|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 August, 2011

சலுகைகள் வழங்கும் மாநிலத்தில் ரூ.1,000 கோடி ஆலை: ஃபோர்ஸ் !

சலுகைகள் அதிகம் வழங்கும் மாநிலத்தில் ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய ஆலை கட்ட இருப்பதாக ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கூறியுள்ளது. டெம்போ டிராவலர், டிராக்ஸ் உள்ளிட்ட வர்த்தக பயணிகள் வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், புனேயை சேர்ந்த ஃபோர்ஸ் மோட்டார்ஸ் கார் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. இந்த மாத இறுதியில் ஃபோர்ஸ் ஒன் என்ற பெயரில் புதிய எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த இருக்கும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் அடுத்த ஆண்டு புத்தம் புதிய எம்பிவி காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த காருக்கான தொழில்நுட்பத்தை பெறுவதற்காக ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனத்துடன் ஃபோர்ஸ் சமீபத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.இந்த நிலையில், புதிய எம்பிவி கார் தயாரிப்புக்காக ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய கார் ஆலையை அமைக்கப்போவதாக ஃபோர்ஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஃபோர்ஸ் குழுமத்தின் தலைவர் அபய் பிரோடியா கூறியதாவது:
"ஆல் நியூ எம்பிவி கார் தயாரிப்புக்காக ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளோம். கார் ஆலை கட்டுவதற்கு சலுகைகள் வழங்குவது தொடர்பாக மத்திய பிரதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதில், சுமூக உடன்பாடு எட்டப்பட்டால், பீதம்பூரில் உள்ள எங்களது அசெம்பிளிங் தொழிற்சாலை அருகிலேயே புதிய அசெம்பிளிங் தொழிற்சாலையை கட்ட திட்டமிட்டுள்ளோம்.

இல்லாவிட்டால், சலுகை அதிகம் கொடுக்கும் மாநிலத்தில் புதிய ஆலையை கட்டுவது குறித்தும் பரிசீலனை செய்வோம்.  ஆண்டுக்கு 12,000 கார்களை உற்பத்தி திறன் கொண்டதாக அமைக்கப்படும் புதிய ஆலை, பின்னர் ஆண்டுக்கு 24,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக விரிவாக்கம் செய்யப்படும். இன்னும் இரண்டு மாதத்திற்குள் புதிய ஆலை கட்டும் இடம் குறித்து இறுதி முடிவு எடுத்துவிடுவோம்," என்று கூறினார்.

சென்னை குப்பைகளை அகற்ற 3 மாதத்தில் விரிவான திட்டம்!

சென்னை மாநகரை நான் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தபோது பெருமளவில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதைப் பார்த்தேன். அவற்றை முற்றிலும் சீர் செய்ய 3 மாதங்களில் விரிவான திட்டம் அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

தமிழக மக்கள் அனைவரும் சுகாதாரமான சுற்றுச்சூழலில் வசிப்பதை உறுதி செய்வது எனது தலைமையிலான அரசின் முக்கிய நோக்கம் ஆகும். எனவே தான் ஆளுநர் உரையில், சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும், கிராமப்புறங்களையும், நகர்புறங்களையும் தூய்மைப்படுத்த ஒரு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், 4.8.2011 அன்று, இந்த மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, 2011-12 ஆம் ஆண்டுக்கான திருத்த வரவு-செலவு மதிப்பீட்டில், சென்னையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும், திடக் கழிவு மேலாண்மைக்காக ஒரு விரிவான திட்டம் தயாரித்து, கரிம சேமிப்புக்காக கிடைக்கப் பெறும் நிதியையும் பயன்படுத்தி, இத்திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தோம்.

தற்போது, சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுற்றுச்சூழல் குறித்த ஒட்டுமொத்த நிலையை நேரடியாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, நான் 5.8.2011 அன்று ஹெலிகாப்டரில் சென்று வான் வழியாக ஆய்வு செய்தேன். அப்போது, பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய இடங்களில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களையும் பார்வையிட்டேன். இந்த ஆய்வின் போது, சென்னை மாநகர், அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான குப்பைகள் கொட்டிக் கிடந்தது தெரிய வந்தது.

மேலும், சென்னை மாநகரைச் சுற்றியுள்ள சில பகுதிகளில், குடியிருப்புகளைச் சுற்றி மழைநீர், கழிவுநீர் தேங்கியுள்ளதையும் கண்டறிந்தேன். மிகவும் அசுத்தமாக இருந்தது. எனவே, சென்னை மாநகர், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள மக்கள் சுகாதாரமான சூழலை உடனடியாகப் பெறுவதற்கு ஏதுவாக, முதற் கட்டமாக, தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும்; குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள அசுத்தமான நீரை அகற்றுவதற்குமான சிறப்பு தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தத் தூய்மைப்படுத்தும் பணிகள், மூன்று மாத காலத்திற்குள் செய்து முடிக்கப்படும். இதனைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், 2011-12ஆம் ஆண்டுக்கான திருத்த வரவு-செலவு மதிப்பீட்டில் குறிப்பிட்டவாறு, விரிவான திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

தோல்நோய்களை குணப்படுத்தும் பீர்க்கங்காய்!

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் காய்களே எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும். நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது.

பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது.

செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்: கார்போஹைட்ரேட்டுகள், கரோட்டீன், வைட்டமின் ஏ,சி, கொழுப்பு, புரதம், ஃபைட்டின், அமினோஅமிலம், அலனைன், ஆர்ஜினைன், கனிகளில் லினோலிக் அமிலம், ஒலியிக், பால்மிட்டிக், ஸிடியரிக் அமிலம் போன்றவை காணப்படுகின்றன.

முழுத்தாவரமும் மருந்து: இதன் இலை, விதைகள், வேர் என பீர்க்கங்காயின் முழுத்தாவரமும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே. கசப்பான மருந்தாகும். விதைகள் பேதியை தடுக்கும், கபம் வெளியேற்றும், பேதிமருந்து, எண்ணெய் தோல் நோய்களுக்கு தடவும் மருந்தாகப் பயன்படும். இலைகள் பொடிக்கப்பட்டு இரத்தக் கட்டிகளின் மீது தடவப்படும், கண் வலிக்கு இலைகளின் சாறு பயன்படும். வேரானது நீர்க் கோர்வைக்கும், மிதமான பேதி மருந்தாகவும் பயன்படுகிறது.

நீரிழிவு குணமடையும்: நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம். பீர்க்கங்காயின் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.

இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர வேண்டும். இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும். பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும். பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது. கஷாயம் மாதவிடாய் மற்றும் சிறுநீர்க் கோளாறுகளுக்கு பயன்படும்.

நாள்பட்ட புண்களை குணமாக்கும்: சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் மூத்திரக்கடுப்பை நீக்கும். மிதமான பேதி மருந்து. மூச்சுத்திணறல் நோய்க்கு நல்ல மருந்து, மண்ணீரல் பெரிதானதை குணப்படுத்தும். மலை ஜாதியினர் இந்த மருந்தை வலிப்பு நோய், மூச்சுப்பிடிப்பு, புண்கள், சிரங்குகள் ஆகியவற்றில் பயன்படுத்துவர். கனிகள் – கசப்பான நன்மருந்து, பேதிமருந்து, நோயை ஆற்றும், வாந்தி மருந்து.

வயது ஏறினால் அழகும் கூடும்!

குழந்தையாக இருக்கும் போது தொடங்கி பேரிளம் பெண்ணாக மாறும் வரை பெண்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் அழகுதான். எந்தப் பெண்ணையுமே அழகில்லை என்று கூற யாருக்குமே மனசு வராது. பெண்களின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக நம்பிக்கை, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே பெண்களின் அழகு.

