|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 September, 2011

பெண்களின் நோய் தீர்க்கும் உத்தமகன்னிகை!

உத்தா மணியிலையா லும் வயிற்றுக் குன்மமொடுகுத்தாம் வலியும் குளிரும்போம்-பற்றிதுதியதன்று சொறிசிரங்குந் தொல்லுலகில் நாளும்புதியன் மூலின் புகல்.'என்று வேலிப்பருத்தி பற்றி சங்க இலக்கிய பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தாமணி என்றும் உத்தமகன்னிகை என்றும் அழைக்கப்படும் வேலிப்பருத்தி செடியானது தமிழகமெங்கும் வேலிகளில் தானே படர்ந்து வளரும் தன்மை கொண்டது. பாலுள்ள பிசுபிசுப்பான ஏறுகொடி. முட்டைவடிவ விதைகளில் பட்டுப் போன்ற பஞ்சுகள் காணப்படும். இதன் இலை,வேர் முதலியன மருத்துவ பயன் கொண்டவை.

இதன் இலையை இடித்துப் பிழிந்த சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வர ஆஸ்த்துமாவுக்கும் பாம்புக் கடிகளுக்கும் குணம் ஏற்படும். நாள்பட்ட புண்களுக்கு இதன் இலையை அரைத்துக் கட்டி வந்தால் புண்கள் எளிதில் ஆறும்.

பெண்களுக்கு அருமருந்து: உரிய வயதடைந்தும் பெண்கள் ருதுவாகாவிட்டால் வேலிப்பருத்தி இலைகள் ஆறு எண்ணம் எடுத்துச் சுத்தப்படுத்தி மூன்று மிளகு சேர்த்து அம்மியில் மைபோல் அரைத்து கழற்சிக்காய் அளவு பத்து தினங்கள் தொடர்ந்து உட்கொண்டு வர ருதுவாகாத பெண்கள் ருது ஆவார்கள்.

பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலிக்கு வேலிப் பருத்தி இலைச்சாற்றைத் தேனுடன் கலந்து அருந்தி வர குணம் தரும். இது நெஞ்சிலே இருக்கின்ற கோழையை அகற்றி வாந்தியை உண்டாக்குவதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது. இதன் இலைச்சாற்றுடன் தேன் கலந்து அருந்தி வர இருமல் தணியும்.

வேலிப்பருத்தி இலைச் சாறு: குழந்தைகளுக்கு வயிற்றில் புழுத் தொந்தரவு அதிகமாக இருந்தால் இதன் இலையைக் குடிநீரிட்டு ஒரு பாலாடை அளவு கொடுத்து வர புழுக்கள் வெளியாகும். பூவரசு இலைச்சாற்றில் மிளகை ஊறவைத்து அதனை காயவைத்து அரைத்து தேனில் கலந்து கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளும் குணமாகும். உந்தாமணி, பொடுதலை, நுணா,நொச்சி ஆகியவற்றின் இலைகளைவகைக்கு 1 பிடி வதக்கிப் பிழிந்த சாறு 10 மி.லி. கொடுக்கச் சளியோடு கூடிய மாந்தம் தீரும்.

வாதநோய் குணமாகும் : இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம், முடக்கு வாதம், வாதக் கடைச்சல், இடுப்புவலி முதலியன குணமாகும்.

இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம்,பொடித்துக் காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குணமாகும், யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் 40, 50 நாள்களில் குணமாக்கலாம். கால் வீக்கங்களுக்கும், உடம்பில் அடிபட்ட வீக்கங்களுக்கும், இதன் இலைச் சாற்றையும், சுண்ணாம்பையும் கலந்து பூசி வர அவை குணமாகும். இதன் இலையை நன்கு அரைத்து எடுத்த விழுதை நகச்சுற்று, கண்ட மாலை இவைகளுக்குப் பற்றிட்டுவர நல்ல குணம் தரும். காணாக்கடி, அரிப்பு, தடிப்புக்கு இதன் இலைச்சாறு தடவலாம். வேலிப்பருத்தி இலையானது கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகும்

இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும். 5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான், கிரந்தி, சூலை, வாயு பிடிப்பு முதலியவை போகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...