|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 August, 2011

ஆனந்த சுதந்திரம்...


டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் மிகுந்த தொலைநோக்குடன் இந்தியாவின் இன்றைய நிலை குறித்து சிந்தித்ததுடன் அதை பதிவும் செய்திருக்கிறார்.இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் கூட்டத்தில் 1949ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி உரையாற்றிய அறிஞர் அம்பேத்கார், இன்றைய இந்தியாவின் நிலை குறித்து தமது ஐயங்களை மிகத்தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

“1950 ஜனவரி 26ம் தேதி முதல் இந்தியா மக்களாட்சி நாடாக செயல்பட தொடங்கும். அதாவது மக்களுக்காக, மக்களால், மக்கள் அரசு செயல்படத் தொடங்கும். அந்த நாளில் முரண்பாடுகளோடு கூடிய வாழ்விற்குள் நாம் நுழைய இருக்கிறோம். நம்மிடம் அரசியல் ரீதியான சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக – பொருளாதார ரீதியான சமத்துவம் இருக்காது. அதற்கு பதிலாக சமூக – பொருளாதார நிலையில் இந்தியர்களிடம் ஏராளமான முரண்பாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருக்கும்.”

“எவ்வளவு நாட்களுக்கு இவ்வாறு சமூக – பொருளாதார முரண்பாடுகளோடும், ஏற்றத்தாழ்வுகளோடும் நம்மால் வாழ முடியும்? சமூக – பொருளாதார நிலைகளில் சமத்துவத்தை எவ்வளவு நாட்களுக்கு மறுக்க முடியும்? சமூக – பொருளாதார சமத்துவம் தொடர்ந்து மறுக்கப்பட்டால், அதனால் பாதிக்கப்படுபவர்கள் செயலற்று, சும்மா இருந்து விட மாட்டார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்த அரசியல் ஜனநாயக அமைப்பை, இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சுக்குநூறாக தகர்த்து எறிவார்கள்!” என்று மாமேதை அம்பேத்கார் தீர்க்கதரிசனத்துடன் இன்றைய இந்தியாவின் நிலையை அன்றே முன்னறிவித்தார்.

இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியாக “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்” என்ற தலைப்பில் தொகுத்தார். இந்த நெறிமுறைகளை இந்திய அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவார்கள் என்று நம்பினார். எனினும் பிறந்து சில காலமே ஆன இந்திய குடியரசின் தோள்களில் கூடுதல் சுமையை ஒரேயடியாக சுமத்தக்கூடாது என்ற அடிப்படையில், “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை”களை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு எதனையும் அவர் விதிக்க விரும்பவில்லை. மேலும் இதில் கூறப்பட்டுள்ள விடயங்களை அரசு உடனடியாக வலியுறுத்தி குடிமக்கள் வழக்கு தொடுப்பதற்கும் வகையில்லாத நிலையில் இந்த அத்தியாயத்தை படைத்தளித்தார். ஆனாலும் “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்” என்ற அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்களை அம்ல்படுத்தாமல் புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று அம்பேத்கார் எச்சரித்தார்.

இந்திய அரசியல்வாதிகளைப்பற்றி அம்பேத்கார் கொண்டிருந்த ஐயம் நியாயமானதே என்று காலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடுதல்; இவற்றை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தல்; ஏழை, பாமர, உழைக்கும் மக்களை ஏமாற்றி, அவர்களின் உடைமைகளை, உழைப்பை சுரண்டுதல்; தொழிலாளர்கள், பணியாளர்களின் உடல் நலம் குறித்து அக்கறையற்று இருத்தல்; குழந்தைகளுக்கு கல்வி மறுத்து அவர்களையும் உடல் உழைப்பு தொழிலாளிகளாக்குதல்; கல்வி, வேலை வாய்ப்பை மறுத்தல்; தொழிற்சாலை நிர்வாகத்திலிருந்து தொழிலாளர்களை அகற்றுதல்; பட்டியல் இனமக்களையும், பழங்குடியினரையும் ஏமாற்றி வஞ்சித்து சமூக அநீதி புரிதல்; சுயச்சார்பு வேளாண்மையை திட்டமிட்டு அழித்து இந்திய விவசாயத்தை பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக் காடாக்குதல்; சுற்றுச்சூழலை, வனங்களை, வன உயிரிகளை பாதுகாப்பதற்கு பதிலாக அவற்றை திட்டமிட்டு அழித்தல்; சுயேச்சையாக செயல்படவேண்டிய நீதித்துறையை அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக மாற்றியமைத்தல் ஆகிய மக்கள் விரோத பணிகளையே இந்தியாவை இதுவரை ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் தொடர்ந்து செய்து வருகின்றன.

