|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 June, 2011

இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவை கூண்டில் ஏற்றக் கூடாதா?வைகோ!

Vaiko speaks about Tamil developments at Brussels 
conference: A conference has been organized at Brussels, the city of Belgium to find settlements to the Sri Lankan Tamil issues  and  Vaiko will deliver a speech about  the ways finding a settlement to the issues of Tamils.

Marumalarchi Diravida Munnetra Kalagam General Secretary will submit some proposals about  the Tamil peoples living conditions and settlements because two years have been concluded after the end of final war in Sri Lanka.
The Nortik Green Left and Europe United Left movements which belong to European parliament had made arrangements for this conference. World Tamil movement Chairman S.J.Emmanuel will host the conference.

சூடான் அதிபர் அல் பசீரை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி தண்டனையும் விதித்தார்களே? நூரெம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜித் தளபதிகளைத் தண்டித்தார்களே? செர்பியாவில் 8000 பேரை படுகொலை செய்தான் என்று போஸ்னியாவின் தளபதி ராட்கோ மிலாடிக்கைக் கைது செய்து விட்டார்களே?. அதே வரிசையில் இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவை கூண்டில் ஏற்றக் கூடாதா என்று பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய கருத்தரங்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறிப்பாக இடதுசாரி பசுமைக் கட்சிகளும், தமிழ் ஈழ மக்களவைகளின் அனைத்து உலகச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த ஈழத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனை குறித்த கருத்தரங்கம், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைக் குழு கூடும் அரங்கில் நேற்று நடந்தது.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை நடந்த இந்தக் கருத்தரங்கில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பால் மர்பி தொடக்க உரை ஆற்றினார்.

இடதுசாரி பசுமை இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான டாஞ்சா நீமர் தலைமை தாங்கினார்.

இந்த அமர்வில் ஒவ்வொருவரும் பேச தலா 5 நிமிடங்கள், அதிகபட்சமாக 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. வைகோவுக்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. மாலை 5.30 மணிக்குத் தன் உரையைத் தொடங்கிய வைகோ 18 நிமிடங்கள் உணர்ச்சி ததும்ப உரையாற்றினார்.

வைகோ உரை விவரம்:

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுடன் தொப்புள் கொடி உறவு கொண்ட, 7 கோடித் தமிழ் மக்கள் வாழுகின்ற, இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தில் இருந்து நான் வந்திருக்கின்றேன்.

என் உரையைத் தொடங்குவதற்கு முன்பு, ஈவு இரக்கம் இன்றிச் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்த தமிழ் மக்களுக்கும், குறிப்பாக, வயது முதிர்ந்தோர், தாய்மார்கள், குழந்தைகளுக்கும், ஆயுதம் ஏந்திப் போராடி இரத்தம் சிந்தியும், மகத்தான உயிர்த்தியாகம் செய்தும் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் என் வீர வணக்கத்தை, அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

எங்கள் ஈழத் தமிழ் மக்களின் விம்மலும், அழுகைக்குரலும், மனித குலத்தின் மனசாட்சியை, அனைத்து உலக நாடுகளின் இதயக் கதவுகளை, நிச்சயமாகத் திறக்கச் செய்யும் என்ற நம்பிக்கையோடு நான் பேசுகிறேன். பனிக் காலம் வந்தால், வசந்த காலம் வராமலா போகும்?.

ஐரோப்பாவில் வசந்த காலத்தை இப்போது அனுபவித்தீர்கள். அதுபோல, ஈழத்தமிழ் மக்களுக்கும் வசந்தம் விடியட்டும். அதற்கு, உலகின் ஜனநாயக நாடுகள், பாதை அமைக்கட்டும். பிரஸ்ஸல்சில் நடக்கும் இந்தக் கூட்டம் அதற்கு வழி காட்டட்டும்.

