|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 July, 2011

நேதாஜி சமூக சேவை இயக்கம்! மக்கள் மருத்துவர்!

டாக்டர் ஜெயச்சந்திரன் கிளினிக் எங்கே இருக்கிறது?’ என்று கேட்டால் 'நம்பர் 21, வெங்கடாசலம் தெரு’ என்று முகவரியோடு உற்சாகமாகச் சொல்கிறார்கள் சென்னை வண்ணாரப்பேட்டை மக்கள். ஜெயச்சந்திரன் தன்னிடம் மருத்துவம் பார்க்க வருபவர்களிடம் ஃபீஸ் என்று எதுவும் கேட்பது இல்லை. 5, 10 ரூபாய் என்று கொடுப்பதை வாங்கிக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நிறைவான வைத்தியம் செய்துவருகிறார்.

''கல்பாக்கம் கொடைப்பட்டினம்தான் சொந்த ஊர். எங்கு பார்த்தாலும் புதர், காடு என மண்டிக் கிடக்கும் பூமியில் பாம்பு, தேள் கடிக்கு வைத்தியம் பார்க்கக்கூட 30 கி. செல்ல வேண்டிய, அடிப்படை வசதிகள் அற்ற கிராமம். எங்க அப்பா சுப்பிரமணி, ஒரு விவசாயி. போதுமான  வசதி இல்லாத சூழல். கிராமத்தில் யாருமே பள்ளிக்கூடம் போக அக்கறை காட்டியது இல்லை. அந்த ஊரில் முதன் முதலில் பள்ளிக்கூடம் போக ஆசைப் பட்டது நான்தான்.

அப்பாவால் என்னைப் படிக்கவைக்க முடியவில்லை. என் மாமா வேணுகோபால்தான், 'பையன் கண்டிப்பா படிக்கணும்’னு முத்தியால்பேட்டை ஸ்கூல்ல சேர்த்தார். லயோலா கல்லூரியில் பி.எஸ்சி.  படிக்கும்போது மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் சீட் கிடைச்சது. பி.எஸ்சி-யை டிஸ்கன்டினியூ பண்ணிட்டு எம்.பி.பி.எஸ். சேர்ந்தேன். 'இந்த மருத்துவக் கல்வி வாய்ப்பை எக்காலத்திலும் வணிகமாக்கிவிடக் கூடாது. நம் கிராமம் போன்றே பின்தங்கிய பகுதியில்தான் கிளினிக் தொடங்க வேண்டும்’ என்ற எண்ணம் படிக்கும்போதே என் மனதில் உறுதியாக  இருந்தது.

படிப்பு முடிஞ்ச கையோடு 1971-ல் இதே இடத்தில் கிளினிக் தொடங்கினேன். இலவசமா மருத்துவம் பார்க்கலாம் என்பதுதான் என் அப்போதைய மனநிலை. இலவசம் என்றால் மதிப்புஇருக்காது என்பதற்காக ஒரு ரூபாய், 2 ரூபாயில் தொடங்கி அதிகபட்சம் 10 ரூபாய் வரை வாங்கிக்கொண்டு மருத்துவம் செய்துவருகிறேன்.  ஆரம்பத்தில் 'பிழைக்கத் தெரியாதவன்’ என்று சொல்லி சிரித்தவர்களே காலப்போக்கில் என்னிடம் சிகிச்சை பெற வரிசையில் காத்திருந்தனர். ஜெயின் அசோசியேஷன், ஓரிரு தொழிலதிபர்கள், தெரிந்த நண்பர்கள்னு மருந்து மாத்திரைகள் வாங்க உதவி செய்து வரும் நல்ல உள்ளங்களை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இவர்களின் உதவி மூலம் வரும் மருந்துகளை இலவசமாகக் கொடுக்கிறேன். மாரடைப்பு, கண் பிரச்னை, மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய்னு பெரிய பிரச்னைகளுடன் வருபவர்களைப் பக்கத்து அரசு மருத்துவமனைகளுக்கு முன்கூட்டியே தகவல் சொல்லி அனுப்பிவைப்பேன்.


இப்படி அறிமுகமான சித்தா, ஹோமியோபதினு மாற்று முறை மருத்துவர்கள் 100 பேர் ஒரே டீமாக இணைந்து 2000-த்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தி உள்ளோம். வட சென்னையை வளர்ச்சி மிக்க ஆரோக்கியமான பகுதியா மாற்ற வேண்டும் என்பதற்காக, 'நேதாஜி சமூக சேவை இயக்கம்’ என்ற அமைப்பை ஆரம்பித்து கல்வி உதவித் தொகை, தெருவோரச் சிறுவர்களுக்கு உதவிகள்னு பல சேவைகளைச் செய்துவருகிறோம்'' என்கிறார் ஜெயச்சந்திரன்.

சென்ட்ரல் பொது நல மருத்துவமனையில் மெடிக்கல் சூப்பரின்டெண்டென்ட் ஆக இருந்து ஓய்வுபெற்ற இவரது மனைவி டாக்டர் வேணி, ''எங்க பையனும், பொண்ணும்கூட டாக்டர்கள்தான். அன்பானவங்க மத்தியில் வைத்தியம் செய்யும்போது எங்களுக்கு வேற என்ன சொத்து சுகம் வேணும்?'' என்கிறார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...