|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 December, 2011

பாரதியின் பக்தி நெறிமுறைகள்!

டிசம்பர்-11: மகாகவி பாரதி பிறந்த தினம்,1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி தனது 11-ம் வயதிலேயே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும், மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பாரதியாரின் வரிகள் ..  

தைரியம் தரும் பக்தி:
* தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே உலகமே வியக்கும் வண்ணம் ஒருவனுக்கு எதிர்பாராத விதத்தில் பயன்கள் கிடைக்கும். 

* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி, பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே தெய்வம் அருள் புரியும். 

* நல்ல விளக்கிருந்தாலும் பார்க்க கண் வேண்டும். அதேபோல் நாலுபேர் துணையிருந்தாலும் நல்ல முறையில் வாழ சுயபுத்தி வேண்டும். 

* தன்னைத் தானே திருத்திக் கொள்ளாதவன், பிற உயிர்களைத் திருத்த அதிகாரம் பெறமாட்டான். 

* வெறும் சொல்லுக்கு மகிமையில்லை. அச்சொல் உள்ளத் துணிவை உணர்த்துமாயின் அதற்கு மகிமையுண்டு. 

* உண்மையான பக்தி இருந்தால் மனதைரியம் கிடைக்கும், மனதைரியம் இருந்தால் தெய்வ பக்தி ஏற்படும். அத்துடன், இந்த பிறவியிலேயே தெய்வநிலை பெறலாம். 

* கடவுளிடமும் அவருடைய படைப்பாகிய அனைத்து ஜீவன்களிடமும் என்றும் மாறாத அன்பு செலுத்துவதே பக்தி. அதுவே முடிவான சாதனமாகும்.  

சூரிய நமஸ்காரம்: முனிவர்களும், புலவர்களும் உமது பெருமையைப் பெரிதென்று போற்றுகின்றனர். அப்பெருமையைக்கொண்ட சூரியதேவனே! உம்மை வாழ்த்துகின்றேன். பரிதியே! யாவற்றுள்ளும் முதல் பொருளாகத் திகழ்பவனே! பானு என்ற பெயர் கொண்டவனே! பொன் போல் நல்லொளியினை திரளாகப் பிரகாசிப்பவனே! உன்னை வணங்குகின்றேன். கதிரொளி தரும் உன் முகத்தினை சற்றே காட்டுவாயாக! வேதமொழிகள் உன்னைப் புகழும் புகழினைக் கண்டு நானும் வேள்விப்பாடல்களை பாடுவதற்கு ஆவல் கொண்டேன். நீ உதிக்கும் வேளையில் நாதத்தினை எழுப்பும் கடலின் இனிய ஒலியோடு நல்ல தமிழில் சொல்லில் இசைப்பாடல்களைச் சேர்ப்பேன். கீழ்வானில் படரும் வான் ஒளி இன்பத்தைக் கண்டு, பறவைகள் பாட்டுப்பாடி மகிழும். விழியினைப் போல சுடர்முகம் கொண்ட உன் வடிவம் கண்டு கடலின் ஒவ்வொரு துளியும் சுருதி பாடி புகழ் சேர்க்கும். என் உள்ளம் கடலினைப் போல் உன் இணையடியின் கீழே நின்று வணங்கும். உலகில் ஒவ்வோர் அணுவும் உந்தன் ஜோதியால் நிறைந்து நல்வாழ்வு பெறும். வானிலே நிலைபெற்று உலகமெல்லாம் வாழ்விக்கும் ஒளி தரும் தேவா! உன்னை ஆயிரம் முறை அஞ்சலி செய்வேன்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...