|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 February, 2012

கச்சத்தீவு உரிமையை மீட்க வேண்டும் திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்கள் தடையின்றி செல்லவும், அதனை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையை மீட்கவும், கச்சத்தீவினை இந்தியாவுக்கே திரும்பப் பெறுவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை திமுக பொதுக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.


இதுகுறித்து திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
இலங்கையுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி கச்சத்தீவை அவர்கட்கு விட்டுத்தருவதென்று 1974ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு முடிவினை எடுத்தபோது 21.8.1974 அன்று தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி, ‘‘இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உறவுகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்னையில், மத்திய அரசு எடுக்கும் முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு - மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில், இலங்கை அரசோடு செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.’’ என்னும் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியும்; 1974 ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று சென்னையில் அனைத்துக்கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசியபோது, தெரிவிக்கப்பட்ட கருத்தின் அடிப்படையில் இந்தியப் பிரதமருக்கு கருணாநிதி ‘‘கச்சத்தீவின் மீது இலங்கை கொண்டாடிவரும் உரிமையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, இருநாடுகளுக்கும் இடையே சமீபத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம், மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்துள்ளது என்று தமிழக அரசின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் தெரிவித்துக்கொள்வதோடு, நாங்கள் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள இந்தத் தீர்மானத்தைக் கருத்திலே எடுத்துக்கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.’’ என்று கடிதம் அனுப்பியும்; திமுக ஆட்சியில் இருந்தபோதே 1974ஆம் ஆண்டு கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியும்
இருக்கிறோம். மேலும், 14-7-1974 அன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில், கச்சத்தீவு ஒப்பந்தக் கண்டன நாள் நடத்தியும்; மத்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் கேவல் சிங், 1974-ல் கருணாநிதியை சென்னையில் சந்தித்த போதும், வெளியுறவு அமைச்சர் ஸ்வரண் சிங்கிடமும் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதற்கு முதல்வர் கருணாநிதி தீவிரமான எதிர்ப்பைத் தெரிவித்தார். கட்சி வேறுபாடுகளுக்கும், அரசியல் வேறுபாடுகளுக்கும் சிறிதளவும் இடம்தராமல் கருணாநிதி நடவடிக்கை எடுத்தும்கூட, தமிழர்களுக்குச் சொந்தமான தமிழ் நிலத்தின் ஒரு பகுதி விட்டுக் கொடுக்கப்பட்ட காரணத்தால்; கச்சத்தீவின் உரிமையை மீட்டெடுக்க வேண்டுமென்று, 1974ஆம் ஆண்டு முதலே திமுக, இந்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
2011 தமிழகச் சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தலின்போது, திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும்,1974ஆம் ஆண்டு இருந்த நம் நாட்டின் உரிமைகள் 1976ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆட்சியில் “திரும்பப் பெறப்பட்டதன் காரணமாக, அடிக்கடி கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், சிறைப் பிடிக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக அதிகரித்து வருவதால், கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்” என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.


1974ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு அதுவரை வழங்கப்பட்டிருந்த மீன் பிடித்தல், மீன் வலை உலர்த்துதல் மற்றும் தேவாலயத்தில் வழிபாட்டுரிமை ஆகிய அம்சங்கள், 1976ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆட்சியில் மீண்டும் பறிக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில்; கச்சத்தீவிற்கு தமிழக மீனவர்கள் தடையேதுமின்றிச் செல்வதற்கும், அதனை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையைக் கைக் கொள்வதற்கும் மீட்டெடுப்பதற்கும், கச்சத்தீவினை இந்தியாவிற்கே திரும்பப் பெறுவதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை மேலும் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு திமுக பொதுக்குழு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...