ஈழத் தமிழரின் கண்ணீரை, அனைத்து உலக நாடுகள், பல ஆண்டுகள் கண்டு கொள்ளவில்லை. அவர்களின் மரண ஓலம் உலக நாடுகளின் செவிகளில் ஏறவில்லை. ஐ.நா. மன்றம் தன் கடமையை ஆற்றவில்லை. இருப்பினும், ஈழத் தமிழர்களுடைய கொடுந்துயரத்தை உணர்ந்து, ஐரோப்பிய நாடாளுமன்றம், 2009 மார்ச் 12ம் நாள், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக, தரணி வாழ் தமிழர்களின் சார்பில், என் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மார்சுகி தாருஸ்மன் தலைமையில் அமைக்கப்பட்ட ஐ.நாவின் மூவர் குழு, வெளியிட்டு உள்ள அறிக்கையில், சில பக்கங்களை வாசிக்கவே மனம் நடுங்கியது. இதோ, இதயத்தை ரணமாக்கும் அந்தப் பகுதிகளை இங்கே நான் வாசிக்கின்றேன்.

மருத்துவமனைகள் மீது குண்டு வீசப்பட்டது. படுகாயமுற்றவர்களுக்கு மருந்து இல்லை. அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய நிலையில், அதற்கான மயக்க மருந்துகள் இல்லை. கசாப்புக் கடைகளில் பயன்படுத்தப்படும் பட்டாக் கத்திகளைக் கொண்டு, உறுப்புகளை வெட்டினார்கள். குழந்தைகளுக்குப் பால் பவுடர் வாங்க வரிசையில் நின்ற தாய்மார்கள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுச் செத்துக் கிடந்தபோது, அவர்கள் கைகளில் பால் பவுடர் அட்டைகள் இருந்தன.

தமிழர்களின் பிணங்கள் ஆங்காங்கு சாலை ஓரங்களில் சிதறிக் கிடந்தன. பக்கத்திலேயே படுகாயமுற்றவர்கள் மரண வேதனையில் துடிதுடித்தபோது, எந்த உதவியும் கிடைக்கவில்லை. தமிழர் பிணங்களின், அழுகிப் போன உடல்களின் நாற்றம், காற்று மண்டலத்தை நிறைத்தது. தமிழ்ப்பெண்கள் தனியாக இழுத்துச் செல்லப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டனர். கற்பழித்துக் கொல்லப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனையும், அமைதிச் செயலகத்தின் தலைவர் புலித்தேவனையும், ஆயுதங்களை மெளனித்து விட்டோம் என்று அறிவித்து விட்ட நிலையில், அவர்கள் தங்களை ஒப்படைத்துக் கொள்ளலாம் என்று சிங்கள அரசு அறிவித்து விட்டு, ஐ.நா. அதிகாரிகளுக்கும், நார்வே, பிரிட்டன், அமெரிக்க அரசுகளுக்கும் தெரிவித்துவிட்டு, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வெள்ளைக் கொடி பிடித்து வந்தபோது, சுட்டுப் படுகொலை செய்தது கொடுமையிலும் கொடுமை அல்லவா?.

அனைத்து உலக நாடுகளின் மனசாட்சி செத்துப் போய் இருந்ததா?. ஐ.நா. மன்றம் தன் கடமையைச் செய்யவில்லை என்று மூவர் குழு சொல்லிவிட்டது.

ஈழத் தமிழரின் தேசியப் பிரச்சனையின் அடிப்படை என்ன, வரலாறு என்ன என்பதை, இந்த அமர்வு ஆய்வு செய்கிறது. ஈழத் தமிழர்கள்தான், இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளின் பூர்வீகக் குடிமக்கள். வரலாற்றின் வைகறைக் காலத்தில் இருந்து, சுதந்திர அரசு அமைத்து, தனித்துவமான நாகரிகத்தோடு வாழ்ந்தனர். அவர்கள்தான் பூர்வீகக் குடிமக்கள் என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய தன் கடைசி உரையில் குறிப்பிட்டார்.

போர்த்துகீசியர் படை எடுத்தனர். 1619ல் தமிழர்கள் தங்கள் அரசை இழந்தனர். 1638ல் டச்சுக்காரர்கள் தமிழ் ஈழத்தைக் கைப்பற்றினர். பின்னர், பின்னர் 1796ல் பிரிட்டன் படைகள் வந்தன. நிர்வாக வசதிக்காக, தமிழர்களையும், சிங்களவர்களையும் தங்கள் காலனி ஆட்சியின் கீழ் ஒன்றாக்கினர்.

