 1லட்சம் கோடி அளவிலான நகைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு அறையைத் திறக்காமல் உள்ளனர். அதில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மதிப்பை விடஅதிக அளவிலான நகைகள் இருக்கும் என கருதப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே பணக்கார கோவிலாக கருதப்படும் திருப்பதியை மிஞ்சியுள்ளது பத்மநாபசாமி கோவில்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. திருவிதாங்கூர் சமஸ்தான ராஜ குடும்பத்தினர் வசம் இந்தக் கோவிலின் நிர்வாகம் உள்ளது. இந்த நிலையில் பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் சுப்ரீம் கோர்ட் நியமித்த உறுப்பினர்கள் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் நேற்று சுந்தரராஜன் உடல்நல குறைவு காரணமாக இறந்தார்.

இவர் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். பூர்வீகம், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஆகும். திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலின் பாதாள ரகசியத்தை வெளிக் கொணர காரணமாக இருந்த சுந்தரராஜன் மறைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

70 வயதான சுந்தரராஜன், பத்மநாப சாமி கோவில் பகுதியில் வசித்து வந்தார். கோவிலுக்குச் சொந்தமான இடத்தில்தான் தனது அலுவலகத்தையும வைத்திருந்தார். பத்மநாப சாமி மீது மிகுந்த பற்று கொண்டவர். கோவிலை மன்னர் குடும்பத்திடமிருந்து மீட்க கடுமையாக போராடி வந்தவர். இதற்காக அவருக்கு கொலை மிரட்டல்களும் பெருமளவில் வந்தன. இருந்தாலும் சளைக்காமல் போராடி வந்தார். இவருடைய வழக்கைத் தொடர்ந்துதான் இன்று பத்மநாப சாமி கோவிலுக்குள் மறைந்து கிடந்த பொக்கிஷம் வெளியுலகுக்குத் தெரிய வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

1964ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி சுந்தரராஜன். ஆரம்பத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் படைப் பிரிவில் பணியாற்றினார். ஆனால் தனது தந்தை வயோதிகத்தால் சிரமப்பட்டு வந்ததால் தனது காவல்துறைப் பணியை கைவிட்டு விட்டு திருவனந்தபுரம் திரும்பினார். பின்னர் பத்மநாபசாமியின் தீவிர பக்தராக மாறினார். சட்டம் பயின்று வழக்கறிஞராகவும் பணியாற்றத் தொடங்கினார். மரணமடைந்த சுந்தரராஜன் பிரம்மச்சாரி ஆவார்.

தலைவர் பதவியைக் கோரும் குடும்பச் சண்டை!

தலைவர் பதவியை இப்போதே தனக்குத் தர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோருகிறாராம். ஆனால் தலைவர் பதவியை யாருக்கும் தரக் கூடாது. கடைசி வரை கருணாநிதிதான் தலைவராக நீடிக்க வேண்டும் என்று மு.க.அழகிரி கோரி வருகிறாராம். இதுதொடர்பாகத்தான் தற்போது கருணாநிதி குடும்பத்தில் சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற கதையாக தனது இரு மகன்களை வளர்த்து வந்த திமுக தலைவர் கருணாநிதி அதற்குரிய பலனை தற்போது அனுபவித்து வருவதாக திமுகவின் உள் விவகாரங்களை நன்கு அறிந்தவர்கள் வேதனையுடன் சொல்கிறார்கள். கருணாநிதி போட்ட கணக்கு இன்று தப்புக் கணக்காகி அவரையே பதம் பார்க்க ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


அப்படி என்னதான் திமுகவில் பிரச்சினை? இதை திமுகவின் பிரச்சினை என்று கூற முடியாது. மாறாக, வாரிசுரிமை கோரி நடந்து வரும் குடும்பச் சண்டை என்றுதான் சொல்ல முடியும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியும், இளைய மகன் ஸ்டாலினும் ஆரம்பத்திலிருந்தே எலியும், பூணையுமாகத்தான் இருந்தனர். ஆரம்பத்திலிருந்தே ஸ்டாலின் நிதானமானவராக நடந்து வந்தார். ஆனால் அழகிரி சற்று முரட்டுத்தனமானவர். இதனால்தான் ஸ்டாலினுக்குப் பின்னால் பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதற்காக முரசொலிப் பத்திரிக்கையை பார்த்துக் கொள்வதற்காக என்று கூறி அவரை மதுரைக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி.

மேலும் ஸ்டாலினுக்கு எதிராக யாரும் வராமல் மிகவும் கவனத்துடன் நடந்து வந்தார் கருணாநிதி. அதன் கடும் பாதிப்புதான் வைகோ போன்ற மாபெரும் தொண்டர்களை திமுக இழந்தது.

ஸ்டாலினுக்கு கிட்டத்தட்ட போட்டியே இல்லாமல் காய்களை நகர்த்தி வந்தார் கருணாநிதி. ஆனால் கருணாநிதியே எதிர்பாராத வகையில் தென் மாவட்ட திமுகவில் அழகிரி எடுத்த விஸ்வரூபம் அமைந்தது. தன்னைத் தாண்டி தென் மாவட்ட திமுகவில் ஈ எறும்பு கூட நகர முடியாத அளவுக்கு தனது நிலையை ஸ்திரமாக்கிக் கொண்டார் அழகிரி.

இதனால் அவருக்கு புதிதாக தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியைக் கொடுத்தார் கருணாநிதி. அத்தோடு நிற்கவில்லை அழகிரி, ஸ்டாலினுக்கு முக்கியப் பொறுப்பை கொடுக்க முடிவு செய்தால், தனக்கும் அவருக்கு நிகரான பொறுப்பைத் தர வேண்டும் என்று கருணாநிதிக்கு கண்டிஷன் போட ஆரம்பித்தார்.  இதையடுத்து அவரை சமாளிக்க மத்திய அமைச்சர் பதவியையும் கொடுத்தார் கருணாநிதி. ஆனாலும் அழகிரி சமாதானமாகவில்லை.

ஒரு கட்டத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாகவே ஸ்டாலினை கட்சித் தலைவராக்க கருணாநிதி திட்டமிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து நேரடியாக சென்னை சென்று கருணாநிதியிடமே எச்சரிக்கை விடுத்தார் அழகிரி. இதனால் அந்தத் திட்டம் அப்படியே கைவிடப்பட்டது.

இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் வைத்து கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே நடந்த கடும் வாக்குவாதம் திமுகவினரை நிலை குலைய வைத்துள்ளது. திமுகவில் மிகப் பெரிய அளவில் வாரிசுப் போர் மூண்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்டாலின் கோருவது என்ன? துணை முதல்வர் பதவி வரை அரசுப் பதவியிலும், பொருளாளர் என்ற நிலைக்கு கட்சிப் பதவியிலும் உயர்ந்த ஸ்டாலின் தற்போது கருணாநிதியிடம் கோருவது திமுக தலைவர் பதவியை என்கிறார்கள்.

கருணாநிதி தனது காலத்திலேயே தலைவர் பதவிக்கு அடுத்து வருவது யார் என்பதை அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் உறுதியாக கூறி வருகிறாராம். மேலும், கோவையில் நடைபெறவுள்ள செயற்குழு, பொதுக் குழுக் கூட்டத்திலேயே அதை அவர் அறிவிக்க வேண்டும் என்று அவர் கருணாநிதியிடம் கூறினாராம். இதனால்தான் வார்த்தை தடித்து இருவருக்கும் இடையே சண்டை மூண்டதாக கூறுகிறார்கள்.

அழகிரி சொல்வது என்ன? அதேசமயம், தலைவர் பதவிக்கு அடுத்து இன்னொருவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. கடைசி வரை கருணாநிதி மட்டுமே தலைவராக இருக்க வேண்டும். அவருக்குப் பிறகு ஏற்படும் நிலை குறித்து அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது எந்த மாற்றமும் இருக்கக் கூடாது என்று கூறி வருகிறாராம் அழகிரி.

ஒருவேளை மீறி அடுத்த தலைவர் யார் என்பதை கருணாநிதி அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டால் தான் கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும். அது கட்சிக்கு நல்லதல்ல என்று கருணாநிதியிடம் அழகிரி எச்சரித்துள்ளதாக தெரிகிறது. இப்படி இரு பிள்ளைகளும் கடுமையாக மோதி வருவதைக் கண்டு கருணாநிதி மனம் உடைந்து போயுள்ளதாக தெரிகிறது.

மேலும், கனிமொழிக்கு இனியும் கட்சியில் முக்கியத்துவம் தரக் கூடாது என்றும் ஸ்டாலின், அழகிரி ஆகியோர் வற்புறுத்தி வருகிறார்களாம். இதை ஏற்க கருணாநிதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. கோவை பொதுக் குழுக் கூட்டத்தில் இந்த கோஷ்டிப் பூசல் மிகப் பெரிய அளவில் வெடிக்கப் போகிறது என்றும் திமுகவின் விவகாரங்கள் அறிந்தவர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.

சுப்ரமணிய சிவா மணி மண்டபம் திறப்பு !


தர்மபுரி அருகே பாப்பாரப்பட்டியில் கட்டப்பட்ட சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் நாளை திறக்கப்படுகிறது. சென்னையில் இருந்தபடியே முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவிற்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதன் பிறகு பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மணி மண்டபம் அமைக்க கடந்தாண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக 
`
40 லட்சம் ஒதுக்கீடு செய் தது. அழகிய வடிவமைப்புடன் கட்டுமான பணிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று தற்பொழுது முழுவடிவம் பெற்றுள்ளது மணிமண்டபம். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் திறப்பு விழாவிற்காக பல் வேறு புதிய கட்டிடங்கள் காத்திருந்தன.

 இந்நிலையில், பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபத்தை நாளை 18ம் தேதி சென் னையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயல லிதா திறந்து வைக்கிறார். 

20 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் வேதாரண்யம் ரயில் போக்குவரத்து தொடங்க கோரிக்கை!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோடியக்கரையிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. என்ன காரணத்தினாலோ 1990-ம் ஆண்டு பயணிகள் ரெயில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

ஆங்காங்கே இருந்த ரெயில்வே ஸ்டேசன்களும் இடித்து அகற்றப்பட்டது. பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டு பின் அகஸ்தியன்பள்ளி திருத்துறைப்பூண்டி வரை உப்பு ஏற்றுமதிக்காக சரக்கு ரெயில் இயக்கப்பட்டது பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டது.    அதற்கு பின் 1999-ம் ஆண்டிலிருந்து திருத்துறைப்பூண்டியிலிருந்து அகஸ்தியன்பள்ளி வரை ரெயில்பஸ் இயக்கப்பட்டது. இந்தியாவிலேயே மேற்கு வங்காளத்திற்கு அடுத்து இங்கு தான் ரெயில்பஸ் சேவை தொடங்கப்பட்டது.

இந்த ரெயில்பஸ் மூலம் குரவப்புலம், நெய்விளக்கு, அகஸ்தியன்பள்ளி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்தனர். இந்த ரெயில்பஸ் போக்குவரத்தும் சுனாமிக்கு பின் நிறுத்தப்பட்டது. இந்த மார்க்கத்தில் மக்கள் பயணம் தவிர இங்கு உற்பத்தியாகும் உப்பு, புகையிலை, மீன் ஏற்றுமதிக்கும் ரயில் போக்குவரத்து மிகவும் பயன்பட்டு வந்தது.

இங்கு உற்பத்தியாகும் உப்பு ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர்.

ஆனால் சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டவுடன் லாரி மூலம் உப்பு அனுப்புவதில் கூடுதல் செலவு என்பதால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. ஆண்டுக்கு உப்பு ஏற்றுமதி மூலம் ரெயில்வே துறை 2 கோடி லாபம் ஈட்டியது.

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் வழித்தடமாக அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி இருந்தது. பல கோடி ரூபாய் ஈட்டி தந்த இந்த வழித்தடத்தை எவ்வித காரணமும் இன்றி ரெயில்வே துறை நிறுத்தி விட்டது. 20 ஆண்டு காலமாக பொதுமக்கள் கொடுத்த எந்த கோரிக்கையும் மத்திய அரசு ஏற்க வில்லை.

 இந்நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல ரெயில் பாதை அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவித்தனர். ஆனால் இந்த மார்க்கத்தில் அதற்கான எந்தவித ஆரம்ப வேலையும் தொடங்கப்படவில்லை.

