|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 October, 2011

வறுமைக்கோட்டுக்கு புதிய அளவுகோல் மத்திய அரசு!


நாளொன்றுக்கு ரூ 32க்கு மேல் நுகர்வுத் திறன் கொண்ட தனி நபர்கள் 'வறுமைக்கோட்டு'க்குக் கீழ் வசிப்பவர்கள் என மத்திய அரசு முதலில் அறிவித்திருந்தது. ஆனால் அந்த அறிவிப்பு பெரும் சர்ச்சைக்குள்ளானதால் புதிய முறையில் வறுமைக்கோடு அளவு நிர்ணயம் செய்யப்படும் என்று, மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, உணவு பொருட்கள் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் யார்? என்பதை வரையறை செய்வதில் குழப்பம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, உச்சநமீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு மத்திய திட்டக் குழு சார்பில் பிரமாண பத்திரம் ஒன்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில் நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.32-ம் (5 பேர் கொண்ட குடும்பத்துக்கு ரூ.4824), கிராமப்புறங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.26-க்குள்ளும் (5 பேர் கொண்ட குடும்பத்துக்கு ரூ.3905) செலவழிப்பவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. 

கடும் எதிர்ப்பு திட்டக் குழுவின் இந்த விளக்கத்துக்கு, அரசு தரப்பு உள்பட நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மராட்டிய மாநில பழங்குடியினப் பெண்கள், குறிப்பிட்ட இந்த தொகைக்கு ஏற்ப நீங்கள் குடும்பம் நடத்த முடியுமா? என்று கேட்டு, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு காசோலை ஒன்றை அனுப்பி, வித்தியாசமான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர்கள் அருணா ராய், என்.சி.சக்சேனா ஆகியோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடிந்து வந்தவுடன் நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார். 

அதன்பின் இந்த விவகாரம் குறித்து திட்ட கமிஷனின் நிலைப்பாடு குறித்து திங்கட்கிழமை (நேற்று) அறிக்கை வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து, மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், அலுவாலியாவை நேற்று சந்தித்துப் பேசினார். கூட்டத்தின் முடிவில் நிருபர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், இந்த விவகாரத்துக்கு தாங்கள் சுமுக தீர்வு கண்டுவிட்டதாக தெரிவித்தார்.

வறுமைக்கோட்டுக்கு புதிய அளவுகோல்: நேற்று மாலை, அலுவாலியாவும், மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, "ஏழைகளுக்கான பல்வேறு நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயன்களை பெறுவதற்கான வறுமைக்கோடு அளவுகோல், புதிய முறையில் நிர்ணயம் செய்யப்படும். சமூக-பொருளாதார மற்றும் சாதிவாரி-பொருளாதார கணக்கெடுப்பு கிராமப்புறங்களில் வீடு, வீடாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இந்த கணக்கெடுப்பு முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.வறுமைக்கோடு அளவுகோல் தொடர்பான புதிய முறை, இந்த சட்ட விதிகளுக்கு முரண்படாமல் இருப்பதற்காக நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும். தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கணக்கிடுவதில் உள்ள பலவீனங்கள், புதிய கணக்கெடுப்புக்கு ஏற்ப சரி செய்து திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அதே நேரம் டெண்டுல்கர் கமிட்டியின் பரிந்துரைகளை ஒரு முக்கிய கையேடாக இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுத்துக் கொள்ளும்'', என்றனர்.40 கோடி பேர்: திட்ட குழு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த பிரமாண பத்திரத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 40 கோடியே 70 லட்சம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...