1948 பிப்ரவரி 4ல் இங்கிலாந்து ஆட்சியாளர்கள் இலங்கைக்கு சுதந்திரம் தந்தபோது, அதிகாரத்தை சிங்களவர்களிடம் ஒப்படைத்தனர். இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆனால், ஈழத் தமிழர்கள் அடிமைகள் ஆனார்கள். பத்து இலட்சம் இந்தியத் தமிழர்களின் குடி உரிமை பறிக்கப்பட்டது.

1956ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என அறிவிக்கப்பட்டது. புத்த மதமே அரச மதம் ஆயிற்று. தமிழர்கள் தந்தை செல்வா தலைமையில் அமைதி வழியில், அறவழியில், காந்திய வழியில் உரிமைக்குப் போராடினர். காவல்துறையையும், இராணுவத்தையும் கொண்டு, சிங்கள அரசு அடக்குமுறையை ஏவியது. தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

1957ல் பண்டாரநாயகா- செல்வநாயகம் ஒப்பந்தமும், 1965ல் சேனநாயகா- செல்வநாயகம் ஒப்பந்தமும், சிங்கள அரசால் கிழித்துக் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டன. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் தகர்க்கப்பட்டன. சிங்களர் குடியேற்றத்தைத் தமிழர் தாயகத்தில் அரசே நடத்தியது.

கற்பழிப்பு, கொலை, கொள்ளை, தமிழர்கள் மீது ஈவு இரக்கம் அற்ற தாக்குதல்கள் அன்றாட நிகழ்வுகள் ஆயின. தமிழர் அமைப்புகள் அனைத்தும் கூடி, தந்தை செல்வா தலைமையில், 1976 மே 14ம் நாள் வட்டுக்கோட்டையில் கூடி, சுதந்திரத் தமிழ் ஈழ தேசத்தை நிர்மாணிப்பது என்று பிரகடனம் செய்தன.

1977 பொதுத் தேர்தலில், தமிழ் மக்கள் சுதந்திரத் தமிழ் ஈழத்தை ஆதரித்து வாக்கு அளித்ததால், அதுவே ஒரு பொது வாக்கெடுப்பு ஆயிற்று. ஆனால், இதன்பிறகு, சிங்கள அரசு, தமிழர்களைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியது.

யாழ் நூலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தியது. 1983ல் வெலிக்கடைச் சிறையில், தமிழர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்தது. தமிழர்கள் தாயகம் என்பதையும், சுய நிர்ணய உரிமையையும், சிங்கள அரசு ஏற்காது என்று திம்பு பேச்சுவார்த்தையில் கூறியது.

இந்தப் பின்னணியில், உலகின் பல தேசிய இனங்கள் கடைப்பிடித்த போர்முறையான ஆயுதப் போராட்டத்தை, பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் முன்னெடுத்தனர். போர்க்களத்தில் வெற்றிகளைக் குவித்தனர். யுத்தகள அதிசயமாக யானை இறவைக் கைப்பற்றினர். தங்கள் பலத்தை நிருபித்த நிலையில், விடுதலைப் புலிகள்தான் போர் நிறுத்தத்தைத் தாங்களாக அறிவித்தனர்.

2001 டிசம்பர் 24ம் நாள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், அதன் பின்னர் மேலும் 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர்.

ஐரோப்பிய நாடுகளின் தலையீட்டால், வேறு வழி இன்றி, சிங்கள அரசும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. பின்னாளில் 2008 ஜனவரியில், போர்நிறுத்தத்தைச் சிங்கள அரசு முறித்தது. சிங்கள அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில், முதலாம் கட்ட, இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தாய்லாந்திலும், மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நோர்வேயிலும் நடந்தன.

இந்த முயற்சிகளை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்க பாழாக்கினார். 2005ல் மகிந்த ராஜபக்சே அதிபர் ஆனார். ஈழத்தமிழர் படுகொலை தீவிரம் ஆயிற்று. ஆழிப்பேரலை நிவாரண முகாமில், 2006 ஆகஸ்ட் 8ம் நாள், 17 தமிழ் இளைஞர்கள் சிங்களரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆறு நாள்கள் கழித்து, செஞ்சோலையில், தாய் தந்தையரை இழந்த குழந்தைகள் காப்பகத்தில், சிங்கள விமானக் குண்டுவீச்சில், 61 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் இலங்கைக்குள் செல்ல முடியவில்லை. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 பேர் பட்டப்பகலில் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஏழு வல்லரசுகளின் ராணுவ உதவியோடு, சிங்கள அரசு, கொடூரமாக தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. எங்கும் தமிழர் பிணங்கள். தமிழ்நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்து மடிந்தனர். ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் போரை நிறுத்தச் சொல்லியும், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை.

