|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 October, 2011

கருணாநிதியை மீறிச் செயல்படும் சக்தியாக ஸ்டாலின் பரிதி இளம்வழுதி!

கருணாநிதியை மீறிச் செயல்படும் சக்தியாக மு.க. ஸ்டாலின் உள்ளார் என்று முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி குற்றஞ்சாட்டினார். உள்கட்சி ஜனநாயகத்தில் தனது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜிநாமா செய்வதாக அக்டோபர் 8-ம் தேதி கருணாநிதிக்கு பரிதி இளம்வழுதி கடிதம் எழுதியிருந்தார். இந்த ராஜிநாமாக் கடிதம் திமுக தலைமையால் ஏற்கப்பட்டு வியாழக்கிழமை துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு வி.பி. துரைசாமி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னையில் வெள்ளிக்கிழமை பரிதி இளம்வழுதி 

செய்தியாளர்களிடம் கூறியது: துணைப் பொதுச்செயலாளராக வி.பி. துரைசாமி நியமிக்கப்பட்டதில் எனக்கு வருத்தமில்லை. துரைசாமிக்கும், ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆ. கிருஷ்ணசாமிக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் இந்த முடிவை கருணாநிதி மனப்பூர்வமாக எடுத்திருக்க மாட்டார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். கருணாநிதியை மீறி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.வட சென்னை மாவட்டத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். இந்தப் பதவியின் மூலமும், சொற்பொழிவாளராக தொடர்ந்து திமுகவுக்காகப் பணியாற்றுவேன். சட்டப்பேரவைத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக தோற்க வேண்டும் என்று செயல்பட்ட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதியிடம் புகார் மனு அளித்தேன். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மீண்டும் அவர்கள் சேர்க்கப்பட்டபோது என்னைக் கேட்கவில்லை. குற்றம் சாட்டிய என்னையும், குற்றச்சாட்டுக்கு உள்ளான அவர்களையும் விசாரித்து ஒரு நீதிபதியாகத்தான் செயல்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செயல்படாமல் மீண்டும் அவர்களைக் கட்சியில் சேர்த்துள்ளனர். இது சிறிய விவகாரம் இல்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல தமிழகம் முழுவதும் உள்ள கட்சியினரின் மனக்குமுறலுக்கு இதை ஒரு பதமாகக் கொள்ளலாம். ஸ்டாலின் சந்திக்கவில்லை: இந்த விவகாரம் தொடர்பாக நான்கு முறை மு.க.ஸ்டாலினைச் சந்திக்க முயற்சித்தேன். அவர் சந்திக்க மறுத்துவிட்டார். இப்படிச் சந்திக்காததிலிருந்தே ஸ்டாலின்தான் இந்த நடவடிக்கைக்குக் காரணம் என்பது புரியும். கருணாநிதியை இன்னும் சந்திக்க முயற்சிக்கவில்லை. இப்போது கருணாநிதியை மீறிய செயல்பாடு கட்சியில் அதிகரித்து இருக்கிறது. இப்படிச் செயல்படும் சக்தியாக ஸ்டாலின் இருக்கிறார்.தலைமை தாங்குவேன்: கட்சியில் கோஷ்டிப்பூசல் இருப்பது உங்களுக்கே தெரியும். தேவைப்பட்டால் தமிழகம் முழுவதும் மனக்குமுறலோடு உள்ளவர்களுக்காகத் தலைமையும் தாங்குவேன்.


வழக்குகளுக்குப் பயந்துகொண்டுதான் இதுபோன்ற நிலைப்பாட்டை நான் எடுத்திருப்பதாகச் சொல்வதைக் கேட்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது. 1991-ம் ஆம் ஆண்டு தனியொருவனாக சட்டப்பேரவையில் செயல்பட்டதை எல்லோரும் அறிவார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் என் மீதுதான் முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழக்குகளுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்.என்னுடைய ராஜிநாமா கடிதத்தை கருணாநிதிக்கும், அண்ணா அறிவாலயத்திற்கும்தான் அனுப்பினேன். இது எப்படி பத்திரிகை அலுவலகங்களுக்குப் போனது என்று எனக்குத் தெரியாது.தலைவராக ஸ்டாலின்: கருணாநிதியே, ""திமுக ஒன்றும் சங்கர மடம் இல்லை'' என்று கூறியுள்ளார். இதனால் தேர்ந்தெடுக்கப்படும் யாரையும் தலைவராகக் கொள்வேன் என்றார் பரிதி இளம்வழுதி. திமுக கவுன்சிலர் து. களரிமுத்து உள்பட பல ஆதரவாளர்களும் உடனிருந்தனர்.



யாரும் மீறிச் செயல்படவில்லை டி.கே.எஸ்.இளங்கோவன்: திமுக தலைவர் கருணாநிதியை மீறி யாரும் செயல்படவில்லை என்று மக்களவை உறுப்பினரும், திமுக அமைப்புச் செயலாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: கருணாநிதி தினமும் அறிவாலயம் வருகிறார். மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து உறுப்பினர்களும் அவரது ஆலோசனையின்படிதான் செயல்படுகிறோம். துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தவர் பரிதி இளம்வழுதி. அவர் கருணாநிதியை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து, தனது மனக்குறையைத் தெரிவிக்கலாம். அதற்கேற்ப தனது முடிவை கருணாநிதி தெரிவித்திருப்பார். அதை விடுத்து பரிதி இளம்வழுதி ஏன் பத்திரிகைகளை நாடினார் எனத் தெரியவில்லை என்றார் டி.கே.எஸ்.இளங்கோவன்.



பரிதி இளம்வழுதி கண்ணீர்: பரிதி இளம்வழுதி திமுகவை விட்டு விலகமாட்டார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். வெள்ளிக்கிழமை எழும்பூர் பகுதியில் தனது ஆதரவாளர்களோடு பேசிக்கொண்டிருந்தார் பரிதி. அப்போது, ""எதை இழந்தாலும் திமுகவை விட்டு வெளியேறாதே, வீடுகளுக்கு பத்து பாத்திரங்கள் தேய்த்தாவது உன்னைக் காப்பாற்றுகிறேன்; கருணாநிதிதான் உன் தலைவர்'' என்று தனது தாயார் கண்ணம்மா கூறியதாக ஆதரவாளர்களிடம் சொல்லி அழுதுள்ளார் பரிதி. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...