|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 August, 2011

மருத்துவமனையாகிறது புதிய தலைமைச் செயலகம் முதல்வர் ஜெயலலிதா!

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்துக்காக கட்டப்பட்டுள்ள இடத்தில் பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை பேரவை விதி 110-ன் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பு:


நோயையும், அதன் காரணத்தையும் கண்டறிந்து அதனை தீர்ப்பதற்கான மருத்துவம் செய்ய வேண்டும் என்பது வள்ளுவர் மொழி. அதற்கேற்ப அனைவருக்கும் சுகாதாரம் என்ற குறிக்கோளை அடைவதற்காக தேசிய ஊரக சுகாதார நலத் திட்டம், தமிழ்நாடு சுகாதார நலத் திட்டம் என்ற இரண்டு மாபெரும் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச் சூழலைக் கொண்ட தரமான மருத்துவச் சேவையை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்துதல், தமிழ்நாடு சுகாதார நலத் திட்டத்தின் கீழ் மாவட்ட மருத்துவமனைகளுக்கு ரூ. 50 கோடி செலவில் உயிர் காக்கும் உபகரணங்களை வழங்குதல், உணவு பாதுகாப்பு, மருந்து காட்டுப்பாடு நிர்வாகத்துக்காக தனி ஆணையரகம், திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ. 100 கோடியில் சிறப்பு சிகிச்சை மையம், வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவமனை திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் 2011-12-ன் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
அதுமட்டுமல்லாமல், அனைவருக்கும் மருத்துவ சேவையை அளிக்கும் வகையில் முதலமைச்சரின் விரிவான பொது மருத்துக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும் தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாகப் பெறும் வகையில் பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முந்தைய திமுக அரசால் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காகக் கட்டப்பட்ட 97,829 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட "ஏ' பிளாக் கட்டடத்தில் இந்த சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.

சட்டப்பேரவையும், 36 அரசுத் துறைகளும் செயல்படுவதற்கு புதிய தலைமைச் செயலகக் கட்டடம் போதுமானதல்ல என்பதாலும், பயன்படுத்தக் கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதாலும், அலுவலகப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இல்லை என்பதாலும், இருவேறு கட்டடங்களில் தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும், சட்டப் பேரவையும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது. எனவே, பயன்படுத்தப்படாமல் உள்ள இந்தக் கட்டடத்தில் பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனையை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.


இந்தக் கட்டடத்தில், தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு, உயர் தர சிகிச்சைக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு, இந்த மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.



தில்லியில் உள்ள அகில இந்திய மருத்து அறிவியல் நிறுவன (எய்ம்ஸ்) மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் இந்த மருத்துவமனை அமையும். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இப்போது கட்டப்பட்டு வரும் "பி' பிளாக் கட்டடங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் முதல்வர் ஜெயலலிதா.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...