|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 January, 2013

சட்டை காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்!

ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களை காட்டிலும், மதுபான, "சரக்கு' விற்பனையில், தமிழகம், "நம்பர் 1' இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த, 2003ம் ஆண்டு முதல் மதுபான விற்பனையை அரசே ஏற்று நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும், 6,805 "டாஸ்மாக்' கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தேவையான சரக்குகளை சப்ளை செய்ய, 22, குடோன்கள் உள்ளன. தினமும், 50 கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெறுகிறது. "குடி'மகன்களின் தாகத்தை தீர்க்க, 200க்கும் மேற்பட்ட வகையான சரக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்களை, 11 கம்பெனிகளும், பீர் வகைகளை 7 கம்பெனிகளும், ஒயின் மதுபானங்களை, 3 கம்பெனிகளும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சப்ளை செய்கின்றன.

கடந்த, 2011-12 மார்ச் மாதம் வரை, இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்கள், 536.35 லட்சம் பெட்டிகளும், 284.29 லட்சம் பீர் பாட்டில்களும் விற்பனையாயின. இதன்மூலம், 23 ஆயிரத்து 505 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவுக்கு நடந்த விற்பனையில், 18 ஆயிரத்து 81 கோடியே 16 லட்சம் ரூபாய் அரசுக்கு வருமானமாக கிடைத்துள்ளது.அடுத்து, 2011-12 டிசம்பர் மாதம் வரையில், 19.74 சதவீதம் வரை விற்பனை வளர்ச்சி விகிதம் உள்ளது. இது வரும் மாதங்களிலும் அதிகரித்து, இலக்கான, 22 சதவீதத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதன் மூலம், 2013 மார்ச் நிதியாண்டு முடிவில், 28 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரக்கு விற்பனை இருக்கும் என்றும், 20 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
கேரளா அரசின் நேரடி கட்டுப்பாட்டில் மொத்தம், 338 கடைகளில் மட்டுமே மதுபான விற்பனை நடக்கிறது. கேரள நுகர்வோர் அமைப்பின் சார்பில், 45 கடைகள் நடத்தப்படுகின்றன. கேரளாவில் கடந்த, 2011-12 நவம்பர் மாதம் வரையில், 7 ஆயிரத்து 860 கோடி ரூபாய் அளவுக்கு நடந்த விற்பனையில், அரசுக்கு, 6 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.காலை, 9:00 மணி முதல் திறக்கப்படும் மதுபான கடைகள் இரவு, 9:00 மணி வரை செயல்படும். மதுபானங்களில் தண்ணீர் கலப்பது, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, ஊழியர்கள் பணியிடை நீக்கம் என்று எந்தவிதமான பிரச்னைகளும் கேரளாவில் இல்லை. மதுபான மொத்த விற்பனையில் மட்டுமே ஆந்திர அரசு ஈடுபட்டு வருகிறது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகளை ஏலம் எடுத்து, தனியாரே நடத்தி வருகின்றனர். 2011-12 நவம்பர் மாதம் வரையில் 14 ஆயிரத்து 846 கோடி ரூபாய் அளவுக்கு நடந்த மதுபான விற்பனையில், அரசுக்கு 9 ஆயிரத்து 169 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

கர்நாடக அரசு, மதுபான மொத்த விற்பனையில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. மதுபான கடைகளை தனியாரே ஏற்று நடத்தி வருகின்றனர். 2011-12 நவம்பர் மாதம் வரையில், 13 ஆயிரத்து 814 கோடி ரூபாய் அளவுக்கு நடந்த மதுபான விற்பனையில், 9 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாக கிடைத்துள்ளது. இவ்வாறு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் டாஸ்மாக், "சரக்கு' விற்பனை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது. இது குறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் தனசேகரன் கூறியதாவது: கேரளா போல் தமிழகத்திலும் டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்த வேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறை, பணி நிரந்தரம் போன்றவற்றில் அரசு கவனம் செலுத்தினால், மதுவில் தண்ணீர் கலப்பது, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். இவ்வாறு தனசேகரன் கூறினார்.

ஆந்திரா, கர்நாடகாவில் ஆண்டுதோறும், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், மிலாது நபீ, திருவள்ளூவர் தினம், வள்ளலார் தினம், உழைப்பாளர் தினம், மஹாவீர் ஜெயந்தி ஆகிய, எட்டு நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த மாதத்தில், 25, 26 மற்றும் 27ம் தேதிகளில் மிலாது நபீ, குடியரசு தினம், வள்ளலார் தினம் ஆகியவை தொடர்ந்து வருகிறது. இதனால், தொடர்ந்து மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...