|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 September, 2011

அரசுப் பள்ளிகளில் பாடவேளை நேரம் 35 நிமிடம் அதிகரிப்பு!

தமிழகத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பாடவேளை நேரம் 35 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.

பள்ளி தொடங்குவதில் ஏற்பட்ட காலதாமதத்தை ஈடுகட்டும் வகையிலும், பாடங்களை விரைவில் முடிக்கவும், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டில் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை அமலுக்கு வந்தது. 2011-ல் இருந்து 2, 3, 4, 5, 7, 8, 9, 10 ஆகிய வகுப்புகளில் சமச்சீர் கல்வி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், "முந்தைய அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி தரமில்லாததால், இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது. எனவே, பழைய பாடப்புத்தகமே வழங்கப்படும்' என்று அரசு அறிவித்தது. இதனால் ஜூன் 2-ம் தேதி தொடங்கவிருந்த பள்ளிகள், ஜூன் 15-ம் தேதி தான் தொடங்கின.
இதனிடையே சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றமும், சமச்சீர் கல்வியைத் தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்ததால், மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படாமல் இணைப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதையடுத்து, ஆகஸ்ட் 2-வது வாரத்திலிருந்து பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இப்போது காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 22-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாடவேளை நேரம் 35 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையான மாணவர்களுக்கு பாடங்களை முடிக்கும் வகையில் பள்ளி பாடவேளை நேரம் 35 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடவேளை நேரமும் 40 முதல் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும். இத்துடன் மாதந்தோறும் இரண்டு சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த வேண்டும். பாடவேளை நேரத்தை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்வார்கள்.

இந்த உத்தரவு குறித்த விவரம் மாநிலம் முழுவதுமுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்வி மாவட்டங்களில் இப்போது புதிய பாடவேளை நேர அறிவிப்பின்படி வகுப்புகள் நடந்து வருவதாக, பள்ளிக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலாண்டுத் தேர்வுக்கு 5 நாள் மட்டுமே விடுமுறை பள்ளிகளில் பாடவேளை நேரம் அதிகரித்துள்ள நிலையில், காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறை நாள்களை 15 நாளில் இருந்து 5 நாளாகக் குறைக்கும்படி பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. வகுப்புகள் 15 நாள்கள் காலதாமதமாக தொடங்கியதால் பாடங்களை முடிக்க தினமும் 35 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 22-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தேர்வு விடுமுறையை 15 நாள்களில் இருந்து 5 நாள்களாக குறைத்துக் கொள்ளும்படி பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...