|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 August, 2011

சுற்றுச்சூழல் மாசுபாடு...

மனிதன் சுற்றுப்புறச்சூழலை பல்வேறு வகையினில் மாசுபடச் செய்கின்றான். சுற்றுச்சூழல் மாசுபாடு மனித உடல் நலத்தினை பல்வேறு வழிகளில் பாதிப்படையச் செய்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் கரைந்துள்ள மாசுக்கள் நம் உடலில் நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, புரோன்சிடிஸ் (நம் சுவாசப் பைகளுக்கு காற்றினைக் கொண்டு செல்லும் சுவாச நாளங்களின் மெல்லிய சவ்வு வீக்கமடைதல்) மற்றும் எம்பைசிமா (நுரையீரல் காற்றறை திசுக்கள் சேதமடைதல்) போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது. குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், இருதய நோயுடையோர் ஆகியவர்களில் ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்தும் பாதிப்பு மிகவும் மோசமானவை.

வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையில் இடம்பெற்றுள்ள கார்பன் மோனோ ஆக்ஸைடு (co) நம் உடல் நலத்திற்கு தீங்கிழைக்கக் கூடியது. நம்மிடையே உபயோகிக்கப்படும் வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலானவை பழையதும், நன்கு பழுது பார்க்கப்படாதவையுமாகும். அவற்றின் பொறிகளில் (Engine) எரிபொருள்கள் முழுமையாக எரிக்கப்படாமையினால் கார்பன்-டை-ஆக்ஸைடு (co) உருவாக்கப்பட்டு வெளிவிடப் படுகிறது. கார்பன்- மோனோ-ஆக்ஸைடு கரைந்துள்ள காற்றினை சுவாசிப்பதனால் இரத்தத்திலுள்ள ஹீமோ குளோபின்கள் ஆக்சிஜனை எடுத்துச்செல்லும் திறனை இழந்துவிடுகிறது. இது இறுதியில் அனோசியா நோய்க்கு வழி வகுக்கிறது. அதுமட்டுமின்றி ஆஞ்சினா (ஆக்சிஜன் குறைபாட்டினால் ஏற்படும் நெஞ்சுவலி), மாரடைப்பு போன்றவை ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

மலைப்பிரதேசங்களில் வாழும் மக்கள் அதீத குளிரி லிருந்து பாதுகாத்துக்கொள்ள உடலைச் சூடாக்குகின்றனர். இதற்காக இரவு நேரங்களில் அறைகளின் கதவுகளையும் சன்னல்களையும் மூடிவைத்து தீ மூட்டுகின்றனர். இவ்வாறு செய்யும்போது அறையில் காற்றோட்டம் தடைபட்டு கார்பன் மோனோ ஆக்ஸைடின் அளவு அதிகரிப்பதுடன் ஆக்சிஜனின் அளவு குறைகிறது. இதனால் அறையில்  உறங்கும் மக்கள் உறக்கத்திலேயே உயிரிழக்க நேரிடுகிறது. ஏனெனில், கார்பன் மோனோ ஆக்ஸைடுக்கு மணமில்லை, சுவையில்லை, உணர்வது கடினம்.

காற்றில் கலந்துள்ள எல்லாவித நுண்துகள்களும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பவை. மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள், மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றில் எரிக்கப்படும் எரிபொருள்கள் சரியற்ற முறையில் எரிக்கப்படுவதனால் நுண்துகள் மாசுக்கள் வெளியேறி காற்றில் கலக்கிறது. கார்பன் துகள், சிலிக்கா துகள், நுண்ணிய மட்துகள்,  பல்வேறு தாதுக்கள், உலோகங்கள், சிமெண்ட், ஆஸ்பெஸ்டோஸ் போன்றவை காற்றில் மறைந்துள்ள நுண்துகள் மாசுக்கள்.

இம்மாசுக்கள் ஆஸ்துமா, புரோன்சிடிஸ் போன்ற நோய்களை ஏற்படுத்தக்கூடியது. மேலும் நுண்துகள் மாசு படிந்த சூழலில் நீண்ட காலமாக வாழ்வோரின் ஆயுட்காலம் மிகக்குறுகிய காலத்தில் முடிந்துவிடும். மேலும் நுரையீரல் திசுக்கள்  பாதிப்படைவதுடன் மிக மோசமான சுவாசக் கோளாறுகள், புற்றுநோய் ஆகியவை ஏற்படும். சுவாசத்தின் வழியே நுரையீரலுக்குள் சென்று படியும் சிலிக்கா துகள்கள் சிலிக்கோஸிஸ் நோயை ஏற்படுத்தும். இதனைப் போலவே நுரையீரலில் படியும் நிலக்கரி நுண்துகள்கள் "கருப்பு நுரையீரல் நோயை' ஏற்படுத்தும்.

