|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 February, 2013

FINAL CUT : LADIES AND GENTLEMEN

ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்‌ஷன். ..என்று ஸ்டார்ட், கட் சொல்லி ஒரு ஷாட் கூட எடுக்காமல் ஒரு சினிமா எடுத்து வெளியிட முடியுமா?  முடிந்திருக்கிறது. ஆம்..  படப்பிடிப்பே நடத்தாமல் ஒரு முழுநீள சினிமாவே வந்திருக்கிறது. அந்த சினிமா..  FINAL CUT : LADIES AND GENTLEMEN 'சில நேரம் எடிட்டிங் டேபிளில் என் திரைக்கதை திருத்தி எழுதப்படும்' என்று ஒருமுறை ஆல்ஃபிரட் ஹிட்ச்ஹாக் சொன்னார்.   முழுக்க முழுக்க நூறு சதவிகிதம் எடிட்டிங் டேபிளிலேயே கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று முழுமை அடைந்திருக்கிறது இந்த சினிமா.500க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலிருந்து ஷாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெகு நுட்பமாகக் கோர்க்கப்பட்டிருக்கின்றன. இதை கதம்பம், அவியல், குடுகுடுப்பைக்காரனின் ஒட்டுப் போட்ட சட்டை.. இப்படி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.. காக்டெய்ல் ( Cocktail ) என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். மது, உலக சினிமா இரண்டுமே ஒருவனை ஜென் நிலையையும் தாண்டி உன்னத நிலைக்குக் கொண்டு செல்ல வல்லவை. அதனால்  இப்படத்தை ஒரு கொலாஜ் ஓவியத்தோடு  ஒப்பிடுவதுதான் நியாயமானதாக இருக்கும்.  ஒழுங்கற்ற பல ஓவியத் துண்டுகளை ஒன்றாக்கி ஒரு முழுமையான ஓவியமாக்குவது போல்.. ஒரு ஒழுங்கு செய்நேர்த்தியுடன் ஒரு கலை வடிவமாக முழுமை அடைந்திருக்கிறது இந்தத் திரைப்படம். இந்தப் படத்தின் இயக்குனர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த Gyorgy Palfi.

Gyorgy Palfi  இதற்கு முன் Hukkle (2002) Taxidema (2006) I am not your friend (2009) என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார்.  தன்னுடைய நான்காவது படத்திற்கு கதை சொல்ல பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏறி இறங்கியும் பலன் கிடைக்காமல் போக கடைசியில் சொந்தக் கதையைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு இந்த கலைடாஸ்கோப் சித்திரத்தைச் செதுக்கும் வேலையில் வந்து உட்கார்ந்தார்.  ஒரு நேர்காணலில் Gyorgy Palfi  இப்படிச் சொல்கிறார்: " இந்தப் படம் உலகம் என்னைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றோ, இல்லை யாரும் சாதிக்காத சாதனையை நான் நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் எடுக்கப்பட்டதோ அல்ல. கடந்த பத்து ஆண்டுகளாகவே ஹங்கேரியில் படம் எடுப்பதற்கான பொருளாதார வளமும் வாய்ப்பும் இல்லாத சூழலில் நான் வேறென்னதான் செய்ய முடியும் சொல்லுங்கள். எல்லோரும் படம் எடுத்த பின்பு பாராட்டத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் படம் எடுக்கப் பணம்  போடச் சொன்னால் அடுத்த நிமிடம் காணாமல் போய்விடுகிறார்கள். எனக்கு பெரிதாக இலட்சியங்கள் எதுவும் கிடையாது. என் வாழ்க்கை முடியும் வரை நான் படம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இது ஒன்றுதான் என்னுடைய எளிமையான ஆசை. இந்நிலையில் எனக்கு வாய்த்த மோசமான பொருளாதாரச் சூழலில் நான் வேறென்னதான் செய்ய முடியும்? என் கையிலிருந்த பணம் ஒரு படத்தின் Post Production-க்கு செலவுகளுக்கு மட்டுமே  போதுமானதாக இருந்தது. அதனால்தான் இதுவரை எடுத்த அனைத்து மொழி படக்காட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு புதுப் படத்தைஉருவாக்கினேன்." Palfi இதை பலத்த சிரிப்புடன் கூறினாலும் இப்படம் அவ்வளவு சுலபமாக ஒன்றும் உருவாகிவிடவில்லை. இப்படத்திற்காக படத்தொகுப்புக் கணினியே கதியென அதன் முன்  மூன்றாண்டுகள் அமர்ந்து அயராது வேலை செய்த அவரின் கடும் உழைப்பு இருக்கிறது.
500 படங்களின் விதவித காட்சிகளைக் கோர்த்து என்ன கதை சொல்ல முடியும்? அதை எப்படி சொல்வது ? யோசிக்கும்போதே தலையைச் சுற்றுகிறது அல்லவா.. Palfi இதை எப்படி அணுகினார்..? "இரண்டே இரண்டு விதமான கதைகள்தான் சாத்தியம்;  ஒன்று கதாநாயகனுக்கும் வில்லனுக்கும்  / தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம்.  இரண்டாவது ஒரு இனிய காதல் கதை.  காதல் காலத்தை வென்று நிற்பது.. அது எவர்கிரீன் சப்ஜெக்ட்.. அதனால் உலகம் என்றைக்கும் கொண்டாடும் காதலை.. இரண்டாவது கதையைத் தேர்ந்தெடுத்தேன் " என்கிறார் Palfi. 
கதை நமக்கு மிகவும் பழக்கமானதுதான். ஒரு நாயகன் தன் வீட்டிலிருந்து அந்த நாளின் பயணத்தைத் துவங்குகிறான். மற்ற நாட்களைப் போலில்லாமல் அந்த நாள் அவனுக்கு மிக விசேஷமாக அமைகிறது. அன்றைய பயணத்தில் அவன் ஒரு பெண்ணைப் பார்க்கிறான்.  அவளும்  அவன் மீது தன் கடைக்கண் பார்வையை வீசுகிறாள். பார்த்த கணமே இருவருக்குள்ளும் காதல் நெருப்பு பற்றிக் கொள்கிறது.