முப்பதுக்கு மேல்தான் அழகு: பெண்கள் எந்த வயதில் மிக அழகாக இருப்பார்கள் என்று ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது 31 வயதில்தான் ஒரு பெண் அழகாக இருப்பதாக அதில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் தெரிவித்துள்ளனர். இந்த வயதில்தான் பெண்கள் அழகாகவும், கவர்ச்சிகரமாகவும், பார்ப்பதற்கு பிடித்தமானவராகவும் இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

இந்த வயதில்தான் மிகவும் இளமையோடும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார்கள். இதற்கு காரணம், அவர்களிடம் அதிகரித்துள்ள தன்னம்பிக்கையே காரணமாக இருக்கும் என்பதும் கருத்துக்கணிப்பில் பங்கேற்றோரின் கருத்தாகும்.

ஸ்டைலும், தன்னம்பிகையும்: வயது ஏற ஏறத்தான் பெண்களுக்கு அழகு கூடுகிறது என்று 63 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேசமயம், வயது ஏற ஏற பெண்களுக்கு அலட்சியப் போக்கு அதிகரித்து விடுவதாக இதே அளவிலான நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 30 முதல் 31 வயது வரையிலான பெண்கள்தான் மிகவும் ஸ்டைலாகவும், எழிலாகவும் இருக்கிறார்களாம். தோற்றப் பொலிவு மட்டுமல்லாமல் அவர்களது சிந்தனை, செயல்பாடு ஆகியவையும் கூட அழகாக மாறி விடுகிறது இந்த வயதில்தான்.

பெண்கள் 31 வயதில் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள் என்று 70 சதவீதம் பேரும், அழகான தோற்றத்துடன் இருப்பதாக 67 சதவீதம் பேரும், ஸ்டைலாக இருப்பதாக 47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல வயது ஏற ஏற பெண்கள் தங்களை மிகவும் பெருமையாக உணர்வதாக 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதேபோல இந்த வயதில் ஆண்கள், பெண்களை விட அதிகம் செலவழிக்கிறார்களாம்-தங்களை அழகுபடுத்திக் கொள்வதற்காக. ஜிம்முக்குப் போவதிலும், தலையலங்காரத்தை கவனமாக பார்த்துக் கொள்வதிலும் இந்த வயது ஆண்கள் அதிக சிரத்தை எடுக்கிறார்களாம்.

ஜீரணசக்தியை அதிகரிக்கும் கொடாம்புளி...!

உடல்பருமன் என்பது இன்றைக்கு அனைவரையும் பாதிக்கும் ஒன்றாகிவிட்டது. பாஸ்ட் புட் காலமாகிவிட்டதால் உண்ணும் உணவானது தேவையற்ற கொழுப்பாக மாறி ஆங்காங்கே சேகரிக்கப்பட்டு உடலானது பருமனடைகிறது. இதனால் ஏராளமானோர் மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

உடல் எடையைக் குறைக்க சிலர் பட்டினி கிடக்கின்றனர். சிலர் எடையைக் குறைக்கிறோம் என்ற விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தை இழக்கின்றனர். பட்டினி கிடந்தாலே, மருந்து மாத்திரைகளை உபயோகித்தாலோ உடல் எடை குறையாது. உணவும், உடற்பயிற்சியும் தான் உடல் எடையை முறையாகக் குறைக்கும் மருந்தாகும். கொழுப்பை கரைப்பதில் கொடாம்புளி முக்கிய பங்கு வகிக்கிறது.

கொடாம்புளியின் பூர்வீகம் இந்தியாதான். தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் விளைகின்றது. இலங்கை மக்களும் புளிக்குப் பதிலாக கொடாம்புளியைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் கொடாம்புளி அதிகம் பயன்படுத்துகிறார்கள்

கொழுப்பு குறையும்: கொடாம்புளியின் பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மேல் தோலுடன் உள்ள தசைப் பகுதிதான் மருத்துவத் தன்மை கொண்டது. இதில் உள்ள ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் என்ற வேதிப்பொருள் தான் உடலின் எடையைக் குறைக்க பெருமளவில் உதவுகிறது. உண்ணும் உணவில் இருக்கும் அதிகப்படியான மாவுச்சத்துக்கள் அனைத்தும் கொழுப்புச் சத்தாக மாறுகின்றது. இதனால் கொழுப்புப் படலம் உடலில் தங்கி உடலைப் பருமனாக்குகிறது.

உடல் பருமன் உள்ளவர்கள் சமையலில் இந்த கொடாம்புளியை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஹைட்ரஸி சிட்ரிக் அமிலம் மாவுச் சத்தை கொழுப்புச் சத்தாக மாறாமல் தடுக்கிறது. இதனால் உடலில் கொழுப்புச் சத்து உருவாவது தடுக்கப்படுகிறது. மேலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன.

மூட்டுவலி குணமடையும்: கொடாம்புளியின் விதையை நீக்கி அதன் சதைப் பகுதியை நீரில் கொதிக்க வைத்து கசாயமாக்கி அருந்தினால் மூட்டுவலி குணமாகும். உடலில் உள்ள வாத பித்த நோய்களை சீராக்கும்.

சீரணமண்டலம் பலப்படும்: புளிக்குப் பதிலாக கொடாம்புளியை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் தீரும். கொடாம்புளியை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும். சீரண மண்டலத்தை பலப்படுத்தும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு வெகு விரைவில் கரையும்.

அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பி.சி.ரெட்டியின் பேத்தியை மணக்கிறார் ராம்சரண்!

நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவுக்கும், அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் சி. ரெட்டியின் பேத்தி உபாசனாவுக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது.நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா. தெலுங்கில் முன்னணி கதாநாயகன்களில் ஒருவர். அவர் நடித்த மகதீரா சூப்பர் டூப்பர் ஹிட். அந்த படம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு மாவீரன் என்ற பெயரில் வெளியானது.

ராம்சரண் தேஜாவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. மணமகள் அவர் காதலி உபாசனா. அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் ரெட்டியின் மகள் வழி பேத்தி. உபாசனாவின் தந்தை அனில் காமினேனி, தாய் ஷோபனா. அவர்கள் ஹைதராபாத்தில் மருத்துவமனை நடத்தி வருகின்றனர்.

அந்த மருத்துவமனையில் உபாசனா முக்கிய பொறுப்பில் உள்ளார். ராம்சரண் தேஜாவும், உபாசனாவும் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்த போதில் இருந்து காதலித்து வருகின்றனர். இரு வீட்டாரும் காதலுக்கு மரியாதை அளித்து பச்சைக் கொடி காட்டியுள்ளனர். வரும் நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறது. ராம்சரண் தேஜா படுபிசியாக இருப்பதால் இன்னும் 1 ஆண்டு கழித்து தான் திருமணமாம்.

ரேடியோ மிர்ச்சியில் மங்காத்தா ஆடியோ ...!

அஜீத்தின் பொன் விழா படமான மங்காத்தாவின் இசை வெளியீடு ரேடியோ மிர்ச்சி எப் எம் ஸ்டேஷனில் வரும் 10-ம் தேதி நடக்கிறது. இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் வானொலி நிலையத்துக்கே வந்து இசை ஆல்பத்தை வெளியிடுகிறார்கள்.

அன்றைய தினம் மங்காத்தா பாடல்கள் வானொலியில் ஒவ்வொன்றாக ஒலிபரப்பாகும். இடையிடையே யுவன், வெங்கட் பிரபுவின் பேட்டியும் நேரடியாக ஒளிபரப்பாகிறது. ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் இவர்கள் பதிலளிக்க உள்ளனர். மங்காத்தா பாடல்களை சட்டப்பூர்வமாக நோக்கியாவின் ஓவி ஸ்டோர் மூலம் பதிவிறக்கிக் கொள்ளலாம் என சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது. அஜீத்துடன் அர்ஜூன், த்ரிஷா, லட்சுமிராய் உள்பட பலரும் நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

எது நடக்கக் கூடாது என்று உலகம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததோ...?