நம்முடைய உடலில் இத்தகைய மாசுக்களை வடிகட்டி அனுப்ப நம் நாசிகளில் மெல்லிய முடிகள் இருப்பினும் இவற்றால் மிக நுண்ணிய துகள்களை வடிகட்ட இயலாது. மேலும் அதிகப்படியான நுண்துகள் மாசுக்கள் காற்றில் கலந்துள்ள போது இவ்வடிப்பான்கள் செயலற்றதாகி விடுகிறது. இவ்வகையான நுண்ணிய துகள்கள் பல அபாயகரமான வேதிப் பொருட்களை எடுத்துச்செல்லும் வாகிணிகளாக செயல்படுகிறது. இதன் மூலம் வேதிப் பொருட்கள் நுரையீரலில் சென்று படிந்து, புரையோடி, புற்று நோயாக மாறுகிறது.

பல்வேறு எரிபொருள்களில் கலந்துள்ள கந்தகமானது எரிதல் நிகழ்ச்சியின் போது ஆக்சிஜனேற்றமடைந்து உருவாகும் கந்தக டை ஆக்ஸைடு காற்றை மாசுபடுத்தும் மற்றொரு மாசாக்கி, கந்தகம் கலந்துள்ள தாதுக்களையும் தாது உப்புகளையும் வேதிவினைகளுக்குட்படுத்தும் வினைகளில் சல்பர் டை ஆக்ஸைடு (So2)  அதிகமாக உருவாகிறது. கந்தக டை ஆக்ஸைடு ஆஸ்துமா நோயாளி களுக்கு மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.

தொழிற்சாலைகளில் எரிபொருள்களுடன் காற்று இணைந்து நடைபெறும் எரிதல் நிகழ்ச்சியின்போது காற்றிலுள்ள நைட்ரஜன் ஆக்சிஜனுடன் இணைந்து நைட்ரஜன் ஆக்ஸைடுகள் (Nox) உருவாகிறது. நைட்ரஜன் ஆக்ஸைடு (Nox)அதிகப்படியான வெப்ப இழப்பை ஏற்படுத்துவதுடன் சுவாசிக்கும்போது நுரையீரல் எரிச்சல், ஆஸ்துமா, புரோன்சிடிஸ், சளி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

வளி மண்டலத்தின் தாழ்நிலையிலேயே ஓசோன் வாயு உருவாக்கப்படுகிறது. குறிப்பிட்ட சிலவகை நைட்ரஜன் ஆக்ஸைடுகள் (Nox) சூரிய ஒளியின் முன்னிலையில் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து ஓசோன் வாயு  (O3)  வாயு உருவாகிறது. ஓசோன் வாயு இருமல், நெஞ்சுவலி ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன் நிம்மோனியா, சளி ஆகியவற்றை தடுக்கும் எதிர்ப்புச் சக்தியினை குறைக்கக் கூடியது

பென்சீன், ஃபார்மால்டிஹைடு, காரியம், காட்மியம், டையாக்சின் போன்ற நச்சுப்பொருட்கள் கலந்த காற்றை சுவாசிப்பதனால் புற்றுநோய், சந்ததி உருவாக்கமின்மை போன்றவை ஏற்படும் அபாயம் அதிகமுள்ளது.

