|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 September, 2011

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நி!லை

விடிய விடிய கொட்டித்தீர்த்த கன மழையால் சென்னையின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தென் மேற்குப் பருவ மழைக் காலம் தற்போது மீண்டும் வேகம் பிடித்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரளாவில் இதனால் மழை வலுத்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை காலை 8 மணிவரை நீடித்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. வியாசர்பாடி, தங்கச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. சென்னை மீனம்பாக்கத்தில் 58 மில்லி மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 45 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சரியான வடிகால் வசதி செய்யப்படாத காரணத்தினால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்தது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக வியாசர்பாடி பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனை அருகில் மழை நீர் குளம்போல தேங்கியதால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

மையிலாப்பூர், மந்தைவெளி, சாந்தோம், உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்குள்ளாகினர். மழையினால் கோயம்பேடு காய்கறி வணிக வளாகம் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. காலை நேரத்திலும் மழை பெய்ததால் அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

காற்றழுத்தத் தாழ்வு நிலை: இந் நிலையில் வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. ஒரிஸ்ஸா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை முதல் சென்னை நோக்கி நகரத் தொடங்கி உள்ளது. இன்றிரவு அந்த காற்றழுத்தம் தமிழகம்- ஆந்திரா கடலோரத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சென்னையில் இன்றிரவு பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு திசை நோக்கி மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சில இடங்களில் 70 மி.மீ. அளவுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

வட மாவட்டங்களில் நல்ல மழை: சென்னை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களிலும் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. மேலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை: இன்றும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்கிறது: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 11,872 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 18,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...