|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 July, 2011

ரகசிய முகாம்களில் 5000 தமிழ் இளைஞர்களை அடைத்துள்ள இலங்கை!

இலங்கையில் சட்டவிரோதமாக 5000 தமிழ் இளைஞர்கள் ரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட தேசிய சட்டத்திற்கு முரணான வகையில் தமிழ் அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரகசியமான மர்ம முகாம்களில் 5 ஆயிரம் வரையிலான தமிழ் இளைஞர், இளம் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று சோஷலிச இளைஞர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. பத்தரல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சோஷலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்னாயக்க தெரிவித்ததாவது:

அரசியல் கைதிகள் மற்றும் மர்ம முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அவர்களின் விவரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நேரிடும்.

1983 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களினால் தேசிய அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டது மட்டுமின்றி பிரிவினைவாதம் ஆயுதப் போராட்டம் என்று இன முரண்பாடு தீவிரமடைந்தது.

ஆனால் தற்போது முப்பதாண்டுகால யுத்தம் முடிவடைந்தும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான சிறந்த சந்தர்ப்பம் காணப்படுகின்ற போதிலும் அதனை முறையாக பயன்படுத்துவதில் நடைமுறை தலைமைத்துவம் தோல்வி கண்டுள்ளது. ஜனநாயகம் மீதும் தேசிய அரசியல் மீதும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அரசின் செயற்பாடுகள் அமையவும் இல்லை.

கடந்த 10 வருடத்திற்கும் அதிகமான காலங்களாக தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலர் ரகசிய முகாம்களிலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். எமது தேடல்களின் மூலம் மேற்படி சட்ட விரோதமான தடுத்து வைத்தல் இனம் காணப்பட்டுள்ளது. ஆனால் அரசு காணாமல் போனவர்கள் தொடர்பாகவோ, அரசியல் கைதிகள் தொடர்பாகவோ விசாரணைகளை முன்னெடுப்பதும் இல்லை. விபரங்களை வெளியிடுவதும் இல்லை.

பயங்கரவாதம் இல்லாத போதிலும் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் போன்றவற்றில் கூட விசாரணைகள் மற்றும் நீதிமன்றில் ஆஜர்படுத்தல் போன்ற சட்ட வழி முறைகள் உள்ளன.

ஆனால் சிறை வைக்கப்பட்டுள்ள, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களுக்கு எந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதே தெரியவில்லை.

எனவே அரசு தொடர்ந்து மௌனம் காக்காமல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும். தம் வசம் குறிப்பிட்ட விபரங்கள் உள்ளது. அவற்றை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம்," என்றார்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...