நீர் மாசுபாட்டினால் நம் நாட்டில் அதிக எண்ணிக்கை யிலான மக்கள் பாதிப்படைகின்றனர். நீர் மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்பு சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மழைக் காலங்களில் ஆறு, ஏரி, குளம், குட்டை போன்றவற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கி னால் அசுத்தங்கள் சேர்ந்து குடிநீர் எளிதில் மாசுபடுகிறது. இத்தகைய அசுத்த நீரில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் கலந்திருக்கும், இதனால் டைபாய்டு, பாராடைபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு போன்றவை உண்டாகிறது. அசுத்த நீரிலுள்ள புரோட்டோசோவாக்களினால் அமோயிக் வயிற்றுப்போக்கு உண்டாகிறது. வைரஸ்களால் மஞ்சள் காமாலை, இளம்பிள்ளைவாதம் போன்றவை ஏற்படும். நீரில் கலந்துள்ள புளூரைடு, ஆர்சனிக், காரீயம், பாதரசம், பெட்ரோலிய வேதிப்பொருள்கள், நைட்ரைடுகள், பூச்சிக்கொல்லிகள் போன்ற வேதிப்பொருட்கள் உடல்  ஊனம், உறுப்புகளின் வளர்ச்சியின்மை, குன்றிய மனவளர்ச்சி மற்றும் புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

எங்கும் எதிலும் மாசுகள் கலந்துள்ள இன்றைய உலகில் ஒன்று இதனை எதிர்கொள்ள வேண்டும். இல்லையேல் மாசற்ற உலகினை உருவாக்க வேண்டும். இதில் இரண்டாவது வகை சாத்தியமல்ல. ஆனால், முதல் வகை நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பதனால் அதனைக் கடைபிடிப்பது சிரமமான காரியமல்ல.  பண்டைய மனிதன் தன் உணவுக்காக இயற்கையினையே சார்ந்திருந்தான். விலங்குகளின் இறைச்சியும் தாவரங்களில் பழம், கொட்டை போன்றவற்றை உண்டு வாழ்ந்தான். இதனால் பண்டைய மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், தடுக்கும் தன்மையும் மிகுந்திருந்தது. தற்போதைய மனிதர்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துகொண்டே வருகிறது. உணவு முறைகளில் ஏற்பட்ட மாறுதல்களும், பகட்டிற்காக உணவு வகைகளில் ஏற்படுத்திக்கொண்ட மாறுதல்களுமே இதன் மூலகாரணம். நோய் எதிர்ப்பு சக்தியினை நம் உடல் மிக எளிதாக பெறுவதற்கு உணவில் இயற்கையில் கிடைக்கும் பழவகைகளை உட்கொள்வதே  சிறந்த வழி.

நம் நாட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய மர ஆப்பிள் (Wood Apple) என்று அழைக்கப்படும் விளாம்பழம்,            வில்வம் பழம், (Bael) கற்றாழை  (Mucilage),, டேனின்ஸ் (tannins) மிக முக்கிய நார்ச்சத்து ஆகியவற்றைக் கொண்டது. இது முக்கியமாக மலச்சிக்கலை போக்கக்கூடிய அருமருந்து.

விளாம்பழக்கூழ் ஈரல், இருதயம் மற்றும் வயிறு பாகங்களுக்கு வலிமையை கொடுக்கவல்ல சிறந்த ஊட்டச் சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், வைட்டமின் B.C மற்றும் புரோட்டீன் ஆகிய தாதுக்கள் நிரம்ப பெற்றுள்ளது. இது பெப்டிக் அல்சரிலிருந்து விடுபட உதவக்கூடிய இயற்கை உணவு. இதன் பழக் கூழானது உடலின் நீர் இழப்பினை சரிசெய்வதுடன் அதீத வெப்பத்தினால் ஏற்படும் வெப்ப உலர்தலை சரிசெய்கிறது. மேலும் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்தவல்லது.

கொய்யாப்பழம் நம் நாட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய பழவகை. நம் உடலுக்கு இன்றியமையாத தாதுக்களான கால்சியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், கந்தகம் மற்றும் துத்தநாகம் ஆகியன அடங்கியுள்ளன. இதன் பழக்கூழானது ஆரோக்கியமாகவும், நோயற்றதாகவும் வைக்கக்கூடிய பல்வேறு வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள், பிளாவினோய்டு மற்றும் சபோனின்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது. நார்சத்தினை அதிக அளவில் கொண்டது. இதனை உட்கொள்வதால் அல்சர் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை தடுக்கப்படுகிறது. முக்கியமாக இரைப்பையில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கவல்லது. கொய்யாப்பழம் உயர் ரத்த அழுத்தத்தினையும், உயர் கொழுப்பு அளவினையும் கட்டுப்படுத்தக்கூடியது. இதுவரை அறியப்படாத முக்கியமான தகவல் இப்பழம் அதிகப்படியான வைட்டமின் C -யை கொண்டது என்பதே. 100 கிராம் பழத்தில் 180 மி.கி வைட்டமின்கள் கொண்டிருப்பதினால் பல உடல் சம்பந்தமான உபாதைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக்கூடியது.