எனவே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, நலிந்து வரும் உப்பு தொழிலை காப்பாற்ற அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி ரெயில் பாதையில் மீண்டும் ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க விடுதலை சிறுத்தைகள் கையெழுத்து இயக்கம்

சர்வதேச போர் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இலங்கை அதிபர் ராஜபக்சேவை ஐ.நா மன்றம் போர்க் குற்றவாளியாக அறிவித்து, அவரை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கித் தரவேண்டும்.
தமிழீழத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 10 லட்சம் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.

ஜூலை 15 முதல் 31 வரை நடைபெறும் இந்த கையெழுத்து இயக்கத்தை சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பியும், புதுச்சேரியில் அமைப்பு செயலாளர் சு.பாவணனும் தொடக்கி வைத்திருந்தனர். காரைக்காலில் மாநில செயலாளர் பொன்.செந்தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்.

கட்சியின் துணை பொதுச் செயலாளர் அரசு.வணங்காமுடி, ம.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் சோ.அம்பலவாணன், செல்லாப்பா, த.மு.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் ஐ.அப்துல்ரஹீம் மற்றும் பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

தொடர்ந்து காரைக்காலில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள பொதுமக்களிடமிருந்து கையெழுத்து வாங்கும் பணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். காரைக்காலில் சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர்களிடம் கையெழுத்து பெறப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஆடியில் யாருக்கு லாபம்?


மாத ராசிபலன் 17.7.11 முதல் 17.8.11 வரை
மேஷம் (தாராள பணம்)


குறிக்கோளுடன் செயல்பட்டு வெற்றி காணும் மேஷராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் மிகுந்த அனுகூலத்துடன் மூன்றாம் இடமான மிதுனத்தில் உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், புதன், சனி செயல்படுகின்றனர். துவங்கும் செயலில் வெற்றி கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பணவரவு பெறும் வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்வீர்கள். பசு, பால் பாக்ய யோகமும், முருகப்பெருமானின் பரிபூரண அருளும் உண்டு. தம்பி, தங்கைகள் முன்னேற்றப் பாதையில் நடைபோடுவர். வாகன பயணம் நல்லவிதமாக இருக்கும். முக்கிய வீட்டு சாதனப் பொருள் வாங்க தாராளமாகப் பணம் செலவழிப்பீர்கள். உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. பூர்வீகச் சொத்தில் தாராளபணவரவு கிடைக்கும். தம்பதியர் அன்பு, பாசத்துடன் நடந்துகொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நண்பர்களின் ஆலோசனையை மதித்து செயல்படுவீர்கள். தொழிலதிபர்கள் தகுந்த மூலதனத்துடன் உற்பத்தியை உயர்த்துவர். பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு நிர்வாகத்திடம்  சலுகை பெறுவர். வியாபாரிகளுக்கு விற்பனை சிறப்பதோடு ஆதாயமும் உயரும். பணிபுரியும் பெண்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை சிறப்பாக நிறைவேற்றுவர். குடும்பப் பெண்கள் எதிர்கால நன்மை பெற புதிய முயற்சிகளை மேற்கொள்வர். கணவரின் அன்பும், பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி தரும்.


சுயதொழில் புரியும் பெண்கள்  விற்பனையில் அபரிமிதமான வளர்ச்சி காண்பர். அரசியல்வாதிகளுக்கு  நண்பர்களின் உதவி கிடைக்கும். மக்கள் பணியில் ஆர்வம் பிறக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் உண்டு. மாணவர்கள்  நன்கு  படித்து கல்வியில் முன்னேறுவர்.
பரிகாரம் - கிருஷ்ணரை வழிபடுவதால் தொழில் சிறந்து குடும்பத்தேவை நிறைவேறும்.
உஷார் நாள்: 7.8.11 பிற்பகல் 2.16 முதல் 9.8.11 மாலை 6 மணி வரை
வெற்றி நாள்: ஜூலை 28, 29
நிறம்: சிவப்பு, வெள்ளை      எண்: 1, 6


ரிஷபம் (தம்பதியர் ஒற்றுமை)
புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வமுள்ள ரிஷபராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மூன்றாம் இடமான கடகத்தில் அனுகூல பலத்துடன் உள்ளார். நவக்கிரகங்களில் நற்பலன் வழங்கும் கிரகமாக இந்த மாதம் சூரியன் செயல்படுகிறார். இதனால் உங்கள் நடை, உடை, செயல்திறனில் மாற்றம் ஏற்படும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். நல்ல விஷயங்களை பேசுவதில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்மை தரும். வீடு, வாகனத்தில் தகுந்த வளர்ச்சி மாற்றங்களைச் செய்வீர்கள். சொத்து தொடர்பான ஆவணங்களை பிறர் பொறுப்பில் தரக் கூடாது. உடல் ஆரோக்கியத்துடன் திகழும்.  தம்பதியர் அன்பு, பாசத்துடன் நடந்து உறவினர்களின் நன்மதிப்பை பெறுவர். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதம் கூடாது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற அனுகூலம் உண்டாகும். தொழிலதிபர்கள் அரசு தொடர்பான நன்மைகளை அடைவர். பணியாளர்கள் நிலுவைப்பணிகளைச் சரியான நேரத்திற்கு நிறைவேற்றி நிம்மதி அடைவர். வியாபாரிகள் சந்தையில் போட்டி குறைந்து விற்பனை உயர்வு பெறுவர். பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் குளறுபடியை சரிசெய்து பணி இலக்கை திறம்பட நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள் அக்கம்பக்கத்தினரிடம் வேண்டாத விஷயங்களைப் பேசுவதால் சிரமம் வரலாம். கவனம் வேண்டும். குடும்ப செலவுக்கான பணவசதி சீராக இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து நல்ல லாபவிகிதம் காண்பர்.அரசியல்வாதிகளுக்கு பதவி, பொறுப்பு பெறுவதில் இருந்த சிரமம் விலகும்.விவசாயிகளுக்கு பயிர் வளர்க்க தேவையான வசதி சிறப்பாக அமையும். மாணவர்கள் வீண்பேச்சு தவிர்த்து படிப்பில் கவனம் கொள்வதால் மட்டுமே திட்டமிட்ட தரதேர்ச்சி பெற முடியும்.


பரிகாரம் - தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் வாழ்வில் எல்லா வளமும் கிடைக்கும்.
உஷார் நாள்: 9.8.11 மாலை 6 முதல் 11.8.11 இரவு 11.42 மணி வரை
வெற்றி நாள்:  ஜூலை 30, 31
நிறம்: மஞ்சள், சிமென்ட்      எண்: 3, 8


மிதுனம் (பணிச்சுமை கூடும்)
சமயோசிதமும் செயல்திறனும் கொண்ட மிதுனராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் புதன் மாறுபட்ட குணத்துடன் இரண்டாம் இடமான கடகத்தில் உள்ளார். இந்த மாதம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக குரு, சுக்கிரன், ராகு செயல்படுகின்றனர். ராசிக்கு ஆறாம் இட அதிபதி செவ்வாய், எட்டாம் இட அதிபதி சனி இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கிற கிரகநிலை உள்ளது. இதனால் பொது விஷயங்களில் சற்று விலகியே செயல்படுவது நல்லது. நீண்டதூர பயணங்களை தவிர்ப்பது நன்மை தரும். புத்திரர் உங்களுக்கு உதவுகிற மனப்பான்மையுடன் செயல்படுவர். குலதெய்வ அருள் முக்கிய தருணங்களில் துணைநிற்கும். பூர்வசொத்தில் பணவரவு இருந்தாலும் மராமத்து செலவும் உண்டாகும். உடல்நலம் சீராக இருக்க கவனம் தேவை. நீர் நிலை, உயரமான இடங்களில் முடிந்தளவு தவிர்ப்பது நல்லது. தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செயல்பட்டு குடும்பத்தை சிறப்பாக நடத்திச் செல்வர். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் அனைத்தும் நீங்கும். தொழிலதிபர்கள் உற்பத்தி இலக்கை கடின முயற்சியுடன் எட்டிப் பிடிப்பர்.  பணியாளர்கள் பணிச்சுமையால் மிகவும் அவதிப்படுவர். பணியிலக்கை நிறைவேற்றுவதில் தாமதம் உண்டாகும். தொழிற்சாலை பணியில் உள்ளவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம். வியாபாரிகள் கடின முயற்சியின் மூலம் சராசரி பண வரவு காண்பர். அலைச்சலால் உடல் சோர்வுக்கு ஆளாவர். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலைச் சரியாக பின்பற்றுவதால் சிரமம் தவிர்க்கலாம். குடும்ப பெண்கள் சிக்கனத்தைக் கடைபிடித்து பற்றாக்குறையைச் சமாளிப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் கடின உழைப்பால் எதிர்பார்த்த பணவரவு காண்பர். அரசியல்வாதிகள் பகைவரிடம் விலகிப்போவது நல்லது. விவசாயிகளுக்கு அளவான மகசூல், பணவரவு உண்டு. மாணவர்கள் லட்சியத்துடன் படிப்பதால் தரதேர்ச்சி சீராகும்.
பரிகாரம் - தன்வந்திரியை வழிபடுவதால் ஆரோக்கியக்குறைவு நீங்கி உடலில் புத்துணர்ச்சி உண்டாகும்.


உஷார் நாள்: 18.7.11 நள்ளிரவு 12.25 முதல் 20.7.11 காலை 10.58 மணி வரை மற்றும் 14.8.11 காலை 7.48 முதல் 16.8.11 மாலை 6.10 மணி வரை
வெற்றி நாள்: ஆகஸ்ட் 3, 4
நிறம்: மஞ்சள், கருநீலம்     எண்: 4, 8


சிம்மம் (பிள்ளைகளால் பெருமை)


அடுத்தவர் வாழ்விலும் அக்கறை காட்டும் சிம்மராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சூரியன் மாறுபட்ட குணத்துடன் பன்னிரெண்டாம் இடமான கடகத்தில் உள்ளார். இந்த மாதம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக செவ்வாய், சுக்கிரன் செயல்படுகின்றனர். மனதில் ஒருமித்த சிந்தனை குறைந்து அலைபாயும் எண்ணம் ஏற்படக்கூடும். உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவதால் வாழ்வில் நன்மை காண்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு திருப்திகரமாக கிடைக்கும். வீடு, வாகனத்தில் கிடைக்கிற வசதியை ஓரளவு பயன்படுத்துவது போதுமானது. புத்திரர் நல்லவிதமாக நடந்து படிப்பு, நற்பெயர் பெறுவதில் முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளின் நலன் கண்டு பெருமை கொள்வீர்கள். இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேற்ற கூடுதல் செலவு ஏற்படும். உடல்நலம் சீராக இருக்க ஒவ்வாத உணவு வகை தவிர்ப்பது அவசியம். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செயல்படுவது அவசியம். தொழிலதிபர்கள் உற்பத்தியை உயர்த்துவதில் புதிய உத்திகளைப் பயன்படுத்துவர். பணியாளர்கள் கூடுதல் பணிபுரிந்து இலக்கை நிறைவேற்றி நன்மை காண்பர். வியாபாரிகள் வாடிக்கை யாளர்களுக்கு சலுகை திட்டங்களை அறிவித்து விற்பனை இலக்கை உயர்த்துவர். நீண்டநாள் வேண்டுதல்களைத் திட்டமிட்ட படி நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள் கணவரின் நல்அன்பு கிடைத்து மகிழ்ச்சிகரமான வாழ்வு நடத்துவர். ஆடை, ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் பேச்சிலும் செயலிலும் நிதானம் பின்பற்றினால் சிரமத்தைத் தவிர்க்கலாம். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பிலும் லாபவிகிதம் கூடும். மாணவர்கள் லட்சியத்துடன் படித்து நல்ல தரதேர்ச்சி பெறுவர்.
பரிகாரம் - முருகப்பெருமானை வழிபடுவதால் தொழிலில் லாபம் அதிகமாகும்.
உஷார் நாள்: 20.7.11 காலை 10.58 முதல் 22.7.11 இரவு 10.36 மணி வரை மற்றும் 16.8.11 மாலை 6.10 முதல் 17.8.11பின் இரவு முழுவதும்
வெற்றி நாள்: ஆகஸ்ட் 6, 7
நிறம்: ஆரஞ்சு, வெள்ளை        எண்: 1, 7


கன்னி (யோகமான மாதம்)


