|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 May, 2012

யாருக்கு யோகம்?

வாக்கிய பஞ்சாங்கப்படி, குரு பகவான் மே 17, மாலை 6.25மணிக்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். 2013, மே 27 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார் இதையொட்டி ஏற்படும் பலன்களைக் காணலாம். நற்பலன் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம். சுமாரான பலன் பெறும் ராசிகள்: மிதுனம், தனுசு, கும்பம், மீனம். பரிகார ராசிகள்: ரிஷபம், சிம்மம், துலாம்.யாருக்கு யோகம்...? குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ஜீவராசிகளுக்கெல்லாம் தந்தையாகவும், சிறந்த அரசனாகவும் இருப்பதால் இப்பெயர் உண்டானது. மேலும் கு என்றால் இருள் அல்லது அறியாமை என்றும், ரு என்றால் போக்குபவர் என்றும் பொருள் உண்டு. உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. சிவனும் மக்களின் உலக இன்பம் தேடும் அறியாமையைப் போக்கி, அவனை அழித்து, தன்னோடு இணைத்து நிரந்தரமான இன்பம் தருபவர். அறியாமையை அழிக்கும் இத்தகைய வாழ்க்கை கல்வியை அளித்தவர் என்பதால், இவர் குருவாக மதிக்கப்படுகிறார். தட்சிணாமூர்த்தி: சிவபெருமானுடன் கையிலையில் உரையாடிக் கொண்டிருந்தார் பார்வதி தேவியார். அப்பொழுது சிவபெருமானிடம் ஐயனே தட்சனின் மகளானதால் தாட்சாயினி எனும் பெயர் எனக்கு ஏற்பட்டது. தங்களை அவமதித்த தட்சனின் இப்பெயரை வைத்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை எனவே அப்பெயர் மாறும் வண்ணம் வரம் வேண்டுமெனக் கேட்க உடன் சிவபெருமானும் பார்வதி மலை மன்னன் குழந்தை வரம் வேண்டி தவமிருக்கிறான், அவனுக்கு நீ மகளாகச் செல். பின் நான் வந்து மணமுடிப்பேன் என்றுக் கூறி அனுப்பினார். அங்கே குழந்தை உருவில் வந்த பார்வதி தேவி வளரத் துவங்கினார். இதற்கிடையே நான்முகனின் நான்கு புதல்வர்களான சனகன், சனந்தனன், சனாதனன், சனத்குமாரன் என்ற நான்கு முனிவர்கள் வேதாகமத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை படித்திருந்தனர். இருப்பினும் அவர்களது மனம் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது. இதனை சிவபெருமானிடம் கூறி தங்களுக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்குமாறு வேண்டினார். உடன் சம்மதித்த சிவபெருமான் நந்திதேவரிடம் சென்று மன்மதனைத் தவிர வேறு யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என்றுக் கட்டளையிட்டு வந்து சனகாதியர்க்கு பதி, பசு, பாசம் இவற்றையெல்லாம் விளக்கி விரிவாகக் கூறினார். உடன் அவர்கள் மேலும் மனம் ஒடுங்கும்படி ஞான உபதேசம் செய்யச் சொன்னார்கள். உடனே சிவபெருமான் இதைக் கேட்டவுடன் மெல்லிய புன்னகைப் புரிந்து "அப்பொருள் இவ்வாறிருக்கும் என்றுக் கூறினார். பின்னர் மேலும் புரியவைக்க தன்னையே ஒரு முனிவன் போலாக்கி தியானத்தில் ஒரு கணநேரம் இருந்தார். அதே நிலையிலேயே அந்த நால்வரும் இருந்தனர். அப்போது மன்மதன் உள்ளே வந்து சிவபெருமான் மேல் பாணம் விட, கோபமுற்ற சிவபெருமான் அவனை நெற்றிக் கண்ணாலே எரித்தார். சிவபெருமான் அந்நிலை நீங்கி முனிவர்களை வாழ்த்தி அனுப்பினார். இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தால் அவரது பெயர் "தட்சிணாமூர்த்தி ஆயிற்று. தெட்சிணம் என்றால் என்ன? தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வழிபடுபவர்க்கு ஞானத்தை வழங்கி அருள்பவர் தெட்சிணாமூர்த்தி. ஞானமானது தெட்சிணாமூர்த்தியின் முன்னிலையில் அவரையே நோக்கி நின்றுகொண்டிருக்கிறது. குரு - தெட்சிணாமூர்த்தி வித்தியாசம் நவக்கிரக மண்டபத்தில் இருக்கும் குரு பகவான் வேறு. தெட்சிணாமூர்த்தி வேறு. ஆனால், இருவரும் தங்கள் தொழிலால் ஒன்றுபடுகிறார்கள். இதனால் தான் மக்கள் தெட்சிணாமூர்த்தியை குருவாகக் கருதி, குருவுக்குரிய வழிபாடுகளை தெட்சிணாமூர்த்திக்கு செய்து கொண்டிருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தியின் திசை தெற்கு, குருவின் திசை நவக்கிரக சன்னதியில் வடக்கு. தேவர்களின் குருவே பிரகஸ்பதி. இவரே நவக்கிரக அந்தஸ்தைப் பெற்றவர். தெட்சிணாமூர்த்தி சிவனின் அம்சம். இவர் அம்பிகைக்கும், சனக, சனாதனர் உள்ளிட்ட நால்வருக்கும் வேதம் கற்பித்தவர். ஆனால், இருவருக்கும் மஞ்சள் ஆடை அணிவதில் ஒற்றுமை இருக்கிறது. தட்சிணாமூர்த்தி மவுனமானது ஏன்?  