|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 July, 2011

சமச்சீர் கல்வியை தொடர வேண்டும்-உயர்நீதிமன்றம் !


சமச்சீர் கல்வித் திட்டத்தை 1 முதல் 10ம் வகுப்பு வரை தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஜுலை 28ம் தேதிக்குள் சமச்சீர் பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எல்லோருக்கும் சமமான கல்வி முறையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சமச்சீர் கல்வியை முறையை அறிமுகப்படுத்தியது. அதன்படி 1 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்பட்டது.

இந்த கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை கொண்டுவர திட்டமிடப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அஇஅதிமுக பதவியேற்றது. புதிய அரசு சமச்சீர் கல்வி முழுமையானதாக இல்லை என்று கூறி அதை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, 1 மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி தொடரவும், மற்ற வகுப்புகளில் சமச்சீர் கல்வி தொடர்வது குறித்து ஆராய நிபுணர் குழு அமைத்து அவர்களின் அறிக்கையை பெற்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்
ஜுன் 15ம் தேதி முதல் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படாமல் பொதுவான விஷயங்கள் கற்பித்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், நிபுணர் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தது. அறிக்கையில், இந்தக் கல்வி முறை தரமானதாக இல்லை. மொழிப்பெயர்ப்பில் தவறுகள் உள்ளன. புத்தகம் திருத்தம் உட்பட முற்றிலும் மாற்றி அமைக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்பத்த முடியாது என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, உயர் நீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பை அறிவித்தது. தீர்ப்பில், நடப்பாண்டில் 1 முதல் 10ம் தேதி வரை அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்றும், வரும் 28 தேதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிட வேண்டும்.

பழைய பாடத்திட்ட புத்தகங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் 3 மாதத்திற்குள் ஒரு குழுவை அமைத்து சமச்சீர் கல்வி குறைபாடுகளை தீர்த்துக் கொள்ளலாம். மேலும் இது குறித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் ரத்து செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு சமச்சீர் கல்வியை ரத்து செய்து நடவடிக்கை எடுத்தபோதே, பழைய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி துரித கதியில் பல மாவட்டங்களில் நடந்தது. அப்பணிகள் தற்போது நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...