|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 May, 2014

பெருகி வரும் ஏடாகூட தலைப்புகள்!

சினிமாவுக்கு தலைப்பு வைப்பது குழந்தைக்கு பெயர் வைக்கிற மாதிரி" என்பார் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார். "படத்தின் தலைப்பே பாதி கதை சொல்ல வேண்டும்" என்பார் அடூர் கோபால கிருஷ்ணன், "தலைப்புக்குள் கதை இருக்க வேண்டும்" என்பார் கே.பாலச்சந்தர். ஆனால் இன்றைக்கு வருகிற தலைப்புகளை பார்க்கும்போது கூவத்தின் கரையில் செல்லும்போது மூக்கை பொத்திக் கொள்வதைப்போல, கேட்கும்போதே காதை பொத்திக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது.

படிக்காத மேதை, பாவை விளக்கு, படித்தால் மட்டும் போதுமா, ஆயிரத்தில் ஒருவன், அடிமைப் பெண், நாடோடி மன்னன், ஒரு கைதியின் டயரி, கடல் மீன்கள், நெற்றிக்கண், அபூர்வ ராகங்கள், தப்புதாளங்கள், அன்புக்கு நான் அடிமை... இப்படி தலைப்புகளே கதை சொன்ன காலம் ஒன்று இருந்தது. இந்த தலைப்புகள் அந்தந்த படங்களை கவுரப்படுத்தியது. கதைக்கேற்ற நல்ல தலைப்பு அமையாவிட்டால் பேசாமல் படத்தின் ஹீரோ, அல்லது ஹீரோயின் கேரக்டர் பெயரையே தலைப்பாக வைத்து விடுவார்கள். எப்படி இருந்தாலும் தலைப்பில் ஒரு கண்ணியம் இருந்தது. ஆனால் இன்றைக்கு வைக்கப்படும் தலைப்புகளில் கண்ணியமும் இல்லை, கவுரவமும் இல்லை.

வாரணம் ஆயிரம், நீதானே என் பொன்வசந்தம் என்று தன் படங்களுக்கு அழகான தமிழ் பெயர்களை வைத்த கவுதம் மேனன், நடுநிசி நாய்கள் என்ற தலைப்பையும் வைத்தார். கே.பாலச்சந்தருக்கு பிறகு தலைப்பில் கவனமும் கண்ணியமும் காக்கிறவர்கள் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட சிலர்தான். இவர்களின் தலைப்புகளில் கனம் இருக்கும், கதை இருக்கும். நானே ஒரு டுபாக்கூடர் எனக்கிட்டேவா, மண்ணாங்கட்டி பயலுக, பித்தேரி, தீத்துக்கட்டு, பட்ற, தருதல, குபீர்,

நம்புங்க இதெல்லாம் இப்போது தயாரிப்பில் இருக்கிற சில படங்களோட தலைப்புகள். 3லட்சம் வார்த்தைகள் கொண்ட தமிழ் மொழியில் எப்படியெல்லாம் தலைப்பு வைத்திருக்கிறார்கள் பாருங்கள். ஒருவேளை இந்த தலைப்புகளுக்கும், இவர்கள் எடுக்கிற கதைக்கும் சம்பந்தம் இருப்பதாக வைத்துக் கொண்டால் அந்த கதையும், காட்சிகளும் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. தமிழில் வார்த்தைக்கு பஞ்சமில்லை. இயக்குனர்களின் கற்பனை வறட்சியே இதற்கு காரணம்.

எதையாவது ஏடாகூடமாக செய்து மக்கள் கவனத்தை படத்தின் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக இப்படி தலைப்புகள் வைப்பதாக கூறப்படுகிறது. அதற்கு வேறு ஏதாவது நல்ல வழிகளை தேட வேண்டியதுதானே. தன் பிள்ளைகள் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக எருமை, கழுதை, தண்டம்னு யாராவது பெயர் வைப்பார்களா? தயாரிப்பில் இருக்கும் இன்னும் சில தலைப்புகளை பாருங்கள்...

பட்டைய கிளப்பணும் பாண்டியா

ஆடாம ஜெயிச்சோமடா

நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்

நாங்கெல்லாம் ஏடாகூடம்

நாங்கெல்லாம் அப்பவே அப்படி

நீ என்ன பெரிய அப்பாடக்கரா

கள்ளபடம்

சுட்ட படம்

ஆயா வடை சுட்ட கதை

சேர்ந்து போலாமா

தலைகால் புரியல

காயலான்கடை கந்தன்

எவ்வளவோ பார்த்தாச்சு

மங்குனி பாண்டியர்கள்

ஆறுமுகம் காதலிக்கிறான்

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்

நட்பு காப்புக் குழு

கிடாரி பூசாரி மகுடி

நேரா போய் நேரா வா

பதினேழு ஜி.பி

8 எம் எம்

எண்றதுக்குள்ள

அழகர் களத்துல இறங்கிட்டாரு

இவை சின்ன பட்டியல்தான் இதை விட இன்னும் நிறைய இருக்கிறது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...