பிரம்ம புத்திரர்கள் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும் நான்குவேதம், ஆறுசாஸ்திரம், 64 கலைகள், 96 தத்துவங்கள், ஆகமங்கள், உபநிஷத்துக்கள் ஆகிய அனைத்தையும் கற்றுத் தேர்ந்தனர். இவ்வளவு கற்றிருந்தும் அவர்களுக்கு மனநிறைவு கிடைக்கவில்லை. கயிலைக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். சிவபெருமான் அவர்கள் முன்னே தோன்றி இன்னும் என்ன வேண்டும் எனக்கேட்டார். மனம் அமைதி பெற அருள் வேண்டும் என்று விண்ணப்பம் செய்தனர். அவர்களது வேண்டுகோளின்படி சிவபெருமான் அவர்களுக்கு சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று மார்க்கங்களையும் விளக்கிக் கூறினார். சனகாதி நால்வரும் மகிழ்ச்சியுற்று ஞான மார்க்கத்தை போதிக்க வேண்டினர். அதற்கு சிவபெருமான், விளக்கத்தால் உணர்வதல்ல ஞானம் அனுபவத்தால் உணர்வது என்று கூறி, சின் முத்திரை காட்டி தெற்குமுகமாக மவுன நிøயில் கல்லால மரத்தடியில் ஞான சொரூபமாக அமர்ந்தருளினார். அதாவது ஆணவம், கன்மம் (புண்ணிய பாவங்கள்), மாயை (இவ்வுலக வாழ்வே நிலையானது என்ற எண்ணம்) ஆகியவற்றை ஒடுக்கி விட்டால் (விரித்த மூன்று விரல்கள்), சுட்டுவிரலான ஜீவாத்மா (உயிர்கள்) பெருவிரலான பரமாத்மாவை (இறைவன்) அடைந்து விடலாம் என்பதே அவர் போதித்த ஞானத்தில் விளக்கம்.  தெட்சிணாமூர்த்தி வழிபாடு: தெட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்த விளக்கேற்றி வழிபட வேண்டும். 11 அல்லது 21 விளக்குகள் ஏற்றலாம். தெட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும். அவருக்கு பிடித்த முல்லை அல்லது மல்லிகை மாலை அணிவித்து, கொண்டைக்கடலை, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் வழிபட வேண்டும்.  வியாக்யான தெட்சிணாமூர்த்தி: தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் வழிபடப்படுகிறார். பெரும்பாலான கோயில்களில் விளங்குபவர் வியாக்யான தெட்சிணாமூர்த்தியே ஆவார். வேதாகமங்களின் நுட்பமான உண்மைகளை இவரே விளக்கி அருள்கிறார். வேதத்தின் பொருள் புரியாத சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கிக் கூறினார். எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக்கின்றனர். குருவின் சின்முத்திரை: வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாள சின்னத்தையே சின்முத்திரை என்பார்கள். இதில் கட்டைவிரல் கடவுளைக் குறிக்கும். சுட்டுவிரல் மனிதனைக் குறிக்கும். நடுவிரல் ஆசையையும், மோதிரவிரல் கர்மம் ஆகிய செயல்களையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்துநின்று, ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே இதன் பொருளாகும். பத்து தெட்சிணாமூர்த்திகள் மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில் தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்) சிற்ப அழகு - ஆலங்குடி வீராசன நிலை - சென்னை திரிசூலம் மிருதங்க தெட்சிணாமூர்த்தி - கழுகுமலை (தூத்துக்குடி) யோகாசன மூர்த்தி - அனந்தபூர் (ஆந்திரா) வீணா தெட்சிணாமூர்த்தி - நஞ்சன்கூடு (கர்நாடகா) வியாக்யான தெட்சிணாமூர்த்தி - அகரம் கோவிந்தவாடி (காஞ்சிபுரம் அருகில்) நந்தியுடன் தெட்சிணாமூர்த்தி - மயிலாடுதுறை வள்ளலார் கோயில் நின்ற நிலையில் வீணையுடன் - திருத்தணி, நாகலாபுரம் வேதநாராயணர் கோயில்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...