|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 June, 2014

தியாகத்துக்கு இவ்வளவுதான் மரியாதையா?



செங்கோட்டையில் உள்ள எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் சங்கரன் ஆனால் வாஞ்சிநாதன் என்ற பெயருடன் வளர்ந்தார். செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு திருவனந்தபுரத்தில் மூலம் திருநாள் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்து விட்டு பின் பரோடாவில் மேல்படிப்பு படித்தவருக்கு புனலூர் வனத்துறையில் அரசாங்க வேலை கிடைத்தது. வேலை கிடைக்கும் முன்பாக பொன்னம்மாள் என்பவருடன் திருமணமானது. அந்த நேரம் சுதந்திர தாகம் நாடு முழுவதும் ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது. கப்பலோட்டிய தமிழரான வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பேச்சால் வாஞ்சியும் ஈர்க்கப்பட்டார். இதன் காரணமாக ஆங்கிலய அரசு வழங்கிய வேலையை பார்க்க மனது விரும்பாததால் தூக்கி எறிந்து விட்டார்.




பின்னர் பாரத மாதா சங்கத்தில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றினார். வ.வே.சு அய்யர், பாரதியார் உள்ளிட்ட பல தேச தலைவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. சுதந்திர தாகம் முன்னிலும் அதிகப்பட்டது.இந்த நிலையில் திருநெல்வேலி கலெக்டராக பதவி ஏற்ற ஆஷ் துரை வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவாவை கைது செய்து சிறையில் அடைத்தார். சிறையில் செக்கிழுக்க வைத்து வ.உ.சியை பெரிதும் சிரமப்படுத்தினார்.தான் தெய்வமாக கருதும் தலைவர்களை கொடுமைப் படுத்தும் ஆஷ் துரையின் மீது வாஞ்சிக்கு கோபம் ஏற்பட்டது. வ.உ.சி மற்றும் சிவாவை விடுதலை செய்யச் சொல்லி நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஆஷ் துரை நடத்திய துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல வாஞ்சியை இன்னும் சூடேற்றியது.


மரணத்தின் வலி என்ன என்பதை ஆஷ் துரைக்கு உணர்த்த வேண்டும் என்று உறுதி பூண்டார், இதற்காகவே காத்திருந்து மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ் துரையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.பின்னர் தன்னை பிடிக்க வந்த ஆங்கிலேயே அதிகாரிகளிடம் சிக்காமல் தப்பி ஓடியவர், ரயில் நிலைய கழிப்பறைக்குள் புகுந்து கொண்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்தார். அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து கூட நிறையவில்லை.



செய்தி தொடர்பு சாதனம் வளர்ந்திராத அந்த கால கட்டத்திலும் இந்த செய்தி காட்டுத்தீயாக பரவியது. தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆங்கிலேயே அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது என்பதால் பிரிட்டிஷ் அரசாங்கம் அலறியது. பயந்து நடுங்கியது. இனி இந்தியாவில் இருக்க முடியாது என்று மிரண்டு ஒடியது. அதுவரை அடிமைகளாக பார்த்த தமிழர்களை அச்சத்துடன் பார்த்தது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை உணர்ந்தது. 
வட்டமேஜை மாநாடு,வேண்டுகோள், தீர்மானம், கடிதம் என்றெல்லாம் கெஞ்சிக் கேட்டவர்கள் தேவைப்பட்டால் துப்பாக்கி ஏந்தவும் தயங்கமாட்டார்கள் என்பதை உணர்ந்து உதிரம் உறைந்து போனார்கள், உறக்கம் கலைந்து போனார்கள்.


இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 102 வருடமாகிறது. நாளை காலை உனக்கான மரணதண்டனை நிகழப்போகிறது ஏதாவது ஆசை உண்டா? என பஞ்சாப் சிங்கம் பகத்சிங்கிடம் சிறை அதிகாரி கேட்டபோது, கையில் இருந்த கனமான புத்தகத்தை காட்டி 'ஆசை என்று இல்லை விருப்பம் என்று ஒன்று உள்ளது, அது இந்த புத்தகத்தை விடிவதற்குள் அதாவது என் கதை முடிவதற்குள் படித்து முடித்து விட வேண்டும் என்பதுதான். பார்ப்போம் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இரண்டொரு பக்கங்களை முடித்துவிடுவேன் ஆகவே 'எனக்கான' வேலைகள் உங்களுக்கு நிறைய இருக்கும் அதை பாருங்கள் நான் என் வேலையை பார்க்கிறேன்' என உயிரை துச்சமாக மதித்த பகத்சிங் போல, தென்நாட்டின் சிங்கம் வாஞ்சிநாதன் இன்னும் சில நிமிடத்தில் தனது உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறோம் என்பது தெரிந்தும் எந்தவித பதட்டமும், பயமும் இல்லாமல் நாட்டிற்காக, தலைவர்களுக்காக தான் எடுத்துக்கொண்ட காரியத்தில் திடமனதுடன் இருந்த தீரர்.



இப்படிப்பட்ட சம்பவம் நடந்த மணியாச்சி ரயில் நிலையம் என்பது எவ்வளவு முக்கியமான இடம். இந்த தலைமுறைக்கு மட்டும் இல்லை இனி வரும் தலைமுறைகளுக்கும் சுதந்திர வரலாறை சொல்லும் இடமல்லவா அது.நினைத்த போதே மயிர்க்கால்களில் சுதந்திர வேட்கையையும், தோளில் தினவையும், மூச்சில் உஷ்ணத்தையும், நாடி நரம்புகளில் வீரத்தையும் ஏற்படுத்தும் நினைவாலயம் அல்லவா அது.


ஆனால் நிஜத்தில் மணியாச்சி ரயில் நிலையம் பெயரில் மட்டுமே வாஞ்சியை கொண்டுள்ளதே தவிர மற்றபடி வாஞ்சியை நினைவுகூறும் எந்த தடயமும் அங்கு இல்லை. டிக்கெட் எடுத்தால் கூட மணியாச்சி என்றுதான் டிக்கெட் கொடுக்கிறார்களே தவிர வாஞ்சி மணியாச்சி என்று டிக்கெட் வருவது இல்லை.வாஞ்சிநாதன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்த கழிப்பறை கூட தரைமட்டமாக இடித்து தள்ளப்பட்டுவிட்டது.ஆனாலும் வீரன் வாஞ்சிநாதனின் தியாகத்தை போற்றி பாராட்டும் விதத்தில் தியாகிகளும், தேசபக்தர்களும், வாஞ்சியின் அபிமானிகளும் அவரது நினைவு நாளான ஜூன் 17ம்தேதி அவர் இறந்த வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஒன்று கூடி வீரவணக்கம் செலுத்துவார்கள்.

அதற்காக கடந்த வருடம் ரயில் நிலையத்தில் கூடியபோது அங்கு இருந்த ரயில்வே அதிகாரி அதற்கெல்லாம் ரயில் நிலையத்தில் இடம் இல்லை எனக்கு அதிகாரமும் இல்லை, வேண்டுமானால் நீங்கள் அனைவரும் பிளாட்பராம் டிக்கெட் வாங்கிக் கொண்டு போய் கழிப்பறை இருந்த இடத்தில் ஒரு நிமிடம் நின்றுவிட்டு வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
கடைசியில் கடந்த வருடம் அப்படித்தான் நடந்தது.



சுதந்திரபோராட்ட நாயகனுக்கு,பகத்சிங் போன்ற வடமாநில தியாக செல்வங்களுக்கு நிகரானவருக்கு, தமிழர்களின் மானம்காத்த மாவீரன் வாஞ்சிநாதனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதானா? நாம் செலுத்தும் வீரவணக்கம் என்பது இதுதானா? 
இதோ இந்த வருடமாவது வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் ஒரு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் எஞ்சியிருக்கும் தியாகிகளும், தேசத்தின் மீதும் வாஞ்சிநாதனின் மீதும் பாசம் கொண்டவர்களும் வருகின்ற 17ம் தேதி செவ்வாய்கிழமை வாஞ்சிநாதனுக்கு 103வது நினைவு தினத்தில் வீரவணக்கம் செலுத்த கூடவிருக்கிறார்கள், இனியாவது ஏதாவது நடக்கும் என்று நம்பிக்கையுடன்..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...