எது நடக்கக் கூடாது என்று உலகம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததோ அது கடந்த சனிக்கிழமை நடந்தேவிட்டது. அமெரிக்காவின் கடன் தர வரிசையை (credit rating) உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டான்டர்ட் அண்ட் புவர் குறைத்துவிட்டது. கிட்டத்தட்ட கடந்த 70 ஆண்டுகளாக அமெரி்க்காவின கடன் தர வரிசை 'AAA' என்ற அதி உயர் தரத்தில் இருந்தது. அதாவது, கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவது, வாங்கிய கடனுக்கு மிகச் சிறந்த வட்டியைத் தருவது, கடனை மிகச் சரியான திட்டங்களுக்கு பயன்படுத்துவது என அமெரிக்கா எல்லா விதத்திலும் AAA என்ற அதி உச்ச நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இதனால் உலக நாடுகளும், சர்வதேச வங்கிகளும், சர்வதேச நிதி அமைப்புகளும், பெரும் நிறுவனங்களும் தங்களது பணத்தை அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்வதையே மிகவும் பாதுகாப்பானதாகக் கருதி பணத்தை முதலீடு செய்து வந்தனர். குறிப்பாக சீனா போன்ற நாடுகள், கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர்கள் வரை அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன.

ஆனால், கடந்த ஒரு மாதமாகவே அமெரிக்கா புதிய நெருக்கடியில் சிக்கியது. அதாவது அந்த நாடு எவ்வளவு கடன் வாங்கலாம் என அந் நாட்டு நாடாளுமன்றம் நிர்ணயித்த அளவை, எதிர்பார்த்ததை விட வேகமாகவே தொட்டுவிட்டது. அமெரிக்காவின் கடன் சுமை 14.3 டிரில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது அமெரிக்காவின் மொத்த உற்பத்தியில் (GDP) 95 சதவீதம். ஆனால், இந்த அளவை கடந்த 2ம் தேதியே அமெரிக்கா தொட்டுவிட்டது.

இதனால் கடன் அளவை உடனடியாக உயர்த்தி நி்ர்ணயிக்க வேண்டிய நிலைக்கு அதிபர் பராக் ஒபாமா தள்ளப்பட்டார். ஆனால், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் (House of representatives) எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சிக்கே பெரும்பான்மை இருந்ததால், அங்கு அதற்கான தீர்மானத்தை ஒபாவால் நிறைவேற்ற முடியவில்லை.

இது தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமானால், அரசு தனது பொருளாதார ஊக்குவிப்பு செலவுகளைக் குறைக்க வேண்டும் என குடியரசுக் கட்சியினர் நிபந்தனை விதி்க்க, அதை ஏற்றால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால், ஒபாமா அதை ஏற்க மறுக்க, அமெரிக்கா இன்னொரு மாபெரும் நிதிச் சிக்கலை நோக்கி சென்றது.

2ம் தேதிக்குள் கடன் அளவை உயர்த்தாவிட்டால், எந்த அமைப்பிடமிருந்தும் அமெரிக்காவால் நிதி திரட்ட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது, மருத்துவமனைகளுக்கு மருந்து கூட வாங்க முடியாது என்ற நிலை உருவானது.

இந்த விஷயத்தை நான் முந்தைய கட்டுரையில் விவரித்திருந்தேன். (உலகை மிரட்டிய அமெரிக்காவின் கடன் பிரச்சனை...!)  ஒருவழியாக ஆகஸ்ட் 1ம் தேதி குடியரசுக் கட்சியினர் விட்டுக் கொடுக்க அமெரிக்கா தனது கடன் வாங்கும் அளவை மேலும் 2.5 டிரில்லியன் வரை உயர்த்தியது. இதையடுத்து இந்த மாதம் அரசு ஊழியர்களுக்கும், ராணுவத்தினருக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம் போட முடிந்தது அமெரிக்க அரசால். சம்பளம் தான் போட்டாச்சே.. பிரச்சனை தான் தீர்ந்துவிட்டதே.. என்று நினைத்துவிடாதீர்கள். இங்கு தான் சிக்கலே ஆரம்பித்தது.

உலகப் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் ஒரு வல்லரசு நாடு, தனது செலவுத் திட்டங்களையும் கடன் திட்டங்களையும் கூட முறைப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதை சர்வதேச நிதி அமைப்புகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.

மேலும் ஒருவேளை குடியரசுக் கட்சியினர் விட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால்.. கடந்த 3ம் தேதி முதல் அமெரிக்கா, பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டியிருக்கும். அதாவது அந்த நாட்டில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை அங்கிருந்து எடுக்க ஆரம்பித்திருப்பர். அது நடந்திருந்தால், அமெரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீர்குலைந்திருக்கும்.

ஆக, அமெரிக்கா உண்மையிலேயே AAA தரம் கொண்ட ஒரு நாடு தானா என்ற கேள்விகளை சர்வதேச நிதி அமைப்புகள் கிளப்பின. இதில், ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் நிதி அமைப்பு கொஞ்சம் முந்திக் கொண்டு, அமெரிக்காவின் தரத்தை AAAவில் இருந்து AA என்ற நிலைக்கு தரம் குறைத்துவிட்டது.

அதாவது, நாம் ஒரு 'பர்சனல் லோனுக்கு' அப்ளை செய்தால், நமது வருமானம், நமது கடன்கள், நமது மாத செலவுகள், கடனை திருப்பிச் செலுத்தும் பலம் ஆகிய பல விஷயங்களை பார்த்துவிட்டே நமக்கு வங்கிகள் கடன் தருகின்றன. இதில் ஏதாவது ஒன்றில் பிரச்சனை இருந்தாலும் கடனைத் தருவதில்லை அல்லது கேட்ட அளவுக்கு கடனைத் தராமல், கேட்டதில் பாதியைத் தருகி்ன்றன.

கிட்டத்தட்ட இதே நிலைமைக்குப் போய்விட்டது அமெரிக்கா. AAA என்பது, அமெரிக்கா கேட்காமலேயே வங்கிகளும் நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஓடிப் போய் பணத்தை அந்த நாட்டில் முதலீடு செய்யும் நிலைமை. AA என்பது அமெரி்க்காவே கெஞ்சிக் கேட்டாலும்.. யோசித்துவிட்டு, ஆராய்ந்து பார்த்துவிட்டு தருகிறோம் என்று கூறும் நிலைமை. ''எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்'' என்பது தான் இதற்கான லோக்கல் விளக்கம்.

அமெரிக்காவின் பொருளாதார நிலைமையை இந்த தர வரிசை இறக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டதையடுத்து, உலக நாடுகள் முழுவதுமே முதுகுத்தண்டில் 'ஜில்' என்ற ஒரு பயம் பரவிவிட்டது. இரு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது ஏற்பட்ட கஷ்டங்களை உலகம் இன்னும் மறக்கவில்லை. பல நாடுகளும் நிறுவனங்களும் இன்னும் அந்த வீழ்ச்சியின் தாக்கத்திலிருந்தே மீளவில்லை. இந் நிலையில் மீண்டும் ஒரு பொருளாதாரத் தேக்கமோ அல்லது பொருளாதார சறுக்கலோ ஏற்பட்டால்.. என்ன செய்வது என்ற பயம் உலகம் முழுவதுமே பரவியுள்ளது.