பப்பாளி கிராமப்புறங்களில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய பழம். காய் பருவத்திலுள்ள பப்பாளி டை பெப்டிக் நோயாளிகளுக்கு அருமருந்து. பப்பாளி உணவு செரிமானத்தை தூண்டுவதுடன் உணவுப்பாதையிலிருக்கும் தேவையற்ற பாக்டீரியாக்களை அழிக்கிறது. பப்பாளிப்பழம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததோடு மட்டுமின்றி புற்றுநோயை தடுக்கவல்ல பீட்டா கரோட்டீன் மற்ற பழங்களை விடவும் அதிக அளவில் (100 கிராம் பழத்தில் 2700 மைக்ரோ கிராம்) கொண்டுள்ளது. வைட்டமின் ஈ, பொட்டாசியம், சோடியம், கால்சியம், இரும்பு மற்றும் புரோட்டீன் ஆகியனவற்றை கொண்டுள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்கவல்லது. பப்பாளி பழம் உண்பதனால் நாம் உண்ணும் உணவிலுள்ள நஞ்சு நீக்கப்படுகிறது. இதிலுள்ள வைட்டமின் ஆ சிறுவர்களுக்கு ஏற்படும் குருட்டுத்தன்மையை தடுக்கிறது.


பலாப்பழம் இந்தியாவில் பல யுகங்களாக விளையும் பழவகை. பழுக்காத காய், காய்கறியாகவும், சிப்ஸ், ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது. பலாப் பழத்தில் புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ஈ, ரிபோஃப்ளவின், தயமின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. மூலநோயுள்ளவர்களுக்கு இதன் பழக்கூழ் மிகச்சிறந்த நிவாரணி, இதன் கொட்டைகள் காய்கறியாகவும், வறுத்தும் உட்கொள்ளப்படுகிறது.

பலாப்பழம் அதிக அளவில் உட்கொள்வதினால் ஊட்டச்சத்து குறைபாடு அதிக அளவில் நிவர்த்தி செய்யப்படுகிறது. இது தொற்று நோய்க்கும், நச்சுப்பொருட்களுக்கும் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தவல்லது.

நாவற்பழம் நம் நாட்டில் அதிக அளவில் விளையக்கூடியவை. சாலையோரங்களிலும், வசிப்பிடங்களின் அருகாமையிலும் நாவற்மரங்கள் வளர்க்கப்படுகின்றன. நாவற்பழக்கூழ் செரிமானத்தை தூண்டுவதாகவும் ஆற்றல் மிக்க நச்சு நீக்கியாகவும் செயல்படுகிறது. மேலும் இதில் வைட்டமின் C, இரும்புச்சத்தினை தரவல்ல ஃபோலிக் அமிலம், கரோடின், நார்ச்சத்து அதிக அளவில் அடங்கியுள்ளது. உடல் நலனுக்கு தேவையான கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் தாதுக்கள் அடங்கியுள்ளன. இதனை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியினையும் பெறலாம்.

""அவ்வைக்கு அரிய நெல்லிக்கனியை அதியமான் ஈந்தான்'' என சங்ககால இலக்கியங்களில் படித்திருக் கிறோம் அரிய வகை மருத்துவ குணங்களைக் கொண்ட நெல்லிக்கனியை புசிப்பதினால் அவ்வை நெடுநாள் வாழ வேண்டுமென விரும்பிய அதியமான் வாயிலாக நெல்லிக் கனியின் சிறப்பினை அறியலாம். அடர்ந்த காடுகளில் வளரும் நெல்லிமரங்கள் தற்போது விளைநிலங்களிலும் பயிர்செய்யப்படுகிறது. நெல்லிக்கனியின் கூழ் வைட்டமின் C-யினை நிரம்பப் பெற்றிருப்பதுடன் இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பினை குறைக்கவல்ல பெக்டினையும் அதிகமாக கொண்டது. இதிலுள்ள டேனின் நெல்லிக்கூழை பதப் படுத்தலின் போது வைட்டமின் ஈ சிதைவதை தடுக்கக் கூடியது. நெல்லிக்கூழ் இரத்த சோகை, ஆஸ்துமா, மலச்சிக்கல், அல்சர், வயிற்றுப்போக்கு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க வல்லது. நெல்லிக்கனி புத்துணர்ச்சி கொடுக்கக் கூடிய ஆயுர்வேத மற்றம் யுனானி மருந்துகளில் முக்கிய பகுதிப்பொருளாக சேர்க்கப்படுகிறது.

