|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 July, 2011

மின்கட்டண உயர்வு!

ஏற்கெனவே அனைத்துப் பொருள்களின் விலைகளும் உச்சத்துக்குப் போய்விட்டன. இதுபோதாதென்று, தமிழக அரசு சத்தமில்லாமல் ரூ 4500 கோடி அளவுக்கு அனைத்து வரிகளையும் உயர்த்திவிட்டது. டாஸ்மாக், பீடி சிகரெட் என எங்கும் விலை உயர்வு. பஸ் கட்டணங்களை அவரவர் இஷ்டப்படி உயர்த்திக் கொண்டுள்ளனர் தனியார் நிறுவனத்தினர்.

இந்தநிலையில், தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் வகையில் மின்கட்டணத்தை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளது தமிழக அரசு. வல்லூர் மின்நிலைய சப்ளை சீரான கையோடு அல்லது அதற்கு முன்பே இதனை அறிவிக்கக் கூடும் என தெரிகிறது. அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவாக இந்த கட்டண உயர்வை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக மின்வாரியத்தில் இதுவரை ரூ.40,300 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ரூ.10,000 கோடி பற்றாக்குறையில் ஓடிக்கொண்டுள்ளதாம் மின்வாரியம். கடந்த பத்தாண்டுகளில் மிகக் குறைந்த அளவே மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டும் கடந்த ஆண்டு ஓரளவு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இது இழப்பை ஈடுகட்ட போதுமானதாக இல்லை. காரணம் விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கு மட்டும் தமிழக அரசு ரூ. 6000 கோடி செலவிடுகிறது. புதிதாக தொடங்கப்படும் சில பன்னாட்டு பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் மின்கட்டண சலுகை வேறு வழங்கப்படுகிறது.

இலவச மின்சாரம் ரத்தாகுமா? எனவே தொடர் நஷ்டத்திலிருந்து மீள உடனடி தீர்வாக கட்டண உயர்வை கையிலெடுத்துள்ளது ஜெயலலிதா அரசு. எந்தப் பிரிவுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம், விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை தொடரலாமா போன்றவை குறித்து கோட்டையில் ஆலோசனை நடந்து வருகிறது. இந்த மின் கட்டண உயர்வை நியாயப்படுத்த, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகத்தில் வசூலிக்கப்படும் கட்டண விகிதங்கள் குறித்த ஒப்பீட்டுப் பட்டியலையும் தமிழக அரசு வெளியிட உள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...