இந்த பயத்துக்கு எண்ணெய் ஊற்றும் வகையில், சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் பெரும் சறுக்கல்கள் ஆரம்பித்துவிட்டன. இந்திய பங்குச் சந்தைகளான மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் கடந்த வெள்ளிக்கிழமை பெரும் சறுக்கு சறுக்கின. இன்றும் வர்த்தகம் ஆரம்பித்தவுடன் 'ரத்தக் களறி' தொடர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் கிட்டத்தட்ட 500 புள்ளிகள் சறுக்கிவிட்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிப்டி 130 புள்ளிகள் சறுக்கி, ஒரு வருடத்துக்கு முன் இருந்த நிலைமைக்குப் போய்விட்டது.

தங்களது வருமானத்துக்கு அமெரிக்கா, ஐரோப்பாவை சார்ந்திருக்கும் சாப்ட்வேர் நிறுவனங்களின் பங்குகள் தான் பெரும் அடி வாங்கியுள்ளன. அதே போல நிதி சிக்கலால், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படலாம் என்பதால் இரும்பு நிறுவனங்களின் பங்குகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இதனால் லட்சுமி மிட்டல்கள், அம்பானிகள், டாடாக்கள், ஆசிம் பிரேம்ஜிகளுக்கு இரண்டே நாளில் பல பில்லியன் டாலர்கள் இழப்பு என்றால், 'கடன ஒடன' வாங்கி முதலீடு செய்த சிறிய முதலீட்டாளர்களுக்கும் ஏராளமான இழப்பு.

இந்த இழப்புகள் தனி நபர்கள், நிறுவனங்களோடு நின்றுவிடுவதில்லை. இவற்றின் தாக்கம் தேசத்தின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் மீதும் இருக்கும் என்பதால், அடுத்தது என்ன நடக்குமோ என வானத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்துள்ளனர் நிதியமைச்சக அதிகாரிகள்.

இதே நிலைமை தான் உலகம் எங்கும்.. ஐரோப்பாவிலும் நிலைமை சரியில்லை. கிரீஸ், போர்சுகல் ஆகிய நாடுகள் கடனில் மூழ்கிக் கிடக்க, அவற்றை மீட்க ஐரோப்பிய மத்திய வங்கி உலகம் முழுவதும் நிதி திரட்டிக் கொண்டுள்ளது. தனது கஷ்டத்துக்கு இடையிலும் அமெரிக்கா 100 பில்லியன் டாலர்களை தந்துள்ளது. இந்தியாவும் 2 பில்லியன் டாலர்களைத் தர உள்ளது. இப்படி எல்லா பக்கமும் நிலைமை சரியில்லாததால், அடுத்து என்ன நடக்கப் போகிறதோ இல்லையோ.. தங்கத்தின் விலை மட்டும் நிச்சயம் பல மடங்கு உயரப் போகிறது.

இதுவரை அமெரிக்கப் பங்குகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் முதலீடு செய்து வைத்திருந்த நிறுவனங்கள், இந்த நாடுகளில் நிலவும் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, அதை வேறு பாதுகாப்பான 'இடங்களுக்கு' திருப்பலாம். அந்த பாதுகாப்பான இடங்களில் மிக முக்கியமான இடம் தங்கம் தான் என்கிறார்கள். இதனால் உலகம் முழுவதுமே தங்கத்தின் விலை தாறுமாறாக உயரப் போகிறது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

அமெரிக்கா அதிகளவில் கடன் வாங்கியது இப்போது தான் வெளி உலகுக்குத் தெரியுமா.. இத்தனை நாட்களாக விட்டுவிட்டு இப்போது ஏன் திடீரென அதை AAAவிலிருந்து AA என்று தரம் குறைத்தார்கள் என்று நீங்கள் கேட்கலாம்.

இப்போது, அமெரிக்காவின் கடன் வாங்கும் தரத்தைக் குறைக்கக் காரணமாக இருந்தது அதன் பொருளாதார நிலைமை மட்டும் அல்ல. அந் நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தான் முக்கியக் காரணம் என்கிறார்கள். கடன் வாங்கும் அளவை கடைசி நாள் வரை உயர்த்த முடியாமல் நாடாளுமன்றத்தில் ஒபாமா பட்ட பாட்டை வைத்துத் தான், அந் நாட்டின் தரத்தை ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் குறைத்துவிட்டது என்கிறார்கள்.

இது அமெரிக்காவுக்கு ஏற்பட்ட சரிவு என்பதை விட தனிப்பட்ட முறையில் ஒபாமாவுக்கு விழுந்த அடி தான். ஆனால், அந்த வலியை அனுபவிக்கப் போவது ஒட்டு மொத்த உலகமும் தான். இந்த விவகாரம் போதாது என்று அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனைக் கொன்ற படையினரை ஆப்கானிஸ்தானில் நடந்த சண்டையில் ஒட்டுமொத்தமாக பலி கொடுத்துவிட்டு நிற்கிறது அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவு. அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தி 31 சீல் படையினரை கொன்றுள்ளனர் தலிபான்கள்.

இந் நிலையில், அமெரிக்கா தனது 'பொருளாதார ஒழுக்கத்தை' சரி செய்து கொள்ளாவிட்டால், அதன் தரத்தை மேலும் குறைப்போம் என்று அறிவித்துள்ளது ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்.. ஒபாமாவுக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது... உலகத்துக்கும் தான்.!உலகை மிரட்டிய அமெரிக்காவின் கடன் பிரச்சனை...!

இதே நாள்...




  • ஸ்வீடன் கொடிநாள்
  •  தைவான் தந்தையர் தினம்
  •  தான்சானியா விவசாயிகள் தினம்
  •  ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது(1967)
  •  வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது(1942)
  • சோனியா காந்திக்கு கருப்பை வாய் புற்றுநோய்!

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கருப்பை வாய் புற்றுநோய் வந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடக்க நிலையில் இது இருப்பதாகவும், இதற்காகவே அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    சோனியா காந்தி தற்போது நியூயார்க்கில் உள்ள கேட்டரிங் புற்றுநோய் மையம் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரபல பெண்கள் புற்றுநோய் அறுவைச்சிகிச்சை நிபுணரான, இந்திய அமெரிக்கரான டாக்டர் தத்தாத்ரேயலு நோரி தலைமையிலான குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளதாகவும், தற்போது அவர் தனி வார்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் சோனியாவுக்கு என்ன நோய் என்பது இதுவரை தெரிவிக்கப்படாமல் உள்ளது. இது சோனியா காந்தியின் தனிப்பட்ட விவரம் என்பதால் அதுகுறித்து மருத்துவமனை சார்பிலும் சரி, காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் சரி, சோனியா குடும்பத்தினர் சார்பிலும் சரி எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

    ஆனால் சோனியா காந்திக்கு வந்திருப்பது கருப்பை வாய் புற்றுநோய் என்று தகவல்கள் கூறுகின்றன. இதற்குத்தான் அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்திருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியாவுக்கு நடந்த அறுவைச் சிகிச்சை ஒரு மணி நேரம் நடந்ததாகவும், அவர் ஒரு மாத காலத்திற்கு மருத்துவமனையில் தங்கியிருக்க நேரிடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

    இந்த அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து அடுத்து சோனியாவுக்கு ரேடியேஷன் தெரப்பி அளிக்கப்படவுள்ளது. அவருடைய கருப்பை வாயில் புற்றுநோயின் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறியும் சிஸ்டோகிராபி ரிப்போர்ட் கிடைத்ததும் அதன் அடிப்படையில் ரேடியேஷன் தெரப்பி தரப்படும் என்று தெரிகிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலக அளவில் புற்றுநோய் சிகிச்சையில் நீண்ட நெடுங்காலமாக ஈடுபட்டிருப்பது இந்த கேட்டரிங் புற்றுநோய் மையம் ஆகும். உலகிலேயே மிகவும் பழமையான புற்று நோய் மருத்துவமனையும் ஆகும். மேலும் டாக்டர் நோரி, உலகிலேயே மிகச் சிறந்த பெண்கள் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை மற்றும் சிகிச்சை நிபுணர் என்று பாராட்டப்படுபவர் ஆவார்.