பத்து வருடங்களுக்கு முன்னர் நம் சாலைகளில் இருமருங்கிலும் காணப்பட்ட புளிய மரங்கள் இன்று அறவே இல்லாமல் போய்விட்டது. அதிக அளவிலான நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் A மற்றும் C நிரம்பபெற்றுள்ள  புளிய உணவு சமைப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. நல்ல ருசியான சட்னி வகைகளிலும், சர்பத் போன்ற பாணங்களிலும் புளி பயன்படுத்தப்படுகிறது. மேலும் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்கவல்லது புளி.

அத்திப்பழம் பொதுவாகவே விலையுயர்ந்த பழமாகக் கருதப்படுகிறது கார்போஹைட்ரேட்கள், புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் ஆ மற்றும் ஈ நியாசின், ரிபோஃபிளேவின், தையமின் ஆகிய ஊட்டச்சத்துகள் நிரம்பப்பெற்றுள்ளது. அத்திப்பழம் குறிப்பிடத்தக்க அளவு கரையும் மற்றும் கரையா நார்ச்சத்துகளை கொண்டது. கரையும் நார்ச்சத்து இரத்தத்திலுள்ள கொழுப்பினை கட்டுப்படுத்தவும், கரையா நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்குவதுடன் இதயத்தை பாதுகாக்கவும் பயன்படுகிறது. மேலும் புற்றுநோயை தடுக்கவல்லது.

மாதுளைப்பழம் சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக  அளவில் விளைகிறது. அதிக அளவில் வைட்டமின் E1 மற்றும் E 2 நியாசின், கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்களை கொண்டது. சுற்றுச்சூழல் மாசி னால் நம் உடலில் எளிதாக பாதிப்படையக்கூடிய சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகளின் சிறப்பான செயல்பாட்டிற்கு பயன்படுகிறது.

கடற்கரையோரங்களிலும், தீவுகளிலும் அதிக அளவில் வளரக்கூடியது. தென்னை, தென்னை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திட்டமிடப்பட்ட பயிர்வகையாகவும் வளர்க்கப்படுகிறது. இளநீரானது அதிக அளவில் சர்க்கரை, நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளது. இளநீர் உடலுக்கு நீர்ச்சத்தினை கொடுக்கக்கூடிய ஐந்து வகையான மினாற்பகுதிகளை கொண்டது. பூஞ்சை மற்றும் வைரஸ்களை எதிர்க்கக்கூடிய மோனோலாரினை கொண்டது. மேலும் இளநீர் தொடர்ந்து அருந்துவது சுற்றுச்சூழல் மாசுக்களின் பாதிப்புக்களை தடுப்பதுடன் ஊட்டச்சத்து குறைப்பாடினை களையவும் வழிவகுக்கும்.

ஆரஞ்சு, மாம்பழம், லிட்சிப்பழம், ஆப்பிள், வாழைப்பழம் போன்றவை எளிதில் கிடைக்கக்கூடிய பழவகைகள். வாழைப்பழம் நம் உடல் உற்பத்தி செய்யமுடியாத எட்டு அமினோ அமிலங்களை உற்பத்தி செய்கிறது. இத்தகைய ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் உற்பத்தி நிலையங்களிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்செல்ல பயணச்செலவு, பாதுகாப்பு செலவு, லாபத்தொகை ஆகியவற்றினால் அதிக விலையில் விற்கப்படுகிறது.          ஆனால் இதனை நாமே வளர்க்கும் போது இதன் விலை மலிவாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இருக்கமுடியாது. பழமரங்கள் வளர்ப்பதில் நம்மிடையே இன்னும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. மரங்கள் வளர்ப்பதில் தமிழ்நாட்டினர்களிடையே அதிக ஆர்வம் தேவைப்படுகிறது. பழமரங்கள் வளர்ப்பதினால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதுடன் சுற்றுச்சூழல் மாசுபாட்டினை கட்டுப்படுத்தவும், நல்ல மழையை பெறவும் முடியும்.    

1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...