|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 March, 2012

தமிழீழப் போராட்டம் தோல்வி என்று சொல்லலாமா?

விளையாட்டுப் போட்டியில் வெற்றியும் வரும்;  தோல்வியும் வரும். தெரிந்துதான் விளையாடுகிறோம். தோற்றவர் அடுத்து வெல்வதும் வென்றவர் அடுத்து தோற்பதும் விளையாட்டில் மட்டும் அல்ல, போராட்டக்களத்திலும் இயல்புதான். திருவள்ளுவர் குறிப்பிட்டது போல்,

"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.

ஈழம் எம்மாத்திரம்.''


நிறைவேறாத லட்சியம் என்று தெரிந்தே தனித்தமிழ்நாடு- திராவிட நாடு என்ற கோஷத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகள் இன்று தேசிய நீரோட்டத்தில் இரண்டறக் கலந்து மத்திய அரசின் பங்காளியாகி இருக்கி றார்கள். இந்த அணுகுமுறையை ஈழப் போராளிகளுக்கு இந்தத் திராவிடக் கட்சி கள் சொல்லிக்கொடுக்க தவறியது ஏன்? 


 ""தமிழ்நாடு கிடைக்காது என்று தெரிந்தே திராவிடக் கட்சிகள் இந்த கோஷத்தை முன்வைத்தன என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. கிடைக்கும் என்றுதான் கேட்டனர். சுதந்திரத்திற்கு முன்னால் திராவிட நாடு என்பது, சென்னை ராஜதானியிலிருந்து தமிழ்நாட்டின் புவியியல், பொருளியல், வாழ்வியல், அரசியல், கலையியல் என்று அனைத்துத் துறைகளையும் திட்டமிட்டபிறகுதான் திராவிட இயக்கங்களால் திராவிட நாடு கோரிக்கை எழுப்பப்பட்டது. இதே நிலையில்தான் மொழிவழி மாநிலம் பிரிவுக்குப்பின் தனித்தமிழ் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆசைகாட்டி மோசம் செய்து நம்மை இந்திய நீரோட் டத்தில் சிறை பிடித்துக் கொண்டது மைய அரசு. சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டவர்கள் அதனையே தன்னலத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். நல்லவேளை இந்த தில்லுமுல்லு இலங்கையர்களக்கு கற்பிக்கப்படவில்லை.''


உங்களின் ரசிகராக பல அரசியல் தலைவர்கள் உண்டு. தாங்கள் விரும்பும் அரசியல் தலைவர் யார்? எவர்?  