    சோனியாவுக்கு டாக்டர் நோரி மூலம் அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை, மூத்த ஐஏஎஸ் அதிகாரி புலோக் சாட்டர்ஜிதான் செய்து கொடுத்தார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இவர் தற்போது அமெரிக்காவில் உலக வங்கியின் செயல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். விரைவில் இவர் பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளராக பணியாற்றவுள்ளார். சோனியா காந்தியின் மிகத் தீவிரமான விசுவாசி சாட்டர்ஜி என்று கூறப்படுகிறது.

    தற்போது சோனியாவுடன் ராகுல் காந்தியும், பிரியங்காவும் தங்கியுள்ளனர். கூடவே பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவும் இருக்கிறார்.

    விஜயகாந்த்தின் தேர்தல் வாக்குறுதியை 'சுட்ட' தமிழக அரசு!

    தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்களை வீடு வீடாக வினியோகம் செய்திட அரசு ஆலோசித்து வருகிறது. இது தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது முதல் சட்டசபைத் தேர்தலின்போது மக்களுக்குக் கொடுத்த முக்கியமான வாக்குறுதியாகும்.

    தேமுதிகவை ஆரம்பித்த பின்னர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சி தேர்தலைச் சந்தித்தபோது விஜயகாந்த் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தார். அதில் ஒன்று வீடு வீடாக ரேஷன் பொருட்களை மக்களுக்கு நேரடியாக விநியோகிப்போம் என்பதாகும். அந்த வாக்குறுதியைத்தான் தற்போது அதிமுக அரசு பரிசீலிக்க ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் தற்போதைய மக்கள் தொகை 7 கோடியே 80 லட்சம். இதில் சுமார் 1கோடியே 10 லட்சம் பேர் ரேஷன் கார்டுகள் வைத்துள்ளனர். ரேஷன் கார்டுகள் வைத்துள்ளவர்களுக்கு 32 மாவட்டங்களில் உள்ள 36 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் அரிசி, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கும்போது எடை குறைப்பு ஏற்படும் நிலையில் பொதுமக்களுக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

    மேலும் மாதம் முழுவதும் பொதுமக்களுக்கு அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும் என அரசு உத்தரவு இருந்தாலும் பெரும்பாலான கடைகளில் மாதக்கடைசியில் பொருட்கள் வாங்கச் செல்பவர்களுக்கு சீனி, மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகள் கிடைப்பதில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் இடைத்தரகர்கள், புரோக்கர்கள் அப்பொருட்களை வாங்தி கள்ள மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரிகளிடம் புதிய தி்ட்டம் தீட்டுமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து ரேஷன் கடைகளில் உள்ள அனைத்து பொருட்களையும் வீடு, வீடாகச் சென்று வினியோகிக்க நடமாடும் வேன்கள் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

    ராகுல் காந்தி பிரதமராக மக்களிடம் ஆதரவு அதிகரிப்பு!

    நேருவின் கொள்ளுப் பேரனும், இந்திரா காந்தியின் பேரனும், ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி அடுத்த பிரதமராக மக்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளதாக சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி நடத்தியக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக அந்த தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

    காங்கிரஸ் தலைவர்களிலேயே ராகுல் காந்திக்குத்தான் அதிகபட்சமாக 42 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதாம். நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளதாக கூறினார் முன்னணி கருத்துக் கணிப்பாளரும், டெல்லியைச் சேர்ந்த சிஎஸ்டிஎஸ் அமைப்பைச் சேர்ந்தவருமான யோகேந்திர யாதவ்.

    கடந்த மாதம் இந்தக் கருத்துக் கணிப்பை சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிக்காக யாதவின் நிறுவனம் நடத்தியது. மொத்தம் 19 மாநிலங்களில், 39 ஆயிரம் பேரிடம் கருத்துக் கேட்டு அதன் முடிவுகளை இவர்கள் வெளியிட்டுள்ளனர்.

    மன்மோகன் சிங்கை நீக்கினால் அவருக்குப் பதில் யாரை பிரதமராக நியமிக்கலாம் என்ற கேள்விக்கு 42 சதவீதம் பேர் ராகுல் என்று கூறியுள்ளனர்.
    அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு 19 சதவீதம் பேர் ராகுல் பெயரை கூறியுள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு 6 சதவீதமாக இருந்த ஆதரவு தற்போது 19 சதவீதமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது.

    அடுத்த இடத்தை மன்மோகன் சிங்கும், சோனியாவும் தலா 10 சதவீத ஆதரவுடன் பகிர்ந்து கொள்கின்றனர். ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு தலா 7 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. சோனியா காந்தி பிரதமராக வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே இல்லை என்றும் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

    ராகுலுக்குப் போட்டியாக ஒரு காங்கிரஸ் தலைவரும் இல்லை என்றும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. 34 சதவீதம் பேர் மன்மோகன் சிங்கை நீக்கி விட்டு ராகுலை பிரதமராக்க வேண்டும் என்று கூறியுள்ளனராம். செயல்படாத பிரதமர் என்ற 'நற்பெயரை' மன்மோகன் பெற்றுள்ளதால் இவ்வளவு அதிக அளவிலான அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.
    மன்மோகன் சிங் பிரதமராக நீடிக்க வேண்டும் என்று 22 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனராம்.

    காங்கிரஸ் தரப்பில் 33 சதவீதம் பேரும், கூட்டணிக் கட்சிகளில் 25 சதவீதம் பேரும் மன்மோகன் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 54 சதவீதம் பேர் ராகுல் காந்தி நம்பகத்தன்மை வாய்ந்தவர் என்றும், ஏழைகள் மீது உண்மையான அக்கறை கொண்டவர் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். மன்மோகன்சிங்கின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு 56 சதவீதம் பேர் திருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால் இது கடந்த 2009ல் 70 சதவீதமாக இருந்தது. தற்போது அது வெகுவாக குறைந்துள்ளது.

    பிரமதர் நல்லவர், ஊழலைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் என்று 27 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர் ஊழலை ஒழிக்க ஒன்றும் செய்யவில்லை என்று 31 சதவீதம் பேர் கூறியுள்ளனர். மன்மோகன் சிங் மீது அதிருப்தியுடன் இருப்பதாக 24 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இது கடந்த 2007ல் 16 சதவீதமாகவும், 2009ல் 17 சதவீதமாகவும் இருந்தது.

    பாஜகவுக்கு செல்வாக்கே இல்லை: பாஜகவைப் பொறுத்தவரை மக்கள் மனதில் அக்கட்சிக்கு நல்ல இடம் இல்லை என்பதை இந்தக் கருத்துக் கணிப்பு தெளிவாக்கியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு அத்வானிக்கு 15 சதவீத ஆதரவாவது இருந்தது. இப்போது அது வெறும் 4 சதவீதமாக குறைந்து போய் விட்டது.

    பிரதமர் பதவிக்கு பாஜகவில் யார் தகுதியானவர்கள் என்ற கேள்விக்கு நரேந்திர மோடி என்று கடந்த 2009ல் 2 சதவீதம் பேர் கூறியிருந்தனர். ஆனால் அது தற்போது 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    2014ல் லோக்சபா தேர்தலை யார் தலைமையில் பாஜக சந்திக்கலாம் என்ற கேள்விக்கு நரேந்திர மோடி என்று 19 சதவீதம் பேர் கூறியுள்ளனர். மேலும் பாஜக தொண்டர்கள் மத்தியிலும் மோடிக்கே அதிக ஆதரவு காணப்படுகிறது. கிட்டத்தட்ட 33 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சுஷ்மா சுவராஜுக்கு 15 சதவீதம் பேரும், ராஜ் நாத் சிங்குக்கு 7 சதவீதம் பேரும், அருண் ஜேட்லிக்கு 4 சதவீதம் ஆதரவும் கிடைத்துள்ளது.