உழைப்பே உயர்வு தரும் என்பதில் நம்பிக்கை கொண்ட கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் புதன் ஆதாய ஸ்தானமான கடகத்தில் அனுகூல பலன் தருகிற சூரியன், சுக்கிரனுடன் உள்ளார். இந்த முக்கூட்டு கிரகச்சேர்க்கை உங்கள் வாழ்வில் பல அளப்பரிய நன்மைகளை பெற்றுத்தரும். அதுபோல இந்த மாதம் உங்கள் ராசிக்கு தர்மகர்ம அதிபதி யோகமும் பலமாக உள்ளது. இதனால் துவங்குகிற நற்செயல் அனைத்தும் முழு வெற்றி பெறும். உங்கள் சொல்லுக்கு கூடுதல் மரியாதை கிடைக்கும். இளைய சகோதரர்கள் அன்பு, பாசத்துடன் நடந்துகொள்வர். பசு, பால் பாக்ய யோகம் உண்டு. புதிய வீடு, வாகனம் வாங்குகிற திட்டம் நிறைவேறும். தம்பதியர் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி நாளுக்குநாள் அதிகரிக்கும். நண்பர், உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். தொழிலதிபர்கள் கூடுதல் முயற்சியால் பொருளின் உற்பத்தி மற்றும் தரத்தை உயர்த்துவர். புதிய ஒப்பந்தம் கிடைத்து பணவரவு கூடும். பணியாளர்கள் குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றி பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகிய நற்பலன் பெறுவர்.  வியாபாரிகள் சந்தையில் போட்டிகுறைந்து விற்பனையில் முன்னேற்றம் காண்பர். பணிபுரியும் பெண்கள் திறம்பட செயல்பட்டு பணியை சிறப்புடையதாக்குவர். குடும்பத் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிபுரிவர். உற்பத்தி, விற்பனை உயர்ந்து லாபவிகிதம் அதிகரிக்கும். திட்டமிட்டபடி ஆன்மிகச் சுற்றுலா இனிதாக நிறைவேறும். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் நம்பிக்கையை பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து தாராள பணவரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதோடு பாராட்டும் பரிசும் பெறுவர்.
பரிகாரம் - பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை வழிபடுவதால் வாழ்வில் அனைத்து நலன்களும் வந்து சேரும்.
உஷார் நாள்: 22.7.11 இரவு 10.36 முதல் 25.7.11 காலை 9.46 மணி வரை
வெற்றி நாள்: ஆகஸ்ட் 7, 8, 9
நிறம்: ஊதா, ரோஸ்          எண்: 1, 5


துலாம் (பணியில் நிம்மதி)


நல்லோரின் அறிவுரையை பின்பற்றி வாழும் துலாம் ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு பத்தாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் சஞ்சரிக்கிறார். இந்தமாதம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக சூரியன், புதன், குருபகவான் செயல்படுகின்றனர். உங்கள் பணியில் செயல்திறனும் வெற்றியும் அதிகரிக்கும். இடம், பொருள் அறிந்து பேசி நற்பெயர் பெறுவீர்கள். தம்பி, தங்கைகள் உதவிகரமாக நடந்துகொள்வர். வீடு, வாகன வகையில் தேவையான வளர்ச்சிப்பணி செய்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர் நல்அன்பு பாராட்டுவர். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கித்தருவீர்கள். பூர்வசொத்தில் வருகிற வருமானம் உயரும். உடல்நலத்தை பேணிக்காப் பதில் கவனம் கொள்வீர்கள். தம்பதியர் சிறு சச்சரவுகளை சரிசெய்து குடும்பநலனில் அக்கறை கொள்வர். உங்கள் நலன் விரும்புபவர்கள் தாமாக முன்வந்து தேவையான உதவி வழங்குவர். வெளியூர் பயணங்களை தகுந்தபடி திட்டமிடுவதால் சிரமம் தவிர்க்கலாம். தொழிலதிபர்கள் லட்சிய மனப்பாங்குடன் செயல்பட்டு உற்பத்தி அளவை உயர்த்துவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து பணவரவு சீராகும். பணியாளர்கள் திறம்படசெயல்புரிந்து இலக்கை நிறைவேற்றுவர். ஓரளவு சலுகைகள் கிடைக்கும். வியாபாரிகள் கூடுதல் விற்பனையால் முன்னேற்றம் காண்பர். சரக்கு கொள்முதல் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணிகளை நிறைவேற்றி மனநிம்மதி பெறுவர். குடும்பப் பெண்கள் தாராள பணவரவு பெற்று குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்றுவர். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்திப்பணி புரிவர். விற்பனை சிறந்து லாபவிகிதம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தாமதமான பணிகளை விரைந்து நிறைவேற்றுவர். அரசு அனுகூலம் எளிதாக கிடைக்கும். விவசாயிகள் சராசரி மகசூலும் கால்நடை வளர்ப்பில் தாராள பணவரவும் பெறுவர். மாணவர்கள் நன்றாக படித்து தேர்ச்சி அடைவர்.
பரிகாரம் - பெருமாளை வழிபடுவதால் தொழில் சிறந்து குடும்பத்தேவை நிறைவேறும்.
உஷார் நாள்: 25.7.11 காலை 9.46 முதல் 27.7.11 இரவு 6.58 மணி வரை
வெற்றி நாள்: ஆகஸ்ட் 10, 11
நிறம்: வாடாமல்லி, சந்தனம்    எண்: 3, 8
விருச்சிகம் (பிள்ளைகளிடம் கவனம்)
நட்புக்கு முக்கியத்துவம் தருகின்ற விருச்சிகராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய், ராசிக்கு எட்டாம் இடத்தில் சுமாரான இடத்தில் சஞ்சரிக்கிறார். சுக்கிரன், சனிபகவான் நற்பலன் தரும் விதமாக உள்ளனர். ராசிநாதன் செவ்வாயை சனி பார்ப்பதும், சனியை செவ்வாய் பார்ப்பதும் சில எதிர்மறை பலனைத்தரலாம். இதனால் அன்றாட பணி முதல் போக்குவரத்து வகைகளில் நிதானம் பின்பற்றுவது அவசியம். சரளமாக பேசுவதில் இருந்த ஆர்வம் குறையும். வீடு, வாகனத்தில் அத்தியாவசிய பணிகளை மட்டும் நிறைவேற்றுவது நல்லது. புத்திரர்கள் பிடிவாத குணத்துடன் செயல்படுகின்ற கிரகநிலை உள்ளது. அவர்களை நேரடியாகக் கண்டிக்காமல், உறவினரின் உதவியை நாடுவது நல்லது. தகுதிக்கு மீறி கடன் பெறுவது, கடன் கொடுப்பது கூடாது. உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை முறை உதவும். தம்பதியர் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து தியாக மனப்பாங்குடன் செயல்படுவர். நண்பர்களின் சொந்த விருப்பங்களை விமர்சிக்கக் கூடாது. தொழிலதிபர்கள் அளவான உற்பத்தி, சுமாரான லாபம் காண்பர். பணியாளர்கள் உடல்நலக்குறைவினால் பணி இலக்கை நிறைவேற்றுவதில் தாமதம் கொள்வர்.  வியாபாரிகள் கூடுதல் முயற்சியால் இருக்கிற விற்பனையை பாதுகாத்திட இயலும். பணிபுரியும் பெண்கள் கவனக்குறைவினால் குளறுபடிகளை எதிர்கொண்டு கூடுதல் பணிச்சுமைக்கு உட்படுவர். குடும்பப் பெண்கள், உறவினர் குடும்ப சிரமங்களை சரிசெய்வதில் அதிகநேரம் செலவிட நேரலாம். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் உழைப்பினால் சந்தை வாய்ப்பை பயன்படுத்தி அளவான பணவரவு பெறுவர். அரசியல்வாதிகள் எதிரிகளிடம் இருந்துவிலகிப்போவதால் நன்மைஉண்டு. விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். அதிக செலவு ஏற்படும். மாணவர்கள் விளையாட்டு குணங்களை தவிர்ப்பதால் மட்டுமே தேர்ச்சி சீராகும்.
பரிகாரம் - சிவபெருமானை வழிபடுவதால் வாழ்வில் துன்பம் விலகி நன்மை ஏற்படும்.
உஷார் நாள்: 27.7.11 மாலை 6.58 முதல் 30.7.11 அதிகாலை 1.43 மணி வரை
வெற்றிநாள்: ஜூலை 17, ஆகஸ்ட் 12, 13
நிறம்: நீலம், மஞ்சள்   எண்: 4, 8


தனுசு (உயர்கிறது பதவி)


நல்எண்ணத்தால் வாழ்வில் உயர்ந்து நிற்கும் தனுசு ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சூரியன் உள்ளார். இதே இடத்தில் புதன், சுக்கிரன் நல்லவிதமாக உள்ளனர். சூரியன், புதன் சேர்க்கை ராசிக்கு தர்ம கர்ம அதிபதி யோகத்தை வழங்குகிறது. இத்துடன் குரு, கேது தாராள நற்பலன் தருவர். உடல்நலம் பாதுகாத்து, நேர்வழியில் செயல்படுவதால் வாழ்வில் பொன்னான முன்னேற்றம் உருவாகும். சமூக நிகழ்வை அனுமானித்து செயல்படுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. தாய்வழி உறவினர் அன்புடன் இருப்பர். புத்திரர்கள் நற்குண, நற்செயல்களால் உங்களை மகிழ்விப்பர். இஷ்டதெய்வ அருள் பரிபூரண துணைநிற்கும். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். குடும்பத்தேவை பெருமளவில் பூர்த்தியாகும். கணவன், மனைவி பண்பு, பாசத்துடன் நடந்து குடும்பத்தின் பெருமையை காத்திடுவர். நண்பர் வகையில் உதவுவதும் உதவி பெறுவதுமான நன்னிலை உண்டு. தொழிலதிபர்கள் அதிர்ஷ்டவசமாக கூடுதல் ஒப்பந்தம் பெறுவர். தாராள பணவரவுடன் நிலுவைப்பணமும் வசூலாகும். பணியாளர்கள் குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றி பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவர். வியாபாரிகளுக்கு தாராள விற்பனையும் சேமிக்கும் அளவில் பணவரவும் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் உற்சாகமுடன் செயல்புரிந்து பணி சிறப்பால் நன்மதிப்பு பெறுவர். குடும்பப் பெண்கள் ஆரோக்கிய உடல்நலத்துடன் குடும்ப வளர்ச்சிக்கு தேவையான பணிபுரிவர். ஆடை, ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் விற்பனையில் உயர்வு காண்பர். நிலுவைப்பணம் வசூலாகும். அரசியல்வாதிகள் நிதான செயலால் சிரமம் அணுகாத நன்னிலை பெறுவர். எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும். விவசாயிகள் அதிக மகசூல், தாராள பணவரவு பெறுவர். மாணவர்களுக்கு தரதேர்ச்சி, பாராட்டு கிடைக்கும்.
பரிகாரம் - லட்சுமிதாயாரை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு கூடும்.
உஷார் நாள்: 30.7.11 அதிகாலை 1.43 முதல் 1.8.11 காலை 6.16 மணி வரை
வெற்றி நாள்: ஜூலை 18, 19, ஆகஸ்ட் 14, 15
நிறம்: பச்சை, வெள்ளை    எண்: 5, 6


மகரம் (இரட்டை யோகம்)