2009ல் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டபோது, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, ஜெர்மனி கொண்டு வந்த தீர்மானத்தை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரித்தன.

இலங்கை அரசைப் பாராட்டி, போர் நிலைமையை வெற்றிகரமாகச் சமாளித்ததாக வாழ்த்தி, இலங்கைக்குப் பொருளாதார உதவி செய்ய வேண்டும் எனக்கோரி சிங்கள அரசு தயார் செய்த தீர்மானத்தை, கியூபா, பொலிவியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, உள்ளிட்ட 29 நாடுகள் ஆதரித்தன.

மனித உரிமைக் கவுன்சிலில் 2009 மே 27ல் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றின. 12 நாடுகள் அந்த அக்கிரமமான தீர்மானத்தை எதிர்த்தன. அவ்வாறு, இலங்கைக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என தற்போது ஐ.நா. மூவர் குழு பரிந்துரைத்து விட்டது.

2010 ஜனவரியில் டப்ளின் தீர்ப்பு ஆயம் சிங்கள அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டுமென்று அறிவித்தது.

இந்த அரங்கில் ஒன்றைக் கேட்க விரும்புகின்றேன். சூடான் அதிபர் அல் பசீரை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி தண்டனையும் விதித்தார்களே? நூரெம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜித் தளபதிகளைத் தண்டித்தார்களே? இதோ, கடந்த வாரத்தில், செர்பிய முஸ்லிம்கள் 8000 பேரை, 95 இல் படுகொலை செய்தான் என்று, போஸ்னியாவின் தளபதி ராட்கோ மிலாடிக்கைக் கைது செய்து விட்டார்களே? ஏன், ராஜபக்சேயைக் கூண்டில் ஏற்றக் கூடாது?.

அவன் சகோதரர்களையும், கொலைகாரக் கூட்டாளிகளையும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அதற்கு, ஐ.நா. மன்றம் ஏற்பாடு செய்ய வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், அந்த முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இங்கே, பால் மர்பி அவர்கள் பேசும்போது, வட அயர்லாந்தில் குண்டுகளை வீசினார்கள், ஆயுதங்களால் தாக்கினார்கள், ஆயினும் வெற்றி பெற முடியவில்லை என்று குறிப்பிட்டார்.

அயர்லாந்து விடுதலைப் போராட்ட வரலாற்றை என் கல்லூரி நாள்களில் படித்து உணர்வு பெற்றவன் நான். வட அயர்லாந்திலே நடைபெற்ற ஐரிஷ் விடுதலை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அடிப்படையில் வேற்றுமைகள் உண்டு. இரண்டையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. அங்கே இங்கிலாந்து அரசு, இனக்கொலை செய்யவில்லை. ஆனால், சிங்கள அரசு தமிழ் இனக்கொலை நடத்தியது.

பிரபாகரன் அவர்கள் முப்படைகளை உருவாக்கினார். ஏழு வல்லரசுகளை எதிர்த்து, யுத்தக் களத்தில் நின்றார். ஈழத்தில் புலிகளின் ஆயுதப் போராட்டம் வரவலாற்றுக் கட்டாயமாயிற்று.

இந்த அரங்கத்தில் உள்ள என் நண்பர்களுக்குச் சொல்கிறேன். ஒரேயொரு கேள்வி. யாராவது ஒரு சிங்களப் பெண்ணை, விடுதலைப் புலிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக, கொடியவன் ராஜபக்சே கூட்டம் கூடச் சொன்னதில்லையே?. அப்படி அவர்கள் நடந்து கொண்டதாக யாராவது நிருபித்தால், நான் தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேசுவதை விட்டு விடுகிறேன்.

நடேசனும், புலித்தேவனும் கொல்லப்பட்டது கொடுமை அல்லவா?. இசைப்பிரியா எனும் தமிழ்த் தங்கையை, கொடூரமாகக் கற்பழித்துச் சிங்கள ராணுவத்தினர் கொன்றார்களோ? அத்தங்கையின் நிர்வாண உடலைச் சுற்றி நின்று கும்மாளம் அடித்தார்களே? என்ன பாவம் செய்தார்கள்? எட்டுத் தமிழ் இளைஞர்களை, கண்களைக் கட்டி, கைகளைக் கட்டி அம்மணமாக இழுத்துக் கொண்டு வந்து, காலால் மிதித்துக் கீழே, பிடரியில் சுட்டுக் கொன்றார்களே?.

சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இந்தக் காணொளி முற்றிலும் உண்மையானது என்றும், இது கொடூரமான போர்க் குற்றங்கள் என்றும், ஐ.நா. மன்றத்தின் உலகில் அநியாயப் படுகொலைகளை விசாரணையை ஆய்வு செய்யும் ஐ.நாவின் அதிகாரியான கிறிஸ்டோபர் ஹெய்ன்ஸ் என்பவர், நேற்றைய தினம் ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்சிலில் அறிக்கையாகத் தாக்கல் செய்து விட்டார்.

கிழக்குத் தைமூர் தனி நாடாக வாக்கெடுப்பு நடத்திய ஐ.நா. மன்றம், தெற்கு சூடான் தனி நாடாக வாக்கெடுப்பு நடத்திய ஐ.நா. மன்றம், கொசாவா தனிநாடாக அனுமதித்த ஐ.நா. மன்றம், தமிழ் ஈழம் சுதந்திர தேசமாவதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டாமா?.

ஆம். வாக்கெடுப்பு வேண்டும். அனைத்து நாடுகளின் பார்வையாளர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களும், அந்தந்த நாடுகளிலேயே பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பிரஸ்ஸல்ஸ் மாநாடு அறிவிக்கும் செய்தி, ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை. சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான வெகுஜன வாக்கெடுப்பு என்பதாக இருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவமும் காவல்துறையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

சிங்களர் குடியேற்றங்கள் அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

வீடு வாசல்களை இழந்து முகாம்களில் வைக்கப்பட்டு உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து உலகச் செஞ்சிலுவைச் சங்கமும், அனைத்து உலகத் தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட வேண்டும்.

சிங்கள ராணுவத்தாலும், போலீசாலும் கைது செய்யப்பட்டு உள்ள தமிழ் இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

என் உரையை முடிக்கும்போது, என் மனதில், என் உள்ளத்தில் தாக்கமாகி உள்ள ஒரு கவிதையைச் சொல்லுகிறேன்.

கல்லறைகள் திறந்து கொண்டன
மடிந்தவர்கள் வருகிறார்கள்
மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன
புகழ் மலர்களோடும், உறுவிய வாளோடும் வருகிறார்கள்
இதயத்தில் ஈழத்தின் விடுதலையை ஏந்தி வருகிறார்கள்
ஈழ விடுதலை முரசம் ஒலிக்கட்டும்
ஈழம் உதயமாகட்டும்
சுதந்திர ஈழக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும்
ஆம்; ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு
எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பறக்கட்டும்

இவ்வாறு வைகோ உரையாற்றினார்.

ஜெர்மனியின் டுவிஞ்சன் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் ஜான் பீட்டர் நீல்சன், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகள் குழுவின் தலைவர் ஹெய்டி ஹெளடாலா, இலங்கையைச் சேர்ந்த சிங்களத் தொழிற்சங்கத் தலைவர் ஸ்ரீநாத் பெரைரா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் செல்வராஜா, இலங்கை வழக்கறிஞர் சங்கச் செயற்குழு உறுப்பினர் கனகசபை சண்முகரத்தினம்,

உலகத் தமிழர் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர் ஸ்ரீ ரஞ்சன், போர் நடைபெற்றபோது ஈழத்தில் மருத்துவமனையில் செவிலியராக இருந்த தமிழ்வாணி ஞானக்குமார், லண்டனைச் சேர்ந்த இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜனனி ஜனநாயகம் அம்மையார்,

பிரான்ஸ் தமிழ் ஈழ மக்கள் அவையின் உறுப்பினர் திருசோதி, பிரித்தானியத் தமிழர் பேரவையின் சார்பாக வாகீசன், தமிழர் ஒருங்கமைப்பு இயக்கத்தின் சார்பாக சாரா எல்ரிட்ஜ் அம்மையார் ஆகியோரும் இந்தக் கருத்தரரங்கில் உரையாற்றினர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...