    ஏன் இந்த திடீர் கருத்துக் கணிப்பு? அமெரிக்காவுக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக சோனியா காந்தி சென்று அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. திரும்பி வர ஒரு மாதமாகும் என்று கூறப்படுகிறது. இதையொட்டி கடந்த வாரம் அவர் ராகுல் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தார். அக்குழுவே காங்கிரஸ் நிர்வாகத்தைக் கவனிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் குழுவில் மூத்தவர்களான பிரணாப் முகர்ஜியோ, மன்மோகன் சிங்கோ இடம்பெறவில்லை. இது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் முனுமுனுப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று கூறி ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஈழப்பிரச்சினை: ஆக.12-ல் தில்லியில் ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்!

    ஈழப் பிரச்னை தொடர்பாக தில்லியில் இந்திய நாடாளுமன்றத்துக்கு அருகே ஆகஸ்ட் 12-ம் தேதி மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:


    இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ள சிங்கள இராணுவத்தையும், போலீசையும் உடனடியாக அகற்றவும், சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதோடு, அக்கிரமமாகக் குடியேறியவர்களை வெளியேற்றவும், இந்திய அரசும், உலக நாடுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் மட்டுமே தீர்வாக முடியும்.



    எனவே அதற்கான பொது வாக்கெடுப்பை அனைத்து உலகப் பார்வையாளர்கள் கண்காணிப்பில் நடத்துவதற்கும், அந்த வாக்கெடுப்பில் உலகின் பல நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அந்தந்த நாடுகளிலேயே அந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவுமான நடவடிக்கைகளை ஐ.நா. மன்றம் முன்னெடுப்பதற்குமான கோரிக்கைகளை வலியுறுத்தவும்; இதற்கு இந்தியாவில் கட்சி, மாநில எல்லைகளைக் கடந்த ஆதரவைத் திரட்டவும், ஆகஸ்ட் 12 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில், நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள ஜந்தர் மந்தரில், என்னுடைய தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டத்தை மதிமுக நடத்த இருக்கின்றது. ஈழத்தமிழ் உணர்வாளர்களும் இந்த அறப்போரில் பங்கு ஏற்குமாறு அன்புடன் வேண்டுவதாக வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    ரிசப்ஷனிஸ்டாக வேலை செய்தேன்!' இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி!!

    உலகின் சக்தி மிகுந்த 100 பெண்களில், 4வது இடத்தில் உள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், பெப்சி முதன்மை நிர்வாக அலுவலர் மற்றும் தலைவருமான இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி: என் சொந்த ஊர் சென்னை. டிகிரி முடிச்சதும், படிப்பு இதோட முடியலன்னு தோணிச்சு. சேலஞ்சிங்கா ஏதாவது படிக்கலாம்னு நினைச்சேன். மாஸ்டர் டிகிரி பிசினஸ்ல பண்ணலாம்ன்னு அப்பாகிட்ட கேட்டேன். அப்பா என் படிப்புக்கு உறுதுணையாக இருந்தார். கோல்கட்டா ஐ.ஐ.எம்.,ல் எம்.பி.ஏ., அப்ளை பண்ணினேன். அந்த நேரத்தில் இந்தியாவிலேயே இரண்டு பிசினஸ் ஸ்கூல் தான் இருந்தது. எம்.பி.ஏ., முடிக்கறப்போ தான் உலகம் எவ்வளவு பெரிசுன்னு தெரிஞ்சுது. எம்.பி.ஏ., முடித்ததும், சிறிது காலம் ஏ.பி.பி., நிறுவனத்தில் பணியாற்றினேன்; பின், "ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸ்' நிறுவனத்தில், புராடக்ட் மேனேஜராக பணியில் சேர்ந்தேன். அங்கே வெற்றிகரமாக பணியாற்றினாலும், கார்ப்பரேட் உலகில் நிலவும் போட்டியை எதிர்கொள்ள வெறும் எம்.பி.ஏ., படிப்பு போதாது என்று முடிவு செய்து, "பப்ளிக் அண்ட் பிரைவேட் மேனேஜ்மென்ட்' படிப்பிற்காக அமெரிக்காவின், "யேல்' பல்கலைக் கழகத்தில் சேர்ந்தேன். படிக்கும் காலத்தில், படிப்பு செலவுக்காக, "பார்ட் டைம் ரிசப்ஷனிஸ்ட்' வேலை செய்தேன். படிப்பு முடிந்த பிறகு, பெப்சி நிறுவனத்தில், 1994ல் நுழைந்த போது, என் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. நான் மட்டும் ஒரு ஆணாக இருந்திருந்தால், இந்த இடத்தை அடைய என் உழைப்பில் பாதியை செலவிட்டிருந்தாலே போதும். பெண்ணாக இருந்ததால் இரு மடங்கு அதிகமாக உழைத்திருக்கிறேன். இந்த உழைப்புக்காக, இந்திய அரசு கடந்த 2007ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது.

    கேபிள் "டிவி'களை கட்டுப்படுத்த புதிய சட்டம்!

    கேபிள் ஆபரேட்டர் அலுவலகங்களில் ரெய்டு என்பது தான், அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வரும் தலைப்புச் செய்தி. கேபிள் "டிவி'கள் எப்படி இயங்குகின்றன? தவறு எங்கே நடக்கிறது? முதலாவதாக, கேபிள் "டிவி' என்பதே முழுக்க முழுக்க மத்திய அரசு சமாச்சாரம். மாநில அரசின் பங்களிப்பு எதுவும் கிடையாது. எல்லாமே, "இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்' எனப்படும், "டிராய்'ன் வழிநடத்துதலில் வருபவை. சேவை வரி தான் விதிக்கப்படுகிறது என்பதால், அதுவும் டில்லிக்கு போய்விடுகிறது. அடிப்படையில், கேபிள் தொழிலை மூன்று பிரிவாக பிரிக்கலாம். முதலாவது, எம்.எஸ்.ஓ.,க்கள் (மல்ட்டி சிஸ்டம் ஆபரேட்டர்). அடுத்தது, ஆபரேட்டர்கள். மூன்றாவது, உள்ளூர் சேனல்கள். இந்த மூன்றுமே, ஒரு பெட்டிக்கடை துவக்குவதை விட மிகச் சுலபம். அருகாமையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில், "போஸ்ட் மாஸ்டரை' பார்த்து, அதற்கென உள்ள விண்ணப்பத்தை (பாரம் 1) பூர்த்தி செய்து, வெறும் 500 ரூபாய் கட்டினால் போதும்; நீங்கள் எம்.எஸ்.ஓ.,வாகவோ, ஆபரேட்டராகவோ, உள்ளூர் சேனல் அதிபராகவோ அவதாரம் எடுத்துவிடலாம்.