எவரிடமும் பண்பு பாராட்டி பழகுகின்ற மகரராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் முக்கூட்டு கிரகச் சேர்க்கையாக 6, 8க்கு உடைய புதன், சூரியன் விபரீத ராஜயோக அமைப்பில் சுக்கிரனுடன் உள்ளனர். 9, 10க்கு உடைய புதன், சுக்கிரன் சேர்க்கை இதே இடத்தில் தர்மகர்ம அதிபதி யோகத்தையும் உருவாக்குகிறது. இந்த மாதம் செவ்வாய், ராகு அனுகூல பலன் தருவர். நீங்கள் எதிர்பாராத சில நற்பலன்கள் கிடைக்கும். அளவாக பேசி பணியை திறம்பட நிறைவேற்றுவீர்கள். சமூகத்தில் நன்மதிப்பு அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் சராசரியான நன்மை உண்டு. புத்திரர்கள் ஞானம் நிறைந்த சிந்தனை வளர்த்து படிப்பில் முன்னேற்றம் அடைவர். குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும். உடல்நலம் சீராகும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. தந்தைவழி உறவினர்களிடம் வாக்குவாதம் கூடாது. பூர்வசொத்தில் கிடைக்கிற வருமானம் உயரும். தொழிலதிபர்கள் புதிய நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியில் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். சலுகைப்பயன்கள் கிடைக்கும். வியாபாரிகள் தாராள விற்பனையும் உபரி வருமானமும் பெறுவர். பணிபுரியும் பெண்கள் உற்சாக மனதுடன் செயல்பட்டு பணியில் சிறப்பு சேர்த்திடுவர். எதிர்பார்த்த கடனுதவி பெறலாம். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, தாய்வீட்டு சீர்முறையும் கிடைக்கப்பெறுவர். ஆடை, ஆபரண சேர்க்கை பெற அனுகூல நிலை வளரும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை வளர்த்து விற்பனையில் சாதனை நிகழ்த்துவர். அரசியல்வாதிகள் கூடுதல் சேவைப்பணி செய்து ஆதரவாளர்களின் நன்மதிப்பை பெறுவர். பகைமை விலகி நன்மை அதிகரிக்கும். விவசாயிகள் தாராள மகசூல் கிடைத்து மனம் மகிழ்வர். கால்நடை வளர்ப்பிலும் பணவரவு கூடும். மாணவர்கள் கவனமுடன் படித்து தரத்தேர்ச்சி அடைவர்.
பரிகாரம் - ஆஞ்சநேயரை வழிபடுவதால் மனதில் உறுதியும் செயலில் வெற்றியும் அதிகரிக்கும்.
உஷார் நாள்: 1.8.11 காலை 6.16 முதல் 3.8.11 காலை 9.16 மணி வரை
வெற்றிநாள்: ஜூலை 20, 21, 22
நிறம்:  சந்தனம், வெள்ளை    எண்: 2, 3


கும்பம் (ஆபரண சேர்க்கை)


வெற்றியை பணிவுடன் ஏற்று செயல்படும் கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சூரியன், புதன் அனுகூலத்துடன் அமர்ந்து கூடுதல் நற்பலனை தருகின்றனர். உங்களின் நற்செயலால் கவுரவம் பெறுவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறையைப் பின்பற்றுவது நல்லது. உங்கள் பேச்சைக் கேட்பதில் இளைய சகோதரர் முரண்படுவர். வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவது அவசியம். தாயின் தேவையை நிறைவேற்றுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். உடல்நல ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நிலுவை பணக்கடன் ஓரளவு அடைப்பீர்கள். வழக்கு விவகாரத்தில் வெற்றி ஏற்படும். முக்கிய வீட்டுசாதனப் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். தம்பதியர் சிறுசிறு சச்சரவு சூழ்நிலையை எதிர்கொண்டாலும் குடும்பத்தில் அமைதிக்கு குறைவிருக்காது. வெளியூர் பயணங்களைப் பயன் அறிந்து மேற்கொள்வது நல்லது. தொழிலதிபர்கள் மந்தநிலை மாறி உற்பத்தியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத வகையில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பணியாளர்கள் உத்வேகமுடன் பணியாற்றி பணி இலக்கை நிறைவேற்றுவர். எதிர்பார்த்த சலுகைப்பயன் எளிதாக வந்துசேரும். வியாபாரிகள் அதிக விற்பனையும் கூடுதல் லாபவிகிதமும் காண்பர். பணிபுரியும் பெண்கள் குளறுபடியை சரிசெய்து பணியில் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, நிதியுதவி பெறுவீர்கள். குடும்ப பெண்கள் உறவினர் சொல்லும் குறைகளை பெரிதுபடுத்தாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தேவைகள் நிறைவேறுவதோடு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் வளர்ச்சிப்பணி புரிவர். அரசியல்வாதிகள் அரசு தொடர்பான அதிகாரிகளின் அனுசரணையால் காரியங்களை நிறைவேற்றிக்கொள்வர். விவசாயிகளுக்கு மகசூல் உயர்ந்து தாராள பணவரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் உயர கூடுதல் அக்கறையுடன் செயல்படுவர்.
பரிகாரம் - பைரவரை வழிபடுவதால் தொழில் வளர்ச்சியும் குடும்பத்தில் மங்கல நிகழ்வும் உண்டாகும்.
உஷார் நாள்: 3.8.11 காலை 9.16 மணி முதல் 5.8.11 காலை 11.38 மணி வரை
வெற்றி நாள்: ஜூலை 23, 24
நிறம்: வாடாமல்லி, ஆரஞ்ச்      எண்: 5, 9


மீனம் (சிறப்பான பணவரவு)


தனித்திறமைகளை வளர்த்துக்கொள்வதில் ஆர்வமுள்ள மீனராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் முக்கூட்டு கிரக சேர்க்கையாக சூரியன், புதன், சுக்கிரன் உள்ளனர். அனுகூல பலன்தரும் கிரகங்களாக குரு, கேது, சுக்கிரன் செயல்படுகின்றனர். பேசுவதில் இருந்த தயக்கம் விலகும். ஆன்மிகச் சிந்தனை உள்ளவர்களின் அன்பு, ஆசி கிடைக்கும். தம்பி, தங்கையின் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகன வகையில் நம்பகத்தன்மை குறைவானவர்களுக்கு இடம்தருவது நல்லதல்ல. புத்திரர்கள் கவனக்குறைவான செயலால் உடல்நலக்குறைவிற்கு ஆளாவர். பூர்வசொத்தில் அளவான பணவரவு கிடைக்கும். பசு, பால் பாக்ய யோகம் கிடைத்து மகிழ்வீர்கள்.  தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதோடு குடும்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவர். நண்பரின் உதவி தக்க தருணத்தில் கிடைக்கும். வெளியூர் பயணத்தால் ஓரளவு நன்மையை எதிர்பார்க்கலாம். தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்துடன் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வர். படிப்படியாக உற்பத்தி சிறந்து எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் வழிகாட்டுதலைக் கவனத்தில் கொண்டு பணிகளைச் செவ்வனே நிறைவேற்றுவர். சிலருக்கு கடன் பெற வேண்டிய நிலைமை உண்டாகலாம். வியாபாரிகள் அளவான விற்பனை காரணமாக நிலுவைப்பணம் வசூலிப்பதில் கடின முயற்சி தேவைப்படும். பணிபுரியும் பெண்கள் செயல்திறனுடன் பணிபுரிவதால் மட்டுமே குளறுபடி வராத தன்மை இருக்கும். குடும்ப பெண்கள் விட்டுக் கொடுக்கும் மனதுடன் நடந்து குடும்பத்தில் ஒற்றுமை சிறக்க உதவுவர். கணவரின் அன்பும், நிறைந்த பணவசதியும் மனதிற்கு மகிழ்ச்சி தரும். சுயதொழில் புரியும் பெண்கள் விற்பனை சிறந்து கூடுதல் லாபவிகிதம் காண்பர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூலால் நல்ல வருமானம் உண்டு. மாணவர்கள் படிப்பில் முன்னேற கூடுதல் கவனம் தேவை.
பரிகாரம் - லட்சுமி நரசிம்மரை வழிபடுவதால் வாழ்வில் சிரமம் அணுகாத நன்னிலையும், பொருளாதார வளமும் உண்டாகும்.
உஷார் நாள்: 5.8.11 காலை 11.38 முதல் 7.8.11 பிற்பகல் 2.16 மணி வரை
வெற்றி நாள்: ஜூலை 25, 27
நிறம்: ஆரஞ்ச், ரோஸ்     எண்: 1, 9
Copyright © 2011 www.dinamalar.com. All rights reserved.

Icon



நீங்களே செய்யலாம் எளிய முறையில் யோகாசனம்!

யோகாசனம் செய்வதால் பெரு, சிறு நோய்கள் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம். உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும். உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு, இரத்த ஓட்டம், ஜீரணம்) போன்ற மண்டலங்கள் சீரடையும். இளமையாய் இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வளர்சிதை மாற்றம் சீராகும். மனவலிமை கிட்டும். மனஅழுத்தம் குறையும். மூளை இதயத்திற்கு நல்ல ஓய்வு கிடைத்து, அதன் திறனை மேம்படுத்தலாம். ஆயுளை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஞாபக சக்தி பெருகும். உடலை வனப்பாக வைத்துக் கொள்ளலாம்.  சோம்பல், சோர்வு, கோபம், பயம் நீக்கலாம். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய்கள், ஆஸ்துமா, சைனஸ் ஸ்பாண்டிலோடிஸ், தூக்கமின்மை, அதிக உடல் எடை, முதுகு வலி, வலிப்பு நோய் தலைவலி மற்றும் கழுத்து வலி, முதுகு மற்றும் மூட்டுவலி, மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை பிரச்சனைகள், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மற்றும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.


யோகாசனம் ஒரு அறிமுகம்! 

குரு வணக்கம்:
குருவழியே ஆதி ஆதி
குருமொழியே வேதம் வேதம்
குருவிழியே தீபம் தீபம்
குருபதமே காப்பு காப்பு
சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் யோகசூத்திரம் என அழைக்கபடினும் சாஸ்திரம் என்று கூறுவதே மேன்மையாகும். "அத யோகானுசானம்"- என்று முதல் சூத்திரம் துவங்கி
புருஷார்த்த சூன்யானம் குணானம் ப்ரதி-ப்ரஸவ
கைவல்யம் ஸ்வரூப-பிரதிஷ்டா வாசுதி-சுக்தே : இதி
என முடியும் 196 சூத்திரங்களில் ஓர் யோக வேதத்தை உலகுக்கு தந்துள்ளார். இந்த யோகசூத்திரத்தை பயில்வது என்பது ஆழ்ந்து தொடர்ந்து உணர்வதும் பயிற்சி செய்வதும் ஆகும். ஏனைய சாஸ்திரங்களைப் போல் கற்பதும் விவாதிப்பதுமல்ல.யோக என்ற சமஸ்க்ருத சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன.  யோகம் என்றால் இணைவித்தல், அதாவது, பலவற்றின் செயல்பாட்டை ஒருமிப்புவித்தல் (சிங்க்ரோனைஸ்) என்பது ஒரு பொருள். சைக்கிள் ஓட்டும் போது, நம் கையும் காலும், கண்ணும் காதும் இணைந்து செயல்படுகின்றன. அதுபோலவே, முதலில், உடலையும் உள்ளத்தையும் ஒன்றுவித்து, பிறகு, அவ்விரண்டையும் உண்மைப் பொருளோடு ஒன்றுவித்தல் (யுனிபிகேஷன்) என்பது யோகத்தின் இன்னொரு அர்த்தமாகும்.


பதஞ்சலி யோக சூத்திரம்
காலங்காலமாக நமக்குக் கிடைத்திருக்கின்ற, பல நல்வாழ்முறைகளில் ஒன்று தான் பதஞ்சலி மாமுனிவர் அருளிய யோக சூத்திரம் என்ற நூலாகும். இவர் அன்றாட வாழ்செயல்பாட்டை யோக சூத்திரத்தில் பகுத்தருளியுள்ளார். இதில் கூறப்படும் வாழ்முறைக்கு அஷ்டாங்க யோகம் (எட்டு படிகள் உடைய வாழ்முறை, என்று பெயர்)இதில் 3வது படியே ஆசனம்.
உலகில் 84 லட்சம் உயிர்வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு உயிருக்கு ஒரு ஆசனம் வீதம் 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன என்று யோகிகள் கூறுகின்றனர். இதில் 250 ஆசனங்கள் வரை பழக்கத்தில் உள்ளன. எனினும் இவைகளில் 18 வகை ஆசனங்கள் தான் மிக முக்கியமானவை. இவற்றைப் பயில்வதன் மூலம் ஏனைய ஆசனங்கள் தானாக வந்து விடும்.


