|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 June, 2011

தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி? "தூங்குகிறது சி.பி.ஐ. அறிக்கை'

நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார். இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன.

 இவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல - இவை ஒரு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதியில் "ரகசியமாக' கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து குடும்பத்து வர்த்தக நிறுவனத்துக்கு இணைப்பு தரப்பட்டிருக்கிறது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு.

பொதுச் சொத்துகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த புத்திசாலியான அமைச்சர் யார்? அலைக்கற்றை ஊழலில் சிக்கி பெயரையும் புகழையும் இழந்திருக்கிறாரே அந்த ஆ. ராசாவா? இல்லையில்லை, இன்னமும் மத்திய அமைச்சராகப் பெயருடனும் புகழுடனும் வலம் வருகிறாரே அந்த தயாநிதி மாறன்தான் அவர். ஆ. ராசாவுக்கும் முன்னதாக அந்தத் துறையை வகித்துவந்தார், இப்போது ஜவுளித்துறையில் அமைச்சராக இருக்கிறார்.


அவருடைய இந்த இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-ல் கடிதம் எழுதியது. இந்தக் கடிதம் ஒரு பெட்டிச் செய்தியாகவும் சி.பி.ஐ. அறிக்கையின் சாரம் தனிச் செய்தியாகவும் தரப்பட்டுள்ளது. படியுங்கள், படியுங்கள் படித்துக்கொண்டே இருங்கள்.


323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. சென்னையில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட்டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.


இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.

 இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களைவிட அதிக விரைவாக உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் விடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும்.
 டிஜிடல் வழியிலான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் விடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.

இதை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும். ஆனால் அமைச்சரின் அபாரமான உத்தியால் இவை அனைத்தும் நயா பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.

 இது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதவண்ணம் மிகமிக ரகசியமாக இது வைக்கப்பட்டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப்போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய குடும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்துக்குப் பயன்பட்டன என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.

 கூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப்பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும்.


 இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? மலைக்கவைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதிரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது. 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் - இல்லையில்லை - கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.


2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்னமும் துல்லியமாக - ரூ.440 கோடியைவிட - அதிகமாக இருக்கக்கூடும். கதை இத்தோடு முடியவில்லை. இந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன்பட்டிருக்கிறது, அந்த தொலைபேசி இணைப்புகள் குறித்து துல்லியமான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன என்கிறது சி.பி.ஐ. அறிக்கை.
10 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் தயாநிதிமாறன் நோட்டீஸ்:

தன்னைப் பற்றி அவதூறாக கட்டுரை வெளியிட்ட நாளிதழ்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  


தயாநிதி மாறன் சார்பாக வக்கீல் ரவீந்திரன் அனுப்பியுள்ள நோட்டீசில் 
 ’’  தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி?’ என்ற தலைப்பில்  ஜூன் 2ம் தேதி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளீர்கள்.
இதற்கு என் கட்சிக்காரர் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க பொய்யானது. அடிப்படை ஆதாரமற்றது.  எனது கட்சிக்காரரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் ஒரே நோக்கத்துடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை எழுதியுள்ள எஸ்.குருமூர்த்தி, எனது கட்சிக்காரருக்கு விரோதமாக உள்நோக்கத்துடன் செயல்படும் நபர்களில் முக்கியமானவர் ஆவார்.




இந்த இணைப்பகத்தை சன் டிவி தனது ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த இணைப்பகம் தினகரன் நாளிதழ் அலுவலகத்துடனும் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, ஆதாரமற்றவை, உள்நோக்கம் கொண்டவை. எனது கட்சிகாரரின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கற்பனையாக புனையப்பட்டவை.  
இந்தக் கட்டுரையில் எனது கட்சிக்காரர் அவரது வீட்டில் 323 இணைப்புகள் கொண்ட பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பகத்தை ஏற்படுத்தி அவரது இல்லத்திலிருந்து ரகசிய கேபிள் வழியாக சன் நெட்வொர்க்  அலுவலகத்துக்கு இணைப்பு கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 



இதேபோன்ற கட்டுரை கடந்த 2009ம் ஆண்டு தினமணி பத்திரிகையில் வெளியானது. அப்போது எனது கட்சிக்காரர் (தயாநிதி மாறன்) கோரிக்கையை ஏற்று, மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் இருந்தபோது போட்கிளப் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு ஒரேயொரு இணைப்புதான் கொடுக்கப்பட்டது என பிஎஸ்என்எல் விளக்கம் அளித்தது.

இணைப்பு கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து 2009 மார்ச் வரை 4 லட்சத்து 50 ஆயிரம் அழைப்புகளை பயன்படுத்திக் கொள்ள அமைச்சருக்கு தகுதி இருந்தும், எனது கட்சிக்காரர் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 698 அழைப்புகளைத்தான் பயன்படுத்தினார் என பிஎஸ்என்எல் தெளிவுபடுத்தியுள்ளது. 
இந்த இணைப்புக்கான பில்லிங் தகவல்கள் மாதந்தோறும் நாடாளுமன்ற தொடர்பு அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி பொது மேலாளர் வி.மீனலோசினி கடந்த 6-5-2009 அன்று எழுதிய கடிதத்தின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை மேற்படி கடிதம் தெளிவாக நிரூபிக்கிறது.




 இந்த தொலைபேசி இணைப்பு குறித்து தவறான செய்தி வெளியிட்டதற்காக கடந்த 25-4-2009 அன்று தினமணி பத்திரிகைக்கு எனது கட்சிக்காரர் சார்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதேபோன்ற குற்றச்சாட்டை தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கடந்த 2009ம் ஆண்டு அமைந்தகரை பொதுக்கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டு இருந்தார். இதற்காக அவர் மீது சென்னை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதை எதிர்த்து ஜெயலலிதா ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.  அவதூறான செய்தி வெளியிட்டதற்காக தொடரப்பட்ட வழக்கிலும், அதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கிலும் தீர்ப்பு வரும் வரை காத்திராமல் மீண்டும் அதே பொய்யான தகவல்களை கட்டுரையாக வெளியிடுவது நீதித்துறையின் செயல்பாடுகளில் குறுக்கீடு செய்வதுடன் மலிவான விளம்பரத்துக்காகவும் எனது கட்சிக்காரரின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதற்காகவும்தான் என்று தெரிகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளை எனது கட்சிக்காரர் திட்டவட்டமாக மறுக்கிறார்.  எனது கட்சிக்காரரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் ஒரே நோக்கத்துடன் தவறான தகவல்களை கட்டுரையில் வெளியிட்டிருக்கிறீர்கள். தவறான கட்டுரை வெளியிட்டதற்கு ஆசிரியர், அச்சிடுபவர், வெளியீட்டாளர் மற்றும் கட்டுரையாளர் அனைவரும் சமமான பொறுப்பாவீர்கள்.

இந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். கட்டுரைக்கு அளித்த அதே முக்கியத்துவத்துடன் அந்த மன்னிப்பை உங்கள் பத்திரிகையில் பிரதானமாக வெளியிட வேண்டும். மேலும் நஷ்டஈடாக ரூ. 10 கோடி தரவேண்டும். தவறினால் உங்கள் அனைவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றுகூறப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...