|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 May, 2013

மே 8ம் தேதி ஆஸ்துமா நோய் விழிப்புணர்வு தினம்.



பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அவர்களை ஆஸ்துமா நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம் என்று ஆய்வு ஒன்றின் மூலம் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். சின்னஞ்சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தாக்கும் நோயாக ஆஸ்துமா உள்ளது. தூசு, குப்பை, காற்றுமாசு போன்றவைதான் ஆஸ்துமாவிற்கு காரணமாக கூறப்படுகிறது. நம்முடைய சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் ஆஸ்துமாவில் இருந்து குடும்பத்தை பாதுகாக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். ஆஸ்துமா நோய் விழிப்புணர்வு தினம் மே 8ம் தேதி உலக அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஆஸ்துமாவினால் ஏற்படும் ஆபத்துக்களையும், அதை தவிர்க்கும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்வோம்.

ஆஸ்துமா என்பது கிரேக்க வார்த்தையாகும். இந்த நோயை இரண்டாம் நூற்றாண்டில் அரேசியஸ் என்ற மருத்துவர் கண்டுபிடித்தார். இதன் பொருள் மூச்சுவிடுவதற்கு சிரமம் என்பதாகும். மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு கொடிய நோய்களுள் ஆஸ்துமாவும் ஒன்று. மூச்சிறைப்பு நோய் என்று வர்ணிக்கப்படும் ஆஸ்துமா மிகுந்த சிரமத்தை தரக்கூடியது. குளிர்காலங்களில் இந்த நோயின் தாக்கம் இரட்டிப்பாகும். மூச்சுக்குழல் பாதையில் உள்ள மூச்சுக் குழாய்கள் சுருங்கி சுவாசிப்பதற்கு சிரம்படுவதே ஆஸ்துமா. பல்வேறு காரணிகளால் இந்நோய் ஏற்பட்டாலும் பெரும்பான்மையாக கூறப்படும் காரணம் அலர்ஜிதான். உலக அளவில் 10 கோடி பேர் ஆஸ்துமா நோய் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளையும் ஆஸ்துமா நோய் அதிக அளவில் தாக்குகிறது. இந்தியாவில் 10 சதவீத குழந்தைகள் ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டுள்ளனர். 51 சதவீத மக்கள் இந்த பிரச்சனையால் வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

உடலுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவுப் பொருட்கள் , தூய்மையற்ற காற்று , புகை போன்றவை உள்ளே செல்வதால் திசுக்களில் இருந்து புரோகைடின் , கைமின் போன்ற பொருட்கள் வெளிப்பட்டு மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துக்கின்றன. மூச்சுக்குழாயில் ஏற்படும் அடைப்பு காரணமாக மூச்சு விடுவதில் மனிதர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இந்த நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களை தவிர்த்தல் வேண்டும். தூய்மையான காற்றை சுவாசித்தல், நீரை காய்ச்சி குடிக்க வேண்டும், பருத்தி ஆடைகளை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.படுக்கை அறை தலையணைகளில், போர்வைகளில் அலர்ஜி ஏற்படுத்தும் நுண்ணியிரிகள் இருக்கலாம். எனவே அவற்றை அடிக்கடி நன்றாக அலசி, துவைத்து காயப்போட்டு உபயோகிக்கவேண்டும்.

வாக்குவம் கிளீனர் கொண்டோ அல்லது தூசியை நீக்கும் பொருட்களைக் கொண்டோ நன்றாக வீட்டை சுத்தம் செய்வது அவசியம். இதனால் தூசி, அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களை வெளியேற்றலாம். நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் மூலம் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனவே செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பதை தவிர்க்கலாம். அதேபோல் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிகரெட் புகை அலர்ஜி ஏற்படுத்தக்கூடியது. எனவே வீட்டில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு இருந்தால் புகைப்பதை தவிர்ப்பது நலம். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. குறைந்த பட்சம் 6 மாதம் வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறைவு என்கின்றனர் மருத்துவர்கள். எனவே உங்கள் செல்லங்களை ஆஸ்துமா நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க தாய்ப்பால் கொடுப்பது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். சரியான நேரத்தில் தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வதும், அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்களை தவிர்ப்பது போன்றவை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயல்முறைகள் ஆகும். எனவே கொடிய நோயான ஆஸ்துமாவில் இருந்து வருங்கால சமுதாயத்தை காக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதும் அவசியமாகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...