யோக சூத்திர அஷ்டாங்கங்கள் சுருக்கமான விளக்கம்
அஷ்டாங்கங்கள் என்றால் 8 பகுதிகள். அவை
1. யமம்; 2. நியமம்; 3. ஆசனம்; 4. பிராணாயாமம்; 5. பிரத்யாகாரம்; 6. தாரணம்; 7. தியானம்; 8. சமாதி
1. யமம்: யமம் என்றால் சுயக்கட்டுப்பாடு என்று பொருள். அக்கட்டுப்பாடுகளில் முக்கியமானவை அஹிம்சை, சத்யம், அஸ்தேயம், பிரம்மசர்யம், அபரிக்ரஹம் ஆகியவை.
அ) அஹிம்சை: (அ+ஹிம்சை) துன்பம்/வேதனை ஏற்படுத்தாதிருத்தல் என்று அர்த்தம்.
ஆ) சத்யம் (உண்மை): உண்மை என்பது நாம் அறிந்ததை, அறிந்தவாறு, அப்படியே தெரிவிப்பதுடன், உண்மை நிøலையை உணர்ந்து உண்ணையாக வாழ்வதை குறிக்கும்.
இ) அஸ்தேயம் :  தம்மிடம் இருப்பதை முழுமையாக தனக்காகவும், முடிந்தவரை  பிறருக்காகவும் பயன்படுத்துவது.
ஈ) பிரம்மசரியம் : தனியாகவோ, இல்லறத்தில் இருந்து கொண்டோ பரம்பொருளை அடைய நினைப்பது.
உ) அபரிக்ரஹம் : மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது.
சிறு வயதிலிருந்து, படிப்படியாக, உணவை, படிப்பை, செயல்களைக் கூட்டுவது போல, சுயக் கட்டுப்பாடுகளையும் மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மனக்கட்டுப்பாடு வசப்பட்டு, உடல் பாதுகாப்பு எளிதாவதால் தான், யமத்தை அடுத்து நியமம் வருகிறது.
2. நியமம்: நியமம் என்றால் நெறிமுறை என்று பொருள். இறைவனை அடைய விரும்புவர்களுக்கு சௌச்சம், சந்தோஷம், தமாஸ், ஸ்வாத்யாயம், ஈசுவரப்ராயதானம் என  5 நெறிமுறைகள் அவசியம்.
அ) சௌச்சம் என்றால் தூய்மை. இதில் எங்கும் தூய்மை, எதிலும் தூய்மை மிக அவசியம்.
ஆ) சந்தோஷம் : உள்ளத்தில் மனநிறைவு என்று பொருள். போதுமென்ற மனதே பொன் செய்யும்.
இ) தமாஸ் (தபஸ்) :  ஒரு செயல் (எண்ணம்) நிறைவடையும் வரை தொடர்ந்த முயற்சி என்று பொருள், சொல், செயல், சிந்தனை என்ற மூன்று நிலையிலும் இத்தொடர் முயற்சி இருக்க வேண்டும்.
ஈ) ஸ்வாத்யாவம் : தானே அறிவது; தன்னை அறிவது என்பன முக்கிய அர்த்தங்கள்.
உ) ஈசுவரப்ராயதானம்: எல்லாமே இறைவன் அருளால் தான் நிகழ்கிறது. அணு முதல் அண்டம் வரை, யாவுமே, கடவுள் என்ற ஏதோ ஒரு அளப்பரிய சக்தியினால் இயங்குகின்றன என்ற எண்ணம் வளர வேண்டும். இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு, முதல் படியே, ஈசுவர அர்ப்பணம். ஈசுவரனுக்கு அர்ப்பணிக்கின்ற போக்கு வளர வளர, யோகத்தில் கடைசிப் படியான சமாதி. இறைவனுடன் ஐக்கியமாவது எளிதாகிவிடும்.
3. ஆசனம்: ஆசனம் என்றால் ஒரு நிலை என்று பொருள். அதாவது நம் உடலை, உடல் உறுப்புக்களை, ஒரு குறிப்பிட்ட வகையில், அசைவின்றி நிலைப்பித்த நிலை என்று பொருள். ஆனால் தேகத்தை சமச்சீர் நிலையில் வைத்திட தேகப் பயிற்சியும், அதைவிட நுண்ணிய ஆசனமும் தேவை ஆகும். ஆனால் ஆசனத்திற்கும், தேகப்பயிற்சிக்கும் வித்தியாசம் உள்ளது.


ஆசனம் - தேகப்பயிற்சி - ஒரு ஒப்புமை:
ஆசனம்        
1. ஒரு அசைவற்ற நிலை  
2. சக்தியைத் தேக்கிடுவது  
3. குறிப்பாக நரம்பு மண்டலத்தைப் பேணுவது
4. உடலுக்கும், மனதுக்கும் பணி ஓய்வு அளிப்பது
5. சுகம். அதாவது, ஆழ்ந்த உடல், மன மகிழ்வுக்கே முக்கியத்துவம்
6. திட உணவுப் பொருளை நம்பியிருப்பதைக் குறைப்பது
7. நோய்வாய்ப்பட்டிருப்போரும் சில ஆசனங்களைச் செய்யலாம்
8. தற்சார்வையும், தன்னுள் ஆழ்வதையும் வளர்ப்பது
9. இறையிடம் இட்டுச் செல்லும் நோக்கினால் உருவானது
10. உடலைக் குளிர்விக்கின்றது
11. உடல் உள் உறுப்புகளைப் பிசைந்து விட்டு இயங்க செய்கின்றது
12. நாடி நரம்புகளையும், தசைகளையும் ஒன்றாக இயக்குகிறது
13. இதயத்திற்கு நல்ல ஓய்வு
14. எவ்வயதினரும் செய்யலாம்
15. சக்தி உருவாகும்
16. மனஅழுத்தம் முற்றிலும் நீங்கும்


தேகப்பயிற்சி
1. அசைவிக்கும் செயல்பாடு
2. சக்தியைப் பயன்படுத்துவது
3.உடல் தசையமைப்பை மேம்படுத்துவது
4.உடலைப் பணிக்கு தயாரக்கிடுவது
5. கடுமையான பணிகளில் வலி,சிரமத்தை தாங்கிட முக்கியத்துவம்
6. மென்மேலும் திடஉணவை நம்பியிருக்கச் செய்கிறது.
7. நோய்வாய்ப்பட்டிருப்பின் செய்திட இயலாது
8. போட்டிமனப்பான்மையையும் அதனால் பிணக்கையும் கூட்டிடலாம்
9.இகவாழ்வில் நலம்பேணும் நோக்கு
10.உடலை உஷ்ணப்படுத்துகின்றது
11.வெளித்தோற்ற உறுப்புக்கு மட்டுமே பயன் தருவது
12.உடலின் புறத்தசைகளை மட்டுமே இயங்கச் செய்கின்றது
13.இதயத்தில் இரத்தஓட்டம் மிகுந்து வேகமாக துடிக்க வைக்கும்
14.முதியோர் செய்யக்கூடாது
15.சக்தி விரயமாகும்
16.மனஅழுத்தம் மிகும்


ஆசனம் பழகலில் நியதிகள் சில: நரம்புகள் பாதிக்கப்பட்ட நோயுடையவர்கள் டைபாய்டு, மஞ்சள் காமாலை, நெடு நாட்களாக உடலில் ஏதாவது உறுப்புகளில் புண் மற்றும் தோலில் நோயுள்ளவர்கள், இதய நோயுள்ளவர்கள், உடலில் ஏதேனும் ஒரு இடத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பயிற்சி ஆசிரியரின் ஆலோசனையின்றி எந்த ஆசனமும் செய்தல் கூடாது. குறிப்பாக புத்தகங்களை படித்து அதன்படி செய்து பழகுவதும் கூடாது. முதன் முதலாகப் பயிலும்போது, புத்தகங்களை அல்லது பிரசங்கங்களை மட்டும் ஆதாரமாக்கி ஆசனங்களைத் தாமாகச் செய்வதைத் தவிர்க்கவும். துவக்கத்தில் சில நாட்களாவது, அன்றாடம், சிறிது நேரமாயினும், யோகாசனம் கற்பிப்பவரிடம் பயில்வதே நல்லது. பின்னர், ஒவ்வொரு ஆசனம் செய்வதிலும் தேர்ச்சி பெறுவதற்கு வீட்டிலேயே, அவரவர்களே பழகிவிடலாம்.
ஆசனம் பயிலவும், பழகவும் காலை நேரமே உகந்தது. இயன்றவரை, மலஜலம் கழித்து, நீராடிய பின் செய்தல் மேன்மை, இரவுப் - பணி (நைட் - ஷிப்ட்) உடையவர்கள், கண்விழிப்பாலும், பணியாலும் ஒய்ந்து போயிருக்கையில், காலைக்குப் பதிலாக மாலை நேரம் செய்யலாம். எனினும், மதியம் சாப்பிட்ட நேரத்துக்கும் மாலை ஆசனம் பழகும் நேரத்துக்கும் 4 மணி நேரமாவது இடைவெளி அவசியம். வயிற்றில் ஜீரணிக்கப்பட வேண்டியது இருக்கையில் ஆசனம் செய்தல் கூடாது. காபி, டீ, திரவம் தானே என்று அவற்றை அருந்திய உடனும் ஆசனம் செய்தல் கூடாது. உண்மையில், திடமான சாப்பாடு, டிபனை விட, காபி, டீ போன்றவற்றையே ஜீரணிக்கப்பட அதிக நேரம் பிடிக்கின்றன.
காற்றோட்டமுள்ள இடம் நல்லது. கை, கால், மற்றும் உடலை நீட்டித் திருப்பி வளைப்பதைத் தடுக்காத தளர்வான உடையே நல்லது. இறுக்கமான உடையைத் தவிர்க்கவும். ஆசனங்களை, சற்று கனமான விரிப்பின் மேல் செய்வது நல்லது. கை, கால் உடம்பின் அசைவு மிக மிக மெதுவாகவே  இருக்க வேண்டும்.  தினமும் எல்லா ஆசனங்களையும் செய்வதை விட, அவசரமின்றி சிலவற்றை செய்வதே நல்லது.தலை, கழுத்துப்பகுதி, மார்பு, வயிறு, முதுகு, கைகால்கள் அனைத்து உடல் பகுதிகளும் உட்படுத்திய ஆசனமோ அல்லது குறிப்பிட்ட தனி உறுப்புகளுக்கோ பயிற்சி எடுத்துக் கொள்ளும் போது, எந்த ஒரு உடலுறுப்பும் விறைப்பின்றி, தளர்த்திய நிலையிலும் மென்மையாகவும், நிதானமாகவும், மிக இயல்பாகவும் இருக்கும்படி பழக வேண்டும். பரபரப்பில்லாத மனநிலைக்கு மாறிக்கொள்ள வேண்டும்.
யோக சாஸ்திரம் மற்றும் ஆயுர்வேதாவில் சாத்வீக உணவு உண்பவர்கள் தான் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ இயலும் என கூறுகிறது. சாத்வீக உணவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், சமைத்த காய்கறி கலவை, இலையுணவு, பால், தயிர், உலர்ந்த பழங்கள், தேன், அரிசி மற்றும் முளை கட்டிய தானிய உணவுகள் அடங்கும். எந்த ஆசனமாயினும், உடலை ஒருநிலைப்படுத்தும் போது, இரண்டு முக்கிய செய்திகளை மறந்திடக் கூடாது.
1. அசைவின்மை:  எவ்வளவு  நொடிகள் அல்லது நிமிடங்கள் உடல் உறுப்புக்கள் அசையாமல் இருக்க முடிகிறதோ, அந்த அளவுக்கு ஒரு ஆசனத்தில் இருந்தால் போதும். மிகச் சிரமப்பட்டு அசைவைக் கட்டுப்படுத்த முயல வேண்டாம். நாள் செல்லச் செல்ல அசைவு குறைந்து நின்று விடும்.
2. சுகம்: ஒவ்வொரு ஆசனத்திலும் நமக்கு சுகமான உணர்வு ஏற்பட வேண்டும். விழித்த நிலையிலேயே, சுகமான உறக்கத்தின் அனுபவத்தை, பயனை அளிப்பதாக ஆசனம் அமைய வேண்டும். ஆசனம் பழகும் முன் செய்யப்படும்; கபாலபாதி போன்ற மூச்சுப்பயிற்சிகள் வேறு; பிராணாயாமம் என்ற சுவாசக்கட்டுப்பாடு வேறு. நம் எண்ணப்படி, காற்றை இழுத்து, நிறுத்தி வெளியிடும் திறனை அளிக்கின்ற பிராணாயாமத்தை ஆசனங்களில், ஓரளவு தேர்ச்சி பெற்ற பின் பழகிவிடுவதே நல்லது.


