|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 July, 2012

துப்பு கெட்டவர்கள்!


பெரும்பான்மையான மனிதர்கள் துப்புவதை மிக இயல்பாகச் செய்கிறார்கள். வெகுநாள் கழித்து நண்பனைச் சந்தித்தால் பேசுவதற்கு ஆயத்தமாவதற்கு துப்புகிறார்கள். முகவரி தேடி அலுத்துப் போனால் துப்புகிறார்கள். முகவரி கிடைத்துவிட்டாலும் சந்தோஷத்தில் துப்புகிறார்கள். பஸ்ஸைவிட்டு இறங்கியதும் துப்புகிறார்கள். பஸ்ஸில்  போகும்போது ஜன்னல் ஓர இருக்கை கிடைத்துவிட்டால் வசதியாகத் துப்பிக் கொண்டே செல்கிறார்கள். பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பு படிக்கட்டுக்கு இரண்டடி முன்பு, ஓர் அவசரப் பணியாகத் துப்பிவிட்டு ஏறிச் செல்வதையும் பார்த்திருப்பீர்கள். 

சிலர் கோபம் வந்தால் துப்புகிறார்கள். சந்தோஷம், வெட்கம், துக்கம், ஏமாற்றம், மோனநிலை, ஏகாந்த நிலை என்று அனைத்துப் மெய்ப்பாடுகளுக்கும் துப்பும் செயல் ஏற்புடையதாக இருக்கிறது.என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் என்னைப் பார்த்ததும் ஒவ்வொரு நாளும் பரவசம் பொங்கும் முகத்தோடு எதிர் கொள்வார். அதே பரவசத்தோடு சட்டென இடப்பக்கமோ, வலப்பக்கமோ திரும்பி 'பிளிச்' என்று துப்புவார். என்னிடம் பேசுவதற்கு முன்பு வாயைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்கு அவர் செய்து கொள்ளும் உபாயமாக அது இருக்கலாம். ஒருவகையில் அது எனக்குத் தரும் மரியாதை என்று கருதுகிறார் போலும். அவமரியாதையே மரியாதை செயலாய் மாறிவிடும் விந்தைத் தருணம் அது. அவருடைய முகக் குறிப்பை வைத்து நான் இதை ஆழமாக உணருகிறேன்.

சில மனிதர்கள் துப்புவதை தங்கள் சுய உரிமையாக கருதுகிறார்கள். இந்த உரிமைப் பிரச்னையைப் புரிந்து கொள்வது சுலபம். 'இங்கே துப்பவும்' என்று போர்டு எழுதி தொட்டி வைத்திருக்கும் இடத்தைப் பார்த்தால் அது தெரியும். தொட்டிக்குள் துப்புவதைவிட அதன் பக்கத்தில் இருக்கும் சுவரிலோ, தரையிலோ துப்புவதுதான் அதிகமாக இருக்கும். வெற்றிலை போட்டு துப்புவதோ, புகையிலை போட்டு துப்புவதோ துப்புவதை வேகப்படுத்துவதற்கு உகந்த வழியாக இருக்கிறது. வாய் நிறைய சுமார் அரை டம்ளர் கொள்ளளவுள்ள புகையிலைச் சாறை வைத்துக் கொண்டு.. அதே நிலையில் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி, அல்லது கேள்வி கேட்டுவிட்டு  மொத்தமாகத் துப்புபவர்கள் உண்டு. 


பான்பராக் விற்பனைக்கு வந்தபோது இந்தத் துப்பல் கலாசாரம் வண்ணமயமாகியது, வாசனை மயமாகியது. வீட்டைவிட்டு வெளியே வந்ததும் ஒரு சரம் பான்பராக்கை வாங்கி பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டால் அந்த நாளில் தன் கண்ணில் படுகிற மரம், போஸ்ட் கம்பம், குப்பைத் தொட்டி, வாஸ் பேஸின், சிறுநீர் கழிக்கும் பீங்கான் என எல்லாவற்றிலும் 'எச்சில் இலக்கம்' பொறிக்கத் தொடங்கிவிடுகிறான் மனிதன். எச்சில் இலக்கியம் என்று பொருள் கொண்டாலும் பிழையில்லை.புலி, நாய், பூனை போன்ற விலங்குகள் தங்கள் எல்லையைத் தீர்மானித்து வைக்க சிறுநீர் இலக்கம் இட்டு வைக்கும். தம் உமிழ் நீரைப் பயன்படுத்தி இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தை அமைக்கும் திறன் மனிதனுக்கு மட்டுமே உண்டு.பொது இடங்களில் எச்சில் துப்புவது குற்றம் என்று காவல்துறை சொல்கிறது. பொது இடங்களில் புகைப்பிடிப்பது குற்றம் என்றும் ஒரு சட்டம் காற்றிலே பறக்கவிட்டது போல அதுவும் ஒரு சட்டமாக இருக்கிறது. இவையெல்லாம் மனிதர்களின் ஆதி உரிமைகள் என்பது அரசுக்கும் போலீஸாருக்கும் புரிந்திருக்கும்தானே?


அவர்களின் பெருந்தன்மையை அவர்கள் போட்டிருக்கும் சட்ட நுணுக்கங்கள் மூலமாகவே நாம் அறிந்து கொள்ள முடியும்.பொது இடங்களில் சிகரெட்டை எல்லா பெட்டிக் கடைகளிலும் விற்கலாம். ஆனால் அதை பொது இடத்தில் பயன்படுத்தக் கூடாது. பான்பராக்கை விற்பதற்குத் தடை, ஆனால் அதை மென்று கொண்டிருக்கும் மனிதனின் வாய்க்கு எந்தவிதத் தடையும் இல்லை. பான்பராக் விற்கத் தடையாயிற்றே நீ எப்படி பான்பராக் மென்று கொண்டிருக்கிறாய் என்று எந்த போலீஸ்காரரும் கேட்பதில்லை. ஏன்? 

துப்புதல் யார்க்கும் இயல்பாம். சில ஆண்டுகளுக்கு வெளியாகி சக்கைபோடுபோட்ட டைட்டானிக் படம் நினைவிருக்கலாம். அதில் கதாநாயகன் ஜாக் கப்பலின் மேல் தளத்தில் இருந்து கடல் நீரை நோக்கித் துப்புவான். கப்பலில் இருந்து எவ்வளவு தூரத்துக்குத் துப்ப முடியும் என்பது போட்டி. அதை நாயகி ரோஸ்-ம் மிகுந்த ஈடுபாட்டுடனும் மகிழ்ச்சியுடனும் செய்வாள். இயக்குநர் ஜேம்ஸ் காமரூனுக்கு இப்படி காட்சி வைக்க வேண்டும் என்று எப்படி தோன்றியிருக்க முடியும்? தன் முனைப்பான இயல்பூக்கம் காரணமாகத்தான் இந்தக் காட்சி படத்தில் புகுத்தப்பட்டதாகத் தெரிகிறது.துப்புபவரை நோய் பரப்புபவர் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று சண்டைக்கு வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. துப்புபவரே துப்புறவாளர்கள். துப்புறவாளன் என்பதின் வேர் சொல் எது? துப்புதானே? 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...