|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 August, 2011

பகல் நேர குட்டித் தூக்கம் சுறுசுறுப்பாக்க வைக்க உதவும்!

பகலில் தூங்கினால் உடல் குண்டாகிவிடும், அது உடல் நலத்திற்கு தீங்கானது என்ற கருத்து நிலவுகிறது. வயிறு முட்ட உணவு உண்ட பின், கும்பகர்ணன் போல, அடித்தால் கூட எழுந்து கொள்ளாத அளவுக்குத் தூங்கினால்தான் ஆபத்து. ஆனால், குட்டித் தூக்கம் நல்லது என, கண்டறியப்பட்டுள்ளது.

நம் உடலே, தினமும் இரண்டு வேளைக்குத் தூங்கும் பழக்கம் கொண்டது தான். இரவு நேரத்தில், குறைந்தது ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை, உடல் அல்லது மூளைக்குக் கடுமையான வேலை கொடுக்கும்போது, சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்வது போல், மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும்.

அந்த நேரத்தில், வேலைகளை உடனே நிறுத்தி விட்டு, எல்லாவற்றையும் மறந்து, அரை மணி நேரம் கண்ணயர்ந்து விட்டால், உடலும், மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன என, மருத்துவர்கள் கூறுகின்றனர். பகல் நேரத்தில் தூங்கினால் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.பெர்கலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 39 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் பகல் தூக்கத்தினால் மூளை செயல்பாடு அதிகரித்து அறிவுத்திறன் வளரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 39 பேரை இரவு நேரத்தில் நன்றாக தூங்கவைத்து பகல் நேரத்தில் நீண்ட நேரம் படிக்கவைத்தனர். அதே நேரத்தில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிடம் மட்டும் சிறிய அளவில் உறங்கவைத்தனர். இவர்களின் செயல்திறன் பின்னர் பரிசோதிக்கப்பட்டது. இதில், இரவில் மட்டுமே தூங்கியவர்களை விட, பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளைசெயல்பாட்டு திறன் அதிகரித்து காணப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதே முடிவுதான் கிடைத்தது.

இதயத்தை காக்கும்: பகல் நேரத்தில் தூங்குவது இதயத்துக்கு நல்லது என்றும் சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. பென்சில்வேனியா நகரில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றும் ரியான் பிரின்டில், சாரா காங்கிளின் ஆகியோர் 85 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இதனை கண்டறிந்துள்ளனர். மாணவர்களில் ஒரு பாதியினரை பகலில் ஒரு மணிநேரம் தூங்கும்படியும், இன்னொரு பகுதியினரை பகலில் தூங்காமல் இருக்கும்படியும் செய்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணிநேரம் தூங்கினால் ரத்தம் அழுத்தம் குறைவது கண்டறியப்பட்டது. இதன் மூலம் பகலில் தூங்குவதன் மூலம் இதயநோய் தாக்குவது தடுக்கப்படுகிறது என்பது இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அரை மணி நேரத் தூக்கம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என நீடித்தால், அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...