பெண்களுக்கான சில செய்திகள் : ஆண்களுக்கும் ஆசனம் அவசியம் என்றால், பெண்களுக்கு அவை அதி அவசியம் ஆகும். எனினும், அடிப்படை உடற்பாங்கு வேறுபாட்டுக்கு ஏற்ப இரு பாலரும் ஆசனத்திலும் சில மாறுபாடுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னால், குழந்தைப் பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டிட முடியாததைக் கருதி, பெண்கள் சிறு வயதிலிருந்தே குறுகிய வணங்கு முறையை பின்பற்றுகின்றனர். இது போலவே பருவமடையும் வரை பெண்களுக்கும் எல்லா ஆசனங்களையும் பழக்கினாலும், பூப்படைந்த பிறகு, மாதவிலக்குக் காலத்தில் சில நாட்களும், கருவுற்ற காலம் மற்றும் பிள்ளை பெற்ற பின்பு சில மாதங்களும் உடல்நிலைக்கேற்ப ஓரளவோ, முழுமையாகவோ ஆசனங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவ அறிவும்உடைய ஆசனப்பயிற்றுவிப்பாளரிடம், எந்தெந்த ஆசனங்களை, எவ்வளவு நேரம் பழகிடலாம் என்று தெரிந்து கொண்டு செய்வது நல்லது. பெண்ணின் உடலும் பேணப்படும். எதிர்காலப் பிள்ளையின் நிலையும் பேணப்படும்.


பிராணயாமம்
பிராண சக்தி : பிராணயாமம் உயிர் பலம் சக்தி -தேஜஸ் ஒளி என்ற இரண்டும் பிராணன் ஆகும். உயிர் சக்தி (விடல் ஃபோர்ஸ்) பிராணன் என்ற சக்தியினை சமமாக்கி, உடலில் இருத்தி பஞ்சகோசங்களை அறிந்து இயற்கையினை விருப்பம் போல் இயங்க வைக்கும் முறை.


பந்தங்கள் : பிராணனைத் தேவைப்படும் போது தேவைப்படும் இடத்தில் வைக்க, அல்லது தடுத்து மாற்றிடங்களுக்குப் பரவச் செய்ய பந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


முத்திரைகள் : பல முத்திரைகள் ஆசனங்களோடு இணைந்ததாகவே இருக்கின்றன. உடலையும், கை விரல்களையும் குறிப்பிட்ட வகையில் வடிவமைத்துக் கொண்டு இணைப்பது முத்திரையாகும். ஆசனங்கள், பந்தங்கள், முத்திரைகளை முறையே கற்காமல் நேரடியாக பிராணயாமத்திற்குச் செல்வது தவறாகும். உள நோயும், உடல் நோயும் வராதிருக்க மனம் அமைதியுற பிராணசக்தி, ஜீவசக்தி இத்தூல சரீரத்தில் பெருக, தொடர்ந்து ஜபம், தவம் செய்வோம். மன ஆற்றலுக்கு யோகமும் உடலாற்றலுக்கு ஆசனமும் எனப் புதிய இருவினை செய்வோம். இன்புறுவோம்.
அர்த்தமுள்ள யோகம் + ஆசனம்
யோகம்                                 ஆசனம்
உளவியல்                          உடலியல்
அகத்தூய்மை                   புறத்தூய்மை
புலன் கட்டுக்கோப்பு      உடலாற்றல் மேம்பாடு
மனஆற்றல்                       உட்சுரப்பிகள் உயிர்ப்பித்த
நினைவாற்றல்                 செயலாற்றல் துலக்கம்
உணர்வாற்றல்                  வளர்சிதைமாற்ற செயல்பாடு
தியானம்                                           பிராணயாமம்
ஆழ் மனத்தடவியல்                       உயிரியல்
நீள் நினைவு நோற்றல்                  உயிர் பரவல்
அறிவு வடிவு                                      உயிர்க்காற்றின் உலா
ஆத்மா தரிசனம்                               உயிர்க்காற்றின் உலா
ஆன்ம நிவேதனம்                            உலகுயிர் உடலுயிர் ஒற்றுமை


யோகாசனம் பழகுவதற்கு இங்கு சில முக்கிய ஆசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது
இது தவிர இன்னும் பல ஆசனங்களையும் கற்றுப் பழகிட முயலவும். முக்கிய ஆசனங்கள் என்பது பொதுவாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவரவர் தேக நலன் பராமரிக்க, வேறு சில ஆசனங்கள் மேலும் முக்கியமாக, அவசியமாக இருக்கலாம். ஒவ்வொருவரும் தத்தமக்கு உகந்ததை தவறாமல் செய்து நன்மை பெறவும். ஆசனங்கள் செய்யும் முன்பும், செய்திடும் போதும் அவசரப்படாது இருப்பது போலவே, செய்த பின்னரும் சில நிமிடங்களாவது அமைதியாக, வேறு பணியில் ஈடுபடாமல், இறைவனை தியானித்திருப்பது நல்லது. குறிப்பாக உடனே குளிப்பதையும், திரவ உணவையும் கூட தவிர்க்கவும்.

எவரெஸ்ட்டில் ஏறிய, முதல் வயதான பெண்!

பிரேமலதா அகர்வால். 45 வயதாகும் இவர், இரண்டு பெண்களுக்கு தாய். இவரது மூத்த பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. எப்போது வேண்டுமானாலும், பாட்டி என்ற அந்தஸ்து கிடைக்கலாம். சரி... இந்த விவரம் எல்லாம் எதற்காக என்கிறீர்களா?

இளைஞர்கள் பலர், ஏற முயன்று முடியாமல் உயிரை கொடுத்துள்ள, உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில், இந்த வருடம், மே 11ம் தேதி, ஏறி சாதனை படைத்துள்ளார். அந்த வகையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இந்தியாவின் வயதான பெண் என்ற சாதனையையும் பெற்றுள்ளார். இத்தனைக்கும் இவர் எவரெஸ்ட் சிகரம் ஏறும் போது ஏற்பட்ட சோதனைகள் ஏகப்பட்டவை.

எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்காக அடிவாரத்தில் குழுமிய போது, இவரது குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள், இவரை கிண்டலும், கேலியும் செய்துள்ளனர். ஒரு சிலர், "ஏன் இந்த வீண் முயற்சி; பேசாமல் இப்படியே திரும்பி விடுங்கள்...' என்று சொல்லி, எச்சரித்துள்ளனர்; ஆனால், அப்படிச் சொன்னவர்கள்தான் ஒரு கட்டத்திற்கு மேல் ஏற முடியாமல் திரும்பி விட்டனர். 23 ஆயிரம் அடிக்கு மேல் காற்று கிடையாது, செயற்கை சுவாசம்தான் துணை. இந்த செயற்கை சுவாசத்தின் துணையோடு, மேலும் 6,000 அடி ஏற வேண்டும்.

இன்னும் கொஞ்சம் உயரம் போனதும் மைனஸ், 100 - 150 டிகிரி வரை குளிர் காணப்படும். இவர் போன போது, உச்சபட்ச குளிர் நிலவியது.
இன்னும் கொஞ்ச தூரத்தில் சிகரத்தை தொடப் போகிறோம் என்ற நிலையில், கையில் இருந்த கையுறை கழண்டு விழுந்து, காணாமல் போனது. எலும்பையே உருக்கும் குளிருக்கு முன், விரல்கள் எம்மாத்திரம் என்ற நிலையில், திரும்ப கையுறை கிடைக்கப் பெற்றார். இப்படிப்பட்ட சோதனைகளை எல்லாம் தாண்டி, எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு திரும்பி இருக்கிறார்.

இவர், நாற்பது நாள், ஒட்டகத்திலேயே பாலைவனப் பயணம் மேற்கொண்டு, "லிம்கா' உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
இவரது பொழுதுபோக்கே மலை ஏறுவதுதான், எவரெஸ்ட் சிகரம் ஏற வேண்டும் என்பது இவரது கனவாக இருந்தது. அந்தக் கனவு நிறைவேற, நிறைய செலவு செய்ய வேண்டும். பின்தங்கிய ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த சாதாரண குடும்பத் தலைவியான இவருக்காக, செலவு செய்ய இப்போதுதான், டாடா ஸ்டீல் நிறுவனம் முன் வந்தது. இதையடுத்து, இப்போது அவரது கனவு நனவாகியுள்ளது. சாதனை செய்ய வயது ஒரு தடையில்லை என்று நிரூபித்துள்ள இவர், இப்போது சாதனைப் பெண் மட்டுமல்ல, எவரெஸ்ட் சிகரத்தின் சரித்திரத்திலும் இடம் பெற்ற பெண்ணாகி விட்டார்.
***

இமயமலையில், 29 ஆயிரத்து, 28 அடி உயரத்தில் உள்ளது எவரெஸ்ட் சிகரம்.
*சாதனை செய்பவர்களுக்கு மிகவும் சவாலான விஷயம், இந்த சிகரத்தை தொடுவதுதான்.

*இந்த சாகச பயணத்தில் இதுவரை, 216 பேர் உயிரிழந்துள்ளனர்.

*மே 29, 1953ல் தான், முதன் முதலாக டென்சிங் மற்றும் ஹிலாரி ஆகியோர் இந்த சிகரத்தில் ஏறி, சாதனை படைத்தனர்.

மரத்துப்போனதா மனிதநேயம்?

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு மருத்துவமனை வாசலில், கடந்த ஐந்து நாட்களாக முதியவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சிகிச்சை அளிக்க மறந்து போனது மனிதநேயம். திருவாடானை- தொண்டி ரோட்டில் 70 வயதுடைய முதியவர் ஒருவர் நடக்க முடியாத நிலையில், நிழற்குடையில் படுத்திருந்தார். சிலர் அவரை திருவாடானை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நாட்கள் கடந்த நிலையில், அவரை பார்க்க யாருமே வரவில்லை.

படுக்கையில் காலைக்கடன்களை கழிப்பதால் ஊழியர்கள், டாக்டர்களிடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக ராமநாதபுரம் மருத்துவ உயர் அதிகாரிகளுக்கும், திருவாடானை தாசில்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை அப்புறப்படுத்தும்படி உயர் அதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்துள்ளது. இதனால், அந்த முதியவரை ஊழியர்கள், மருத்துவமனை வாசலில் கொண்டு வந்து போட்டனர். கடந்த 10 நாட்களாக அவர் உயிருக்கு போராடி வருகிறார்.மருத்துவமனை டாக்டர் ராஜபிரபு கூறியதாவது: மூன்று நாட்கள் முதியவருக்கு சிகிச்சை அளித்தேன். தெம்பாக இருந்த அவர், ஊர்ந்து எங்கோ சென்று விட்டார். தேடியும் காணவில்லை. நீங்கள் சொல்லி தான், அவர் வாசலில் கிடப்பது தெரியும். அவருக்கு சிகிச்சை அளிப்போம்,'' என்றார்.
அவ்வழியாக செல்பவர்கள் தண்ணீர் பாட்டில் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்து விட்டு செல்கின்றனர். ஆஸ்பத்திரிக்கு எதிரில் தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேசன் உள்ளது. அதிகாரிகள் அந்த வழியாக அடிக்கடி சென்று, வந்த போதும் யாருமே முதியவரை கண்டு கொள்ளவில்லை. மரத்துப்போன இதயங்களில், மருந்துக்கு கூட மனிதநேயம் இல்லாமல் போனது மக்களை வருத்தமடையச் செய்துள்ளது. முதியவருக்கு உயிர்பிச்சை அளிக்க மருத்துவத்துறை முன்வர வேண்டும்.

பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள்!!!

திருவனந்தபுரத்து பத்மநாப சுவாமி கோவிலில், விலை மதிக்க முடியாத அளவு, விலை உயர்ந்த பொக்கிஷங்கள் கிடைத்து உலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது. திருவனந்தபுரம், தொன்று தொட்டே புகழ் வாய்ந்த நகரமாக இருந்தது என்பது, "அந்தமிழ் புகழ் அனந்தபுரம்' என, நம்மாழ்வார் பாடியுள்ளதில் இருந்தே அறியலாம். இங்குள்ள திருமால் கோவிலையும், பெருமாளையும், "அனந்தபுர நகர் ஆதி அம்மான்' என்று அவர் கூறுகிறார். அனந்தபுரம் என்பது ஊரையும், நகர் என்பது விண்ணகரம் என்றும், ஆதி என்பது பெருமாளையும் குறிக்கும். இங்கு உறைகின்ற திருமால், "பாம்பணையில் பள்ளிகொண்ட பரமமூர்த்தி' என,ஆழ்வார் பாடுகிறார்.