அரசின் மேற்கண்ட நடவடிக்கைகளால் நாட்டில் வசிக்கும் அனைத்து தரப்பினரும் ஏதோவொரு விதத்தில் பாதிக்கப்பட்டிருப்போம். ஆனால் மிக மோசமாக பாதிக்கப்படுபவர்கள் பழங்குடி இனத்தவரும், பட்டியல் இனத்தவருமே

சத்தீஷ்கர், ஜார்கண்ட், ஓரிஸா, ஆந்திரம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் மலை மற்றும் வனப்பகுதிகளில் இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியம், பாக்சைட், நிலக்கரி, சிலிகா, கிரானைட் போன்ற அரிய கனிம வளங்கள் ஏராளமாக உள்ளன. இந்த இயற்கை வளங்களை சூறையாடும் வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும் அரசு அமைப்புகள் முனைந்து நிற்கின்றன.

இப்பகுதி மக்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதியையும் செய்து தராத அரசு அமைப்புகள் இம்மக்களின் வாழ்வுரிமையை பறித்தெடுப்பதில் முனைந்து நிற்கின்றன.இதைப் புரிந்து கொண்டால் இந்தியாவில் தீவிரவாதம் உருவாவதற்கு மத்திய, மாநில அரசுகளின் நடைமுறைகளே காரணம் என்பது விளங்கும். “இந்தியாவின் பழங்குடி சகோதரர்களும், சகோதரிகளும் மிகநீண்ட காலமாகவே அரசு நிர்வாகம் என்பதை அராஜக நடைமுறைகளும், ஆதிக்க மனோபாவமும் கொண்ட வனத்துறை அதிகாரியாக – கொடூரமான மிருகத்தன்மை கொண்ட காவல்துறை அதிகாரியாக – பேராசை படைத்த நிலவரி வசூலிக்கும் அதிகாரியாக மட்டுமே பார்த்து வந்துள்ளனர். அரசின் நலத்திட்டங்கள் எதுவும் இம்மக்களை சென்றடையவில்லை. மாறாக வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் இம்மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டே வந்துள்ளது!” என்று வி.ஐ.பி. ஒருவர் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த வி.ஐ.பி., அருந்ததி ராய் போன்ற எழுத்தாளரோ, மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர்களோ, மனித உரிமை ஆர்வலர்களோ இல்லை.

இறையாண்மை கொண்ட இந்திய அரசின் பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்கள்தான் மேற்சொன்ன கருத்துகளை, ஒப்புதல் வாக்குமூலமாக கூறியுள்ளார்.மாவோயிஸ்ட்களால் வளர்ச்சித்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டம் கடந்த 2010 ஜூலை 14ம் தேதி டெல்லியில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திருவாளர் மன்மோகன் சிங் அவர்கள்தான் மேற்கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். ஆனால் இதை மாற்றுவதற்கான ஆக்கப் பூர்வமான வழிகள் எதுவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கு பதிலாக ஆயுதப்படைகளை அதிகரிக்கும் போக்கே நிலவி வருகிறது.

இந்திய சுதந்திர போராளிகளின் கனவுகளை, அம்பேத்காரின் திட்டங்களை தவிடுபொடியாக்கி, தீவிரவாதத்திற்கு வித்திட்டு, நீர் வார்த்து, உரமிட்டு வளர்த்தவர்கள் அதற்கான காரணங்களை அறிந்தும், அது குறித்து முழுமையா ஆய்வு செய்யாமல் கலைந்து சென்றனர். 

ஒரிஸா மாநிலம் சுந்தர்கார் மாவட்டத்தில் ஏராளமான நிலக்கரி வளம் உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்களை கடந்த 1987ம் ஆண்டு மத்திய அரசு கையகப்படுத்தியது. இந்தியாவின் நவரத்தினங்கள் என்று கூறப்படும் மிகச்சிறந்த நிறுவனங்களி்ல் ஒன்றான இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனமான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்திடம் இந்த நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன.

இப்பகுதி மக்களுக்கு உரிய இழப்பீடும், மாற்று குடியிருப்பு வசதிகள், சாலை போன்ற அடிப்படை வசதிகள், கல்வி – மருத்துவம் போன்ற அத்தியாவசிய வசதிகள், வேலைவாய்ப்பு போன்றவை செய்து தருவதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அப்பகுதி மக்கள், விவசாயத்தை புறக்கணிக்க நிர்பந்தம் செய்யப்பட்டனர். அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களது நிலங்களில் புழங்கும் உரிமை ஆயுத முனையில் பறித்தெடுக்கப்பட்டது. அத்துமீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

ஆனால் அரசு வாக்குறுதி வழங்கியபடி இழப்பீடோ, மற்ற வசதிகளோ இந்த கட்டுரை எழுதப்படும் இன்றுவரை செய்து தரப்படவில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்வாதாரங்களை தியாகம் செய்துவிட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக நின்ற அம்மக்கள் ஒரிஸா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மிக நீண்டகாலம் நடைபெற்ற வழக்கில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஒரிஸா உயர்நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு தீர்ப்பளித்தது. சுமார் 20 ஆண்டுகள் வாழ்விழந்து தவித்த அம்மக்களுக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம்.

