|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 January, 2013

நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்க இலங்கை முடிவு!


இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் தடயங்கயை அழிக்கும் முயற்சியில் ராஜபக்சே அரசு ஈடுபட்டு வருகிறது. அங்கு சிங்களர்களின் குடியேற்றம் ஒருபுறம் நடப்பதைப்போல அங்கிருந்த இந்து ஆலயங்கள் சத்தமில்லாமல் அழிக்கப்பட்டுவிட்டன. தமிழகர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்த 367 கோவில்கள் எரிக்கப்பட்டுவிட்டதாக இண்டர்நேசனல் பாலிசி டைஜெஸ்ட் இதழில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஆதாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கோவில்களை அழிப்பதன் மூலம் தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 
யாழ்பாணத்தில்தான் அதிகபட்சமாக 208 கோவில்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அங்குள்ள நாகர்கோவில் கிழக்கு, வடக்கு, தெற்கு, செம்பியன்பட்டு வடக்கு, செம்பியன்பட்டு தெற்கு, வெட்டிலைக்கேணி, தந்தை செல்வபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள பிரபலமான கோவில்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அதில் சோழசிவன் கோவில், கரம்பம் வயிரவர் கோவில், உச்சிமலை சிவன் கோவில், சுடலை ஞான வயிரவர் கோவில், மாங்கொல்லை வயிரவர் கோவில் உள்ளிட்ட பிரபல கோவில்கள் அடக்கம்.தமிழர்கள் வாழும் பகுதியான திரிகோணமலை மாவட்டத்தில் உப்பரவு, லங்கபட்டிணம், சம்பல்தீவு உள்ளிட்ட பல கிராமங்களில் 17 இந்து கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன. பிள்ளையார் கோவில், முருகன் கோவில், அம்மன் கோவில், மலையம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், கோனேஸ்வர் கோவில் நாராயணன் கோவில் போன்ற ஆலயங்கள் அழிக்கப்பட்டு விட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கட்டமுறிவு, கதிரவேலி, மலையர்கட்டு, மண்டூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் உள்ள கருணைமலைபிள்ளையார் கோவில், கன்னிகையம்மன் கோவில், சிவமுத்து மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பிரபலமான 61 கோவில்கள் எரிக்கப்பட்டும், இடிக்கப்பட்டும் அழிக்கப்பட்டுள்ளன.அம்பாரை மாவட்டத்தில் உள்ள நிந்தாவூர், ஆட்டப்பலம், பலமுனை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பிள்ளையார் கோவில், முருகன் கோவில், கண்ணகியம்மன் கோவில், வயிரவர் கோவில் என 11 கோவில்கள் அழிக்கப்பட்டுவிட்டன.கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இந்துபுரம், மாணிக்கபுரம், யூனியன் குளம், கந்தபுரம், ஜெயபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்த 46 கோவில்களை எரித்தும், இடித்தும் துவம்சம் செய்துவிட்டனர்.
  
மன்னார் மாவட்டத்தில் உள்ள வேட்டைமுறப்பு, குறிஞ்சன்குளம், பருந்து கடந்தான், பிள்ளையார் பட்டி ஆகிய ஊர்களில் உள்ள பிரபலமான ஆலயங்களான சித்திவிநாயகர் கோவில், துர்க்கையம்மன் கோவில், வழிவிடுவிநாயகர் கோவில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட 6 கோவில்கள் அழிக்கப்பட்டுவிட்டன.வவுனியா மாவட்டத்தில் மொத்தம் 12 கோவில்கள் இடிக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் அழிக்கப்பட்டுவிட்டன. அங்குள்ள ரம்பைக்குளம், மரைலுப்பை, நெடும்கேணி, சிவநகர், தடையர்மலை உள்ளிட்ட ஊர்களில் இருந்த பிள்ளையார் கோவில், முருகன் கோவில், வீரபத்திரர் கோவில், பழைய கந்தசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களை எரித்து அழித்துவிட்டனர். அங்குள்ள தமிழர்கள், ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். கொல்லைப்புற வழியாக, மிகப்பெரிய கலாச்சாரத்தையும், பழமை வாய்ந்த மதத்தையும் அழிக்கும் முயற்சியில், இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
 
மக்களின் வாழ்வை, அவர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றுபவை கோவில்கள். தமிழர்களை அழித்தது போல அவர்களின் கலாச்சாரத்தையும் அழித்து ஒழிக்க நினைக்கிறது இலங்கை அரசு. அதனால்தான் தமிழர்களின் பகுதிகளில் இருந்த கோவில்கள் சத்தமில்லாமல் அழிக்கப்பட்டுவிட்டன. இலங்கையில் உள்ள, 89 தமிழ் கிராமங்களுக்கு, சிங்கள பெயர் சூட்டுதல், மாவட்ட, நகர, கிராம எல்லைகளை மாற்றி அமைத்தல், போன்ற வேலைகளை செய்த அரசு, அங்குள்ள 367 இந்து கோவில்கள் அழித்துவிட்டது. ஒரு மாபெரும் கலாசாரமும் பழங்கால மதமும் அனைவரின் கண்முன்னே நிர்மூலமாக்கப்பட்டு வருகிறது என்பது இதன்மூலம் தெரிவந்துள்ளது.
 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...