    விண்ணப்பங்களை ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும், தலைமை தபால் அலுவலவருக்கு முழு அதிகாரம் உண்டு. முறையான பதிவு இன்றி, இந்த மூன்று பிரிவினருமே இயங்க முடியாது. நிராகரித்ததற்கான காரணத்தை, தலைமை தபால் அலுவலர், எழுத்து மூலம் தெரிவித்துவிடுவார் (பாரம் 4). பதிவு செய்யப்பட்டால், அதற்குரிய சான்றிதழ் (பாரம் 3) வழங்கப்படும். இந்தப் பதிவு, அடுத்த 12 மாதங்களுக்கு மட்டுமே செல்லும். ஒவ்வொரு ஆண்டும் கேபிள் மும்மூர்த்திகள், இப்பதிவுகளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
    மத்திய அரசால் இயற்றப்பட்ட, "கேபிள் டிவி ஒழுங்குமுறைச் சட்டம் 1995' இந்த மூன்று பிரிவினரையும் கட்டுப்படுத்துகிறது. செயற்கைக்கோள் சேனல்களுக்கு உள்ள ஒளிபரப்பு விதிமுறை, விளம்பர கட்டுப்பாடுகள் (முறையான அனுமதி, ஆபாசம், வன்முறை, தேசவிரோதம் உள்ளிட்டவை) உள்ளூர் சேனல்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு உள்ளூர் சேனல் நிறுவனமும், தங்கள் சேனலில் என்ன நிகழ்ச்சி, எத்தனை மணிக்கு, எவ்வளவு நேரம், யாரால் வழங்கப்பட்டது என்பது உள்ளிட்ட அத்தனை விவரங்களையும், ஒரு பதிவேட்டில் (பாரம் 5) குறித்து வைக்க வேண்டியது அவசியம். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஓராண்டு வரை, அந்த பதிவேடு பாதுகாக்கப்பட வேண்டும்.

    கேபிள் ஆபரேட்டர்களைப் பொறுத்தவரை, எம்.எஸ்.ஓ.,க்கள் கொடுக்கும் அத்தனை சேனல்களையும் ஒளிபரப்பிக் கொள்ளலாம். குறைந்தபட்சம், ஏதேனும் இரண்டு தூர்தர்ஷன் சேனல்களையாவது ஒளிபரப்பியே ஆகவேண்டும். கேபிள் ஆபரேட்டர்களின் எந்த செயல்பாடும், இயக்கமும், அதிகாரப்பூர்வ தொலைத் தொடர்பு அமைப்புகளில் குறுக்கிடக் கூடாது. மேற்சொன்ன விதிமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால், ஒளிபரப்புக்குரிய பொருட்களையும், சாதனங்களையும் பறிமுதல் செய்ய முடியும். அதற்கான அதிகாரம், மத்திய அரசின், "ஏ' பிரிவு அதிகாரிகளுக்கு மட்டும் தான் இருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்களை, பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாரியே வைத்திருப்பதானால், சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதியிடம் அனுமதி வாங்க வேண்டும்.

    பறிமுதல் செய்வதற்கு முன், அதற்கான காரணத்தை கேபிள் ஆபரேட்டருக்கு விளக்க வேண்டும். ஏன் பறிமுதல் செய்யக் கூடாது என்பதற்கான பதிலை அளிக்க அவருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். இருதரப்புக்கும் இடையில் தகராறு என்றால், நீதிமன்ற கதவுகளைத் தட்ட வேண்டியது தான்.
    "கேபிள் டிவி ஒழுங்குமுறைச் சட்டம் 1995'ஐ மீறி எம்.எஸ்.ஓ.,வோ, ஆபரேட்டரோ, உள்ளூர் சேனலோ செயல்பட்டால், முதல் முறை குற்றத்துக்கு இரண்டாண்டு வரை சிறை தண்டனையோ, ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ வழங்கப்படலாம். தொடர்ந்து விதி மீறுவதையே தொழிலாகக் கொண்டால், ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையோ, 5,000 ரூபாய் அபராதமோ விதிக்கப்படலாம். இது தான் கேபிள் தொழிலைப் பற்றிய சட்டத்தின் பார்வை.

    கேபிள் "டிவி'யின் கதை : அந்தக் காலத்தில், "டிவி' என்றாலே தூர்தர்ஷன் மட்டும் தான். வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பப்படும், "ஒளியும் ஒலியும்' (சினிமா பாடல்கள் நிகழ்ச்சி) பார்ப்பதற்கு, பெரிய அடிதடியே நடக்கும். சனிக்கிழமைகளில், மாநில மொழிப் படங்களும், ஞாயிறு மாலைப் பொழுதுகளில் தமிழ்ப் படமும் ஒளிபரப்பினர். அது ஒரு வசந்த காலம். இருபது ஆண்டுகளுக்கு முன், செயற்கைக்கோள் சேனல்கள் அறிமுகமாகின. அவற்றிடமிருந்து, "டிஷ்' மூலம், சிக்னல்களைப் பெற்று, தத்தம் சத்துக்கு ஏற்றவாறு, கேபிள் இணைப்பு வழியாக, வீடுகளுக்கு வழங்கிக் கொண்டிருந்தனர். இந்த கேபிள் ஆபரேட்டர் பணியை, பெரும்பாலும் வேலையில்லா பட்டதாரிகள் தான் மேற்கொண்டனர். சேனல்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, ஒவ்வொரு சேனலுக்கும் ஒரு, "டிஷ்' வைக்க வேண்டியதாயிற்று. கட்டமைப்புப் பணிகளுக்கான செலவும் அதிகரித்தது. இதற்கிடையில், அதுவரை "ஓசி'யில் ஒளிபரப்பிக் கொண்டிருந்த அத்தனை சேனல்களும், தங்களை கட்டணச் சேனல்களாக அறிவித்தன. அவற்றிடமிருந்து பணம் கட்டி சிக்னல் வாங்குவது, சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்த கேபிள் ஆபரேட்டர்களுக்கு இயலாத காரியமாக இருந்தது. அப்போது பிறந்தது தான் எம்.எஸ்.ஓ., அமைப்பு. இவர்கள், இரண்டு மூன்று மாவட்டங்களுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், கேபிள் ஆபரேட்டர்களாக இருந்தவர்கள். எனவே, அந்தத் தொழிலையும் தொடர்ந்தனர். எம்.எஸ்.ஓ.,க்களின் வேலை, செயற்கைக்கோள் சேனல்களிடம் பணம் கட்டி, அவற்றை வாங்கி, கேபிள் ஆபரேட்டர்களுக்கு வினியோகிப்பது. சேனல்களுக்கு, எம்.எஸ்.ஓ.,க்கள் எவ்வளவு தர வேண்டும் என்ற கட்டணத்தை, "டிராய்' தான் நிர்ணயிக்கிறது. எம்.எஸ்.ஓ.,க்களிடமிருந்து, "சிக்னல்' பெறும் கேபிள் ஆபரேட்டர்கள், தங்கள் வசமுள்ள ஒவ்வொரு இணைப்புக்கும் 70 முதல் 80 ரூபாய் வரை கட்டணமாக, எம்.எஸ்.ஓ.,க்களுக்கு கொடுப்பர். எவருமே உண்மையான இணைப்பு எண்ணிக்கையைச் சொல்ல மாட்டர் என்பது சிறப்பம்சம்.

    அவசரச் சட்டம் அவசியம் : உள்ளூர் சேனல்களை, பெரும்பாலும் கேபிள் ஆபரேட்டர்களும், எம்.எஸ்.ஓ.,க்களும் தான் இயக்கி வருகின்றனர். சில இடங்களில், எம்.எஸ்.ஓ.,க்களுக்கு பணம் கட்டி, வேலையில்லா பட்டதாரிகள், தொழில் சுகம் கண்டவர்கள், தனிப்பட்ட முறையில் நடத்துவதும் உண்டு. இவ்வாறு தமிழகம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட சேனல்கள் இருக்கும் என கருதப்படுகிறது.