""அரசியல் தலைவர் என்பவர் வல்லவராக இருப்பதைவிட நல்லவராக இருக்க வேண்டும். எனக்கு முந்தைய தலைமுறையில் பல நல்ல தலைவர்களே அரசியலில் இருந்தனர். எனது காலத்தில் இருவரைக் குறிப்பிடலாம். முதலாமவர் எம்.ஜி.ஆர். ஏனெனில், கல்லூரியில் பேராசிரியராக இருந்தகாலத்தில் மேடைப் பேச்சுகளில் நக்ஸலைட் ஆதரவுக் கருத்துகள் இருப்பதாக கைது செய்ய அப்போதைய காவல் துறை அதிகாரி மோகன்தாஸ் என்னைக் குறிப்பிட்டு.  இதுகுறித்து எம்.ஜி.ஆர். பார்வைக்கு அனுப்பி வைத்தார். அப்போது நான் எம்.ஜி.ஆர். அரசியலின் தீவிர எதிர்ப்பாளன்.  எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார். நான் அவரது தோட்டத்திற்குச் சென்றேன். மாடியில் அவர் அறையில் அமர்ந்தேன். எம்.ஜி.ஆர். வணங்கியபடியே என்னை வரவேற்றார். ""என்ன சாப்பிட்டீர்களா?'' என விசாரித்தார். நான், ""பரவாயில்லை'' என்றேன். உடனே அவர், ""காலை 6.30 மணிக்கெல்லாம் புறப்பட்டிருப்பீர்கள். இப்போது மணி 8.00 முதலில் சாப்பிடுங்கள். பிறகு பேசலாம்'' என்றார். நான் உடனே, ""எனது பயத்தைப் போக்குங்கள். இதனால் என் பேராசிரியர் வேலை போய்விடும்'' என்றேன். எம்.ஜி.ஆர். அவர்கள், ""ஒன்றுமில்லை. உங்களின் சொற்பொழிவின் ரசிகன் நான். நீங்கள் எதையும் வெளிப் படையாகப் பேசுபவர். திராவிட இயக்கத்தைப் பற்றியும், பெரியார், அண்ணாவைப் பற்றி பேசுங்கள். பிறரை கிளர்ச்சிக்குத் தூண்டும் வகையில் பேசவேண்டாமே'' என்றபடி எனது கைது வாரண்டை கிழித்துப் போட்டுவிட்டு, ""நீங்கள் இப்போது சாப்பிட்டுச் செல்லலாமே'' என்று என்னை கீழே உணவருந்த அனுப்பிவைத்தார். கீழே காலை உணவு உண்டபோது எனக்குப் பின்னால் என் தோளைப்பற்றிய எம்.ஜி.ஆர். எனது பாக்கெட்டில் ரூபாய் கட்டை திணித்தார்; நான் மறுத்தேன். ""இது எனது பழக்கம்'' என்று உணவு உண்டு முடிக்கும்வரை உடனிருந்து ரசித்தார். இத்தகைய நேரிய பண்பு அவரிடத்தில் கண்டேன். வீட்டில் வந்து ரூபாயை எண்ணினேன். ஒரு லட்சம் இருந்தது. அதன் மூலமே நான் இப்போது குடியிருக்கும் இடம் வாங்கினேன்.  இத்தகைய நற்பண்பை அவருக்குப்பின் வைகோவிடம் காண்கிறேன். அதனாலேயே அவரது கட்சியில் இணைந்து செயலாற்றுகிறேன்.''


நவீன ஊடக வளர்ச்சியின் நீக்கும் போக்கும் எப்படி இருக்கிறது?  


""வெகுஜனங்களை கருத்து பற்றினால் அது பௌதீக சக்தியாய் மாறும்' என்றார் கார்ல்மார்க்ஸ்.   ஊடகங்கள் இருப்பதே இதற்குத்தான். ஆனால் இன்று பெரும் பாலான ஊடகங்கள் அடுத்தவர்களின் பணத்தை அபகரிப்பதற்கான கருவியாக உள்ளன. தன்னம்பிக்கை இதழ்போல அடிப்படை நோக்கத்தை மிகக் குறைவாகக் கொண்டிருக்கும் பத்திரிகைகள் மிகக்குறைவு. அதுவும் தொலைக்காட்சி பெரிய சீரழிவைச் செய்து கொண்டிருக்கிறது.  கதை என்றால் கால் மணிநேரம், அரை மணிநேரம் சொல்லலாம். வாரம் முழுக்க, வருடக்கணக்கான அழுகைக் காட்சிகளை அரங்கேற்றும் மெகா சீரியல்கள் முதலில் ஒழியவேண்டும்.  தொலைக்காட்சி என்பது தினமும் தெரிகிற சுவர் மாதிரி இருக்கிறது. புதிதாக எதுவுமில்லை. இவையெல்லாம் எதற்கு? யாரோ சிலர் பிழைப்பதற்காக. அதுவும் இந்த விளம்பரங்கள் மூன்று ரூபாய்க்கு உற்பத்தியாகும் சோப்பை 30 ரூபாய்க்கு விற்க எத்தனை நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.  வெளிநாட்டுக்காரன் ஒருவன் வந்து அரை மணிநேரம் நம்மூர் தொலைக்காட்சியைப் பார்த்தால் தமிழ்நாடுதான் அழுக்கான மாநிலம் என்றே முடிவுக்கு வந்துவிடுவான்.  இதற்கெல்லாம் காரணம் திறமைசாலிகளும், வாழ்க்கை பற்றிய மதிப்பீடு உள்ளவர்களும் ஒதுங்கியிருப்பதுதான். ஆற்றலுள்ளவர்கள் படையெடுத்துப்போய் ஊடகங்களை தங்கள் திறமையால் கைப்பற்ற வேண்டும். மொத்தத்தில் சொல்லிக்கொள்வதுபோல் இல்லை.''

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...