|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 June, 2011

சிறப்பு முகாம் சிறைகளில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் – சீமான் கோரிக்கை !

செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 3 பேர் தங்களை விடுவிக்கக் கோரி கடந்த 13 ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில், செல்வம், அருங்குலசிங்கம், தர்மலிங்கம் ஆகிய அந்த மூன்று பேரில், செல்வத்தின் உடல் நிலை மோசமாகி அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்களைச் சந்தித்த செங்கல்பட்டு தாசில்தார் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு சம்பிரதாயப்படி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், போராட்டக்காரர்கள் அவரின் வேண்டுகோளை ஏற்கவில்லை.

தங்களை விடுவித்து, தமிழ்நாட்டில் இதர முகாம்களில் வசித்துவரும் தங்கள் உறவினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். இதே கோரிக்கையைத்தான் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களும் கோரி வருகின்றனர்.

இலங்கைக்கு உணவு கடத்தினார்கள், மண்ணெண்ணை கடத்தினார்கள், இரத்தம் கடத்தினார்கள் என்கிற குற்றச்சாற்றின் பேரிலும், ஐயத்தின் பேரிலும் செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும் பூந்தமல்லி முகாமில் 4 தமிழர்களும் ஈழத் தமிழ் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்றும் உள்ளனர்.

அவர்களை, சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தங்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தவறு செய்திருந்தால் தண்டியுங்கள் என்றும் இல்லை எனில் எங்களை விடுவித்து இதர முகாம்களில் உள்ள எங்கள் சொந்தங்களுடன் வாழ அனுமதியுங்கள் என்பதுமே அவர்களின் கோரிக்கையாகும்.

ஆனால் கடந்த ஆட்சியில் அவர்களின் எழுப்பிய கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகவும், அடக்குமுறைக்கு உட்படுத்தப்படும் நிலையைத் தான் ஏற்படுத்தியதே தவிர, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. ஐயத்தின் பேரால் ஈழத் தமிழர்கள் பலரை இப்படி சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைத்து வைப்பது என்பது கடந்த திமுக ஆட்சியில் அடிக்கடி நடைபெற்றது.

அங்குள்ளவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் கண்துடைப்பாக ஏதாவது செய்து பிரச்சனையை அன்றைய திமுக அரசும் அங்குள்ள அதிகாரிகளும் திசை திருப்பினர். ஆனால், அவர்களை விடுவிக்க மறுக்கின்றனர். இப்படி வழக்கு, விசாரணையின்றி அவர்களை தடுத்து வைத்திருப்பது மனித உரிமை மறுப்பாகும் என்பதை எடுத்துக்கூறி தமிழர் இயக்கங்களும், மனித உரிமை அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்திவிட்டன. ஆனால் அன்றைய திமுக அரசு இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஈழத்தில் போர் முடிந்த பிறகு வன்னியில் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட நிலையே, இங்கு சிறப்பு முகாம்களில் என்ற பெயரில் இருக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு அவமானமல்லவா? எனவே, தமிழகத்தின் முதல்வராக 3 வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...