|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 August, 2011

கலைஞர் டிவி நிர்வாகத்திற்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை-கனிமொழி!

கலைஞர் டிவிக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, அதன் நிர்வாகம், செயல்பாடுகளில் எனக்கு தொடர்பு எதுவும் இல்லை என்று கனிமொழி கூறியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு நேற்று சிறப்பு சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் ராசா, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, ஷாஹித் பால்வா உள்ளிட்டோர் ஆஜராகினர். நேற்று வக்கீல்கள் திடீர் போராட்டம் காரணமாக விசாரணை நடைபெறவில்லை. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட ராசா உள்ளிட்டோருடன் நீதிபதி ஓ.பி.ஷைனி, அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசினார்.

அப்போது ராசா கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தனனிச்சையாக நானே எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தேன் என்று சிபிஐ கூறுவது தவறானது. பிரதமர் அலுவலகம்தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான அனுமதியை 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் அளித்தது. பிரதமர் அலுவலகம்தான் தவறு செய்ததாக கூறுகிறேனே தவிர பிரதமரை நான் குற்றம் சாட்டவில்லை. பிரதமர் மீது பழியைப் போட நான் முயலவில்லை.

அனைத்து நடவடிக்கைகளையும் நான் தன்னிச்சையாக எடுத்ததால் பிரதமர் அலுவலகத்திற்கு எதுவுமே தெரியாமல் போய் விட்டதாக சிபிஐ கூறுகிறது. ஆனால் புதிய ஆபரேட்டர்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யலாம் என்று பிரதமர் அலுவலகம்தான் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதி எனக்கு கடிதம் அனுப்பியது. அதற்குப் பிறகும் கூட பிரதமர் அலுவலகத்திற்கு எதுவும் தெரியாதுஎன்று சிபிஐ கூறுவது வியப்பாகவும், புதிராகவும் உள்ளது. பிரதமருக்கு அனைத்துத் தகவல்களையும் தெரிவிக்க வேண்டியது எனது கடமை. அதை நான் முறையாக செய்தேன் என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், 12 ஆண்டுகள் நான் மத்திய அமைச்சராக இருந்திருக்கிறேன். அமைச்சராக நான் பதவியேற்றபோது அரசியல் சாசனச் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பேன் என்றுதான் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டேனே தவிர பிரதமரின் அறிவுரையை ஏற்பேன் என்றோ அல்லது நிதியமைச்சரின் அறிவுரையை ஏற்பேன் என்றோ சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.

கனிமொழி கூறுகையில், கலைஞர் டிவிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கலைஞர் டிவியின் நிர்வாகத்தில் ஒருபோதும் நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது. அதில் நான் எந்தவிதத்திலும் தொடர்பு கொள்ளவில்லை என்றார்.

டிபி ரியாலிட்டி தலைவர் ஷாஹித் உஸ்மான் பால்வா கூறுகையில், திஹார் சிறையில் உள்ள கைதிகளின் நிலை குறித்துப் பேசினார். அவர் கூறுகையில், என்னைப் போன்றவர்களுக்கு நல்ல வக்கீல்கள் கிடைத்து விட்டார்கள். இதனால் எங்களது நிலைமை பரவாயில்லை. ஆனால் வக்கீல்கள் கூடக் கிடைக்காமல் திஹார் சிறையில் பல கைதிகள் வாடி வருகின்றனர். இது வேதனை தருகிறது என்றார்.

2ஜி வழக்கு தொடர்பாக அவர் கூறுகையில், சிபிஐயை சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் என்று கூறுவதற்குப் பதில் சென்ட்ரல் பீரோ ஆப் இமாஜினேஷன் என்றுதான் கூற வேண்டும். காரணம் கற்பனையான புகார்களை வைத்துக் கொண்டு வழக்கு தொடர்ந்துள்ளனர் என்றார்.

முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த்த பஹூரா கூறுகையில், 2ஜி விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும், நான் செயலாளர் பதவிக்கு வருவதற்கு முன்பு எடுக்கப்பட்டவை. எனவே அவற்றுக்கு நான் பொறுப்பாக முடியாது என்றார். இதேபோல ரிலையன்ஸ் அடாக் குழு நிர்வாக இயக்குநர் கெளதம் தோஷி, முதுநிலை துணைத் தலைவர் ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...