|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 July, 2011

பயம் பழகிவிட்டது!

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியின் போது வந்திருந்த பார்வையாளர்களின் உதிரத்தை உறைய வைத்தது மரணக்கிணறு எனும் சாகச விளையாட்டு. வெளிப்பகுதி முழுவதும் இரும்பாலும், உள்பகுதி முழுவதும் மரச்சக்கைகளாலும், சுமார் 45 அடி உயரத்திலும், 60 அடி சுற்றளவிலும் அமைக்கப்பட்டிருந்தது அந்த செயற்கை மரணக்கிணறு. அதில் இரண்டு மங்கையர்களும்,8 இளைஞர்களும் கார்களையும், பைக்குகளையும் இரு கைகளையும் விட்டு விட்டு மின்னல் வேகத்தில் வளைந்தும், நெளிந்தும், குறுக்கும், நெடுக்குமாக ஓட்டிய போது இதயத் துடிப்பே நின்றுவிடும் போலிருந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்தது கோல்டன் அம்யூஸ்மென்ட் எனும் நிறுவனம். அது தென் தமிழகம் முழுவதும் தனது பணியாளர்களுடன் கிராமம், கிராமமாகச் சென்று மரணக்கிணறு என்ற சாகச விளையாட்டை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த லலிதா சேகரும், தென்காசியைச் சேர்ந்த பேபி என்ற இரு பெண்கள்  பணியாற்றுகின்றனர். இவர்களோடு மீரட்டைச் சேர்ந்த சலீம்கான், அல்டாப், சூரஜ், லக்னோவை சேர்ந்த ராஜூ, அஜய் மேரட், பைரஜ் உள்ளிட்ட மொத்தம் 15 பேர் அடங்கிய ஒரு குழுவே உள்ளது.  பயிற்சியாளர் அபுகான்.  இவர்களால் எப்படி இந்த சாதனையை நிகழ்த்த முடிகிறது? என்ற வியப்புடன், குழுவில் இடம் பிடித்துள்ள சாகச பெண்களான லலிதா சேகரிடமும், பேபியிடமும் பேசினோம்.



இரு கைகளையும் விட்டு விட்டு வாகனங்களை ஓட்டும்போது கீழே விழுந்துவிடுவோம் என்கிற பயமில்லையா? பழகிவிட்டது. பயம் இல்லை. பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான் பயப்படுகின்றார்கள். ஓரளவுக்காவது மன தைரியம் உள்ளவர்கள்தான் பார்க்க வருகிறார்கள். தைரியம் இல்லாதவர்கள் விளையாட்டைத் தொடர்ந்து பார்க்காமல் இறங்கி விடுகிறார்கள். சிலருக்கு மயக்கம்கூட வந்ததுண்டு.


இந்த விளையாட்டைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் உங்களிடம் எதுவும் சொல்வதுண்டா? கை குலுக்கிப் பலரும் பாராட்டுவர். சிலர் எங்களுக்கு அன்பளிப்புத் தருவார்கள். வயதான பெண்களில் சிலர், ""ஏம்மா உனக்கு வேற பொழைப்பே தெரியாதா? இப்படித்தான் உயிரைப் பணயம் வைத்துப் பொழைக்கணுமா?'' என்றும் கேட்பார்கள். "எப்படிப் பழகினீர்கள்' என்றும் சிலர் கேட்பதுண்டு.


எவ்வளவு நாட்களில் இதைக் கற்றுக் கொள்ளலாம்?

தொடர்ந்து 20 வருடங்களாக இத்தொழிலை செய்து வருகிறோம். ஆர்வத்தைப் பொறுத்துக் குறைந்தது ஒரு வருடமாவது பயிற்சிக்குத் தேவைப்படும்.

இந்த விளையாட்டைப் பார்க்க வந்த சிலர் தைரியமாக எங்களிடம் வந்து, ""எங்களுக்கும் கற்றுத் தாருங்கள். நாங்கள் எழுதி வேண்டுமானாலும் தருகிறோம்'' என்பார்கள். ஆபத்தான விளையாட்டாக இருப்பதால் பெரும்பாலும் யாருக்கும் கற்றுத் தருவதில்லை. கிணற்றுக்குள் வாகனங்கள் செல்லும் போது அந்த சத்தத்தில் பயப்படாமல் உள்ளுக்குள் நிற்க வைத்துப் பழக்குவோம். பின்னர் வாகனங்களைத் துடைத்து சுத்தம் செய்யப் பழக்கி வாகனங்களை ஓட்டவும் பழக்குகிறோம். நிறுவனத்தின் உரிமையாளரும், பயிற்சியாளருமான அபுகானும் சொல்லித் தருவார்.