முதன் முதலில் சேரமான் பெருமாள் என்ற பட்டம் பூண்ட பாஸ்கர ரவிவர்மன் என்ற சேர அரசர், கி.பி., 1050ல், பத்மநாப சுவாமி கோவிலுக்கு திருப்பணி செய்வித்தார். ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் இக்கோவிலோடு தொடர்பு கொண்டவர். முகுந்த மாலை என்ற பதிகத்தை இயற்றியிருக்கிறார். எளிமையான அமைப்புடன் இருந்த கோவிலை, கேரள கலை மரபுப்படி 12ம் நூற்றாண்டில் ஆண்ட வேனாட்டு அரசர், 1325லிருந்து 1355 வரை ஆண்ட வீர கோதை கேரள வர்மன் என்பவர் புதுப்பித்துக் கட்டினார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. 1168ல் ஆண்ட வீர ஆதித்ய வர்மன் என்பவர், இக்கோவிலுக்கு அருகிலிருந்த, மித்திரானந்தபுரம் கோவிலை கட்டி, பத்மநாப சுவாமி கோவிலின் இணைக் கோவிலாக மாற்றினார். பத்மநாபர் கோவில் ஏழு ஏக்கர் பரப்பில் அமைந்தது. தெப்பக்குளம், 25,700 சதுர அடி அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.இக்கோவிலினுள்ளே கிருஷ்ணன் கோவில், நரசிம்மர் கோவில், அய்யப்பன் கோவில் ÷க்ஷத்திர பாலன் கோவில், முதலிய கோவில்களும் உள்ளன. பண்டைக்காலம் தொட்டே பத்மநாப சுவாமி கோவிலில், சேர அரசர்களுடைய குலதெய்வமாக திகழ்ந்துள்ளது.
பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள மூலஸ்தானம், அதன் மேல் விமானம், அதற்கு முன்புள்ள ஒற்றைக்கல் மண்டபம், மடப்பள்ளி திருச்சுற்று மண்டபம், அபிஸ்ரவண மண்டபம், கோவிலைச் சுற்றி ஆயிரம் விளக்குகள் இருக்கும் மரச்சட்டங்களுடன் கூடிய விளக்கு மாடம் மற்றும் கோவிலின் உட்பகுதி முதலிய அனைத்துமே, ராம மார்த்தாண்ட வர்மா, 1459லிருந்து 1461 வரை திருப்பணி செய்வித்தார்.அதாவது, இன்றுள்ள பத்மநாப சுவாமி கோவிலின் பெரும்பாலான பகுதிகள், கி.பி., 1460ல் தோற்றுவிக்கப்பட்டவை. இதற்கடுத்து, 1481ல் வீரகோதை மார்த்தாண்ட வர்மா, இங்கு மகாபாரதம் வாசிக்க ஏற்பாடு செய்தார். பரணித்திருநாள் ஜெயசிம்ம தேவர் என்பவர், 1486ல் பல சமுதாய சீர்த்திருத்தங்கள் செய்து கொடுத்தார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த பாண்டிய மன்னர், பராக்கிரம பாண்டிய தேவர், பத்மநாப சுவாமி கோவிலுக்கு ஒரு நிலம் தானமாக கொடுத்திருக்கிறார். கோவிலின் திருச்சுற்று சுத்தம்பலம் மடப்பள்ளி முதலியவற்றுக்கு கருங்கல் தரை பரவப்பட்டது. பல திருவாங்கூர் மன்னர்கள் தாங்கள் செய்த சிறு பிழைக்கு, தண்டமாக பொருட்களும் கொடுத்திருக்கின்றனர். ஏறக்குறைய கி.பி., 1499ல், ஒரு போரில் ஏற்பட்ட பிழைக்காக, பன்னிரெண்டு வெள்ளிக் கலசங்களையும், சில கல் சிற்பங்களையும் கோவிலுக்கு கொடுத்திருக்கிறார். 1500ல், கோவிலுக்குள், தைத்த துணிமணிகளை அணிந்து வரக்கூடாது என்று ஓர் ஆணை பிறப்பித்தார்.அதன்படி, கடந்த 500 ஆண்டுகளாக இம்மரபு இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1532ல் திருப்பாபூர் மூத்த திருவடி, கோவிலில் இருந்த விலை உயர்ந்த அத்தனை ஆபரணங்களுக்கும் ஒருவிவரப் பட்டியல் தயாரித்தார். பின்பு கி.பி., 1686ல், ஒரு பெரும் தீ, கோவிலில் பரவியதால், குறிப்பாக, அபிஸ்ரவண மண்டபம், நரசிம்ம சுவாமி கோவில் முதலியவற்றில் இருந்த பகுதிகள் தீக்கு இரையாயின. அப்பொழுது விமானத்தின் கூரைப் பகுதி எரிந்து, மூலவர் மேல் விழுந்தது. மூலவர் உருவம் மரத்தால் செய்யப்பட்டிருந்தாலும், அது எவ்வித சேதமும் இன்றி தப்பியது.
அரசர் வகுத்த வழிமுறைகள்: கார்த்திகை திருநாள், ரவிவர்ம ராஜா, இந்த தீக்கிரையான பகுதிகளை புதுப்பித்து, சாந்தி அபிஷேகம் செய்வித்தார். இதுபோன்ற கோவில் பற்றிய செய்திகள் எல்லாம், ஆயிரக்கணக்கான ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு, பத்மநாப சுவாமி கோவிலில் இன்று வரைகட்டுக் கட்டாக வைக்கப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு மொத்தம் உள்ள சுவடிகள் ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கும். இவற்றுக்கு சுருணை என்று பெயர். இவற்றில் சில படிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில் என்ற தலைப்பில், அஸ்வதி திருநாள் கவுரி லக்ஷ்மிபாய் எழுதியுள்ள, சிறப்பான புத்தகம், பாரதிய வித்யா பவன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 1425ல், வீர ரவிவர்மர் என்ற மன்னர், பத்மநாப சுவாமி கோவில் உட்புறத்தில் ஒரு ஆவண காப்பகத்தை கட்டி, அவற்றுள் கோவில் ஆவணங்கள் மற்றும் முக்கிய பொருட்களை வைக்க ஏற்பாடு செய்தார். 1486ல், இரு வகையான கணக்கர்கள் நியமிக்கப்பட்டனர். ஒருவர், கரணக் கணக்கர் என்று அழைக்கப்பட்டார். அவர், சட்டப்பூர்வமான ஆவணங்களை பாதுகாக்கவும், தயாரிக்கவும் அமர்த்தப்பட்டார்.மற்றவர் பண்டாரக் கணக்கர் என்று அழைக்கப்பட்டார்.

இவர், கோவிலுக்கு கொடுக்கப்படும் தங்கம், பணம், விலை உயர்ந்த அணிகலன்கள் முதலியவற்றின் பட்டியல் தயாரிக்கவும், கணக்கு எழுதவும், பாதுகாக்கவும் அமர்த்தப்பட்டார். இவை எல்லாம் ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே, நம் அரசர்கள் வகுத்த வரன்முறைகள்.இப்பெரும் சொத்துக்கள் யாரைச் சேர்ந்தவை என்பதில், விவாதங்கள் எழுந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான கருத்துக்கள் அவரவர் மனம் போனபடி எழுதப்பட்டுள்ளனவே தவிர, சட்டத்தின் நோக்கில் ஆய்ந்து எழுதப்பட்டவை அல்ல. ஒருவர் இவை நாட்டுக்கு சொந்தமானவை, ஆதலின் அரசே எடுத்துக் கொண்டு மக்களுக்காக செலவழிக்க வேண்டும் என, மிகவும் ஆடம்பரமான விளம்பரத்துடன் கூறியிருக்கிறார்.

இவற்றை அரசு என்ற போர்வையில், அரசியல்வாதிகள் அபகரித்து பயனற்றதாக செய்து விடுவர். எப்படி இருப்பினும், இக்கருத்து சட்டத்திற்கு விரோதமானது. மற்றொரு கருத்து, இது, திருவிதாங்கூர் மன்னருக்கு சொந்தமானது என்பதாகும். இதுவும் சட்டத்திற்கு புறம்பானதால் ஏற்புடையது அல்ல.மன்னருக்காக யாரும் இச்செல்வங்களை கொடுக்கவில்லை. மூன்றாவது கருத்து, இவை, கோவிலுக்கு சொந்தமானவை. இக்கருத்தும், பொதுப்படையாக கூறப்பட்டுள்ளதே ஒழிய, சட்ட நுணுக்கங்களுக்கு ஒத்து வரவில்லை. அதற்கு காரணம், கோவில் என்ற சொல்லின் விளக்கத்தை பொருத்ததாகும். கோவில் என்றால், பொதுவாக, "தெய்வம் உறைகின்ற இடம்' என்றுதான் கூறுவர், ஆதலின் இச்செல்வங்களை கோவிலாகிய இடத்திற்கு கொடுக்கவில்லை.இவை, அனைத்து கோவில்களில், இரத்தினப் பண்டாரம், பொற் பண்டாரம் என்பதைப் போல, கோவில் பண்டாரத்தில் இருக்கின்றன. ஆதலின், இக்கோவிலில் உறையும் தெய்வத்திற்குத்தான், பக்திப் பெருக்கினாலே கொடுத்துள்ளனர் என்பதில் ஐயமில்லை. இவற்றை காணிக்கை என்றும் அழைப்பது மரபு.

பண்டைய காலத்திலிருந்து இந்திய நாட்டில் இவற்றை கோவிலில் உறையும் தெய்வத்திற்கே கொடுத்ததாக பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகள் கூறுகின்றன. இதை உறுதி செய்யும் வகையில் கி.மு., இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே கல்வெட்டுகள் உள்ளன.பழங்கால மரபு: தமிழகத்திலும், பல்லவர் காலம் தொட்டு இதுபோன்ற மரபை காண்கிறோம். திருத்தணி மலைமேல் உள்ள முருகப் பெருமானுக்கு அபராஜித பல்லவன், ஒன்பதாம் நூற்றாண்டில், தான் கொடுத்த தானத்தை செப்பேடுகளில் எழுதும்போது, "திருத்தணி மலைமேல் பிராணார் சுப்பிரமணியருக்கே நீரோடு அட்டிக் கொடுத்தேன்' என்று தானே கூறுகிறான். இதையே சமஸ்கிருத பகுதியில், "மலைமேல் மாகேஸ்வரனாகிய குமாரனாகிய ஷண்முகனுக்கு பொன் கலசத்திலிருந்து நீர் வார்த்துக் கொடுத்தேன்' என்று கூறுகிறான். தஞ்சை பெருங்கோவிலை கட்டிய ராஜராஜன், "தஞ்சாவூர், நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ராஜராஜேஸ்வரமுடையாருக்கு நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்மற்றும் கொடுத்தார் கொடுத்தனவும் கல்லில் வெட்டுக' என்று எழுதியிருக்கிறான். இங்கு கற்கோவிலாக ராஜராஜேஸ்வரத்தையுடைய தெய்வத்திற்கு நான் கொடுத்தேன் என்பது பொருள். இதிலிருந்து கோவில் வேறு, தெய்வம் வேறு சட்டப்படி குறித்துள்ளான். கேரள தேசத்திலும் இதே மரபுதான் கடைபிடிக்கப்பட்டது. "திருவல்லவாழ்' அப்பனுக்கு கொடுத்தது போன்ற குறிப்புகள் இதையே குறிக்கின்றன. இதுபோல இந்து கோவில்களாகட்டும், பவுத்த கோவில்களாகட்டும், சமண கோவில்களாகட்டும் கோவிலில் உடைய தெய்வத்திற்கு என்பதுசட்டப்படி பொருந்தும்.

