|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 May, 2012

செல்போன் இல்லாட்டி செத்துருவோம்!

வீட்டை விட்டு வெளியே கிளம்பினாலே செல்போன் இருக்கா என்றுதான் கை தொட்டுப் பார்க்கிறது. அந்த அளவிற்கு செல்போன் நம்மில் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.செல்போன் பயன்பாடு குறித்து இங்கிலாந்தின் ’செக்யூர் என்வாய்’ அமைப்பு ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன அவை உங்களுக்காக :

58 சதவீதம் பேர் அலுவலகத்திற்கு தனியாகவும், சொந்த பயனுக்கு தனியாகவும் ஒரு செல்போன் வைத்து கொள்கின்றனர். 41 சதவிகிதம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் பத்திரமாக இருக்கிறதா என்ற சந்தேகம் ஒருவருக்கு தினமும் 34 முறை வருவதும் ஆய்வில் தெரியவந்தது.நோமொபோபியா (கையில் செல்போன் இல்லையோ என்ற பயம்), செல்போன் தொலைந்து விடுமோ, யாராவது அதில் உள்ள தகவல்கள், படங்களை பார்த்து விடுவார்களோ என்ற கவலையும் 66 சதவீதம் பேருக்கு எந்நேரமும் உள்ளது. இந்த பயத்துக்கு 18 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் 77 சதவீதம் பேரும், 25 முதல் 34 வயதுடையோர் 68 சதவீதம் பேரும் ஆளாகியுள்ளனர்.

செல்போன் இல்லாமல் ஒரு வினாடி கூட இருக்க முடியாது. செல்போன் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று 66 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.மேலும், 75 சதவீதம் பேர் பாத்ரூமிலும் செல்போன் பயன்படுத்துகின்றனர். 49 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கைத்துணை கூட தனது செல்போனை பார்க்கக் கூடாது என நினைக்கின்றனர்.நான்கு வருடங்களுக்கு முன்பு இதே நிறுவனம் நடத்திய ஆய்வில் நோமொஃபோபியா விற்கு 53 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது 66 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.இந்த ஆய்வு இங்கிலாந்தில்தான் நடைபெற்றுள்ளது. நம் ஊரில் இலவச அரிசி வாங்கி சாப்பிட்டாலும் செல்போனுக்கு டாப் அப் செய்ய மறப்பதில்லை. இதுபற்றி யாராவது ஆய்வு செய்வார்களா?

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...