|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 April, 2012

ஓராண்டு தோல்வி!


உலகக் கோப்பையை வென்ற நாளை இந்திய அணி உற்சாகத்துடன் நினைத்துப் பார்த்தாலும் ஒவ்வொரு ரசிகனையும் காயப்படுத்தியிருக்கும் "ஓராண்டு தோல்விகளுக்கு" இந்திய அணி என்ன பதில் சொல்லப் போகிறது என்பதே ரசிகர்களின் கேள்வி! 2011- ல் ஏப்ரல் மாதம் இதே 2-ந் தேதி 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை கைப்பற்றியது இந்தியா! உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி ரசிகரிகளின் உற்சாக துள்ளல் கொண்டாட்டங்கள் அத்தனையும் கடந்த ஓராண்டாக நடைபெற்ற அனைத்து சர்வதேச போட்டிகளும் தவிடு பொடியாகிப் போனதுதான் உண்மை!

44 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணியுடன் தொடர் தோல்வி!

45 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணியில் அவமானகரமான தோல்வி!

ஆசியக் கோப்பைப் போட்டியில் கத்துக்குட்டி வங்கதேசத்திடம் வீழ்ந்த மானக்கேடு!

- என உலகக் கோப்பையை வெல்ல முடிந்த இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஓராண்டிலேயே சந்தித்திருக்கும் "சரித்திர தரித்திர" அவமானங்கள்தான் ஏராளம்!

இங்கிலாந்து தொடர் இங்கிலாந்து மண்ணில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர் அத்தனை போட்டிகளிலும் தோல்வி அடைந்த இந்திய அணி, 20-20 போட்டியில் மட்டும் வெற்றியா பெற்றிருக்க முடியும்! இந்திய ரசிகர்களை அதிர்ச்சியின் ஆழப் பள்ளத்தாக்கில் குழிதோண்டிப் புதைத்தனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள்! ஆனால் ரசிகர்களை ஏமாற்றும் வகையில் ஒவ்வொரு வீரருக்கும் காயம், அடுத்தடுத்து காயம், இதற்கு முன்பு இப்படி ஏதும் இல்லை என்றெல்லாம் ஜால்ஜால்ப்பு சொல்லிக் கொண்டே இருந்தது இந்திய அணி! இந்திய அணி படுதோல்வியிலும்கூட ஒரு சரித்திரத்தை எழுதியது..

அவமான தோல்விகளின் வரலாறு-இங்கிலாந்துடனான தோல்வி ஒன்றும் இந்தியாவுக்கு முதலாவது அல்ல.. இப்படி கேவலமாக தோற்பது மூன்றாவது முறை...!- 1958ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 336 ரன்கள் என்ற மாபெரும் தோல்வியை இந்தியா சந்தித்தது.

- 1974ல் இங்கிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 285 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்திடம் தோற்றது! எல்லா சமரச- சமாதான வீரவசனங்களையும் கேட்டுக் கொண்டிருந்த இந்திய ரசிகர்களை நம்ப வைக்க , கவலைப்படாதீங்க.. ஆஸ்திரேலியா மண்ணுல ஆடி பிச்சிடுவோம் என்று டபாய்த்தும் பார்த்தனர். சரி ஆஸ்திரேலிய மண்ணில் நடந்தது என்ன?

ஆஸ்திரேலியா தொடர் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை பங்கேற்ற முத்தரப்புப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்தது. அங்க மட்டும் என்னவாம்? அங்கும் தோல்வியில் ஒரு சரித்திரத்தை எழுதிவைத்துவிட்டுத் திரும்பினர்.ஆம் கடந்த 45 ஆண்டுகால வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் மிக மோசமான தோல்வியை இந்தியா சந்தித்தது.இந்திய அணி கடந்த 1967-68ல் பங்கேற்ற 4 போட்டிகள் கொண்ட தொடரை, 0-4 என முழுமையாக இழந்தது. தற்போது 45 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடரை 0-4 என இழந்து சரித்திரத்தை புதுப்பித்துக் கொண்டது.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 0-4 என இழந்தது. அடுத்து நடந்த "டுவென்டி-20' தொடரை 1-1 என "டிரா' செய்தது.முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்ற 8 லீக் போட்டிகளில், மூன்றில் மட்டும் வெற்றி பெற்ற இந்திய அணியால் இறுதி ஆட்டத்துக்கு முன்னேற முடியவில்லை."உலகக் கோப்பையை" வென்ற ஜாம்பவான் தோனியின் டீம் பனாலாகிப் போய் பிளைட் பிடித்து கமுக்கமாக நாடு திரும்பியது!

ஆசியக் கோப்பை இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் பங்கேற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அண்மையில் நடைபெற்று முடிந்தன.இதில் தான் சச்சின் வரலாற்று சாதனையான 100-வது சதத்தை எட்டினார். இளம்புயல் கோஹ்லி பிரம்மாண்ட ஆட்டத்தை வெளிப்படுத்தினார்..

எல்லாம் எதுக்கு? கோப்பை என்னாச்சு? வழக்கம்போல வாய்ச்சவடால்தான்! கத்துக்குட்டி வங்கதேசத்திடம் மண்டிபோட்டு சொந்த மண்ணுக்கு வந்தது இந்திய அணி! ஓராண்டில்..உலகக் கோப்பையை வென்ற பிறகு கடந்த ஓராண்டில் நடைபெற்ற எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி எதையுமே சாதிக்க முடியாமல் வீண்ஜம்பம் மட்டும் அடித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. சர்ச்சைகள்தோனி தலைமையிலான இந்திய தொடர்ச்சியான தோல்விகளைக் கொடுத்ததால் கடும் எதிர்விளைவுகளும் ஏற்பட்டன..- தோனியின் தலைமை சரியில்லை- கிரிக்கெட் பெருசுகளான சச்சின், தோனி, சேவாக், டிராவிட் போன்றோரெல்லாம் விலகிவிட்டு இளம்வீரர்களுக்கு வழிவிட வேண்டும் (டிராவிட் போய்விட்டார்)

- தோற்கும் வீரர்களையே தேர்வு செய்த தேர்வுக் குழுவிலிருந்து வசனநாயகன் ஸ்ரீகாந்த்தை கழட்டிவிட வேண்டும் என்று "சீரமைப்பு சிகிச்சை" நடவடிக்கைகள் அடுக்கிக் கொண்டே போயின. ஆனாலும் இந்திய அணி இதுவரை தமது தொடர் தோல்விகளை சுயபரிசீலனைக்குட்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை.தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாத இந்திய வீரர்கள் மீண்டும் ஐ.பி.எல். போட்டிகளில் கவனம் செலுத்துகின்றனர். ஐ.பி.எல். முடிந்து நடக்கப் போகிற அத்தனை சர்வதேச போட்டிகளிலும் முட்டைகளை வாங்கி வந்து குவிக்கப் போகின்றனர்...இந்திய ரசிகர்களை இவ்வளவு முட்டாள்களாகவா இந்திய கிரிக்கெட் வாரியம் கருதுவது!இந்திய அணிக்குத் தேவை புது ரத்தம் பாய்ச்சுதல் - இளம்வீரர்களை ஊக்குவித்து இழந்துபோன இந்திய கிரிக்கெட் அணியின் மரியாதையை மீட்டெடுத்தாக வேண்டும்!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...