|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 August, 2011

பட்டுப்போன்ற கைகளைப் பெற..!

மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். இன்றைக்கு பெண்களுக்கு இருக்கும் வேலைப் பளுவில் கைகளுக்கென்று தனித்தனியாக நேரமெடுத்து கவனிக்க நிச்சயம் பொறுமை இருப்பதில்லை. திருமணமாகும் வரை பட்டுப்போல் கையை வைத்திருப்பவர்கள் பிறகு அதனைப் பற்றி பெரிதாக நினைக்காமல் பாழாக்கிக் கொள்கிறார்கள்.

பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, காய் நறுக்குவது, வீடு துடைக்க என்று பல விஷயங்களை அதுவரை என்றாவது ஒரு நாள் செய்தது போய் இப்போது அதுவே தினசரி கடமைகளாக ஆனபிறகு கைகளை எங்கே கவனிக்க என்று அலுத்துக் கொள்ளும் நிலைமை பொதுவாக எல்லாருக்குமே இருக்கும் . இதனால் கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்பட பல செயல்களுக்கு ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்திய பின் சன்ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகிக்க தவறி விடுகிறோம். இதன் விளைவாக, கைகளில் வறட்சி, அரிப்பு, வெடிப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனினும், கைகளை பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால், இவற்றை தவிர்க்க முடியும்.

கைகள் பாதுகாக்க கையுறைகள்; முகத்தில் காணப்படும் தோலைப் போலவே, கைகளின் பின்புறம் காணப்படும் தோலும் மிகவும் மென்மையானது. எனவே, முகத்தைப் போலவே, கைகளுக்கும் அதிக கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும். குறிப்பாக, கைகளில் ஏற்படும் ஈரப்பதம் இழப்பை ஈடு செய்ய, மாய்ச்சரைசர் கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவதோடு, ரசாயனங்கள் நேரடியாக கைகளில் படுவதையும் தவிர்க்க வேண்டும்.

கைகளை எப்போதும் மென்மையாக வைத்துக் கொள்ள கிச்சன் சிங்க் அருகே ஒரு செட் பாத்திரம் கழுவும் கிளவுஸ்களை வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் கை அளவுக்கு அடுத்த சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குங்கள். அப்போதுதான் கஷ்டப்படாமல் உடனடியாக அணிய முடியும். சிறிய அளவில் இருந்தால் கிளவுஸ் வேறா என்ற எரிச்சல்தான் மிஞ்சும். ஒவ்வொரு முறையும் ஒன்றிரண்டு பாத்திரங்களுக்காக இப்படி கிளவுஸ் மாட்ட பொறுமையில்லை என்றால் அதிக அளவு பாத்திரங்கள் துலக்கும்போது மட்டுமாவது இதனை செயல்படுத்துங்கள்.

வெதுவெதுப்பான நீர்; ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு, 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். அதன்பின் கைகளை நன்றாக துடைத்துவிட்டு, கைகளுக்கான கிரீம் தடவ வேண்டும். இது கைகளின் தோலுக்கு ஊட்டமளிக்கும். கிரீம்கள் தடவிய பின், அவற்றின் மேலே கையுறைகள் அணிந்து கொள்வது நல்லது.

பாத்திரம் கழுவி முடித்ததும் கைகளை துடைத்து உடனடியாக லோஷனை போட்டுக் கொள்ளுங்கள். இது ஸ்ப்ரே அடித்து துடைப்பது, பாத்ரூம் கழுவுவது, வீடு துடைப்பது போன்ற வேலைகளுக்கும் பொருந்தும். அதே போல் ஒவ்வொரு இரவும் உறங்கப் போகும் முன் உப்பை 2 ஸ்பூன் அளவு எடுத்து, இரு கைகளிலும் படுமாறு நன்றாக ஸ்க்ரப்பிங் செய்து கழுவி, துடைத்து, பிறகு லோஷன் போட்டுவிட்டு படுங்கள். கைகளுக்கு வேக்சிங் அல்லது எபிலேட்டர் கொண்டு முடிகளை நீக்கலாம். வேக்சிங்கிற்கு டிஸ்போசபிள் ஸ்ட்ரிப்புகளையே பயன்படுத்துங்கள். தொற்றுநோய்களை தடுக்கலாம். அப்படி நீக்கும்போது மறக்காமல் விரல்களில், மோதிரம் போடும் இடங்களில் உள்ள முடிகளையும் நீக்குங்கள்.

சீரான ரத்த ஓட்டத்திற்கு மசாஜ்; கைகளின் தோல் மிகவும் வறட்சியாக உடையவர்கள், கைகளை கழுவிய பின், ஹேண்ட் கிரீமை அடர்த்தியாக, தடவ வேண்டும். பின், அதன் மேல் மெல்லிய துணியை போர்த்தி, சூடான பாரபின் மெழுகை ஊற்ற வேண்டும். பாரபின் மெழுகின் சூட்டால், ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலில் காணப்படும் துளைகள் விரிந்து ஹேண்ட் கிரீம் சிறப்பாக உறிஞ்சப்படும். கைகளில், இறந்த செல்களை நீக்க கரகரப்பான கிரீம்கள் (எக்ஸ்போலியன்ட்) தடவி அவற்றை நன்கு தேய்க்க வேண்டும். பின், சிறிது நேரம் கழித்து அவற்றை கழுவிய பின், மிதமான ஹேண்ட் வாஷ் தடவ வேண்டும். அவற்றை மிதமான தண்ணீரால் கழுவ வேண்டும். இதனால் கைகளில் ரத்த ஓட்டம் சீராகும். மிருதுவான துணியால் கைகளை துடைத்த பின், ஹேண்ட் லோஷன் தடவ வேண்டும். கைகளை சிறந்த முறையில் பராமரிக்க வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்வாறு செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வயதாவதால், தோலில் சுருக்கம் மற்றும் கோடுகள் போன்றவை ஏற்படும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நேரடியாக தோலில்படுவதால், விரைவிலேயே வயதான தோற்றம் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து சன்ஸ்கிரீன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. எனவே, தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் இவை தடுக்கப்படும்.

குளிக்கும் முன்பு முகத்துக்கு எண்ணெய் தடவி ஊறவத்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கைகளுக்கும் தடவி மசாஜ் செய்யுங்கள். குளித்தபின்பு மறக்காமல் ஹேண்ட் அல்லது பாடி லோஷனை தடவுங்கள். நகம் வளர்க்கும் பழக்கம் உள்ளவர்கள் அதனை உடையாமல் காக்க ஹேண்ட் லோஷன் உபயோகிக்காமல் ஹேண்ட் அண்ட் நெய்ல் லோஷன் உபயோகிக்கலாம். நகங்கள் உடையாமல் இருக்கும். இவர்கள் கிளவுஸ் உபயோகிப்பதும் கூட நகங்களை பாதுகாக்கும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...