|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 February, 2013

ஹைதராபாத்தில் 200 ‘ஸ்லீப்பர் செல்!



ஸ்லிப்பர் செல் எனப்படும் ரகசியமாக செயல்படும் தீவிரவாதிகள் 200 பேர் ஹைதராபாத்தில் வசிப்பதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. இவர்களை இந்தியன் முஜாகிதீன் போல் உலக நாடுகளில் செயல்படும் 10 தீவிரவாத அமைப்புகள் வழிநடத்துகிறது என்றும் உளவுத்துறை அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. ஹைதராபாத் நகரில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 17 பேர் பலியானார்கள். 130 பேர் காயம் அடைந்தனர். எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் தில்சுக்நகர் பகுதியில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றாலும் இது ஸ்லீப்பர் செல்களின் வேலைதான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்திய முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்புதான் இதனை செயல்படுத்தி இருக்க வேண்டும் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. எப்படி உருவாகிறார்கள்? பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள்தான் இந்தியாவில் ஊடுருவி இதுபோன்ற சதி செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த சதி செயலில் ஈடுபடுபவர்களைதான் ‘ஸ்லிப்பர் செல்' என்று அழைக்கின்றனர். இவர்கள் மக்களோடு மக்களாக வசிப்பார்கள். வழக்கமான தங்கள் தொழிலில் ஈடுபடுவார்கள். யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் சதி செயல் இருக்கும். இப்படி 200 ஸ்லிப்பர் செல் தீவிரவாதிகள் ஹைதராபாத்தில் இருப்பதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. இவர்களை இந்தியன் முஜாகிதீன் போல் உலக நாடுகளில் செயல்படும் 10 தீவிரவாத அமைப்புகள் வழிநடத்துகிறது. வழிமாறும் இளைஞர்கள் படித்த, வேலை இல்லாத ஏழை இளைஞர்களை பணம் ஆசை காட்டி தங்கள் வலையில் வீழ்த்தும் தீவிரவாதிகள்,பின்னர் துபாயில் வேலை தருவதாக அழைத்து செல்வார்கள். அங்கிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பி அங்கு அவர்களை மூளை சலவை செய்து தீவிரவாத பயிற்சி அளிக்கிறார்கள். குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லை வழியாக திருட்டுத்தனமாக பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது. வங்காளதேசத்திலும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்படி பயிற்சி பெற்றவர்கள் இந்தியா திரும்பி மக்களோடு மக்களாக இருந்து தலைமை சொல்லும் கட்டளையை செயல்படுத்துவார்கள். 

இத்தகையை ஸ்லிப்பர் செல் தீவிரவாதிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். ஐதராபாத்தில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் போலவே தற்போதைய குண்டு வெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த குண்டுகள் ஐதராபாத் நகரிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளது. குண்டு வைத்தவன் ஒருவனாகவும், அதனை வெடிக்கச் செய்தவன் வேறொருவனாகவும் செயல்பட்டுள்ளனர். மேற்கண்ட தகவல் தேசிய புலனாய்வு போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வெடிகுண்டு சிதறல்களில் கிடந்த துணியில் உருது எழுத்து இருந்ததாகவும், அந்த துணி நார் நாராக கிழிந்து போனதால் அதுபற்றி முழு விவரங்கள் சேகரிக்க முடியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். இதன்மூலம் குண்டு வெடிப்புக்கு வெளிநாட்டு சதி இருந்து உள்ளது உறுதியாகி உள்ளது. எனவே வெடிகுண்டு வைத்தவர்களை கண்டுபிடிக்கவும், ஹைதராபாத் நகரில் தங்கியுள்ள ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடிக்கவும் போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...