மாநகரின் பொறுக்க முடியா இரைச்சலும் சத்தமும் அவர்களுக்கு இனிய இசையாகக் கேட்கிறது. அவர்கள் காதல் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர, பிறகு இருவரும் கல்யாணம் செய்துகொண்டு கணவன் மனைவி ஆகின்றனர்.  இப்படியே இருந்தால் கதை நகருமா?  காலப்போக்கில் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு.. ஊடல் ஏற்பட்டு இருவரும் பிரிகின்றனர்.  இருவரும் சந்தித்து மனம் விட்டுப் பேசினால் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துவிடும். ஆனால் ஒன்று சேர அவர்களின் ஈகோ பெரும் தடையாக இருக்கிறது.  பிரிவுத் துயரில் இருவரும் வாட.. மனக்கசப்பில் நாட்கள் நகர.. இங்கே ஒரு திருப்பம். நாடுகளுக்கு இடையே போர் வெடிக்கிறது.  நாயகன் நாட்டிற்காக போரிட போர்முனைக்குச் செல்கிறான்.  வீரத்துடன் சாகசப் போர் புரிகிறான். ஆனாலும் துரதிருஷ்டம்.. போரில் நாட்டிற்காக உயிர் துறக்கிறான் நாயகன். அவன் மரணச் செய்தி அவன் மனைவியாகிய நாயகிக்குப் போய்ச் சேர்கிறது. அவள் கதறி அழுகிறாள். நாயகனுடன் வாழ்ந்த அந்த சந்தோஷ நாட்கள்.. இனி அது என்றுமே திரும்பி வரப்போவதில்லை என்கிற உண்மை உறைக்க அவள் துக்கம் பன்மடங்காய்ப் பெருகுகிறது.  இந்த இடத்தில் மீண்டும் ஓர் அழகான ட்விஸ்ட். காலம் இப்போது பின்நோக்கி நகர்ந்து நாயகனும் நாயகியும் ஊடல் கொண்டு பிரிந்திருக்கும் கட்டத்தில் வந்து நிற்க.. நாயகன் நாயகி இருவரும் சந்தித்து மனம்விட்டுப் பேசுகின்றனர். அவர்கள் மனக்கசப்பு நீங்குகிறது. மீண்டும் இருவருக்கிடையே அன்பு பெருகி காதல் என்னும் புதிர்வெளியினுள் வீழ்கின்றனர். இருவரும் முத்தமிட்டுக் கொள்ள படம் இனிதே நிறைவு பெறுகிறது.  இப்படி ஒரு பாராவினுள் அடங்கிவிடும் அரதப்பழசான சாதாரணக் கதையை 500 படங்களின் காட்சிக் கலவையினால் அசாதாரணப் படமாய் உருவாக்கியிருக்கிறார் Palfi.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...