|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 September, 2011

விக்கெட் சரிவுதான் தோல்விக்கு காரணம் கேப்டன் தோனி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில், முக்கிய நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி புலம்பியுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கு முன் இரு அணிகள் இடையிலான ஒரு "டுவென்டி-20' போட்டி, மான்செஸ்டரில் நடந்தது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 11.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், எப்படியும் ஸ்கோர் 200 ஐ எட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அடுத்து 13 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. பின் 17.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்த இந்திய அணி, அடுத்து 7 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட்டானது. இதனால் மிகப்பெரிய இலக்கை எட்ட முடியாமல், இந்திய அணி 19.4 ஓவரில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரகானே அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் (33), மார்கன் (49) அதிரடி கைகொடுக்க, 19.3 ஓவரில் 169 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:

டெஸ்ட், ஒருநாள் அல்லது "டுவென்டி-20' என, எந்தவகை போட்டியாக இருந்தாலும், நல்ல "பார்ட்னர்ஷிப்' அமைய வேண்டியது முக்கியம். முதலில் விக்கெட்டுகளை இழக்கத் துவங்கிவிட்டால், 12 ஓவர்களுக்கு அப்புறம் சிறப்பாக விளையாட முடியாது. கடைசி கட்ட ஓவர்களில் அடித்து விளையாட, குறைந்தது 5 அல்லது 6 வீரர்கள் இருக்க வேண்டும்.

இங்கிலாந்துக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில், மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். ஐந்தாவது பவுலர் இல்லாத நிலையில், கூடுதலாக 12 முதல் 15 ரன்களை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இடையில் விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்ததால், இது முடியாமல் போனது.
அறிமுக துவக்க வீரர் ரகானே, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டியின் முடிவு குறித்து இவர் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. இதேபோல டிராவிட்டும் அபாரமாக ரன்கள் குவித்தார்.

விராத் கோஹ்லி "டுவென்டி-20' போட்டிகளில் அதிகம் பவுலிங் செய்ததில்லை. தவிர அணியில் இரண்டு "பார்ட் டைம் ஆப் ஸ்பின்னர்கள்' இருந்தனர். இவர்கள் வீசிய 4 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்கப்பட்டது. இதுவும் தோல்விக்கு முக்கிய காரணம் தான்.
கடந்த இரண்டு ஆண்டுகளாவே இந்திய அணியில் ஐந்தாவது பவுலர் இடம்பெறுவது இல்லை. இப்போது மட்டும் இதில் மாற்றம் தேவைப்படும் என்று நினைக்கவில்லை. இவ்வாறு தோனி கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...