|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 June, 2011

குணமாக்கும் குப்பைமேனி!

மாற்று அடுக்கில் பல அளவுகளில் இலைகளைக் கொண்டது குப்பைமேனி. இலைக் காம்பின் பின் இடுக்குகளில் அமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி இனமாகும். செடியின் முழுப் பகுதியுமே மருத்துவக் குணம் உடையது. இலை வாந்தி உண்டாக்கி கோழையை அகற்றும். வேர், மலம் இளக்கப் பயன்படும். தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் தானாகவே வளர்கிறது.

வேறு பெயர்கள்: அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி.
ஆங்கிலத்தில்: Acalypha indica; linn; Euphor biaceae.

மருத்துவ குணங்கள்: குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.
குப்பைமேனி இலையை நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி நசியமிட தலைவலி நீங்கும்.

குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
குப்பைமேனியை அப்படியே வேருடன் பிடுங்கி சுத்தம் செய்து நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகைப் பொடியை நெய்விட்டு கலந்து 2 வேளை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர பவுத்திரம் குணமாகும். மற்ற மருத்துவ முறையினால் கைவிடப்பட்ட பவுத்திரத்துக்கு மட்டும் ஒரு வாரம் 2 வேளை 50 மில்லியளவு அவுரியிலை குடிநீரைக் (ஒரு கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்ட வேண்டும்.) குடித்துவந்து அதன் பிறகு மேற்கண்ட மருந்தைத் தொடர்ந்து 90 நாள்கள் சாப்பிட்டுவர பவுத்திர நோய் குணமாகும்.

குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும். (இது பேதியை ஏற்படுத்தி பூச்சி, புழுக்கள் வெளியேறும். 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்குப் பாதி அளவு கொடுக்கலாம்)
குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும். வயிற்றுப் புழுவைக் கொல்லும்.

குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.
குப்பைமேனி இலையை சுண்ணாம்புடன் கலந்து நோயுடன் கூடிய கல் வீக்கங்களுக்கும், கட்டிகளுக்கும் பூசக் குணமாகும்.
குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். இதையே தலைவலிக்கும் தடவி வர குணமாகும்.
குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.

குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.
குப்பைமேனி வேரை கைப்பிடியளவு எடுத்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.
குப்பைமேனி வேரை அரைத்து 5 கிராம் எடுத்து 3 நாளுக்கு 3 வேளை சாப்பிட்டுவர எலிக்கடி குணமாகும். இந்த சமயத்தில் வாந்தியையும் கழிச்சலையும் உண்டாக்கும். (ஆனால் உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்)

குப்பைமேனித் தைலத்தை 50 மில்லியளவு எடுத்து மணப்பாகில் கலந்து கொடுக்க, உடலிலுள்ள கிருமிகள் வெளியேறும். இத்தைலத்தை வாத நோய்களுக்கு வெளிப்புறமாகத் தடவி வர குணமாகும்.சாதாரணமாக நாம் வசிக்கும் பகுதிகளில் தெருவோரங்களில் வளரும் செடி குப்பைமேனி. குப்பைமேடுகளின் ஓரங்களில் வளருவதால் இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்துள்ளது. முழுத்தாவரமும் மருத்துவப் பயன் உடையது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் அல்கலாய்டுகள், குளுக்கோசைடுகள், அஸிடேட்கள், எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அகாலிஃபமைடு, காலிபோல் அஸிடேட், அகாலிஃபைன், டிரைஅஸிட்டோனமைன், கெம்ஃபெரால் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.

ஆஸ்துமா குணமடையும்: மூச்சுக்குழல் மற்றும் ஆஸ்துமா நோய் குணமடையும். உடலில் வெப்பத்தை உண்டாக்கி சளியினால் ஏற்பட்டுள்ள கோழையை வெளியேற்றும் தன்மை கொண்டது. இலையை உலர்த்தி சூரணம் போல் தயாரித்து 10 குன்றிமணி எடை வீதம் தேனில் கலந்து கொடுத்து வந்தால் இருமல், இரைப்பு, கபம் முதலியவை குணமடையும்.இந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.

குழந்தைகளுக்கு: குப்பைமேனி வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. இலையை அரைத்து சாறு எடுத்து குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்தால் பேதியாகும். வயிற்றில் உள்ள கிருமிகள் வெளியேறும். இது மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. வேரானது வயிற்றுப்போக்குக்கு மருந்தாகிறது.

தோல்வியாதிகள்: இலைகள் தோல் வியாதிகளுக்கு மேல் பூச்சாகிறது. சொறி, சிரங்கு, படுக்கைப் புண் மற்றும் நாள்பட்ட புண்களை ஆற்றுகிறது. இலையை விளக் கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வரப் படுக்கைப் புண்கள் தீரும்.இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துசொறி, சிரங்கு,புண், விஷக்கடிகள் முதலியவைகட்கு பூச குணமாகும். மேனி எழிலுடன் விளங்கும். இலைச்சாறுடன் எண்ணெய் கலந்து முடக்கு வாத நோய், மூட்டுவலிக்கு தடவினால் விரைவில் குணமடையும்.

மூலநோய்க்கு மருந்து: மூலத்திற்குக் குப்பைமேனிசிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 - 5 கிராம் அளவு பசும் நெய்யில் 48 நாள் காலை, மாலை சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...