    இவர்கள், சினிமா, பாடல்கள், நகைச்சுவை காட்சி உள்ளிட்டவற்றை ஒளிபரப்புகின்றனர். சில முன்னேறிய உள்ளூர் சேனல்கள், நேயர் விருப்பம், தொலைபேசி உரையாடல் போன்ற நிகழ்ச்சிகளை, நேரலையாகவே ஒளிபரப்பவும் செய்கின்றனர். இவர்களில் யாருக்கும், சினிமா காட்சிகளை ஒளிபரப்புவதற்கான உரிமை கிடையாது. ஆனால், அத்தகைய உரிமைகளை வைத்துள்ள செயற்கைக்கோள் சேனல்களிடம் இருந்து, உள்குத்தகைக்கு வாங்கி, அவற்றை ஒளிபரப்புவர். இதற்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை அவர்கள், தனி கட்டணமாக செலுத்த வேண்டும். இப்படி ஒரு சேனல் நடத்துவதற்கு, தபால் அலுவலகச் சான்றிதழ் தவிர வேறு எந்த அனுமதியும் தேவையில்லை என்பது மிகப் பெரிய சோகம். உள்ளூர் சேனல்களில், செய்தி ஒளிபரப்புவதற்கு அனுமதி இல்லை என்பது அடுத்த விஷயம். அவர்கள் வாங்கும் விளம்பரங்களுக்கு முறையாக கணக்கு காட்டுவதில்லை என்பது தனி கதை. இத்தனையும் மீறி, உள்ளூர் சேனல்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஒரு செயற்கைக்கோள் சேனல் துவங்க வேண்டும் என்றால், அதைத் தொடங்க விரும்புவர்களின் ஜாதகத்தையே கேட்கிறது மத்திய அரசு. மத்திய அரசின் ஐந்து துறைகள், இதற்கான அனுமதி வழங்குவதில் தொடர்புடையதாக இருக்கின்றன.

    அவ்வளவு ஏன்? எப்.எம்., ரேடியோக்களில் செய்தி ஒலிபரப்புவதற்கு கூட, ஆயிரத்தெட்டு நடைமுறைகள் இருக்கின்றன. ஆனால், எந்தச் சம்பிரதாயமும் இல்லாமல், சாதாரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன உள்ளூர் சேனல்கள். இவர்கள் செய்தி ஒளிபரப்பும்போது, அதில், தங்கள் எண்ணத்தைத் திணிக்கும் வாய்ப்பும், ஒரு சாராருக்கு சாதகமாக செயல்படும் வாய்ப்பும் அதிகம். கலவர சமயங்களில், இரண்டு வார்த்தை தப்பாக ஒளிபரப்பிவிட்டால், பிரச்னை பற்றி எரிவதற்கு, அதுவே காரணமாகிவிட முடியும். ஆனால், இதை எல்லாம் கண்காணிக்க எந்த அமைப்புமே இல்லை என்பது தான் அதிர்ச்சிக்குரிய உண்மை. பத்திரிகைகளை வழிநடத்த, "பிரஸ் கவுன்சில்' இருக்கிறது. ஆனால், உள்ளூர் கேபிள் சேனல்களை வழிநடத்த, கவுன்சிலர்கள் கூட இல்லை.
    இதைக் கட்டுப்படுத்த, மாநில அரசின் தலையீடு, அவசர அவசியமாக இருக்கிறது. மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில், மாநில அரசின் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில், உள்ளூர் கேபிள் சேனல்களை நெறிப்படுத்த, ஒரு சட்டம் அவசியம்.

    அதிகளவில் தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில்!

     உலகளவில் அதிகளவில் தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் சீனா 6வது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை சீனாவில் உள்ள தங்கத்தின் அளவு 1051.1 டன் ஆகும். உலக தங்க கழக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் உள்ள மொத்த தங்கத்தில் எட்டில் ஒரு பங்கு ஆகும். இப்பட்டியலில் 8133.5 டன் தங்கத்துடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 3406.8 டன் தங்கத்துடன் ஜெர்மனி 2வது இடத்திலும், 3005.3 டன் தங்கத்துடன் இத்தாலி 3வது இடத்திலும், 2435.4 டன் தங்கத்துடன் பிரான்ஸ் 5வது இடத்திலும் உள்ளது. 

    வானம் ஸ்டைலில் ஒஸ்தி...!

    வானம்" படத்தின் இசை வெளியீட்டு முன்பாக "எவன்டி உன்ன பெத்தான்...." என்ற ஒரு பாடல் மட்டும் ரிலீசானது போல், "ஒஸ்தி"யிலும் ஒரே ஒரு பாடல் மட்டும் ரிலீசாக இருக்கிறது. சமீபகாலமாக  வெளிவரும் படங்களை பிரபலப்படுத்த பல்வேறு வகையான உத்திகளை கடைப்பிடித்து வருகின்றனர் திரைத்துறையினர். அந்த வகையில், படத்தின் ஆடியோ ரிலீசுக்கு முன்பாக, அந்த படத்தில் இருந்து ஒரே ஒரு பாடலை மட்டும் ரிலீஸ் செய்வது ஃபேஷன் ஆகி வருகிறது. இந்த கலாச்சாரத்தை தொடங்கி வைத்தது சிம்பு தான். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான் "வானம்" படத்தில் "எவன்டி உன்ன பெத்தான்...." என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் ரிலீஸ் செய்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. "வானம்" படத்தை தொடர்ந்து அஜீத்தின் "மங்காத்தா" படத்திலும் "விளையாடு மங்காத்தா..." என்ற பாடல் மட்டும் வெளியானது. இதுவும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

    இந்நிலையில் சிம்பு தற்போது நடித்து வரும் தபாங் படத்தின் ரீ-மேக்கான, "ஒஸ்தி" படத்தில் இருந்து, ஒரு பாட்டை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதுகுறித்து படத்தின் இசையமைப்பாளர் தமன் கூறியதாவது, ஒஸ்தி படத்தில், சிம்பு இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். இதில் ஒரு பாடல், சிம்பு மட்டும் பாடியிருக்கிறார், மற்றொன்று, ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார். தற்போது இந்த இரண்டு பாடல்களுக்கும் போஸ்ட் புரடக்ஷன் வேலை நடந்து வருகிறது. இந்தவாரம் அல்லது அடுத்தவாரம் ஒஸ்தி படத்தில் இருந்து ஒரே ஒரு பாடலை மட்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். "வானம்" படத்தை போல் "ஒஸ்தி" பட பாட்டும் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்றார்.

    கேம்பிரிட்ஜ் பல்கலையில் இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் வெளிநாட்டு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!


    கேம்பிரிட்ஜ் பல்கலையில் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம் தவிர்த்து ஏனைய இளநிலை பட்டப்படிப்பில் சேர தகுதி வாய்ந்த இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பங்களை http://www.cam.ac.uk/admissions/undergraduate/international/apply.html இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும். விண்ணபிக்க கடைசி நாள், தேர்வு செய்யப்படும் மாணவர்கள், டெல்லியில் செப்டம்பர் கடைசி வாரத்தில் நடக்கும் நேர்காணல் மற்றும் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் செப்டம்பர் 9ம் தேதியாகும். சிஓபிஏ மற்றும் யுசிஏஎஸ் சான்றிதழ்களையும் அன்றைய தினத்திற்குள் அளிக்க வேண்டும்.மேலும் தகவல்கள் அறிய இணையதளத்தைப் பார்க்கவும். இதில் தேர்வு செய்யப்பட்டு, கேம்பிரிட்ஜ் பல்கலையில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில், அந்த மாணவர் மன்மோகன் சிங் இளநிலை பட்டப்படிப்பிற்கான உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அது குறித்து மேலும் தகவல்கள் அறிய www.cambridge-india.org/studying/scholarships.html

    இதே நாள்...


  • ஸ்வீடன் கொடிநாள்
  •  தைவான் தந்தையர் தினம்
  •  தான்சானியா விவசாயிகள் தினம்
  •  ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது(1967)
  •  வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது(1942)
  • Top 10 Most dangerous animals in the world...


    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...