|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 September, 2011

கிடைக்குமா கேபிள் முன் பணம்?

தமிழகத்தில் அரசு கேபிள் "டிவி' நாளை முதல் இயங்க உள்ள நிலையில், உள்ளூரில் கேபிள் இணைப்பு வழங்க பொதுமக்களிடம் இருந்து, "அட்வான்ஸ்' பணம் வசூலித்த, "ஆப்ரேட்டர்கள்' அதை, திரும்ப கொடுக்காமல் ஏமாற்ற வாய்ப்புள்ளதால், அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து, "கேபிள்' இணைப்புக்காக பெற்ற முன் பணத்தை மக்களுக்கு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில், '89ம் ஆண்டு, "கேபிள்' இணைப்பு மூலம் காலை, மாலை இரண்டு படங்கள் ஒளிபரப்பு நிகழ்ச்சி துவங்கப்பட்டது. "கேபிள்' இணைப்பு தொழில்நுட்பம் படிபடியாக வளர்ச்சி அடைந்த நிலையில், "சேட்டிலைட்' சேனல்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒளிபரப்பாகின. ஒவ்வொரு பகுதியிலும், "கேபிள்' இணைப்புகள், "ஆப்ரேட்டர்கள்' மூலம் வழங்கப்பட்டது. தமிழகத்தில், 1.50 கோடி வீடுகளில், "கேபிள்' இணைப்பு பெற்று, மாதம் தோறும், 200 முதல், 300 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

வீடுகளுக்கு கேபிள் இணைப்பு பெறுபவர்கள், "ஒயருக்கான' கட்டணத்தை முன் பணமாக, 500 ரூபாய் வரை செலுத்தினால் மட்டுமே, "ஆப்ரேட்டர்கள்' கேபிள் இணைப்பு வழங்கினர். இதன்படி, ஒவ்வொரு வீடுகளிலும், "கேபிள்' இணைப்பு பெற, "அட்வான்ஸ்' தொகையை ஆப்ரேட்டர்கள் பெற்றுள்ளனர். "கேபிள்' இணைப்பு ரத்து செய்பவர்களுக்கு, ஒயருக்காக பெறும் முன் பணம், 500 ரூபாய் திரும்ப கொடுக்கப்படும் என்று, "ஆப்ரேட்டர்கள்' உறுதி அளித்தே, இணைப்புகளை வழங்கியுள்ளனர். "கேபிள்' இணைப்புகளை ஏகபோக உரிமை கொண்டாடி வந்த தனியார்களுக்கு, "செக்' வைக்கும் விதமாக, தமிழக அரசு கேபிள், "டிவி' ஒளிபரப்பை அரசுடமையாக்கியுள்ளது, பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகம் முழுவதம், 1.45 கோடி வீடுகளுக்கு "கேபிள்' இணைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மாதம் தோறும் பொதுமக்கள், 70 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதுமென்று அறிவித்துள்ளார். அரசு கேபிள் மூலம் மலிவு கட்டணத்தில், 90 சேனல்களை, பொதுமக்கள் பார்க்கும் வசதி பெற்றுள்ளது வரவேற்க கூடியதாக உள்ளது. நாளை முதல் அரசு கேபிள் ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், "கேபிள்' ஆப்ரேட்டர்கள், பொதுமக்களிடம், ஒவ்வொரு இணைப்புக்கும் பெற்ற, "அட்வான்ஸ்' தொகையை திரும்ப கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும், 1.50 கோடி இணைப்புக்கு, ஒவ்வொரு இணைப்புக்கும் பெற்ற முன் பணம் 500 கோடி ரூபாய் வரை, "ஆப்ரேட்டர்கள்' வசம் உள்ளது.

அரசு கேபிள், "டிவி' தனியார் வசம் இருந்து பெற நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தற்போது கேபிள் இணைப்பு கொடுத்துள்ள ஆப்ரேட்டர்கள், பொதுமக்களிடம் பெற்ற முன் பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிட வாய்ப்புள்ளது. இந்த முன் பணத்தை பொதுமக்களுக்கு அளித்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், அரசு "கேபிள்' நிறுவனம் தனியார் ஆப்ரேட்டர்களிடம் இருந்து ஒயர் உள்ளிட்ட உபகரணங்களை கையகப்படுத்தி, இதன் மூலமாக பொதுமக்களுக்கு அரசு கேபிள் இணைப்பு வழங்க வேண்டும். அப்படி வழங்கும் போது பொதுமக்களிடமிருந்து அட்வான்ஸ் தொகை வசூலிப்பதை தவிர்க்கலாம். அது முடியாது எனில், பொதுமக்களிடம் பெற்ற முன் பணத்தை, "ஆப்ரேட்டர்களிடம்' இருந்து அரசு வசூலித்து, அதன் மூலமாக அரசு கேபிள் இணைப்பை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...