விளையாட்டின் போது கீழே விழுந்து காயங்கள், உயிர்ப் பலிகள் ஏற்பட்டிருக்கின்றனவா? அப்படி எதுவும் இதுவரை எங்கள் கம்பெனியில் நடக்கவில்லை. பயிற்சியின் போது மட்டும் ஹெல்மெட் அணிந்து கொள்வோம். அப்போது சிறு,சிறு காயங்கள் ஏற்பட்டதும் உண்டு. கொஞ்சம் ஆபத்தான பயிற்சி.


வாகனங்களைக் கிணற்றுக்குள் ஒரே நேரத்தில் வேகமாக பலரும் ஓட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென டயர் பஞ்சர் ஆகி விட்டால் என்ன செய்வீர்கள்? டயரில் காற்று இறங்குகிறது என்று தெரிந்தவுடனேயே மிகத் திறமையாக கீழே இறங்கி விடுவோம். முன்னும், பின்னும் வளைந்து, நெளிந்து ஓட்டிக் கொண்டிருப்பவர்களைச் சமாளித்துக் கீழே இறங்கவும் திறமை இருக்க வேண்டியது அவசியம்.


இரு கைகளையும் விட்டு விட்டு சாய்வான பகுதியில் எப்படி வாகனங்களை ஓட்ட முடிகிறது? நாங்கள் ஓட்டும் வாகனங்களில் ஆக்ஸிலேட்டர் லாக் வசதி உள்ளது. அதை தேவைக்கேற்றவாறு லாக் செய்து விட்ட பிறகு அதைப் பிடிக்கா விட்டாலும் ஒரே வேகத்தில் வாகனங்கள் போய்க் கொண்டிருக்கும்.


கார்களை ஓட்டும் போது உடம்பு முழுவதும் காருக்கு வெளியில் வந்த பிறகும் கார் ஓடிக் கொண்டிருக்கிறதே அது எப்படி? ரொம்ப சிம்பிள், உடம்பு மட்டும்தான் வெளியில் வரும். காலை மட்டும் ஆக்ஸிலேட்டரிலிருந்து வெளியில் எடுக்கவே மாட்டோம். கைகள் ஸ்டியரிங்கை பிடிக்கவில்லையென்றாலும் கார் ஒரே வேகத்தில் போய்க் கொண்டுதான் இருக்கும். சாய்வாகவே காரை ஓட்டிக் கொண்டு செல்ல பயிற்சியும் மிக முக்கியம்.

ஒரு நாளைக்கு எத்தனை முறை கிணற்றுக்குள் வாகனங்களில் சுற்றுவீர்கள்? ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும் ஒரு நாளைக்கு 50 முறை கூட சுற்றுவோம். கோயில் திருவிழாக்களின் போது கிராமங்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை கூட சுற்றி இருக்கிறோம். கண்காட்சிகள் நடக்கும் இடங்களில் ஓய்வு கிடைக்கும்.

இத்தொழிலில் என்னென்ன கஷ்டங்களைச் சந்திக்
கிறீர்கள்? 
குறைந்தது 15 தினங்களுக்கு ஓர் ஊர் வீதம் தொடர்ந்து பல ஊர்களில் மரணக்கிணறு வடிவமைத்து இந்த விளையாட்டை நடத்துகிறோம். அமைக்கும் இடத்திலேயே டென்ட் அமைத்து அங்கே சமையலும் செய்து கொள்வதுடன் அந்த இடத்திலேயே தங்கிக் கொள்வோம்.கழிப்பறை வசதி, குடிநீர் வசதிகள் ஊருக்கு ஊர் வேறுபடுகிறது. மழைக்காலங்களில் வருமானமே இருக்காது.


சாகசம் புரிந்து சாதிக்கத் துடிப்பவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?


தடம் பார்த்து நடக்காமல் தடம் பதித்து நடந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும். முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...