இவ்வாறு கூறுவதால் என்ன சிறப்பு எனில், இவ்வரும் செல்வங்களை கோவிலாகிய இடத்திற்கு கொடுக்காமல், அங்கு உறைகின்ற தெய்வத்திற்கு பெரும் பக்தியுடனும், மரியாதையுடனும், நம்பிக்கையுடனும் கொடுத்தேன் என்பது பொருள். இது, நம் நாட்டில் பண்டைய காலத்திலிருந்தே பின்பற்றும் மரபு.இதில், மற்றொரு இடரும் ஏற்படக் கூடும். எங்கும் நிறைந்திருக்கும் சர்வேஸ்வரன் ஆகிய தெய்வத்திற்கு, நிலம், பணம், அணிகலன்கள் முதலியவற்றை உடைமை ஆக்கிக்கொள்ள உரிமையுண்டா என்பது கேள்வி. இதன் அடிப்படையில் கடந்த 200 ஆண்டுகளாக இந்திய நாட்டில் பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவ்வழக்குகளில் தெய்வத்திற்கு பொருள் கொள்ளும் உரிமை உண்டு என, தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

லண்டனில் நடந்த பத்தூர் நடராஜர் வழக்கில் இக்கேள்வி எழுந்தது. அதை ஆய்ந்து தீர்ப்பளித்த லண்டன் ஐகோர்ட் நீதிபதி தமது தீர்ப்பில், இந்திய சட்டப்படி தெய்வத்திற்கு பொருள் உடைமை கொள்ளும் உரிமை உண்டு. ஆதலின், பத்தூர் கோவிலுக்கு இந்நடராஜர் உரியதாகும். ஆதலின் இச்சிலையை அக்கோவிலுக்கே கொடுத்து விடவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார். ஆதலின், திருவனந்தபுரம் கோவிலில் இப்பொழுது கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து செல்வங்களும், பத்மநாப சுவாமிக்கே சொந்தம். இவற்றை வேறு யாரும் சொந்தம் கொண்டாடவோ, தம் இச்சைப்படி செலவழிக்கவோ முடியாது. குறிப்பாக, இக்கோவிலிலேயே பண்டாரக் கல்லறையில் இவை கிடைத்தது இதை உறுதி செய்கிறது.

அனந்த பத்மநாப சுவாமியை தங்கள் குல தெய்வமாகக் கொண்டு, பத்மநாப தாசன் என்ற பெயரோடு, காலங்காலமாக இவற்றை நேர்மையாக பரிபாலித்து, காத்து, இன்று வரை தந்துள்ள திருவனந்தபுரத்து மன்னர்களுக்கு, இந்திய நாடே தம் வணக்கத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டும், இச்செல்வங்களை இப்போதுள்ள முறைப்படியே பாதுகாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து இருப்பதும், இந்திய மக்களின் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இது, இந்து அரசர்களின் ஈடு இணையற்ற தெய்வ பக்திக்கும், தியாகத்திற்கும் பிரதிபலிப்பதாகத் திகழ்கிறது

பொதுக்குழுவில் முடிவு!


 தி.மு.க., தலைவர் பதவியிலிருந்து கருணாநிதி விலகிக் கொண்டு, காமராஜரை போல, "வழிகாட்டுதல் தலைவராக' பொறுப்பேற்க வேண்டும். தலைவர் பதவியை ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரது ஆதரவாளர்கள், கோவையில் நடக்கவுள்ள பொதுக்குழுவில் தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். மாவட்டச் செயலர் பதவியை மாற்றக் கூடாது என முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் மாவட்டச்செயலர்கள் போர்க்கொடி தூக்கவும் ரகசியமாக திட்டமிட்டுள்ளனர் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தல் படுதோல்விக்கு பின் தி.மு.க.,வுக்கு அடி மேல் அடி விழுந்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி கைது மற்றும் ஜாமின் மறுப்பு, மத்திய அமைச்சரவையில் தி.மு.க., வுக்கு கைவிரிப்பு என அடுக்கடுக்கான பிரச்னைகளை தி.மு.க., தலைவர் கருணாநிதி சந்தித்து வருகிறார். தற்போது கட்சி ரீதியான பிரச்னையும் அவருக்கு திருகுவலியை ஏற்படுத்தி வருகிறது.
வடசென்னை மாவட்டச் செயலராக பணியாற்றிய வி.எஸ்.பாபு, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால், அவருக்கு பதிலாக மாவட்ட பொறுப்பாளராக ஆர்.டி.சேகர் பணியாற்றுவார் என தலைமை அறிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டச் செயலர் சிவாஜியும் தனது மாவட்டச்செயலர் பதவியை மேலிட நிர்பந்தத்தின் அடிப்படையில் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக மாதவரம் சுதர்சனம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.வட சென்னை, திருவள்ளூரை தொடர்ந்து சில மாவட்டங்களில் மாவட்டச்செயலர்கள் பதவி பறிக்கப்படுவதற்கான சூழ்நிலையும் நிலவி வருகிறது. அதற்கு காரணம் பார்லிமென்ட், சட்டசபை பொறுப்பாளர்கள் என்ற புது அமைப்பு தி.மு.க., வில் உதயமாக இருப்பதால் தற்போதைய மாவட்டச்செயலர்களிடம் கடும் அதிருப்தியை கிளப்பியுள்ளது."வீரபாண்டி ஆறுமுகம் பொதுக்குழுவில் தனது கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துச் சொல்லக்கூடியவர். அவர் சொல்லும் கருத்துக்கள் கட்சியின் நலன் கருதியே இருக்கும். அதை உதாசீனப்படுத்தக் கூடாது' என கருணாநிதி அடிக்கடி சொல்வதுண்டு. எனவே பொதுக்குழுவில் மாவட்டச்செயலர்களை மாற்றக் கூடாது என தனது எதிர்ப்பை வீரபாண்டி ஆறுமுகம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அவரிடம் ரகசியமாக சில மாவட்டச்செயலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தேர்தல் தோல்வியை கருத்தில் கொண்டு, தலைவர் பதவியிலிருந்து கருணாநிதி விலகிக் கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் தோல்வி அடைந்ததும் தலைவர் பதவியிலிருந்து காமராஜர் விலகிக் கொண்டு வழிகாட்டுதல் தலைவராக விளங்கியது போல கருணாநிதியும் அதேபோல முடிவு எடுக்க வேண்டும் என ஸ்டாலின் ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். தங்களது விருப்பத்தை ஸ்டாலின் ஆதரவு மாவட்டச் செயலர்கள் பொதுக்குழுவில் பேசவும் திட்டமிட்டுள்ளனர்.இதற்கிடையில் கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சுவதற்காக கொண்டு வரப்படும் பொறுப்பாளர்கள் நிர்வாகத்தை ஸ்டாலின் ஆதரவு மாவட்டச் செயலர்கள் விரும்பவில்லை. காரணம், தற்போது உள்ள மாவட்டச் செயலர்களின் எண்ணிக்கையில் ஸ்டாலினுக்கு தான் பெரும்பான்மை இருக்கிறது. அவருக்கு அடுத்ததாக அழகிரி ஆதரவாளர்கள் உள்ளனர்.
தற்போது புதிய பொறுப்பாளர்கள் நியமனத்தில் கனிமொழி ஆதரவாளர்களையும் கருணாநிதி இடம் பெற வைத்து விடுவார் என்ற சந்தேகம் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு எழுந்துள்ளது. எந்தப்புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்பது தெரியாது என்பதால் எதிர்காலத்தில் அழகிரி ஆதரவாளர்களும், கனிமொழி ஆதரவாளர்களும் கைகேர்த்துக் கொண்டு ஸ்டாலினை எதிர்க்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்ற கேள்வியையும் ஸ்டாலின் ஆதரவாளர்கள் எழுப்புகின்றனர்.
இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத தி.மு.க., பிரமுகர் கூறும் போது, ""தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து கருணாநிதி விடை பெற வேண்டும். பா.ம.க., நிறுவனராக ராமதாசும், தலைவராக ஜி.கே.மணியும் பணியாற்றுவது போல தி.மு.க., வழிகாட்டுதல் தலைவராக கருணாநிதியும், தலைவராக ஸ்டாலினும் பணியாற்ற வேண்டும். மாவட்டச் செயலர்கள் பதவி மாற்றம் விவகாரத்தில் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் பெரும்பான்மையான மாவட்டச்செயலர்கள் எதிர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்,'' என்றார்.
குடும்ப ஆட்சியே தோல்விக்கு காரணம் மலைபோல் குவியும் கடிதங்கள்:தேர்தல் தோல்விக்கான காரணங்களை, கோவையில்ஷ வரும் 23, 24 ம் தேதிகளில் நடக்கும் பொதுக்குழுவில் விவாதிக்க, கடிதம் மூலம் அனுப்ப வேண்டும் என தி.மு.க., தலைமை தொண்டர்களை கேட்டுக் கொண்டது.
கட்சியின் இந்த வேண்டுகோளுக்காக காத்திருந்த தொண்டர்களும், நிர்வாகிகளும், கடிதங்களை மலைபோல் குவித்து வருகின்றனர்.ஆட்சியிலும், கட்சியிலும் குடும்பத் தலையீடு, 2ஜி வழக்கு ஆகியனவே தேர்தல் தோல்விக்கான முக்கியக் காரணங்கள் என பலர் கடிதங்களை அனுப்பி வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் கட்சியினருக்கு விடுத்த கோரிக்கையில், "எனது குடும்பத்தினரின் படங்களை விழா அழைப்பிதழ்களில் போட வேண்டாம். அப்படி போட்டால், அந்த நிகழ்ச்சிக்கு நான் வர மாட்டேன் என' அழகிரி கூறியிருந்தார். குடும்ப ஆட்சி என்ற குற்றச்சாட்டின் பின்னணியில், இந்த வேண்டுகோளும் அடங்கியிருப்பதாகக் கூறுகின்றனர்.ஸ்டாலின் மற்றும் அழகிரியின் ஆதரவாளர்கள், தங்கள் தலைவரின் கை ஓங்கியிருக்கும் வகையில் கடிதங்களை அனுப்புவதாகவும் தெரிகிறது. நெருக்கடியான கட்டத்தில் கூடும் பொதுக்குழுவில், "யார் அடுத்தது' என்பதை உறுதி செய்துவிட வேண்டும் என ஸ்டாலின், அழகிரி ஆதரவாளர்கள் கச்சை கட்டிக் கொண்டு நிற்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல், ஆதாரங்களை வலுசேர்க்க கட்சித் தலைமைக்கு அனுப்பும் கடிதங்களை வலுவானதாக அனுப்பி வருவதாக தென் மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர் கூறுகிறார்.கட்சியை வலுப்படுத்தவும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கெட்ட பெயர் ஏற்படுவதைத் தவிர்க்கவும், குடும்ப உறுப்பினர்கள் ஒதுங்கியே நிற்க வேண்டும் என பலர் கருத்துக்களை கூறிவருகின்றனர்.
தலைமையின் குடும்பம் தவிர, அமைச்சர், மாவட்ட செயலர் மற்றும் கட்சியின் பிற பொறுப்பாளர்களின் வாரிசுகளும் தேர்தல் தோல்விக்குக் காரணம் என சொல்லுகின்றனர்.வாரிசுகள் வருவதைத் தடை செய்ய கட்சி விதியைத் திருத்த வேண்டும். அமைச்சராக இருந்தவர், மாவட்டம், நகரம், ஒன்றிய செயலர்களின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும். கொலை, நில அபகரிப்பு உள்ளிட்ட பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள கட்சி நிர்வாகிகள் மீது கட்சி நடவடிக்கை வேண்டும் போன்ற கருத்துக்களை தாங்கிய கடிதங்கள் அதிக அளவில் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
கடிதம் மூலம் தெரிவிக்கும் கருத்துக்களை மூடி மறைக்காமல், வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். தவறு செய்த நிர்வாகிகள் பற்றி கருத்துக்கள் கூறியவர்களுக்கு கட்சி பாதுகாப்பு அளிக்க வேண்டும். தகவல் கூறுபவர் மீது பழிவாங்கும் நோக்கில் செயல்படும் நிர்வாகிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிலர் கடிதங்களை அனுப்பியுள்ளதாக பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் கூறினார்.தோல்விக்கான காரணங்கள் குறித்து இதுபோல் வரும் கடிதங்களை தரம் பிரித்து, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் கடிதங்களை தேர்வு செய்யும் வேலை தி.மு.க., தலைமயகத்தில் நடந்து வருகிறது.
கட்சி நிர்வாகிகள் மீது வரும் கடிதங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு, அதன் மீது தனி விவாதம் நடக்கும் என கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகிறார். தோல்விக்கு கட்சித் தலைமையின் குடும்பத் தலையீடே காரணம் என்பது கட்சித் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.இதற்கான தீர்வுகள் பொதுக்குழுவில் கிடைக்கும் என தி.மு.க., தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். பொதுக்குழுவுக்குப் பின் அதிரடி மாற்றங்கள், புதிய நடைமுறைகள் உருவாகும் என்றும் தொண்டர்கள் நம்புகின்றனர்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...