|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 September, 2011

உயிருள்ள வரை பாடிக் கொண்டிருக்க வேண்டும்!

திருமண விழாக்களில் 50 ஆண்டுகளாக நீங்கள் கேட்கும் பாடல் "வாராயோ என் தோழி வாராயோ'. தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் ஒலிக்கும் பாடல் "செல்லாத்தா எங்க மாரியாத்தா'. இப்படித் தமிழ் மக்களின் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் பாடல்களைப் பாடிய எல்.ஆர்.ஈஸ்வரி, திரைப்படங்களில் பாடல்களைப் பாட ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அதைக் கொண்டாடும் வகையில் சென்னையில் அவருக்கு விழா எடுக்க இருக்கிறார்கள். "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை' என்ற பாடலைப் பாடிய அந்தப் பாட்டு ராணி நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...


 ""1961 ஆம் ஆண்டு வெளிவந்த "பாசமலர்' படத்தில் நான் பாடிய பாடலான "வாராயோயென் தோழி வாராயோ' பாட்டு ஹிட் ஆனதிலிருந்து இன்று வரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடிவிட்டேன். ஆனால் அன்று இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் என்னிடம் சொன்ன வார்த்தைகள் இன்றும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன: ""நல்லா பாடி உன் திறமையாலே மேலே வரணும்''
 ஆனால் நான் முதன்முதலாகப் பாடியது கே.வி.மகாதேவன் இசையமைப்பில்தான். 1958-ல் கே.சோமு இயக்கத்தில் வெளிவந்த "நல்ல இடத்துச் சம்பந்தம்' என்ற படத்தில் "இவரேதான் அவரு... அவரேதான் இவரு...' என்ற பாடல்தான் அது.
 
என் அம்மா ஆர்.எம்.நிர்மலா ஒரு பாடகி. அவருடன் நான் எப்போதும் சென்று கொண்டிருப்பேன். சிறுவயதில் ரொம்பவும் துறுதுறுவென இருப்பேன். அதைப் பார்த்த கே.வி.மகாதேவன் எனக்குப் பாட்டுக் கற்றுக் கொடுக்கச் சொன்னார். பின்னர் அவரே எனக்கு முதன்முதலாகப் பாடுவதற்கும் வாய்ப்புக் கொடுத்தார். எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளரும் அவரே.
 
ஜெயலலிதா அவர்களுக்கு திரைப்படத்தில் முதலில் பின்னணி பாடியது நான்தான். "நீ என்பது என்ன.. நான் என்பது என்ன' என்ற பாடலை நான் அவருக்காகப் பாடினேன். அது எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது. இந்த அளவுக்கு அவர்கள் புகழ்பெறுவார்கள் என்று அப்போது எனக்கும் தெரியாது; அவர்களுக்கும் தெரியாது.

 "வெள்ளிவிழா' படத்துக்காக நான் பாடிய "காதோடுதான் நான் பேசுவேன்' பாடல் மிகவும் புகழ் பெற்றது. அதற்காக எனக்குத் தேசிய விருதும் கிடைத்தது. அந்தப் பெருமை இயக்குநர் சிகரம் கே.பி.சாருக்குத்தான் போக வேண்டும். இப்போது விருதுகள் மலிந்து போய்விட்டன. அப்போது தேசிய விருது கிடைப்பது மிகவும் அரிது.
 
தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி, ஏன் ஆங்கிலத்தில் கூட நான் பாடிவிட்டேன். தெலுங்கில் பாடியதற்காக "நந்தி அவார்ட்' கிடைத்தது.
 எல்லாரும் என்னைப் பார்த்து, பக்திப் பாடல்களிலும் நீங்கள் இந்த அளவுக்கு வெற்றி பெற்றது எப்படி என்று கேட்கிறார்கள். பக்திப் பாடல்களை நான் உணர்ந்து பாடுவேன். ஈடுபாட்டோடு பாடுவேன். அதனால் நான் பாடிய பக்திப் பாடல்கள் எல்லாருடைய மனதையும் தொட்டிருக்கின்றன. இமயமலையில் ஏறியவர் ஒரு சிகரத்தைத் தொட்டார் என்றால் நான் இரண்டு சிகரங்களைத் தொட்டுவிட்டேன் என்றுதான் பெருமையோடு சொல்லிக் கொள்ள முடியும்.
 "சிவந்த மண்' படத்துக்காக நான் பாடிய "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை' பாட்டைக் கேட்டுவிட்டு சிவாஜி அண்ணன் என்னிடம் வந்து, ""என்னமா பாடிருக்க!'' என்று வியந்து பாராட்டினார். அந்தப் பாட்டுப் பாட நான் பட்ட கஷ்டமெல்லாம் அந்தப் பாராட்டைக் கேட்டதும் மறந்து போனது. அந்தப் பாட்டைக் கேட்ட லதா மங்கேஷ்கர் என்னைப் பாராட்ட சென்னைக்கே வந்துவிட்டார்.
 
நான் பாடிய "முத்துக்குளிக்க வாரீகளா' என்ற பாடலை ஆஷா போன்ஸ்லே ஹிந்தியில் பாடினார். என்னைப் போல பாட முடியவில்லை என்று வருத்தப்பட்டாராம். அந்தப் பாடலுக்காக இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் என்னைப் பாராட்டினார்.
 
இப்போது பாடக் கூடிய எல்லாப் பாடகிகளின் பாடல்களையும் ரசிக்கிறேன். சர்க்கரை ஒன்றுதான். அதில் ஏராளமான ஸ்வீட்களைத் தயாரிக்கிறோம். அதைப் போல இசை ஒன்றுதான். ஒவ்வொருவரும் தங்களுடைய தனித்திறமையாலும், தனித்தன்மை வாய்ந்த குரல் வளத்தாலும் ரசிக்கும்படியாகப் பாடுகிறார்கள். இதில் யாரைத் தவிர்க்க முடியும்? அதனால் எல்லாருடைய பாடல்களையும் ரசிக்கிறேன்.
 
அன்றைக்கிருந்த பாடல்களைப் போலவே இப்போதுள்ள பாடல்களையும் நான் மிகவும் ரசிக்கிறேன். என்னைப் பொறுத்தளவில் எல்லாச் சப்தங்களும் இசைதான். ஒரு முழுப்பாடலைப் பாடக் கூப்பிட்டால் எப்படி மகிழ்ச்சியோடு பாடப் போவேனோ, அதைப் போல நான்கு வரிகளை மட்டும் பாடக் கூப்பிட்டாலும் மகிழ்ச்சியோடு போவேன்.  எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியிருக்கிறேன். அவர்கள் கொடுத்த ஊக்கம், ரசிகர்களின் பேராதரவு இல்லாவிட்டால் நான் இத்தனை ஆண்டுகளாகப் பாடிக் கொண்டு இருக்க முடியாது. ரசிகர்கள் இல்லாவிட்டால் நான் இல்லை.

உயிருள்ளவரை நான் பாடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே என் ஆசை'' என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...