இந்த மேல்முறையீட்டு மனுவை மூன்று ஆண்டுகள் நிலுவையில் வைத்திருந்து விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த கடந்த 2010 ஜூலை 19ம் தேதியன்று தீர்ப்பளித்தது. இந்த கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ள அம்பேத்காரின் கருத்துகளுடன் தீர்ப்பை ஆரம்பித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அஃடாப் ஆலம் மற்றும் பி. எஸ். சவுகான் ஆகியோர் ஒரிஸா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளனர்.

இலட்ச கணக்கான இந்தியர்களின் அடிப்படை வாழ்வுரிமைகளை பறித்து இந்திய அரசு உருவாக்குவதாக கூறும் துர்வளர்ச்சி காரணமாக, குடிமக்களுக்கு வளர்ச்சி என்ற சொல்லே வெறுக்கக்கூடியதாக, அச்சமூட்டக்கூடியதாக மாறிவிட்டதை நீதிபதிகள் இந்த தீர்ப்பில் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் அரசின் இவ்வாறான ஒவ்வொரு பொறுப்பற்ற செயல்பாடும் தீவிரவாத அரசியலுக்கும், புரட்சிகர செயல்பாடுகளுக்கும் வித்திடுவதையும் நீதிபதிகள் குறிப்பிட்டு காட்டுகின்றனர்.

மாபெரும் தொழில்திட்டங்களுக்காக கட்டாயமாக இடம் பெயர்க்கப்படும் மக்களுக்கு தேவையான சாலை, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்படும் அவலத்தையும் நீதிபதிகள் இந்த தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு சமூக அவலத்தை விமரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதற்கான காரணத்தையோ, தீர்வுகளையோ முழுமையாக விவாத்தித்தார்களா என்பது கேள்வியே

மாமேதை அம்பேத்காரின் தீர்க்கதரிசனம், பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு ஆகிய அனைத்தும் நாட்டில் தீவிரவாதம் உருவாவதற்கான காரணங்களை தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. ஆனால் இவற்றை திரும்பியும் பாராமல் தீவிரவாதிகளை ஒடுக்கவதற்காக பசுமை வேட்டை போன்ற ஆட்கொல்லித் தீர்வுகளை அரசு அமைப்புகள் முன்வைக்கின்றன.

இந்த அவலச் சூழலில் இந்தியாவின் 65வது சுதந்திர தினம் கொண்டாடப் படுகிறது. சுயேச்சையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டிய பத்திரிகைத்துறையும், நீதித்துறையும் கண்ணுக்குத் தெரியாத கட்டுப்பாடுகளுக்குள் சிக்கியிருக்கின்றன. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களும் ஏதோவொரு சுரண்டலுக்கு ஆளாகியே வாழ்ந்து வருகின்றனர். இதுதான் ஆனந்த சுதந்திரமா? இதற்குத்தான் சுதந்திரப் போராளிகள் ஆசைப்பட்டனரா? சுதந்திரப் போராளிகளின் கனவுகளை நனவாக்குவதில் குடிமக்களுக்கு பங்கு உள்ளதா?


இந்தியாவின் இன்றைய அவல நிலையை மாற்றுவதில் இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் பங்குள்ளது. இந்திய அரசியல் சட்டத்தை மனித உரிமைப் பார்வையில் கற்றுக் கொள்வதும், மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பதுமே இன்றைய தேவை. இது ஆட்சித்துறை, நீதித்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மிகமுக்கிய தேவையாகும்.இதைப் புரிந்து கொண்டால் இந்தியாவில் தீவிரவாதம் உருவாவதற்கு மத்திய, மாநில அரசுகளின் நடைமுறைகளே காரணம் என்பது விளங்கும். “இந்தியாவின் பழங்குடி சகோதரர்களும், சகோதரிகளும் மிகநீண்ட காலமாகவே அரசு நிர்வாகம் என்பதை அராஜக நடைமுறைகளும், ஆதிக்க மனோபாவமும் கொண்ட வனத்துறை அதிகாரியாக – கொடூரமான மிருகத்தன்மை கொண்ட காவல்துறை அதிகாரியாக – பேராசை படைத்த நிலவரி வசூலிக்கும் அதிகாரியாக மட்டுமே பார்த்து வந்துள்ளனர். அரசின் நலத்திட்டங்கள் எதுவும் இம்மக்களை சென்றடையவில்லை. மாறாக வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் இம்மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டே வந்துள்ளது!” என்று வி.ஐ.பி. ஒருவர் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த வி.ஐ.பி., அருந்ததி ராய் போன்ற எழுத்தாளரோ, மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர்களோ, மனித உரிமை ஆர்வலர்களோ இல்லை.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...